காரிருளில் ஒரு மின்னல்
3
அவன் போய்க் கால் மணி நேரமாயிற்று. திரும்பி
வரவில்லை. டிரைவர் உட்கார்ந்தபடியே குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
சாம்புவும் ஆடிவிழுந்தான். எனக்கு மட்டும் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு
படபடப்பு ஏற்பட்டிருந்தது. தேகத்தின் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அப்போது,
எங்களுக்கு எதிரே சுமார் கால் மைல் தூரத்தில் ஒரு சின்னஞ்சிறு வெளிச்சம்
தெரிந்தது. உடனே அது அணைந்தது. அம்மாதிரி இன்னும் இரண்டு தடவை அது பளிச்சென்று
ஒளி வீசி மறைந்தது. பிறகு என்னால் வண்டியில் உட்கார்ந்திருக்க முடியவில்லை.
அந்த வெளிச்சம் தோன்றிய இடத்திலிருந்து வந்த ஏதோ ஒரு வகைக் காந்த சக்தி
என்னைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன்.
வண்டியிலிருந்து கீழிறங்கினேன். வாடைக்காற்று ஜிலீரென்று மேலே பட்டது. உடம்பெல்லாம் நடுங்கிற்று. நல்ல வேளையாக அச்சமயம் மழை பலமாகப் பெய்யவில்லை. சிறு தூற்றலாகத் தூறிக் கொண்டிருந்தது.
"சாம்பு! எதிரே கொஞ்சம் தூரத்தில் ஒரு டார்ச் லைட் தெரிவது போல் இருந்தது. நான் போய்ப் பார்க்கிறேன். அதற்குள் அவன் லாந்தர் கொண்டு வந்து வண்டி கிளம்பினால், புறப்பட்டு வாருங்கள். நான் வழியில் நிறுத்தி ஏறிக் கொள்கிறேன்" என்றேன்.
சாம்புவுக்கு அரைத் தூக்கமாயிருந்தபடியால், "சரிதான்" என்றான். என் பேச்சைக் கேட்டு விழித்துக் கொண்ட டிரைவர், "வேண்டாம், ஸார்! போகாதிங்க, ஸார்! போனாத் திரும்ப மாட்டீங்க, ஸார்!" என்று உளறினான்.
"உன் வேலையைப் பார்!" என்று சொல்லிவிட்டு நான் சாலையில் நடக்கலானேன். அந்தக் காரிருளில் அவ்வப் போது மரக்கிளைகளினிடையே நுழைந்து வந்த மின்னல் ஒளியின் உதவி கொண்டு தட்டுத் தடுமாறி நடந்து சென்றேன்.
சுமார் பத்து நிமிஷம் இவ்வாறு சென்றதும், சாலையில் மரங்களின் அடர்த்தி அதிகமில்லாத இடம் வந்தது. எதிரே சமீபத்தில் ஒரு பாலம் தென்பட்டது. அந்தப் பாலத்தின் ஒரு பக்கத்துக் கைப்பிடிச் சுவரில் கறுப்பாய் ஏதோ தெரிகிறதே, அது என்ன? மனித உருவமா அது?
திடீரென்று சமீபத்தில் யாரோ தேம்பி அழும் சத்தம் கேட்டது. அந்த அழுகைக் குரல் என் நெஞ்சைப் பிளந்து விடும்போல் இருந்தது. அவ்வளவு சோகமும் தாபமும் ஏக்கமும் அந்தக் குரலில் தொனித்தன. பாலத்தின் மதகிலிருந்துதான் அந்த விம்முதல் வந்தது. என் உடம்பெல்லாம் பதறியது. ஆனாலும் விரைந்து நடந்தேன்.
பளீரென்று ஒரு மின்னல் வானத்தையும் பூமியையும் ஒரு கணம் ஜோதி வெள்ளத்தில் மூழ்கடித்தது; அடுத்த கணத்தில் மறுபடியும் ஒரே அந்தகாரம். ஆனால் அந்த ஒரு கணத்தில் நான் தேடி வந்ததைக் கண்டுவிட்டேன். பாலத்தின் மதகின் மேல் சோகமும் சௌந்தரியமும் ஒன்றாய் உருவெடுத்தது போன்ற ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த மின்னல் மின்னிய ஒரு கண நேரத்தில் அவளுடைய ஆச்சரியம் நிறைந்த கண்களிலிருந்தும் ஒரு மின்னல் கிளம்பி என் இருதயத்தில் பாய்ந்தது. அந்த மின்னலின் வேகத்துடனேயே பின்வரும் எண்ணமும் என் உள்ளத்தில் ஊடுறுவிச் சென்றது:
எனக்காகவென்று பிறந்து வளர்ந்து என் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நங்கை இவள்தான்!
ஒரு யுகம்போல் தோன்றிய ஒரு நிமிஷத்துக்குப் பிறகு, என் மார்பைக் கையால் அமுக்கிக் கொண்டு, "நீ யார், அம்மா! இந்த நடுராத்திரியில் ஏன் இங்கே தனியாய் உட்கார்ந்திருக்கிறாய்?" என்று கேட்டேன்.
அதற்குப் பதிலாக, பளிச்சென்று என் முகத்தில் வெளிச்சம் அடித்தது. அந்தப் பெண்ணின் கையிலிருந்த டார்ச் லைட்டிலிருந்து அந்த வெளிச்சம் வந்தது.
"நீங்கள் ஏன் கேட்கவேண்டும்?" என்ற கேள்வி விம்மலுடன் கலந்து வந்தது.
"எனக்குக் கேட்க உரிமையுண்டு. எத்தனையோ காலமாக உன்னை நான் தேடிக் கொண்டிருந்தேன். இன்று கண்டுபிடித்தேன்..."
"அப்படியானால் நான் யார் என்று ஏன் கேட்க வேண்டுமோ?"
சற்றுத் திகைத்து விட்டேன். பிறகு சமாளித்துக் கொண்டு, "சரி, எழுந்திருந்து வா! போகலாம்" என்றேன்.
அவள் எழுந்திருந்தாள். இதற்குள்ளே தூரத்தில் மோட்டார் கிளம்பும் சப்தம் கேட்டது. இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் வண்டி எங்களண்டை வந்து நின்றது.
உடனே நான், "சாம்பு! என்னை மன்னி. நான் உன்னுடன் வருவதற்கில்லை. எத்தனையோ வருஷமாக என்னுடைய வாழ்க்கைத் துணைவியை நான் தேடிக் கொண்டிருந்தேன், இன்று கண்டுபிடித்தேன். அவளுடன் நான் போகவேண்டும்" என்றேன்.
சாம்பு, கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தான். "சாமி! இது என்ன, சொப்பனமா? நிஜமா?" என்றான்.
அவனுக்கு நான் பதில் சொல்லாமல் டிரைவரைப் பார்த்து, "நீ விடப்பா வண்டியை!" என்றேன்.
அப்போது சாம்பு, "ஸாமி! இது என்ன பைத்தியம்? உன் பின்னால் நிற்பது யார்? எங்கே கண்டாய்? என்ன சங்கதி? இந்த இருட்டில் நீங்கள் எங்கே போவீர்கள்?" என்று சரமாரியாய்க் கேள்விகளை அடுக்கினேன்.
"எல்லாம் இரண்டு நாள் கழித்துப் பட்டணத்தில் சொல்கிறேன்" என்றேன்.
இதற்குள் டிரைவர் "ஐயோ! நான் வேண்டாமென்று சொன்னேனே? கேட்டாரா பாவி! அநியாயமாய்ப் பூட்டாரே?" என்று சொல்லிக் கொண்டே வண்டியை விரைவாக விட்டான். அவன் ஒரு கில்லாடியாயிருந்ததே அந்தச் சமயம் எனக்கு நல்லதாய் போயிற்று. இல்லாவிட்டால், சாம்பு இலேசில் அங்கிருந்து கிளம்பியிருக்க மாட்டான்.
கொஞ்ச நேரம் சாலையோடு மௌனமாய் போனோம். நாங்கள் மட்டும் மௌனமாய் இருந்தோமே தவிர எங்களைச் சுற்றி மௌனம் குடிகொண்டிருக்கவில்லை. இடிகளின் பெருமுழக்கம் சற்று நின்றபோது ஆயிரக்கணக்கான தவளைகளின் கோஷம் காதைத் தொளைத்தது. மின்னல் ஒளி இல்லாதபோது ஆயிரம், பதினாயிரம், லட்சம் என்று கணக்கிடக்கூடிய மின்மினிப் பூச்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் பரவிக் காட்சி தந்தன.
சற்று நேரத்திற்கெல்லாம், 'சோ' என்ற சத்தத்துடன் பெருமழை வந்தது.
"இங்கே ஒரு பாழடைந்த சாவடி இருக்கிறது. அதில் தங்கலாம்" என்றாள்.
அந்தச் சாவடிக்குள் போய், டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் கொஞ்சம் இடம் சுத்தம் செய்து கொண்டு உட்கார்ந்தோம்.
"பொழுது விடிய இன்னும் நாலு மணி நேரம் இருக்கிறது. நமக்கோ தூக்கம் வரப்போவதில்லை. ஒருவருக்கொருவர் நம்முடைய சுய சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டோ மானால் பொழுது போகும்" என்றேன்.
"என் கதை ரொம்பப் பயங்கரமானது. சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்றாள்.
"இன்றைய சம்பவத்துக்குப் பிறகு, உலகில் நான் நம்ப முடியாதது ஒன்றுமே இல்லை."
இன்னும் சற்று விவாதத்துக்குப் பிறகு, "அப்படியானால் கேளுங்கள்" என்று அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரிருளில் ஒரு மின்னல் - Kaarirulil Oru Minnal - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அந்த, என்றேன், கொண்டு, பிறகு, மின்னல், வந்தது, சாம்பு, வெளிச்சம், என்ன, பாலத்தின், சற்று, நீங்கள், யார், டார்ச், எதிரே, டிரைவர், தூரத்தில், இன்னும், அவன், இரண்டு, ஸார்