வீணை பவானி
4
இரண்டு மூன்று வருஷங்கள் சென்றன. இந்தக்
காலத்தில் தும்பை வனம் முதலியாருடைய சொந்தக் காரியங்கள் ரொம்பவும் சீர்கெட்டு
வந்தன. அவருக்கு விரோதிகள் அதிகமாகி வந்தார்கள். பவானி விஷயத்தில் எத்தனையோ
பணக்காரப் பிரபுக்களுக்கு அபிப்பிராயம் இருந்திருக்குமென்பது எதிர்பார்க்கக்
கூடியதுதானே? அவர்களெல்லாம் கோபாலசாமி முதலியாரைத் தீர்த்துக் கட்டி
விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள். முதலில் ஒரு கோவில் பஞ்சாயத்து
சம்பந்தமாகக் கேஸ் ஏற்பட்டது. அந்தக் கோவில் தர்மகர்த்தாக்கள் மூன்று
பேரில் கோபாலசாமி முதலியார் ஒருவர். மற்ற இரண்டு பேரும் இவரைத் தள்ளிவிட்டு
காரியங்களை நடத்தியதுடன், கோவில் உற்சவத்தின் போது இவரை அவமரியாதையாக
நடத்தி விட்டார்கள். கோபாலசாமிக்குக் கோபம் வந்து கேஸ் போட்டார். இதிலிருந்து
சிவில் கேஸுகளும் கிரிமினல் கேஸுகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. அக்கம்
பக்கத்து மிராசுதார்கள், பிரபுக்கள் எல்லாரும் கோபாலசாமியைத் தொலைத்துவிட்டு
மறுகாரியம் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, பிடிவாதமாக வேலை
செய்தார்கள். கோபாலசாமிக்கு நாளுக்கு நாள் கடன் முற்றிக் கொண்டு வந்தது.
வருஷா வருஷம் நிலத்தை விற்றுக் கொண்டு வந்தார்.
ஒரு தடவை தும்பைவனம் கோவில் உற்சவத்துக்கு நான் போயிருந்த சமயத்தில், முதலியார் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் சம்சாரம் ஐயம்பேட்டைக்குப் பக்கத்து ஊர்ப் பெண்தான். அந்த அம்மாளை எனக்கு நன்றாகத் தெரியும். பாவம்! அவள் ஒரே துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். "கந்தப்பா! இவ்வளவும் அந்தப் பூந்தோட்டத்து மூதேவியால் தான் வந்தது!" என்று சொல்லி அழுதாள். எனக்கு மனது ரொம்பவும் கஷ்டப்பட்டது. இந்த மாதிரி ஒரு ஜாதியை நம் தேசத்தில் எதற்காக ஏற்படுத்தினார்கள் என்று எண்ணி மனம் நொந்தேன். அடுத்த தடவை திருவாரூருக்குப் போகும் போது என் கோபத்தை பவானியின் மேல் காட்டி விடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், அங்கே போய்ப் பவானியின் நிலையைப் பார்த்தபோது, என் கோபமெல்லாம் பறந்து போய் விட்டது. சோகமே உருவெடுத்தவள் போலிருந்தாள். "என்னால் இப்படியெல்லாம் கஷ்டம் அவருக்கு வந்து விட்டதே!" என்று சொல்லிச் சொல்லி உருகினாள். அவளுக்கு சமாதானமாக நான், "நீ என்ன அம்மா செய்வாய்? உன் பேரில் என்ன தப்பு?" என்று திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.
"அண்ணே! அவரை அவ்விடத்து நிலம் வீடு வாசல் எல்லாவற்றுக்கும் தலை முழுகி விட்டு இங்கேயே வந்து விடும்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கேட்க மாட்டேனென்கிறார். நீயாவது சொல்லேன்; தினம் பொழுது விடிந்தால் கோர்ட்டுக்குப் போவதே வேலையாகி விட்டதே, என்னத்திற்காக இந்த மாதிரி வம்புக்கும் தும்புக்கும் போக வேண்டும்? நாலு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய சொத்து இங்கே இருக்கிறதே? இதையெல்லாம் யார் கட்டிக் கொண்டு போகப் போகிறார்கள்?" என்றாள்.
"அது நடக்கிற காரியமா தங்கச்சி! அவர் ஆண் பிள்ளை இல்லையா? ரோஸம் இராதா? வீண் வம்புக்கு இழுக்கிறவர்களுக்குப் பயந்து கொண்டு ஊரை விட்டு வந்து விடுவாரா? அதுவும் இங்கே? அவர் சம்மதித்தாலும் சம்சாரம் குழந்தைகள் இருக்கிறார்களே?" என்றேன்.
பிறகு பவானி, அவருடைய சம்சாரத்தையும் குழந்தைகளையும் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
பவானியின் தாயாரிடம் பேசினேன். "ஏன் அக்கா என்னத்துக்காக நமக்கு இந்தக் கெட்டப் பெயர். பவானியினாலே ஒரு பெரிய குடும்பம் அழிந்து போகிறது என்று இந்த ஜில்லா முழுவதும் பேசிக் கொள்கிறார்களே?" என்றேன்.
"யார் என்னத்தையாவது சொல்லட்டும் தம்பி; அவர்கள் இரண்டு பேரையும் பிரிப்பது மகாபாவம். பிரித்தால் என் மகள் உயிரை வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்" என்றாள்.
"இப்படி எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள் அக்கா! நாம் பார்த்ததில்லையா!" என்றேன் நான்.
"பவானியின் சமாச்சாரம் உனக்குத் தெரியாது தம்பி" என்றாள்.
பிறகு, "இப்பொழுது அவர்களுக்குள் எப்படியிருக்கிறது? முன்னேயெல்லாம் போல் கோபதாபம் உண்டா?" என்று கேட்டேன்.
பவானியின் குணமே அடியோடு மாறிவிட்டதென்றும் அவள் சாந்தமே உருக் கொண்டவளாகி விட்டாள் என்றும் தெரிந்தது. இதற்கு நேர்மாறாகக் கோபாலசாமி முதலியாருக்குக் கோபதாபங்கள் அதிகமாகி வந்தனவாம். அதோடு, அடிக்கடி இல்லாத பொல்லாத சந்தேகங்கள் அவருக்குத் தோன்றி வந்தனவாம். "இது என்ன மனித சுபாவம்?" என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பவானி எதற்காக அவரிடம் அன்பு வைக்க வேண்டும்? நிர்ப்பந்தம், கட்டாயம் ஏதாவது உண்டா? தன் மனமொப்பி அவரையே தெய்வம் என்று எண்ணி இருப்பவள் மேல் ஒரு மனிதன் சந்தேகப்படுவதென்றால்? எனக்கு ரொம்பக் கோபமாயும் வெறுப்பாயுமிருந்தது. நமக்கென்னவென்று பேசாமல் போய் விட்டேன்.
இதற்கப்புறம் ஏறக்குறைய ஒரு வருஷ காலம் ஏதேதோ அசௌகரியங்களினால் நான் திருவாரூர்ப் பக்கம் போகவில்லை. பவானியின் தாயார் இறந்து போனாள் என்று தெரிந்ததும், துக்கம் விசாரிப்பதற்குப் போயிருந்தேன். அதற்கப்புறம் அங்கே போவதையே நிறுத்தி விட்டேன். "நமக்கு என்னத்திற்கு வம்பு?" என்ற எண்ணந்தான் காரணம்.
தும்பைவனம் முதலியாரின் காரியங்கள் வரவரச் சீர்கெட்டு வருகின்றன என்று மட்டும் அடிக்கடி காதில் விழுந்து கொண்டிருந்தது. சென்னைப் பட்டிணத்தில் ஹைகோர்ட்டில் அவருக்கு ஒரு பெரிய கேஸ் நடந்து வந்தது. அதில் தோற்றுப் போனால், ஆள் திவால்தான் என்று சொன்னார்கள்.
இப்படியிருக்கும் போது தான் ஒருநாள் அந்தப் பயங்கரமான ரயில் விபத்தைப் பற்றி செய்தி வந்தது. விழுப்புரத்துக்கும், கூடலூருக்கும் நடுவில் ரயில் கவிழ்ந்துவிட்டது. மூன்று வண்டிகள் அடியோடு நாசமாயின. நாற்பது ஐம்பது பேருக்கு மேல் செத்துப் போனார்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்திலிருந்தே எனக்குப் பத்திரிகை படிப்பதில் ஆசை உண்டு. அதுவும் இந்தப் பயங்கர ரயில் விபத்து நடந்த சமயத்தில் அதைப் பற்றிய விவரங்களைப் படிப்பதற்காக, வெகு ஆவலுடன் சுதேச மித்திரன் பத்திரிகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த மறுநாள், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர் விவர ஜாபிதா வந்திருந்தது. அதில் தும்பைவனம் முதலியாரின் பெயரைப் பார்த்ததும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். உடனே எனக்குப் பூந்தோட்டம் பவானியின் கதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஐயோ, அந்தப் பெண் ஒரு வருஷத்திற்குள்ளே தாயாரையும் இழந்து, ஆசை நாயகனையும் இழந்து, அநாதையாய்ப் போய் விட்டாளே? இனிமேல், அவளுடைய வாழ்க்கை எப்படியாகுமோ?
கோபாலசாமி முதலியாரின் சம்சாரம், குழந்தைகளின் ஞாபகமும் வந்தது. ஐயோ பாவம்! அவர்களுடைய சொத்தெல்லாம் கோர்ட்டு விவகாரங்களில் தொலைந்து போயிருக்கும். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்படியான நிலைமை வந்து விடுமோ என்னமோ?
ஒரு வாரத்துக்கெல்லாம் மன்னார்குடிக்குப் போக வேண்டியிருந்தது. அங்கிருந்து அப்படியே தும்பை வனத்துக்குப் போனேன். முதலியாரின் மனைவி பட்டத் துக்கத்தையும் அழுத அழுகையையும் பார்க்கச் சகிக்கவில்லை. தகப்பனாரை இழந்த குழந்தைகளைப் பார்க்கவும் பரிதாபமாய்த்தானிருந்தது. நல்ல வேளையாக ஊரிலிருந்து அவர்களுடைய தாத்தாவும் பாட்டியும் வந்திருந்தார்கள்! குழந்தைகளை அவர்கள் பார்த்துக் கொண்டதுடன், பெண்ணுக்கும் தேறுதல் கூறினார்கள். "என்ன செய்வதடி, அம்மா? உன் தலையெழுத்து அப்படியிருந்தது. குழந்தைகளுக்காக நீ உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமோ, இல்லையோ?" என்று சொல்லித் தேற்றி, பட்டினி கிடக்காமல் அரை வயிறாவது சாப்பிடும்படியும் பலவந்தப்படுத்தினார்கள். நானும் எனக்குத் தெரிந்தவரையில் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
இவர்களைப் பார்த்த பிறகு பவானியையும் அவசியம் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆவல் உண்டாயிற்று. நேரே திருவாரூருக்குப் போனேன். அவளுடைய வீட்டுக்குப் போகும்போது, என் மனம் ரொம்பவும் வேதனைப்பட்டது. ஒரே துக்கசாகரத்தில் மூழ்கியிருப்பாளே, எப்படி அவளைப் பார்த்துப் பேசுகிறது, எப்படி ஆறுதல் சொல்கிறது என்று என் மனம் தவித்தது. ஆனால் வீட்டுக்குள் போய் பவானியைப் பார்த்ததும், ஒருவாறு கவலை நீங்கிற்று. ஏனெனில், நான் பயத்துடன் எதிர்பார்த்தபடி அவள் கண்ணீருங் கம்பலையுமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லை. என்னைக் கண்டதும் அலறி அழவில்லை. சாதாரணமாய்த்தான் இருந்தாள். "வாருங்க அண்ணே!" என்று ஆர்வத்துடன் என்னை அழைத்தாள்.
கவலை நீங்கிற்று என்றா சொன்னேன்? ஆமாம்; கவலை நீங்கிற்று என்பது தான் உண்மை. ஆனால் மனத்திற்குள் பெரும் ஏமாற்றமும் உண்டாயிற்று. கடைசியில் 'சாதிக்குணம்' என்று உலகம் சொல்வது சரியாய்ப் போய் விட்டதல்லவா? தாலி கட்டிய மனைவி அங்கே படுகிற துக்கத்துக்கும், இங்கே இவள் சாதாரணமாய் வந்தவர்களை 'வா' என்று அழைத்துக் கொண்டிருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?
அதையெல்லாம் நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்னுடைய பொறுப்பைக் கழித்துக் கொள்வதற்காக, ஏதோ ஆறுதல் வார்த்தை கூறிவிட்டுக் கிளம்பினேன். கிளம்பும் போது பவானி "அண்ணே! நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று, அம்மன் சந்நிதியில் கச்சேரி செய்யப் போகிறேன், நீங்கள் கட்டாயம் வரவேணும்" என்றாள். எனக்குச் சுருக்கென்று தைத்தது. கச்சேரியா இதற்குள்ளேயா?
"இந்த வருஷம் கச்சேரி செய்ய வேண்டியதுதானா, தங்கச்சி! அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளக்கூடாதா?" என்றேன்.
"இல்லே அண்ணே! கச்சேரி செய்வதாக முன்னமே ஒப்புக் கொண்டு விட்டேன். உற்சவப் பத்திரிகையிலே கூடப் போட்டு விட்டார்கள். அதைமாற்ற இஷ்டமில்லை" என்றாள்.
எனக்கு அப்போது அவள் மீதும், கோவில் தர்மகர்த்தாக்கள் மீதும் கூடக் கோபம் வந்தது.
"சௌகரியப்பட்டால் வருகிறேன், தங்கச்சி" என்றேன்.
"அப்படிச் சொல்லக் கூடாது அண்ணே! ஒரு வேளை இது தான் நான் செய்கிற கடைசிக் கச்சேரியாயிருக்கும். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்" என்றாள்.
இதைக் கேட்டதும் என் மனம் உருகிவிட்டது. "ஏனம்மா! அப்படிச் சொல்கிறாய்? எது எப்படியானாலும் உன் சங்கீதம் மட்டும் வளர வேண்டும்" என்றேன். பிறகு நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு அவசியம் வருவதாகச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீணை பவானி - Veenai Bavani - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பவானியின், எனக்கு, நான், வந்தது, கொண்டு, என்றாள், என்றேன், வந்து, போய், அண்ணே, கோவில், அவள், மனம், என்ன, முதலியாரின், பிறகு, வேண்டும், தான், போது, கோபாலசாமி, பவானி, விட்டேன், கட்டாயம், மூன்று, ரொம்பவும், ரயில், நீங்கிற்று, கச்சேரி, கவலை, ஆறுதல், எப்படி, அவருக்கு, இங்கே, தும்பைவனம், இரண்டு, அந்தப், அவர், வருஷம், மேல், சம்சாரம், கட்டிக், கேஸ், அங்கே, தங்கச்சி