வீணை பவானி
3
அந்த மனுஷரும் எனக்குத் தெரிந்தவர்தான்.
மன்னார்குடிக்குப் பக்கத்தில் தும்பை வனம் என்று ஒரு கிராமம் இருக்கிறது.
அந்த ஊரில் அவர் மிராசுதார்; கோபாலசாமி என்று பெயர். இளம் வயது தான்.
அவருடைய கல்யாணத்துக்குக் கூட நான் தவுல் வாசித்திருக்கிறேன். கல்யாணம்
நடந்து அப்போது ஐந்தாறு வருஷத்துக்கு மேல் இருக்கும். அவருக்குக் குழந்தைகளும்
உண்டு.
இந்த மனுஷருக்கும் பவானிக்குந்தான் விதி வசத்தினால் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் மறுபடியும் எப்படிச் சந்தித்தார்கள், சிநேகம் எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விதி இருக்கும் போது எப்படியாவது வழியும் ஏற்பட்டு விடுகிறது. பவானியின் ஞானப் பைத்தியம் நீங்கி விட்டது என்ற பிரஸ்தாபம் மட்டும் எங்கும் பரவியது. அதோடு தும்பைவனம் கோபாலசாமி முதலியாரின் பெயரும் தஞ்சாவூர் ஜில்லாவெங்கும் அடிபட்டது.
இந்தச் செய்தியெல்லாம் எனக்கு அவ்வளவு நிம்மதி அளிக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயந்தான் உங்களுக்குத் தெரியுமே? இம்மாதிரி ஒரு ஜாதியும், இந்த மாதிரி ஒரு தொழிலும் கூடவே கூடாது என்பதுதான். 'கடைசியில் இப்படித்தானா ஆக வேண்டும்? யாரையாவது ஒழுங்காகக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாதா?' என்று எண்ணினேன். கோபாலசாமி முதலியாரின் மனைவி, மக்களை நினைத்தும் வருத்தப்பட்டேன். இதையெல்லாவற்றையும் விட இந்த சிநேகத்தினால் பவானியின் தெய்வீக சங்கீதத்துக்குக் கேடு வராமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் உண்டாயிற்று.
நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நேரவில்லை - கோபாலசாமி முதலியார் நல்ல சங்கீத ரஸிகர். அதோடு பவானியின் பாட்டைக் குறித்து அவருக்கு ரொம்பப் பெருமையும் இருந்தது. என்னிடம் ஒரு சமயம் அவர் சொன்னது நன்றாய் ஞாபகமிருக்கிறது. "பவானியை மற்ற மனிதர்களைப் படைத்தது போல் பிரம்மா படைக்கவில்லை; கல்யாணியையும், மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார்! நீர் வேண்டுமானால், பாரும்! பவானி செத்துப் போகும் போது, அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகப் போய்விடும்!" என்று கோபாலசாமி முதலியார் சொன்னபோது, "இருக்கலாம்; ஆனால் அதை நீங்களும் நானும் பார்க்க மாட்டோ ம். நமக்குப் பிறகு பவானி ரொம்ப காலம் பாடிக் கொண்டிருக்கும்" என்றேன். ஆனால் வருங்காலத்தையறியும் சக்தியைப் பகவான் நமக்குக் கொடுக்கவில்லையே? கொடுத்திருந்தால் உலகத்திலே துன்பம் ஏது? இன்பந்தான் ஏது?
ஆமாம் பவானியின் சங்கீதத்தைப் பற்றியல்லவா சொல்லிக் கொண்டு வந்தேன்? அவளுடைய சங்கீதம் மேலும் மேலும் பிரமாதமாகிக் கொண்டுதான் வந்தது. ஆனால், என்னுடைய பழகிய காதுக்கு அதில் என்னவெல்லாமோ, அதிசயமான மாறுதல்கள் தோன்றின. ஒரு கச்சேரியைப் போல் இன்னொரு கச்சேரி இராது. ஒருநாள் அவளுடைய பாட்டில் குதூகலம் பொங்கித் ததும்பும். காலை வேளையில் உதய சூரியனை வரவேற்கும் புள்ளினங்களின் குரலிலுள்ள ஆனந்தமும், பௌர்ணமியன்று வெண்ணிலவைக் கண்டு பொங்கும் கடலின் ஆரவார உற்சாகமும் தொனிக்கும். இன்னொரு நாள் கச்சேரியிலோ, அவளுடைய பாட்டைக் கேட்கும் போது உள்ளமானது காரணந் தெரியாத சோகத்தை அடையும். தாயைப் பிரிந்த குழந்தையின் தீனக்குரலையும், பகவானைப் பிரிந்த பக்தனின் தாபக் கதறலையும் அவளுடைய பாட்டிலே கேட்பது போல் இருக்கும். அவள் வீணை வாசிக்கும்போது கையிலுள்ள வாத்தியத்தின் கம்பிகளைத்தான் மீட்டுகிறாளா, அல்லது கேட்பவர்களின் இருதய வீணையின் கம்பியைத்தான் மீட்டுகிறாளா? என்ற சந்தேகம் தோன்றும்.
முதலில், இதெல்லாம் எனக்கு விந்தையாயிருந்தது; விளங்காத மர்மமாயிருந்தது. அப்புறம் அப்புறம், ஒருவாறு விஷயம் புரிந்தது.
அன்பு, காதல் என்று சொல்கிறார்களே, ஸ்வாமி, ரொம்ப அதிசயமான காரியம். காதலில் மனிதர்கள் அடைவது என்ன? துன்பமா? இன்பமா? சொல்ல முடியாத துயரமா? அளவிட முடியாத ஆனந்தமா?
பவானியையும் தும்பை வனம் முதலியாரையும் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் இம்மாதிரி சந்தேகங்களையெல்லாம் உண்டாக்கின. அவர்கள் சந்தோஷமாயிருந்த காலம் அதிகமா, சண்டை போட்டுக் கொண்டு வேதனையில் முழுகியிருந்த நாட்கள் அதிகமா என்று சொல்ல முடியாமலிருந்தது. 'இந்தப் பெண்ணுக்கு ஏதோ பிடித்திருக்கிறது தம்பி!' என்று அவள் தாயார் சொன்னாள். சில சமயம் பவானி எல்லார் மேலும் எரிந்து எரிந்து விழுவாளாம். சின்னச் சின்னக் காரியத்துக்கெல்லாம் ரகளை செய்வாளாம். கூச்சல் போடுவாளாம். முகத்தைக் கூட அலம்பிக் கொள்ளாமல் பிரமஹத்தி பிடித்தது போல் உட்கார்ந்திருப்பாளாம். இன்னும் சில சமயம் இதற்கு நேர்மாறாக இருக்குமாம். பிரமாதமாக அலங்காரம் செய்து கொள்வாளாம். ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருப்பாளாம். இதையெல்லாம் அறிந்த போது, பவானியின் சங்கீதத்தில் தொனித்த மாறுதல்களின் காரணத்தை ஒருவாறு அறிந்தேன். 'யாராவது மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்லலாமா' என்று பவானியின் தாயார் கேட்டதற்கு 'மந்திரமும் வேண்டாம் மாயமும் வேண்டாம், நாளடைவில் எல்லாம் தானே சரியாய்ப் போய்விடும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீணை பவானி - Veenai Bavani - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பவானியின், அவளுடைய, கோபாலசாமி, போல், போது, மேலும், சமயம், இருக்கும், பவானி