மாலதியின் தந்தை
9
மறுநாளைக்கு மாலதியே என்னைத் தேடிக் கொண்டு
என் அறைக்கு வந்துவிட்டாள். "உங்கள் சினேகிதரை எப்படியாவது உடனே கண்டு
பிடிக்க வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது. பத்திரிகையில் விளம்பரம்
போட்டு பார்க்கலாமா?" என்றாள்.
"பத்திரிகையில் போடுவதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. நானே வேறுவிதத்தில் தேடிக் கண்டு பிடிக்கப் போகிறேன். ஆனால் அப்படிப்பட்ட முக்கியமான விஷயம் என்ன? எனக்குத் தெரியப்படுத்தலாமா?" என்று கேட்டேன்.
"உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான்! இல்லாவிட்டால் அவரைக் கண்டு பிடிப்பதில் எனக்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்கள்!" என்றாள் மாலதி.
மாலதி கூறியதிலிருந்து நேற்று தினகரன் என்னைப் பார்த்த பிறகு நேரே மாலதியைச் சந்திக்கச் சென்றான் என்று தெரிந்தது. சந்தித்து, மேற்படி பத்திரிக்கைத் துணுக்கை அவளிடம் காட்டினான். மோசடி வழக்கில் இரண்டு வருஷம் தண்டனையடைந்தவன் ரங்கபாஷ்யம் என்றும் அதனாலேயே இந்த விளம்பரத்தைக் கண்டதும் ஓடி மறைந்துவிட்டான் என்றும் தெரிவித்தான்.
ஆனால் இதன் மூலம் அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதற்கு நேர் விரோதமான பலன் தான் உண்டாயிற்று.
"அந்த மோசடி வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்?" என்று மாலதி கேட்டாள்.
"நீ கேட்டதனாலே சொல்லுகிறேன். கல்கத்தாவிலே உன் தகப்பனார் நடத்திய கம்பெனியில் வேலை பார்த்தவன் தான் இவன். அந்தக் கம்பெனி வேலையிலே தான் மோசடி செய்துவிட்டான். நீ அப்போது 'கான்வென்ட்' பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாய். உனக்கு ஒன்றும் தெரியாது. உன் தந்தை இவனை முழுதும் நம்பிக் கம்பெனிப் பொறுப்புகளையெல்லாம் ஒப்புவித்திருந்தார். நம்பியவருக்குத் துரோகம் செய்துவிட்டான். இவனுடைய வழக்கு கல்கத்தாவில் நடந்தபோது தற்செயலாக நான் கல்கத்தா வந்திருந்தேன். உன் தந்தையுடன் கோர்ட்டுக்கே போயிருந்தேன். இரண்டு வருஷம் சிறைத் தண்டனை இவனுக்குக் கிடைத்தது. தண்டனை முடிந்த பிறகு இங்கு வந்து பெயரை மாற்றி வைத்துக் கொண்டு காலட்சேபம் நடத்தி வருகிறான். இப்போது பார்க்கும் வேலையிலும் என்னென்ன மோசம் செய்து வந்தானோ தெரியாது. இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவன் தலைமறைவாகி விட்டதிலிருந்தே அவன் யோக்கியதை தெரியவில்லையா?" என்று தினகரன் சாங்கோ பாங்கமாக ரங்கபாஷ்யத்தின் மீது புகார்களைக் கொட்டி அளந்தான்.
அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த மாலதி கடைசியில், "இந்தப் பத்திரிகை விளம்பரம் நீங்கள் தான் போட்டீர்களா?" என்று கேட்டாள்.
"ஆமாம்; நான் தான் போட்டேன். உண்மையைச் சந்தேகமறத் தெரிந்து கொள்வதற்காகப் போட்டேன். அதற்குப் பலன் கிடைத்துவிட்டது. ஆசாமி இந்த ஊரைவிட்டே கம்பி நீட்டிவிட்டான், பார்!" என்றான் தினகரன்.
"ஆனாலும் உம்மைப் போன்ற நீச குணமுள்ளவனை நான் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை!" என்றாள் மாலதி.
இதைக் கேட்ட தினகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மாலதியின் போக்கு அவனுக்குப் புரியவில்லை. பிறகு மாலதி நன்றாகப் புரியும்படி சொன்னாள்:
"ஏதோ ஒருவன் துரதிஷ்டத்தினால் கஷ்டத்துக்கு உள்ளாகலாம். அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கை நடத்த முயற்சிக்கலாம். இம்மாதிரி மெனக்கெட்டு ஒருவருடைய பூர்வோத்திரங்களை அறிந்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்துவது போன்ற சண்டாளத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? உம்முடைய முகத்திலேயே இனி நான் விழிக்க விரும்பவில்லை. என்னைப் பார்க்க வேண்டாம்!" என்று கண்டிப்பாகச் சொல்லித் தினகரனை அனுப்பி விட்டாள். தினகரனும் பெண் குலத்தின் முட்டாள்தனத்தையும் இழி குணத்தையும் ஒரு அத்தியாயம் நிந்தித்து விட்டுப் போய்விட்டான்.
பிறகுதான் மாலதி என்னைத் தேடி வந்தாள். "ரங்கபாஷ்யத்தை உடனே பார்த்தாக வேண்டும். என்னால் அவ்ருக்கு நேர்ந்த கஷ்டத்துக்கு அவரிடம் கட்டாயம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும்!" என்றாள்.
"நீங்கள் மன்னிப்புக் கேட்பானேன்? எதற்காக?" என்றேன் நான்.
"என் காரணமாகத்தானே அவருக்குத் தினகரன் இத்தகைய கஷ்டத்தை உண்டாக்கினான்? அவர் ஊரை விட்டு ஓடும்படியாயிற்று? இதைத் தவிர இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது!" என்று மாலதி கூறினாள்.
அந்த முக்கியமான இன்னொரு காரணத்தைக் கேட்ட பிறகு என்னுடைய தயக்கம் தீர்ந்து விட்டது. பெங்களூருக்கு நானே மாலதியை அழைத்துச் செல்வது என்று தீர்மானித்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாலதி, தான், நான், பிறகு, தினகரன், முக்கியமான, என்றாள், மோசடி, அவன், கண்டு, என்ன, நீங்கள், வேண்டும்