வீணை பவானி
1
இரவு ஒன்பது மணியிருக்கும். வானத்தில்
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. மூடி
போட்ட வீதி விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தைப் பார்க்கும்போது வானம்
ஏதோ சொல்ல முடியாத துயரத்துடன் கண்ணீர் விடுவது போல் தோன்றியது.
இந்தக் காட்சியைப் பார்க்கச் சகியாமல் வீட்டுக்குள்ளே வந்தேன். என் உள்ளமும் சோர்வினால் பீடிக்கப்பட்டிருந்தது. இருட்டடிப்பு உபத்திரவத்தை முன்னிட்டு ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்தி விட்டுப் பிரகாசமாக விளக்கைப் போட்டுக் கொண்டேன். மனத்திலுள்ள சோர்வை மாற்றுவதற்காகக் கதைப் புத்தகம் படிக்கலாமென்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.
சோர்வு, சோர்வு என்று சொல்லுகிறேன். அப்படி என்ன சோர்வு வந்தது என்று நேயர்கள் அறிய விரும்பலாம். சோர்வுக்குக் காரணங்களா இல்லை? உலக நிலைமையிலும் தேச நிலைமையிலும் மனச்சோர்வுக்கு வேண்டிய காரணங்கள் இருந்தன. போதாதற்கு அன்று சாயங்காலம் தினசரி பத்திரிகையில் வந்த ஒரு செய்தி மனத்தில் கொஞ்சம் நஞ்சம் இருந்த உற்சாகத்தையும் போக்கடித்து விட்டது.
அது கடலூருக்கும், சிதம்பரத்துக்கும் இடையில் நேர்ந்த ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான். நேற்று ராத்திரி எழும்பூரிலிருந்து கிளம்பிய போட்மெயில் அங்கே பெரும் விபத்துக்கு உள்ளாயிற்று. காரணம் நன்றாகத் தெரியவில்லை. நகரில் பலவித வதந்திகள் உலவின. திடீரென்று பெருகிய மழை வெள்ளத்தினால் தண்டவாளம் பெயர்ந்து விட்டதாக உத்தியோக முறையில் செய்தி. அந்த ரயிலில் பெரிய உத்தியோகஸ்தர் யாரோ போவதாகத் தெரிந்து தண்டவாளத்தை யாரோ வேண்டுமென்று பிடுங்கிப் போட்டதாக ஒரு வதந்தி. விபத்தில் செத்துப் போனவர்களின் கணக்கைப் பற்றி உலவிய வதந்திகளுக்கு அளவே இல்லை.
"நூறு பேர் செத்துப் போனார்கள். இருநூறு பேர் செத்துப் போனார்கள்" என்றெல்லாம் கேள்விப்பட்டபோது கூட என்மனம் அவ்வளவு கலங்கிவிடவில்லை. ஆனால், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர்களை வரிசை வரிசையாகப் படித்து வந்த போது அதிலும் ஒரு குறிப்பிட்ட பெயர் வந்ததும் - ரயில் வண்டி கவிழ்ந்து என் மேலேயே விழுந்தது போலிருந்தது.
வாசகர்களில் பலருக்கு ஐயம்பேட்டை கந்தப்பன் பெயர் ஞாபகமிருக்கலாம். "திருவழுந்தூர் சிவக்கொழுந்து" கதையை எனக்குச் சொன்ன தவுல் வித்வான் கந்தப்பன் தான். ரயில் விபத்தில் இறந்து போனவர்களின் ஜாபிதாவில் கந்தப்பப் பிள்ளையின் பெயரைப் பார்த்தவுடனேதான் எனக்கு அவ்வளவு மன வேதனை உண்டாயிற்று. அதென்னமோ பகவான் நம்மை அவ்விதம் படைத்து விட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் எரிமலை விபத்தில் இருபதினாயிரம் பேர் செத்துப் போனார்கள் என்று அறிந்தால், நமக்கு ஒரு உணர்ச்சியும் உண்டாவதில்லை. நமக்குத் தெரிந்த மனிதர்களில் ஒருவர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டால் நம்மை என்னமோ செய்கிறது. "ஆஹா! ஐயம்பேட்டை கந்தப்பனுக்கு இந்த முடிவா ஏற்படவேண்டும்? எப்பேர்ப்பட்ட மனுஷன்? என்ன தேசபக்தி? எத்தகைய நல்லொழுக்கம்? பழகியவர்களிடத்தில் தான் எவ்வளவு அபிமானம்? என்ன ரஸிகத்தனம்?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "இந்த நேரத்தில் யார் வருகிறது?" என்று சிறிது வெறுப்புடன் எண்ணினேன். என் உள்ளம் அப்போதிருந்த நிலைமையில், யாரையாவது பார்ப்பதற்கோ, பேசுவதற்கோ பிடிக்கவில்லை.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம் வாசற் கதவு திறந்தது. அடால்ப் ஹிட்லரோ, ஜெனரல் டோஜோவோ வாசற்படியில் வந்து நின்றிருந்தால் கூட, எனக்கு அவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்காது. அங்கு நின்றவர் வேறு யாருமில்லை; ஐயம்பேட்டை கந்தப்பன் தான்.
"பயப்பட வேண்டாம்! நான் தான் வந்திருக்கிறேன். என்னுடைய ஆவி இல்லை" என்று கந்தப்பனுடைய குரலைக் கேட்டதும், என்னுடைய திகைப்பு மாறி அளவிறந்த சந்தோஷம் உண்டாயிற்று.
"வாருங்கள்! வாருங்கள்!" என்று அவருடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்து கொண்டு போய் உட்கார வைத்தேன்.
"என்ன சேதி? என்ன சமாசாரம்? ரயில் விபத்திலிருந்து எப்படிப் பிழைத்து வந்தீர்கள்? இப்போதுதான் பத்திரிகையில் உங்கள் பெயரைப் படித்து விட்டுக் கதிதலங்கிப் போனேன். அதெப்படி தப்புச் செய்தி அனுப்பினார்கள்? வெட்கக் கேடாக அல்லவா இருக்கிறது?" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன்.
"நல்லவேளை, நான் போகவே இல்லை; நேற்று இரவு வண்டியில் எனக்கு ஸீட் ரிசர்வ் செய்திருந்தேன். தவுல் முதலிய சாமான்களையும் முன்னால் கொண்டு போய் ஏற்றியாகி விட்டது. நான் ஸ்டேஷனுக்கு வருவதில் தான் இரண்டு நிமிஷம் தாமதமாயிற்று. நல்ல காலந்தான்."
"ரயிலில் உங்கள் பெயர் கட்டித் தொங்கியதாக்கும். அதையும் தவுலையும் பார்த்துவிட்டுப் பத்திரிகை நிருபர்கள் உங்களையும் சேர்த்து வைகுண்டத்துக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது."
"அப்படித்தான் இருக்க வேண்டும்."
"உங்கள் வீட்டில் எல்லோரும் கவலைப்பட மாட்டார்களா? இன்றைக்கு ஏன் ஊருக்குப் போகவில்லை" என்று கேட்டேன்.
"ஊருக்குத் தந்தி கொடுத்து விட்டேன். உங்களைக் கொஞ்சம் பயமுறுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்."
"என்னையா பயமுறுத்தப் பார்த்தீர்கள்?"
"ஆமாம்; மகுடபதி கதையில் வெறுமனேயாவது பெரியண்ணனுடைய ஆவி வந்து நின்றதாகச் சொல்லி எங்களையெல்லாம் பயமுறுத்தினீர்களல்லவா? அதற்குப் பழிக்குப் பழியாக..."
"அதெல்லாம் கதையிலே நடக்கும். நிஜத்தில் நடக்குமா?" என்றேன்.
"நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு" என்றார் ஐயம்பேட்டை கந்தப்பன்.
"என்ன? அவ்வளவு கண்டிப்பாகச் சாப்புக் கொடுக்கிறீர்களே?"
"ஆமாம்; வாழ்க்கையில் அந்த மாதிரி நடந்திருக்கிறது."
"எந்த மாதிரி?"
"செத்துப் போனதாக நினைத்திருந்த மனுஷர் திடீரென்று தோன்றியதனால் ஆபத்து நேர்ந்திருக்கிறது."
"என்ன ஆபத்து?"
"உயிருக்கே ஆபத்து!"
ஏதோ ஒரு ரஸமான சம்பவத்தைச் சொல்லத்தான் ஐயம்பேட்டை கந்தப்பன் வந்திருக்கிறார் என்று அப்போது தெரிந்து கொண்டேன்.
"சொல்லுங்கள், கேட்கிறேன்; என் மனது இன்றைக்கெல்லாம் சரியாகவேயில்லை. ரொம்பவும் உற்சாகக் குறைவாயிருக்கிறது. உங்களுடைய கதையைக் கேட்டாலாவது."
"என்னுடைய கதை உற்சாகந் தருவதல்ல; ரொம்பவும் சோகமானது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால்..."
"கூடவே கூடாது. மனத்தில் உற்சாகமில்லாத போது தான் சோகக் கதை கேட்க வேணும். சொல்லுங்கள்" என்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீணை பவானி - Veenai Bavani - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, தான், செத்துப், கந்தப்பன், ஐயம்பேட்டை, அவ்வளவு, செய்தி, ரயில், இல்லை, எனக்கு, என்னுடைய, ஆபத்து, உங்கள், நான், வந்து, போனார்கள், பத்திரிகையில், சோர்வு, விபத்தில், போனவர்களின், கொண்டேன், பேர், பெயர்