காரிருளில் ஒரு மின்னல்
4
"என் தகப்பனார் செல்வக் குடும்பத்தில்
பிறந்தவர்; வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஆகையால் இளம் வயதில் அவர் வைத்ததே
சட்டமாயிருந்தது. அவர் காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது மாதம் 200
ரூபாய் செலவழித்துக் கொண்டிருந்தாராம். என் தாயாரும் அம்மாதிரியே பெரிய
குடும்பத்தில் பிறந்தவள் தான். இதனால் இல்வாழ்க்கை தொடங்கிக் கொஞ்ச காலம்
அவர்கள் பணக் கஷ்டம் இன்னதென்று தெரியாமல் காலங் கழித்து வந்தார்கள்.
என் தகப்பனார் பி.எல். பரீட்சை கொடுத்து வக்கீல் தொழில் செய்யத் தொடங்கினார். அவர் ரொம்பப் புத்திக் கூர்மையுள்ளவர். அத்துடன் இல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றும் நினைப்பவர். இக்காரணங்களினால், அவர் வக்கீல் தொழிலில் அதிகமாய்ப் பிராபல்யம் அடையவில்லை. இதைக் கண்ட அவருடைய மாமனார் பலமான சிபாரிசுகள் பிடித்து, அவருக்கு ஜில்லா முனிசீப் வேலை பண்ணி வைத்தார்.
இந்த உத்தியோகம் அவர் நாலு வருஷந்தான் பார்த்தார். அவருக்கும் அப்பீல் கோர்ட்டு ஜட்ஜுகளுக்கும் ஓயாமல் தகராறு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியாக, அவர் செய்த ஒரு தீர்ப்பு ரொம்பப் பிசகானது என்று ஹைகோர்ட்டில் முடிவானபோது, அவர் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் மூளைகளைப் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி ஒரு ராஜினாமாக் கடிதம் எழுதி அனுப்பி விட்டார்.
பிறகு சென்னையில் வந்து வக்கீல் தொழில் நடத்தத் தொடங்கினார். ஜில்லா முனிசீப் வேலையை ராஜினாமா செய்தவரென்றும், ஹைகோர்ட் ஜட்ஜுகளையெல்லாம் திட்டினவரென்றும் பிரசித்தியடைந்தவரிடம் எந்தக் கட்சிக்காரன் வந்து வழக்குக் கொடுப்பான்? ஆகவே வீட்டு வாசலில் போர்டு தொங்கினதுதான் மிச்சமாயிற்று.
அப்பாவுக்காவது, அம்மாவுக்காவது செட்டு என்றால் இன்னதென்றே தெரியாது; ஆகவே வீட்டுச் செலவுகள் எல்லாம் எப்போதும் போலவே நடந்து வந்தன. இதற்கிடையில் குடும்பமும் பெருகி வந்தது. ஐந்தாறு குழந்தைகள். நான் தான் எல்லாரிலும் மூத்தவள். எனக்கும் பதினைந்து வயதான போது வீட்டில் தரித்திரம் அதிகமாகிவிட்டது. என் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. நல்ல இடமாகக் கொடுக்க வேண்டுமென்றால், வரதட்சிணை ஏராளமாகக் கேட்டார்கள். கிணற்றில் தள்ளுவது போல் என்னை யாருக்காவது கொடுத்துவிட என் பெற்றோர்களுக்கு இஷ்டமில்லை. இப்படியாக மூன்று நான்கு வருஷங்கள் கழிந்துவிட்டன.
இதற்கிடையில் என் தகப்பனார் மனோவியாகூலத்தினால் தேக சுகத்தை இழந்தார். அவருடைய சுபாவம் நாளுக்கு நாள் கெட்டு வந்தது. கோபம் அதிகமாயிற்று. என் தாயாரையும் குழந்தைகளையும் காரணமில்லாமல் திட்டவும் அடிக்கவும் ஆரம்பித்தார். என்னை மட்டுந்தான் அவர் ஒன்றும் சொல்வதில்லை. என்னிடம் அவர் வைத்திருந்த ஆசைக்கு அளவே கிடையாது. எவ்வளவு அசாத்தியமான கோபத்திலும் நான் 'அப்பா!' என்று கூப்பிட்டால் அடங்கி விடுவார்.
வீட்டில் அன்றைய சாப்பாட்டுக்கு அரிசி இல்லாத நிலைமை ஏற்பட்டது. அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா எங்கள் பந்துக்களுக்கு கடிதம் எழுதுவாள். நேரிலும் போய் உதவி கேட்பாள். அதெல்லாம் பயன்படவில்லை. என் தகப்பனார் முனிசீப்பு வேலையை விட்ட நாளிலிருந்து எங்களுடைய பந்துக்கள் எங்களை அலட்சியம் செய்யத் தொடங்கினார்கள். கொஞ்ச நாளைக்கெல்லாம் எங்களை எட்டிப் பார்ப்பதையே விட்டுவிட்டார்கள். என் தந்தையைக் 'கிறுக்கன்' என்றும், என் தாயாரைத் 'துக்கிரி' என்றும் வைதார்கள்.
கஷ்டம் பொறுக்க முடியாமல் போன சமயம், ஒரு நாள் என் தகப்பனார் என்னைக் கூப்பிட்டு, வெறி கொண்டவரைப் போல், 'மைதிலி! உன்னை விற்றுவிடப் போகிறேன், தெரியுமா? உன்னைப் பலி கொடுப்பதற்காக விற்கப் போகிறேன்' என்றார். அவரை நான் சாந்தப்படுத்தி என்னவென்று கேட்டேன். தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு தனவந்தர் - ஐம்பது வயதுக்கு மேலானவர். என்னைத் தமக்குக் கலியாணம் செய்து கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்கிறார் என்று அறிந்தேன். அப்பா, அந்த விவரத்தைச் சொல்லி விட்டு குழந்தாய்! நான் சொல்கிறதைக் கேள். இன்று ராத்திரி நீ கிணற்றில் விழுந்து செத்துப் போய்விடு!' என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதார்.
நான் அவரைத் தேற்றி, 'அப்பா! நான் கிணற்றில் விழப்போவதில்லை. கட்டாயம் அவரைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன். எல்லாம் விதிபோல் நடக்கும். பாலிய வயதுள்ளவர்களைக் கலியாணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் என்ன சுகப்பட்டு விட்டார்கள்? எப்படியாவது இந்தக் குடும்பத்தின் தரித்திரம் தீர்ந்தால் போதும்' என்றேன்.
கலியாணம் நடந்து, என் பதியுடன் அவர் ஊருக்குச் சென்றேன். அவர் இந்தப் பாபநாசம் தாலூக்காவில் பெரிய மிராசுதாரர். சிறந்த கல்வியறிவுள்ளவர். அவருடைய முதல் மனைவி சந்ததி இல்லாமலே இறந்து போனாள். வேறு நெருங்கிய பந்துக்கள் அவருக்கு யாருமில்லை. தள்ளாத வயதில் தனிமை வாழ்க்கையைச் சகிக்க முடியாமல் தான் என்னைக் கலியாணம் செய்து கொண்டதாக அவர் அறிவித்தார். எனக்கு ஒருவிதமான குறையும் வைக்கவில்லை. எந்தவிதத்திலும் என் இஷ்டத்துக்கு மாறாக நடக்கச் செய்யவும் இல்லை. நான் அவருடைய வீட்டில் இருப்பதே அவருக்குத் திருப்தியாயிருந்தது. அவருடன் உட்கார்ந்து படித்தாலும் பேசினாலும் பரம சந்தோஷமடைவார். இப்படியே என் வாழ்நாள் முழுதும் கழித்து விடுமென்றே எண்ணினேன். ஆனால் விதி வேறு விதமாயிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரிருளில் ஒரு மின்னல் - Kaarirulil Oru Minnal - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவர், நான், கலியாணம், தகப்பனார், அவருடைய, செய்து, போகிறேன், கிணற்றில், அப்பா, வந்தது, தான், வக்கீல், என்றும், எல்லாம், வீட்டில்