மாலதியின் தந்தை
10
பெங்களூர் மெயில் துரிதமாய்ப் போய்க்
கொண்டிருந்தது. வெளியில் காற்றும் மழைத் தூற்றலுமாயிருந்தபடியால் ரயிலின்
கண்ணாடிக் கதவுகள் மூடப்பட்டிருந்தான். அந்தக் கதவுகளில் சளசள வென்று
தூற்றல் அடித்துச் சொட்டுச் சொட்டாய் ஜலம் வடிந்து கொண்டிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் விஷயம் என்னவென்பதை வாசகர்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்.
இராமானுஜம் கல்கத்தாவில் எந்த முதலாளியிடம் வேலை பார்த்து வந்தானோ அந்த முதலாளிதான் மாலதியின் தந்தை. இராமனுஜம் சிறை சென்ற பிறகு அவருடைய கம்பெனி பலவிதக் கஷ்டங்கள் அடைந்து நஷ்டமாகி வந்தது. தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன் கல்கத்தாவில் நடந்த பயங்கர கலவரத்தில் அவருடைய கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து போயிற்று. தேசம் சுதந்திரம் பெற்றவுடன் கல்கத்தாவில் ஏற்பட்ட டாக்டர் பி.சி. கோஷின் கடுமையான ஆட்சியில் கள்ள மார்க்கெட் வியாபாரம் அடியோடு படுத்து விட்டது.
இதனாலெல்லாம் மாலதியின் தந்தை நோயில் விழுந்து படுத்த படுக்கையானார். டாக்டர்களும் கையை விரித்து விட்டார்கள். இறுதிக் காலத்தில் அவருடைய மனசாட்சி அவரை மிகவும் உறுத்தியது. முக்கியமாகத் தம்மைப் பூரணமாக நம்பி விசுவாசத்துடன் வேலை செய்த இராமனுஜத்துக்குச் செய்த அநீதி அவருடைய நெஞ்சில் பெரும் பாரமாக அழுத்தியது. அவனைக் கண்டு பிடிக்க அவர் ஆனமட்டும் முயன்றும் முடியவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவன் வேறு பெயர் வைத்துக் கொண்டு விட்டான் அல்லவா? தம் அருமை மகளாகிய மாலதியிடம் விஷயத்தைச் சொல்லி, "எப்படியாவது இராமனுஜத்தைக் கண்டுபிடித்து, இந்தக் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டும்" என்று ஒப்புவித்தார். தான் அவனுக்குச் செய்த தீங்குக்குப் பரிகாரமாகப் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துவிட்டுப் போனார்.
ரங்கபாஷ்யம் என்கிற இராமனுஜம் கடிதத்தைப் படித்து முடித்ததும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு என்னைப் பார்த்து, "ஸார்! அந்தப் புண்ணியவான் என்னை இவ்வளவு கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டு அவ்வளவையும் பத்தாயிரம் ரூபாயினால் துடைத்து விடலாம் என்று பார்க்கிறார்! இந்தாருங்கள்! இந்தப் பணத்தை அவருடைய செல்லக் குமாரியிடமே கொடுங்கள்!" என்று உறையோடு எடுத்தெறிந்தான்.
அப்போது மாலதி தான் பெண் என்பதைக் காட்டிவிட்டாள். கலகலவென்று அவள் கண்ணீர் பெருக்கி விம்மினாள்.
அதைப் பார்த்த இராமானுஜம் எழுந்து அவள் அருகில் ஓடிவந்தான். ஆனால் அருகில் வந்ததும் இன்னது செய்வதென்று தெரியாமல் அவனும் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டான்.
அவர்கள் ஒருவரையொருவர் சமாதானப்படுத்திக் கொள்ளட்டும் என்று வெளியேறப் பார்த்தேன்.
"ஸார்! ஸார்! கொஞ்சம் இருங்கள்!" என்றான் இராமனுஜம்.
நான் தயங்கி நின்றேன்.
கண்களைத் துடைத்துக் கொண்டு, "சொல்வதைப் பூராவும் சொல்வதற்கு முன் அழுதால் நான் என்ன செய்கிறது? இவளுடைய அப்பா எனக்குச் செய்த தீங்குக்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டுமானால் அதற்கு வேறு வழி இருக்கிறது. விலையில்லாச் செல்வமாகிய அவருடைய பெண்ணை எனக்குக் கலியாணம் செய்து கொடுக்க வேண்டும்! அதற்குச் சம்மதமா என்று இவளைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றான் இராமானுஜம்.
மாலதியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு "அது எப்படி ஸார், முடியுமா? சுதந்திர பாரத நாட்டில் பெண்களுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா?..." என்றாள்.
"அப்படியானால் மெனக்கெட்டு எதற்காக என்னைத் தேடி வரவேண்டும்? இந்தப் பணம் யாருக்கு வேண்டும்? இதை எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள்!" என்றான் இராமானுஜம்.
"சொல்வதை முழுதும் கேட்பதற்குள் எதற்காக இவர் அவசரப்படுகிறார்? ஸார்... நான் தான் என் சொந்த இஷ்டத்தினால் என் சுதந்திரமாக இவருக்கு என்னைக் கொடுத்து விட்டேனே...? என் தகப்பனார் எப்படி என்னை இவருக்குக் கொடுக்க முடியும்?" என்றாள் மாலதி.
அவர்களை விட்டுவிட்டு நழுவுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று நான் வெளியேறினேன்.
ஒரு மாதத்துக்கு முன்பு இராமானுஜம் தம்பதிகளைப் பார்த்தேன். பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது ஆசிரியர் தினகரனைப் பற்றியும் பேச்சு வந்தது. அவனை இரண்டு பேரும் சேர்ந்து நிந்தித்ததை என்னால் பொறுக்கவே முடியவில்லை.
"எதற்காக அந்த அப்பாவியைத் திட்டுகிறீர்கள்? அவன் பத்திரிகையில் அநாமதேயக் கடிதம் விடுத்ததனால் தானே நீங்கள் இன்று இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்?" என்றேன்.
"அநாமதேயக் கடிதம் அவனா எழுதினான்? அழகுதான்!" என்றாள் மாலதி.
திடீரென்று என் மனதில் ஒரு பீதி உண்டாயிற்று. ஒரு வேளை நான் அந்தக் கடிதத்தை எழுதினதாக இவர்கள் சந்தேகப்படுகிறார்களோ என்று.
"பின் யார் எழுதியது? வேறு யாரையாவது சந்தேகிக்கிறீர்களா என்ன?" என்று கேட்டேன்.
"சந்தேகிக்கவில்லை ஸார்! யார் எழுதியது என்று நிச்சயமாய்த் தெரியும்" என்றாள் மாலதி.
இன்னும் அதிக பீதியுடன், "யார் தான் எழுதியது! உனக்கு அது எப்படி நிச்சயமாய்த் தெரியும்?" என்று கேட்டேன் நான்.
"நான் தான் எழுதினேன். அது எனக்கு நிச்சயமாய்த் தெரியாமல் எப்படி இருக்க முடியும்?" என்றாள் மாலதி.
இந்தச் சுதந்திர யுகத்துப் புதுமைப் பெண்கள் என்ன செய்வார்கள், என்ன செய்யமாட்டார்கள் என்று யார் தான் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், தான், அவருடைய, ஸார், என்றாள், இராமானுஜம், மாலதி, என்ன, எப்படி, யார், செய்த, கொண்டு, நிச்சயமாய்த், முடியும், எழுதியது, எதற்காக, என்றான், வேறு, வேண்டும், இராமனுஜம், சுதந்திரம், கல்கத்தாவில்