மாலதியின் தந்தை
6
அப்புறம் சில காலம் ரங்கபாஷ்யம் என்னை
சந்தித்துப் பேச அடிக்கடி வந்து கொண்டிருந்தான். தரையில் காலை வைத்து
அவன் நடந்ததாகவே தோன்றவில்லை. ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
இந்த நாட்களில் அவனுக்கு எதைப் பார்த்தாலும் அழகாயிருந்தது; இன்பமயமாயிருந்தது.
பட்டுப் பூச்சி பறப்பதைப் பார்த்தால், "ஸார்! ஸார்! அந்தப் பட்டுப் பூச்சியைப் பாருங்கள்! அது வர்ணச் சிறகை அடித்துக் கொண்டு பறப்பது என்ன அழகாயிருக்கிறது!" என்பான்.
ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து "அடடா ஆகாசத்தின் ஸ்வச்சமான நீல நிறந்தான் எத்தனை அழகு" என்பான்.
அதே வானத்தில் மேகங்கள் படர்ந்திருந்தால் "அடடா! வெள்ளைப் பஞ்சுத் திறனைப் போல் இந்த மேகங்கள் தான் என்ன அழகாயிருக்கின்றன! அவற்றில் சூரியகாந்தி பட்டுவிட்டால் ஒரே பொன் மயமாகி விடுகிறதைப் பார்த்தீர்களா!" என்பான்.
"ஆகா! இந்தத் தென்றல் காற்றுக்கு இவ்வளவு இனிமையும் சுகமும் எப்படித்தான் வந்ததோ? 'மந்த மாருதம்' என்று தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள்?" என்பான்.
ஒவ்வொரு சமயம் மனதை இன்னும் கொஞ்சம் திறந்து விட்டுப் பேசுவான்.
"ஸார்! இந்த அதிசயத்தைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மாலதியை நான் முதலில் சந்தித்தது சில மாதங்களுக்கு முன்னாலே தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனையோ வருடங்களாக எத்தனையோ யுகயுகமாகப் பழகியது போலிருக்கிறது" என்று ஒரு தடவை சொன்னான்.
"அதெல்லாம் சரிதானப்பா! கலியாணச் சாப்பாடு எப்போது போடப் போகிறாய், சொல்லு! தேதி நிச்சயமாகி விட்டதா?" என்று கேட்டேன்.
"தேதி நிச்சயமானால் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? முதலில் உங்களுக்குத்தான் சொல்வேன், ஸார்! எனக்கும் உற்றார் உறவினர் அதிகம் பேர் இல்லை. நீங்கள் தான் கிட்ட இருந்து நடத்தி வைக்க வேண்டும்" என்றான் ரங்கபாஷ்யம்.
இப்படிச் சொல்லிவிட்டுப் போன மறுநாளே அவன் உற்சாகம் அடியோடு குன்றி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.
"என்னப்பா சமாசாரம்? ஒரு மாதிரியாக இருக்கிறாயே?" என்று கேட்டேன்.
"அன்றைக்கு அரங்க மேடையில் பார்த்தோமே, ஸார்! அந்தத் தடியன் ஓயாமல் மாலதியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறான்! எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை!"
"உனக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? அவள் கன்னிப்பெண். அதோடு படித்த பெண்; சர்வ சுதந்திரமாக வாழ்க்கை நடத்தி வந்தவள். அவள் பேரில் உன்னுடைய பாத்தியதையை நீ ஸ்தாபித்துக் கொள்வதுதானே? உன்னைக் கலியாணம் செய்து கொள்ள அவளுக்கு இஷ்டமா, இல்லையா என்று கறாராகக் கேட்டு விடு! மூடி மூடி வைப்பதில் என்ன பிரயோஜனம்? 'பேசப்போகிறாயோ, சாகப் போகிறாயோ' என்ற பழமொழியைக் கேட்டதில்லை? வாயுள்ள பிள்ளைதான் இந்த காலத்தில் பிழைக்க முடியும்!" என்றேன்.
"உண்மைதான்; உண்டு, இல்லை என்று மாலதியைக் கேட்டுவிடத்தான் போகிறேன்!" என்றான் ரங்கபாஷ்யம். ஆனால் அவ்விதம் கேட்பதற்கு இலேசில் அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. தள்ளிப் போட்டுக் கொண்டே காலங் கடத்தினான். ஆனால் அதே சமயத்தில் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டுமிருந்தான். அவன் மீது கோபித்துக் கொள்வதா, அநுதாபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு நாள் ரங்கபாஷ்யம் பீதிகரமான முகத்துடன் என்னுடைய அறைக்குத் திடீரென்று வந்து சேர்ந்தான்.
"ஸார்! எனக்கு ஏதோ ஒரு பெரிய அபாயம் வரப் போகிறது. நீங்கள் தான் உதவி செய்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" என்றான்.
அவனுக்கு ஏதாவது மூளைக்கோளாறு நேர்ந்து விட்டதோ என்று எனக்குச் சந்தேகமாகி விட்டது. அவன் முகம் அப்படிப் பேயறைந்தவன் முகம் போலிருந்தது. பேச்சில் அவ்வளவு பதட்டமும் பயங்கரமும் தொனித்தன. சற்று ஆறுதலாகவே பேசி, "என்ன விஷயம் என்று சொல்லு. என்னால் முடிந்த உதவியை உனக்கு அவசியம் செய்கிறேன்!" என்றேன்.
"யாரோ ஒருவன் அடிக்கடி என்னைப் பின் தொடர்ந்து வருகிறான். என்னைக் கொலை செய்ய வருகிறானோ, வேறு என்ன நோக்கத்துடன் வருகிறானோ, தெரியவில்லை. நான் இருக்கும் அறை வாசலில் வந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கிறான். யார் என்று பார்க்க அருகில் சென்றால் மறைந்து விடுகிறான். என்னுடைய அறைக்குப் போகவே பயமாயிருக்கிறது. உங்களுடனேயே சில நாள் நான் இருந்து விடட்டுமா?" என்று கேட்டான்.
"பேஷாக இரு, அப்பனே! ஆனால் உன்னுடைய பயம் வீண் பயமாகவும் இருக்கலாம் அல்லவா? யாரோ உன்னைப் பின் தொடர்வதாக நீ நினைப்பது வெறும் பிரமையாக இருக்கலாம் அல்லவா? இந்த மாதிரி பிரமை சில சமயம் நல்ல அறிவாளிகளுக்கும் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் ஒரு பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் ஆராய்ச்சியில் சிறந்த அறிஞர் என்று பிரசித்தி பெற்றவர். ஆனால் உலகமெல்லாம் தம் பெயரைக் கெடுப்பதற்குச் சதியாலோசனை செய்வதாக அவருக்கு ஒரு பிரமை. இரண்டு பேர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால், உடனே, 'பார்த்தாயா? அவர்கள் என்னைப் பற்றித் தான் ஏதோ அவதூறு பேசுகிறார்கள்! அவர்கள் பேரில் வழக்குத் தொடர வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். அம்மாதிரி நீயும் ஆகிவிடக்கூடாது..."
இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ரங்கபாஷ்யம், என் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, அறையின் பலகணி வழியாக வெளியே பார்க்கப் பண்ணினான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் வீதி விளக்கின் வெளிச்சம் விழாத ஒரு கம்பத்தின் மறைவில் யாரோ ஒரு ஆள் நிற்பது தெரிந்தது.
"யாரோ ஒரு மனிதன் சந்தேகாஸ்பதமாகத்தான் மறைந்து நிற்கிறான். அதனால் என்ன? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்கலாம் அல்லவா?" என்றேன்.
சில நாளைக்குப் பிறகு மாலதி நடித்த நாடகம் எழுதிய தினகரனை நான் சந்திக்க நேர்ந்தது. அவன் என்னோடு வலியப் பேச்சுக் கொடுத்தான். "உங்களோடு ஒருவர் நாடகத்துக்கு வந்திருந்தாரே அவர் பெயர் என்ன?" என்று கேட்டான்.
"ரங்கபாஷ்யம்" என்று சொன்னேன்.
"அது அவருடைய உண்மைப் பெயர் அல்ல!" என்று சொல்லி என்னைத் திடுக்கிடச் செய்தான்.
"எதனால் சொல்கிறீர்?" என்றேன்.
"உங்களுக்கு எத்தனை நாளாக அவரைத் தெரியும்?"
"சுமார் ஒரு வருஷ காலமாகத் தெரியும்."
"அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன். இதோ இந்த குரூப் போட்டோ வில் உள்ள இந்த படத்தைப் படத்தைப் பாருங்கள். இதன் கீழே எழுதியிருக்கும் பெயரையும் படித்துப் பாருங்கள்" என்றான் தினகரன்.
அவன் சுட்டிக் காட்டிய உருவம் கொஞ்சம் ரங்கபாஷ்யத்தின் சாயலாக இருந்தது. கீழே கே.ஆர். ராமானுஜம் என்ற பெயரும் போட்டிருந்தது. ஆனால் ஒரு குரூப் போட்டோ வில் உள்ள சிறிய மங்கலான உருவத்தைக் கொண்டு நிச்சயமாக என்ன முடிவு செய்துவிட முடியும்?
"இதிலிருந்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்படியேயிருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் அதைப்பற்றி என்ன கவலை? பெயரை மாற்றிவைத்துக் கொள்ள ஒருவர் இஷ்டப்பட்டால், அதை நாம் எப்படி தடுக்க முடியும்?" என்று கேட்டேன்.
"அதற்காகச் சொல்லவில்லை, ஸார்! ஆள் மாறாட்டம் செய்து ஒரு அபலைப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திக் கொள்வது என்றால், இது மிகவும் மோசமான காரியம் இல்லையா? அப்படிப்பட்ட ஈனச் செயலைத் தடுப்பது நம்முடைய கடமை இல்லையா?" என்றான்.
"எனக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன. இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை" என்று சொல்லிப் பேச்சை வெட்டினேன்.
ஆனால் என் மனம் ஓரளவு நிம்மதியை இழந்து விட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, ஸார், அவன், ரங்கபாஷ்யம், தான், என்றான், நான், என்பான், என்றேன், யாரோ, கொண்டு, அல்லவா, தெரியவில்லை, எனக்கு, முடியும், இருக்கலாம், செய்து, நீங்கள், கொஞ்சம், பாருங்கள், கேட்டேன், வந்து, வேண்டும், இல்லையா