மாலதியின் தந்தை
1
ரயில் சிநேகிதம் என்று வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள்.
'விமான சிநேகிதம்' என்ற புதிய சொற்றொடரையும் தயவு செய்து அத்துடன் சேர்த்துக்
கொள்ள வேணும்.
ஸ்ரீ கே.ஆர். ரங்கபாஷ்யத்துக்கும் எனக்கும் ஏற்கெனவே அறிமுகம் உண்டு என்றாலும்; விமானப் பிரயாணத்தின்போதுதான் எங்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே அந்தச் சிநேகிதம் முற்றிக் கனிந்தது.
ஒரு தடவை புது டில்லிக்கு விமான யாத்திரை சென்ற போது எனக்குப் பக்கத்தில் ரங்கபாஷ்யம் உட்கார்ந்திருந்தான். விமானத்தில் ஓரத்து ஆசனத்தில் நான் இருந்தேன். எனக்கு அருகில் விமானத்தின் சிறிய கண்ணாடி ஜன்னல் இருந்தது. ரங்கபாஷ்யம் எனக்கு அப்பால் உட்கார்ந்திருந்தபடியால் அடிக்கடி கழுத்தை வளைத்து முகத்தை நீட்டி அந்தச் சிறிய கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்க முயன்றான். கீழே அதிகமாக ஒன்றும் அவனால் பார்க்க முடியவில்லை. இது ரங்கபாஷ்யத்தின் முக பாவத்திலிருந்து நன்கு தெரிந்தது.
"நாம் வேணுமானால் இடம் மாறி உட்காந்து கொள்ளலாமே? இந்த ஜன்னல் பக்கத்துக்கு நீங்கள் வருகிறீர்களா?" என்றேன்.
அவன் காதில் அது தெளிவாக விழவில்லை போலும்! எனினும் என்னுடன் பேச்சுக் கொடுக்க அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு "அடுத்த இறங்குமிடம் நாகபுரிதானே?" என்று கேட்டான்.
நான் தலையை அசைத்தேன்.
"நாகபுரியாயிருக்க முடியாது. ஸெகந்தராபாத் ஒன்று நடுவில் இருக்கிறதே!" என்று அவனே மறுத்துக் கூறினான்.
"ஆமாம்; ஸெகந்தராபாத் ஒன்று இருந்து தொலைக்கிறது!" என்றேன் நான்.
"நீங்கள் டில்லிக்கா போகிறீர்கள்?" என்று ரங்கபாஷ்யம் கேட்டான்.
மீண்டும் தலையை அசைத்தேன்.
"நானும் டில்லிக்குத்தான் போகிறேன். ஆகாச விமானத்தில் இதுதான் உங்களுக்கு முதல் பிரயாணமோ?"
இதென்னடா தொல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த வம்புக்காரனுடைய கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? அடுத்த முறை விமானம் இறங்கி ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். பஞ்சை அடைத்துக் கொண்டு இவனோடு யார் ஓயாமல் கத்திக் கொண்டிருப்பது?
இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில், விமான உபசரணை ரமணி அங்கு வந்தாள். கையிலிருந்த பெப்பர்மிண்ட் பெட்டியை நீட்டி, "ஸ்வீட்ஸ் வேண்டுமா? காப்பி அல்லது டீ வேண்டுமா?" என்று கேட்டாள். ரங்கபாஷ்யம் அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தான். விளக்கெண்ணெய் குடித்தவன் முகம் போல் அவன் முகம் மாறியது.
நான் அந்தப் பெண்மணி மீது இரக்கங் கொண்டு ஒரு பெப்பர்மிண்ட் எடுத்துக் கொண்டேன். "வாயில் ஏதேனும் குதப்பிக் கொண்டு இருப்பது நல்லது. விமான யாத்திரையின்போது தொண்டையில் எச்சில் விழுங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் காது வலி வந்துவிடும்" என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.
"இருக்கலாம்; ஆனால் இவளிடமிருந்து வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இந்த மாதிரி பெண் பிள்ளைகளை எதற்காகத்தான் 'ஏர் ஹோஸ்ட்டஸ்' வேலையில் அமர்த்துகிறார்களோ!" என்றான் ரங்கபாஷ்யம். ஸெகந்தராபாத்தில் இறங்கி நாங்கள் காப்பி சாப்பிடப் போன இடத்தில், அவன் மறுபடியும் 'ஏர் ஹோஸ்ட்டஸ்' பேச்சை எடுத்தான். "மேனாட்டாரை இதிலெல்லாம் நாம் காப்பி அடிக்க வேண்டுமா?" என்று கேட்டான்.
"அப்படிச் சொல்லக் கூடாது. ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலும் பெண் நர்சுகள் இருக்கிறார்களே ஏன்? சிகிச்சை, பணிவிடை, உபசரிப்பு, - இவற்றுக்கெல்லாம் மெல்லியலார் அதிகத் தகுதியுடையவர்கள். அதற்காகத்தான் இம்மாதிரி உபசரிப்பு வேலைகளுக்குப் பெண்களை நியமிக்கிறார்கள்!" என்று நான் சொன்னேன்.
"அதெல்லாம் இல்லை. புருஷர்களை நியமித்தால் என்ன குறைவாய்ப் போய்விடும்? இந்த பெப்பர்மிண்டைப் புருஷர்கள் கொடுக்க மாட்டர்களா? இந்த வேலைக்குப் பெண்களை நியமித்தால் பிரயாணிகள் அதிகமாக வருவார்கள் என்று உத்தேசம்?" என்று அழுத்தமாகச் சொன்னான் ரங்கபாஷ்யம்.
"சேச்சே! இது என்ன பேச்சு? நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது. 'ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ வேண்டும்' என்று நம் தலைவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள். நீ இவ்வளவு கர்நாடகமாகப் பேசுகிறாயே!" என்று சொன்னேன்.
"சரிநிகர் சமானத்திலும் ஒரு வரை முறை வேண்டும். ஆங்கிலோ - இந்தியப் பெண்கள் இம்மாதிரி வேலைகளுக்கு வரலாம். நம்முடைய ஹிந்து சமூகப் பெண்களுக்கு இதெல்லாம் லாயக்கில்லை" என்றான் ரங்கபாஷ்யம்.
மேலும் அவன், "ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கின்றன. இவர்கள் வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள்!" என்றான்.
இந்தச் சம்பாஷணையைத் தொடர நான் விரும்பவில்லை. ஆனால் ஏதோ ஒருவிதமான ஆத்திரம் அவன் மனத்தில் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. அது என்னவென்று அறிந்து கொள்ளுவதில் இலேசாக ஆவலும் உண்டாயிற்று. நாகபுரியில் காலை உணவுக்காக விமானம் இறங்கியபோது அதைபற்றிச் சிறிது விவரமாக நானே அறிந்து கொள்ளவும் முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், ரங்கபாஷ்யம், அவன், விமான, சிநேகிதம், கொண்டு, வேண்டும், சொன்னேன், என்றான், காப்பி, வேண்டுமா, கொள்ள, அந்தச், கேட்டான், ஜன்னல்