காரிருளில் ஒரு மின்னல்
6
என்னை அந்த வெள்ளைக்காரப் பெண் நைரோபி
துறைமுகத்தில் கொண்டு வந்து சேர்ந்து தானே கப்பல் சார்ஜு கொடுத்து இந்தியாவுக்குச்
செல்லும் கப்பலில் ஏற்றியும் விட்டாள். கப்பல் கடலில் போய்க் கொண்டிருந்தபோது,
என் உள்ளத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. 'எங்கே போவது?' என்னும்
கேள்வி என் மனத்தை அலைத்துக் கொண்டிருந்தது. என்னிடம் எதுவும் எதிர்பாராமல்
எனக்கு மட்டும் சகல சௌபாக்கியங்களையும் அளித்த என் பதியிடம் மறுபடி திரும்பிச்
செல்வதா? ஐயோ! அவருடைய மனம் என்ன வேதனையடைந்ததோ? அவர் என்னைத் திரும்பி
அங்கீகரிப்பாரா? - இப்படிப் பல நாள் யோசித்தேன். அவரிடம் நேரே போவதற்குத்
தைரியம் எனக்கு ஏற்படவில்லை. நான் ஏறியிருந்த கப்பலோ, கன்னியாகுமரியைச்
சுற்றி, கடற்கரையோரமாகச் சென்னை போவதாயிருந்தது. வேண்டுமானால் நான் நாகப்பட்டினத்தில்
இறங்கி அவரிடம் போகலாம். அதற்கு எனக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. சென்னைப்
பட்டணத்திலே இறங்கி என் தகப்பனாரிடம் தஞ்சம் புகுவதென்றே தீர்மானித்தேன்.
ஆனால் மறுபடியும் விதி குறுக்கிட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஒரு நாள் இரவு கப்பல் புறப்பட்டது. மறுநாள் அதிகாலையில் சென்னை போய்ச் சேர வெண்டும். ஆனால் அது சென்னை போய்ச் சேரவேயில்லை. அன்று இரவு கடலில் பிரமாதமான புயல் அடித்தது. அலைகள் மலைகளைப் போல் எழுந்தன. உலகத்தில் எவ்வளவு விதமான அபாயங்கள், கஷ்டங்கள் உண்டோ அவ்வளவையும் நான் அநுபவிக்கவேண்டுமென்று பிரம்மதேவன் என் தலையில் எழுதியிருந்தான். கப்பலுக்கு அபாயம் வந்துவிட்டதென்றும், உயிர் தப்ப விரும்புகிறவர்கள் படகுகளில் ஏற வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டோம். எனக்கு உயிர் தப்ப விருப்பமில்லை. ஆகவே பேசாமலிருந்தேன். ஆனால் அந்தக் கப்பல் தலைவன், ஸ்திரீகளை முதலில் படகில் ஏற்ற வேண்டுமென்று கட்டளையிடவே, என்னைப் பலவந்தமாய் இழுத்துப் போய் ஒரு படகில் ஏற்றினார்கள்.
வெகுநேரம் நாங்கள் ஏறியிருந்த படகு, அலைகளிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. முடிவில், ஒரு பிரமாண்டமான அலை அடித்து அதைக் கவிழ்த்தது. என் துன்பங்களுக்குக் கடைசியாக விமோசனம் வந்துவிட்டதென்று எண்ணினேன். அந்த எண்ணம் நிறைவேறவில்லை. படகு கரைக்கு வெகு சமீபம் வந்திருக்க வேண்டும். ஒரு நிமிஷம் மூச்சுத் திணறுமாறு அலைப்புண்ட பிறகு, கடற்கரை மணலில் நான் கிடப்பதை உணர்ந்தேன்.
உடனே, உயிர் ஆசை பற்றிக் கொண்டது. ஏற்கனவே குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த உடம்பில், ஈரக்காற்று சவுக்கு கொண்டு அடிப்பதுபோல், சுளீர் சுளீர் என்று அடித்தது. அந்தக் கும்மிருட்டில் இன்ன திசையை நோக்கி போகிறோமென்று தெரியாமல் ஓடினேன்; அநேக முறை தடுக்கி விழுந்தேன்; மறுபடி எழுந்திருந்து ஓடினேன். உடம்பில் உயிர் உணர்ச்சி இருந்தவரையில் ஓடியபின் இனி ஓரடியும் எடுத்து வைக்க முடியாத நிலைமை வந்தது. அப்படியே உட்கார்ந்து கீழே சாய்ந்தேன். நான் உட்கார்ந்த இடம் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்து வாசற்படி போல் தோன்றியது. அடுத்த கணம் நினைவு இழந்தேன்.
எனக்கு மீண்டும் நன்றாய் ஞாபகம் வந்த போது, என் பதி எனக்குச் சுச்ரூஷை செய்து கொண்டிருப்பதைக் கண்டேன். என் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று. அதைப் பார்த்த அவர் 'மைதிலி, நீ மறுபடியும் என்னைத் தேடி வந்தாயே, அதுவே எனக்குப் போதும். நீ எங்கே போனாய் ஏன் போனாய் என்றெல்லாம் நான் ஒன்றும் கேட்கவில்லை' என்றார். என் இருதயம் பிளந்து விடும் போல் இருந்தது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுதேன்..."
இப்படிச் சொல்லி வந்த போது மைதிலி உணர்ச்சி மிகுதியில் விம்மினாள். என்னுடைய மனோ நிலைமையையோ விவரிப்பதற்கு இயலாமலிருந்தது. சற்றுப் பொறுத்து அவள் கதையைத் தொடர்ந்து சொன்னாள்:
"ஆறு மாதத்திற்கெல்லாம் என் கணவர் இறந்து போனார். அவருடைய ஏராளமான ஆஸ்திகளுக்கெல்லாம் என்னைச் சர்வசுதந்திர எஜமானியாக அவர் ஆக்கியிருந்தார். அச்சமயம் என் தாயாரும், சகோதரர்களும் வந்திருந்து, ஈமக்கடன்கள் முடிந்ததும் என்னை உடன் அழைத்துச் சென்றார்கள். என் தகப்பனார் வராததற்குக் காரணம், அவருக்குச் சித்தம் சரியில்லாததுதான் என்று தெரிந்தது. என்னுடைய கலியாணத்திற்குப் பிறகு, அவர் அடிக்கடி, 'மைதிலி! உன்னை விற்றுவிட்டேன்; உன்னைப் பலி கொடுத்து விட்டேன்' என்று சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாராம். கடைசியில், இது சித்தப் பிரமையாகவே போய்விட்டதாம்.
இப்போது என்னைக் கண்டதும் அவருக்குச் சட்டென்று பிரமை நீங்கிற்று. அறிவு தெளிந்தது. 'குழந்தாய்! வந்து விட்டாயா!' என்று சொல்லி என்னைக் கட்டிக் கொண்டு அழுதார்.
அதற்குப் பிறகு அவரும் வெகு காலம் உயிரோடிருக்கவில்லை. மூன்று மாதத்திற்கெல்லாம் காலமானார். சென்னையிலேயே நான் வசிக்கத் தொடங்கினேன். உலகத்திலே பணத்திற்கு எவ்வளவு சக்தி உண்டென்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். நாங்கள் பசிக்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது எங்களை எட்டிப் பாராத இஷ்டமித்திர பந்துக்களெல்லாம் இப்போது வந்து கும்பல் போடத் தொடங்கினார்கள். எனக்குக் கலியாணம் சீக்கிரம் பண்ணாததற்காக எங்களைச் சாதியை விட்டுத் தள்ளவேண்டுமென்று அப்போது சொன்னவர்கள் எல்லாம் இப்போது என்னிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள்.
என் மனத்திலே மட்டும் பழைய ஏக்கம் - யாரையோ பார்க்க வேண்டுமென்ற தாபம் - குடி கொண்டிருந்தது. கடைசியாக, என் இருதய நாதனை நான் இந்த ஜன்மத்தில் காணப் போவதில்லை யென்றும் அது ஒரு வெறும் நிழல் மாத்திரந்தான் என்றும் தீர்மானித்தேன். வாழ்க்கை வேம்பிலும் கசப்பாகிவிட்டது. என்னுடைய சொத்துக்களையெல்லாம் என் சகோதரர்களுக்கும், தர்மங்களுக்கும் எழுதி வைத்துவிட்டு, ஒரு நாள் தன்னந்தனியாக என் கணவருடைய கிராமத்தை அடைந்தேன். மூன்று நாள் அவர் வீட்டில் வசித்து விட்டு நாளாம் நாள் இரவு நடுநிசியில் கிளம்பி வந்து அதோ அந்தப் பாலத்தின் மேலிருந்து வெள்ளம் புரண்டோ டிய நதியின் நடுவில் குதித்தேன். எத்தனையோ விபத்துக்களுக்கெல்லாம் தப்பிய என் உயிரைக் கடைசியில் தானாகவே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்று என் தலையில் எழுதியிருந்தது..."
மைதிலி கதையை நிறுத்தினாள்.
"அப்புறம் என்ன?" என்றேன்.
"மரணத்திற்கு அப்புறம் என்ன? ஒன்றுமில்லை" என்றாள்.
"அப்படியானால், நீ யார்?"
"அதுதான் எனக்கும் தெரியவில்லை, அற்பாயுளில் மாண்டவர்களின் ஆவி இறந்த இடத்திலேயே உலவுமென்கிறார்களே, அதுதானோ என்னவோ?"
நான் பிடித்துக் கொண்டிருந்த அவளுடைய கரத்தை வலுவாக அமுக்கினேன். "ஐயோ! வலிக்கிறது!" என்று அவள் கதறினாள்.
பிறகு, நான் சாவதானமாக, "சரி! மேலே கதையைச் சொல். 'ஷுட்டிங்' எல்லாம் முடிந்து, வேஷத்தைக் கலைத்துவிட்டு, எல்லாரும் ஊருக்குக் கிளம்பினீர்களாக்கும்!" என்றேன்.
ஒரு நிமிஷம் மைதிலி திகைத்துவிட்டாள். என் இரண்டு கைகளையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டு "உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள்.
"பிறகு சொல்கிறேன்; முதலில் நீ உண்மையைச் சொல், உன் கதையில் எவ்வளவு வரை நிஜம், எவ்வளவு வரை நடிப்பு?" என்று கேட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரிருளில் ஒரு மின்னல் - Kaarirulil Oru Minnal - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், மைதிலி, பிறகு, அவர், நாள், எவ்வளவு, உயிர், வந்து, கப்பல், கொண்டு, எனக்கு, கொண்டிருந்த, இப்போது, போது, என்னுடைய, சென்னை, கொண்டிருந்தது, என்ன, இரவு, போல்