மாலதியின் தந்தை
5
இப்போதெல்லாம் நாடெங்கும் மாதர் சங்கங்கள்
ஏற்பட்டு வருகின்றன. மாதர் சங்கத்தை என் நண்பர் ஒருவர் 'மாதர் சங்கடம்'
என்று குறிப்பிடுவது வழக்கம். பெண்மணிகள் சங்கம் ஸ்தாபிப்பதும் சமூகத்
தொண்டுகள் புரிவதும் சில சமயம் ஆண்பிள்ளைகளுக்குச் சங்கடத்தை உண்டாக்குவது
உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளைகள் நடத்தும் சங்கங்களினால் பெண் தெய்வங்களுக்கும்
சில சமயம் சங்கடம் உண்டாகத் தான் செய்கிறது. ஆகவே, சங்கங்களினால் ஏற்படும்
பரஸ்பர சங்கடத்தைத் தவிர்க்க முடியாதுதான்.
ஒருநாள், மாதர் சமூக ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் என்னைப் பார்ப்பதற்கு வந்து சீட்டும் அனுப்பினார்கள். ஏதோ ஒரு சமூகத் தொண்டுக்காக உதவி நாடகம் போடுகிறார்கள் என்றும், அதற்கு டிக்கெட் விற்பதற்கு வந்திருக்கிறார்கள் என்றும் அறிந்தேன். இந்த மாதிரி டிக்கட் விற்பதற்கோ சந்தா அல்லது நன்கொடை வசூலிப்பதற்கோ யார் வந்தாலும் நமக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆயினும் பெண்மணிகள் இப்படிப்பட்ட நல்ல காரியங்களுக்கு வரும்போது கண்டிப்பாக எப்படி நிராகரிக்க முடியும்? ஏதோ ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு போகச் சொல்லலாம் என்று எண்ணி அவர்களை வரும்படி சொன்னேன். வந்த இரண்டு பேரில் ஒரு பெண்மணியைப் பார்த்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் விமான சிநேகிதன் ரங்கபாஷ்யத்தின் உள்ளத்தைக் கவர்ந்த விமான ரமணி தான் அவள்.
"உங்களை நான் எங்கேயோ பார்த்த ஞாபகமாயிருக்கிறதே?" என்று மாலதியே முதலில் கேட்டுவிட்டாள்.
"ஆமாம் விமானப் பிரயாணத்தின் போது ஒரு தடவை நாகபுரியில் பார்த்தேன்" என்றேன்.
ஒன்றுக்கு இரண்டாக டிக்கட் வாங்கிக் கொண்டு, மெதுவாக ரங்கபாஷ்யத்தின் பேச்சை எடுத்தேன்.
"நீங்கள் விமான வேலையை விட்டு விடப் போவதாக ரங்கபாஷ்யம் அப்போதே சொன்னார்" என்றேன்.
ஒரு கண நேரம் அவள் ஏதோ யோசித்துவிட்டு, என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். "அவரும் இந்த நாடகத்துக்கு வருவார். டிக்கட் வாங்கிக் கொண்டிருக்கிறார்!" என்றார்.
இன்னும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்து, எந்த உதவி நாடகத்துக்காக மாலதி நன்கொடை டிக்கட் விற்கிறாளோ, அதில் அவளே வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கப் போவதாக அறிந்தேன்.
நான் எதிர்பார்த்தபடியே சற்று நேரத்திற்கெல்லாம் ரங்கபாஷ்யத்திடமிருந்து டெலிபோன் வந்தது. "சாயங்காலம் ஒரு அமெச்சூர் உதவி நாடகத்துக்கு டிக்கட் வாங்கியிருக்கிறேன். உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கியிருக்கிறேன். அவசியம் வர வேண்டும்" என்று குதூகலமான குரலில் கூறினான்.
நாடகத்துக்கு இருவரும் போயிருந்தோம். தலைக்கு இரண்டு டிக்கட் எடுத்துக் கொண்டு போனோம்! அமெச்சூர்கள் போட்ட நாடகம் என்ற முறையில் பார்க்கும்போது அவ்வளவு மோசமாக இல்லை. நன்றாயிருந்தது என்றே சொல்லலாம். ஆனால் ரங்கபாஷ்யத்துக்கு என்னவோ அவ்வளவாக அந்த நாடகம் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
"இது என்ன கதை? போயும் போயும் நாடகம் போட இத்தகைய கதை தானா கிடைத்தது? உலகத்தில் வேறு நல்ல விஷயமா இல்லை?" என்று முனகிக் கொண்டே இருந்தான்.
என்னுடைய அபிப்பிராயத்தில் அப்படி ஒன்றும் மோசமான கதை இல்லை. ஏழ்மையினால் குற்றம் செய்து சிறைப்பட்ட ஒரு கைதியின் கதையை வைத்து நாடகம் எழுதியிருந்தது. சிறையில் அக்கைதி படும் கஷ்டங்கள், அவன் தப்பி ஓடி வந்த பிறகு அடையும் துன்பங்கள் - இவைதான் முக்கியமான நாடக அம்சங்கள். எதற்காக இந்த விஷயம் ரங்கபாஷ்யத்துக்கு அவ்வளவு பிடிக்காமலிருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. பின்னொரு காலத்தில் அதன் காரணம் தெரிந்தது.
நாடகம் முடிந்ததும் "போகலாமா" என்று அவனிடம் கேட்டேன்.
"மாலதியைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லி விட்டுத்தான் போக வேண்டும். கதை நன்றாயில்லாவிட்டாலும் அவள் நடிப்பு என்னமோ அபாரமாகத் தானே இருந்தது?" என்றான் ரங்கபாஷ்யம்.
அப்படியே சபை கலையும் வரையில் காத்திருந்து அரங்க மேடைக்குச் சென்று மாலதியைப் பார்த்தோம். நாடகத்தைப் பற்றி என்னுடைய சந்தோஷத்தை நான் தெரிவித்த பிறகு, ரங்கபாஷ்யமும் தன் பாராட்டுதலைத் தெரிவித்தான்.
"உங்கள் நடிப்பு மிக நன்றாயிருந்தது. ஆனால் நாடகக் கதை சுத்த அபத்தம். அடுத்த தடவை வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றிக் கதை எழுதி நாடகம் போடுங்கள்!" என்று சொன்னா.
அச்சமயத்தில் எங்கள் இருவரையும் தவிர மூன்றாவது மனிதன் ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். மாலதி அவனைச் சுட்டிக் காட்டி, "தயவு செய்து இவரிடம் சொல்லுங்கள். இவர் எழுதிய நாடகந்தான் இது. நான் கூட முதலிலேயே நாடக விஷயம் நன்றாயில்லையென்று தான் சொன்னேன்" என்றாள்.
அந்த மனிதன், "சபையில் எல்லாருக்கும் கதை ரொம்பப் பிடித்திருந்தது. பிரமாதமாகச் சந்தோஷப்பட்டு அடிக்கடி 'அப்லாஸ்' கொடுத்தார்கள்! தலைமை வகித்தவர் கூட நாடக விஷயத்தைச் சிலாகித்தார். இவர் ஏதோ அலாதிப் பிறவி போலிருக்கிறது. இவருக்கு மட்டும் பிடிக்கவில்லை!" என்றான்.
அச்சமயம் ரங்கபாஷ்யத்தின் முகம் போன போக்கு ஒரு கணம் என்னைத் திடுக்கிடச் செய்து விட்டது. மறுநிமிஷம் சமாளித்துக் கொண்டு, "சரி நாம் போகலாம்" என்றான். மாலதியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - டிக்கட், நாடகம், கொண்டு, மாதர், நான், நாடக, நாடகத்துக்கு, செய்து, வேண்டும், இல்லை, என்றான், விமான, தான், பெண்மணிகள், உதவி, நல்ல, ரங்கபாஷ்யத்தின், வாங்கிக், அவள்