மாலதியின் தந்தை
7
இன்னொரு நாள் ரங்கபாஷ்யம் வந்தான். முகம்
அடைந்திருந்த மாறுதலைச் சொல்லி முடியாது. அன்று ஆகாச விமானப் பிரயாணத்தில்
அவனைப் பார்த்த போதிருந்த பால்வடியும் முகம் எங்கே? பீதி நிறைந்த பிரம்மஹத்தி
கூத்தாடிய இப்போதைய முகம் எங்கே?
அவனைப் பார்த்ததும் நானே பேச்சை ஆரம்பித்து விட்டேன். "என்னடா அப்பா! மாலதி கடைசியில் கையை விரித்து விட்டாளா? ஏன் இவ்வளவு சோகம்?" என்றேன்.
"இல்லை, இல்லை! மாலதி என்னை மணந்து கொள்ளத் தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டாள். ஏதோ ஒரு முக்கியமான பொறுப்பு அவளுக்கு இருக்கிறதாம். அதை நிறைவேற்றும் வரையில் சில நாள் பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதற்குள் இந்தப் பேரிடி என் தலையில் விழுந்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டே, ஒரு பத்திரிகைத் துணுக்கை எடுத்து நீட்டினான்.
அதில் பின் வருமாறு எழுதியிருந்தது:-
"ஸ்ரீ மருதாசலம் செட்டியாரின் கம்பெனியில் மானேஜர் வேலை பார்க்கும் ரங்கபாஷ்யத்துக்கு எச்சரிக்கை. அவன் மிஸ் மா... என்னும் பெண்ணை மறந்துவிட்டு ஒரு வாரத்திற்குள் சென்னைப் பட்டணத்தை விட்டுப் போய்விட வேண்டியது. அப்படிப் போகாவிட்டால், அவனுடைய பூர்வாசிரமத்துப் பெயரையும் மோசடிகளையும் பற்றித் தக்க ஆதாரங்களுடன் இந்தப் பத்திரிகையில் அம்பலப்படுத்தப்படும். ஜாக்கிரதை!"
இதைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது. இதற்காகவா இப்படி இவன் மிரண்டு விட்டான்?
"இந்த மாதிரி ஆபாசப் பத்திரிகைகளை நீ ஏன் வாங்கிப் பார்க்கிறாய்? பார்த்து மனதைக் குழப்பிக் கொள்ளுகிறாய்? உனக்கு வேறு வேலை கிடையாதா?" என்று கேட்டேன்.
"நான் வாங்கவில்லை. இதை மெனக்கெட்டுப் பத்திரிகையிலிருந்து வெட்டி யாரோ எனக்கு தபாலில் அனுப்பியிருக்கிறான். இதை எழுதிய ஆளாகவேதான் இருக்க வேண்டும்" என்றான்.
"இப்படிப்பட்டவர்களின் யுக்தியே இதுதான். அதில் நீ ஏன் விழுந்துவிட வேண்டும்? சுக்குநூறாய்க் கிழித்தெறிந்துவிட்டு நிம்மதியாக உன் வேலையைப் பார்! பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் பொதுக் காரியங்களைப் பற்றி விமர்சனம் எழுதுவது பத்திரிகை தர்மம், அதற்கு மாறாகத் தனிப்பட்ட மனிதர்களின் குட்டை விடுவதாகச் சொல்லுகிறவர்கள் பத்திரிகைக்காரர்களே அல்ல. இதையெல்லாம் படிப்பதும் பிசகு; காதில் போட்டுக் கொள்வதும் பிசகு! இப்படிப்பட்ட அவதூறுகளினால் உனக்கு கெடுதல் ஒன்றும் நேர்ந்துவிடாது தைரியமாயிரு!"
இவ்வாறு கூறிச் சில உதாரணங்களும் எடுத்துக் காட்டினேன். தமிழ் நாட்டில் சில பிரமுகர்களைப் பற்றி என்னவெல்லாமோ வாயில் வைத்துச் சொல்லத் தகாத ஆபாச அவதூறுகள், சில கந்தல் பத்திரிகைகளில் வெளி அந்தன. அதனாலெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்கு என்ன குறைந்து போய்விட்டது? ஒன்றுமில்லை என்பதை எடுத்துச் சொன்னேன்.
அதற்கு ரங்கபாஷ்யம் சொன்ன பதில் என்னை உண்மையில் திணறித் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
"அந்தப் பிரமுகர்களைப் பற்றியெல்லாம் எழுதியவற்றில் உண்மை இருந்திராது. ஆகையால் அவர்கள் கவலையற்று நிம்மதியாயிருந்தார்கள். ஆனால், என் விஷயத்தில் இதில் எழுதியிருப்பது உண்மையாயிற்றே! நான் எப்படி நிம்மதியாயிருக்க முடியும்?" என்றான்!
பிறகு நான் நயமாகப் பேசி வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அவன் தனது பூர்வக் கதையைக் கூறினான்:-
ரங்கபாஷ்யத்தின் உண்மைப் பெயர் இராமானுஜம். அவன் கல்கத்தாவில் ஒரு பெரிய முதலாளியிடம் அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்த்து வந்தான்.
முதலாளி பல தொழில்களில் ஈடுபட்டவர். அதோடு யுத்த காண்டிராக்டுகளும் எடுத்திருந்தார். அவருக்குச் சில எதிர்பாராத பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன. இதனால் முறை தவறான காரியங்கள் சிலவற்றை செய்துவிட்டார். எஜமான விசுவாசம் கருதி அதற்கெல்லாம் ராமானுஜமும் உடந்தையாயிருக்க நேர்ந்தது. உண்மையில் மோசடி ஒன்றும் இல்லையென்றும் எல்லாம் சில நாளில் சரிப்படுத்தப்படும் என்று முதலாளி உறுதி சொன்னதை நம்பினான். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவன் நம்பியதெல்லாம் பொய்யாகிவிட்டது. முறைத் தவறுகளும் ஊழல்களும் வெளியாகிவிட்டன. அந்த ஊழல்களில் முதலாளி காண்ட்ராக்டரைத் தவிர பெரிய பெரிய ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள், என்ஜினீயர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் செல்வாக்கின் காரணமாகத் தப்பித்துக் கொண்டார்கள். அதற்கெல்லாம், பாவம், இராமனுஜமே பொறுப்பாக்கப்பட்டான். அவனைக் கைது செய்து விசாரணையும் நடந்தது. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறவில்லை. இராமனுஜத்தின் பேரில் குற்றம் ருசுவாகி, அவனுக்கு இரண்டு வருஷம் சிறைத் தண்டனை கிடைத்தது!
சிறையில் ஒன்றரை வருஷம் கழித்த பிறகு, இந்தியா தேசம் சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திர நன்னாளில், புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் மந்திரிகள் சிறைக் கைதிகள் சிலருக்கு விடுதலை அளித்தார்கள். இராமானுஜத்தைப் பற்றிச் சிறை அதிகாரிகள் மிக நல்ல அறிக்கை அனுப்பியிருந்தபடியால், இராமானுஜமும் விடுதலை பெற்றான். சென்னைக்கு வந்து முற்றும் புதிய வாழ்க்கை தொடங்கினான். மோசடி வழக்கில் அடிபட்ட பழைய பெயர் வாழ்க்கையில் வெற்றிக்கு இடையூறாயிருக்கலாம் என்று கருதிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஸ்ரீ மருதாசலம் செட்டியார் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தான். அவனுடைய பொருளாதார அறிவின் காரணமாக அதிசீக்கிரத்தில் உயர்ந்த நிலைமைக்கு வந்தான். புதிய முதலாளியான செட்டியார் தமது தொழில்களின் முழுப் பொறுப்பையும் அவனிடமே பூரணமாக நம்பி விட்டிருந்தார். பழைய கல்கத்தா வாழ்க்கையும் அதில் ஏற்பட்ட அனுபவங்களும், ஒரு பயங்கரமான கனவு என்று எண்ணி ரங்கபாஷ்யம் அதையெல்லாம் மறந்து விட்ட சமயத்தில் இந்தப் பேரிடி அவன் தலையில் விழுந்து விட்டது.
யாரோ ஒரு கிராதகன் அவனுடைய பழைய வாழ்க்கையைத் தோண்டி எடுத்து அதன் சம்பவங்களை அம்பலப்படுத்தவும் தயாராயிருந்தான் என்று ஏற்பட்டது!
மேலே கண்ட சோகக் கதையைக் கூறிவிட்டு ரங்கபாஷ்யம் சொன்னதாவது:
"நான் மோசடி வழக்கில் தண்டனை அடைந்த கைதி என்பது வெளியானால் கம்பெனி முதலாளி என்னை உடனே அனுப்பி விடுவார். மாலதியும் என்னைக் கண்ணெடுத்தும் பார்க்கப் போவதில்லை. அவள் மனது புண்ணாகும்! எனக்கும் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க இனித் தைரியம் உண்டாகாது. ஆகையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் பெங்களூருக்குப் போய் விடுவது என்று தீர்மானித்திருக்கிறேன். என்னுடைய பெங்களூர் விலாசம் உங்களுக்கு மட்டும் தெரிவிக்கிறேன். நீங்கள் யாருக்கும் சொல்லவில்லை என்று உறுதியளிக்க வேண்டும்! ஏதாவது முக்கிய விஷயம் இருந்தால் மட்டும் எனக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றான் ரங்கபாஷ்யம்.
அவன் மோசடி வழக்கில் அநீதிக்கு ஆளானதைப் பற்றிக் கூறியதை நான் பரிபூரணமாக நம்பினேன். இம்மாதிரி பொய் முதலாளிகள் செய்த குற்றங்களுக்குச் சம்பள ஊழியர்களைப் பொறுப்பாக்கிய வேறு சில சம்பவங்களும் அறிந்திருந்தேன். பிற்பாடு அம்முதலாளிகளே அகப்பட்டுக் கொண்டதைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே, ரங்கபாஷ்யத்திடம் உண்மையில் எனக்கு அநுதாபந்தான் உண்டாயிற்று.
"இது என்ன, பைத்தியம்! உன்னிடம் மாலதில் உண்மைக் காதல் கொண்டிருப்பது உண்மையானால், இதற்காக அவள் மனதை மாற்றிக் கொள்வாளா? உன் கம்பெனி முதலாளியைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் மாலதி அத்தகைய நீசகுணம் உள்ளவள் அல்ல என்று நிச்சயமாய்ச் சொல்லுவேன். உன்னுடைய உண்மை நிலையை அறிந்தால் அவள் உன்னிடம் கொண்ட அன்பு அதிகமேயாகும்" என்றேன்.
"தயவு செய்து மன்னியுங்கள்! இத்தகைய பழியோடு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க என்னால் முடியவே முடியாது!" என்றான் ரங்கபாஷ்யம்.
அவனுடைய முடிவை மாற்றச் செய்ய நான் பட்ட பிரயாசை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின. மாலதி அவனிடம் அத்தகைய சலனமற்ற உறுதியான காதல் கொண்டிருந்ததாகவும் அவன் நம்பவில்லையென்றும் தெரிந்தது; அவளுடைய மனதில் ஏற்கனவே தயக்கம் இருந்தது; அந்தத் தயக்கத்தைப் பலப்படுத்தி அவனை நிராகரிக்கும்படி செய்ய இந்தப் பழைய துரதிஷ்ட சம்பவம் போதுமானதல்லவா? "எல்லம் விதியின்படி நடக்கும்" என்று விதிமேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ரங்கபாஷ்யம் கூறியதற்கு உடன்பட்டேன். பாவம்! அவன் பட்ட வேதனையை என்னால் ரசிக்க முடியவில்லை. காலமும் கடவுளுந்தான், அவனுடைய துன்பத்தைப் போக்கி நிம்மதி அளிக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், நான், ரங்கபாஷ்யம், அவனுடைய, அவள், வேண்டும், முதலாளி, என்றான், இந்தப், மோசடி, மாலதி, பழைய, பெரிய, முகம், உண்மையில், வழக்கில், பற்றி, வேலை, அதில், என்னை, நாள், வந்தான், ஒன்றும்