வீணை பவானி
5
பவானிக்கு வாக்குக் கொடுத்தபடியே நவராத்திரி
வெள்ளிக்கிழமை அன்று திருவாரூருக்குப் போனேன். அவள் வீட்டுக்கு நான்
போனபோது கச்சேரிக்கு அவள் கிளம்புகிற சமயமாயிருந்தது. பவானியைப் பார்த்ததும்
நான் பிரமித்துப் போய்விட்டேன். அவ்வளவு பிரமாதமாக ஆடை ஆபரண அலங்காரங்களைச்
செய்து கொண்டிருந்தாள். கல்யாண மண்டபத்துக்குப் போகும் பெண் மாதிரி தோன்றினாள்.
இயற்கையிலேயே நல்ல ரூபவதி. இப்போது பார்த்தால், தேவலோகத்திலிருந்து ரம்பை,
ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியவர்களில் ஒருத்தி இறங்கிப் பூலோகத்துக்கு
வந்து விட்ட மாதிரியே இருந்தது. மனதிற்குள் எனக்கு ஏற்பட்ட வேதனையைச்
சொல்லி முடியாது.
என்னைப் பார்த்ததும் பவானி புன்னகையுடன், "அண்ணே! வந்து விட்டீர்களா" என்றாள்.
எனக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் "ஆமாம்; வந்துவிட்டேன் தங்கச்சி!" என்று சாவதானமாகப் பதில் சொன்னேன்.
"அண்ணே! இன்று காலையிலிருந்தே உங்களை நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். போனால் போகட்டும். கச்சேரி முடிந்ததும் நீங்கள் நேரே இங்கு வரவேணும், ரொம்ப முக்கியமான காரியம்; தவறக் கூடாது" என்றாள்.
"ஆகட்டும் தங்கச்சி!" என்றேன்.
"உங்கள் தலைமேல் ஆணை! கட்டாயம் வரவேணும்" என்று சொல்லிவிட்டுப் பவானி வண்டியில் போய் ஏறிக் கொண்டாள்.
பவானி இந்த மாதிரிப் பேசி நான் கேட்டதில்லை. 'என்னமோ விஷயம் இருக்கிறது. எல்லாம் இராத்திரி தெரிந்து போகிறது' என்று எண்ணிக் கொண்டு கோவிலுக்குப் போனேன்.
என் வாழ்நாளில் நானும் எத்தனையோ சங்கீதக் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். பிரபல வித்துவான்கள், பாடகிகள் எல்லாருடைய பாட்டையும் கேட்டிருக்கிறேன். ஆனால், அந்த நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று பவானி செய்த கச்சேரியைப் போல் கேட்டதும் கிடையாது, கேள்விப்பட்டதும் இல்லை. பவானியின் குரல் அன்று தேனாக இருந்தது. விரல் வீணையின் தந்தியை மீட்டிய போது அமுதவாரி பெருகிற்று. இதையெல்லாம் விட அன்று அவளுடைய பாட்டில் இன்னும் ஏதோ ஒன்று இருந்தது! அது கேட்பவர்களின் இருதயத்தில் ஒரு அதிசயமான இன்ப வேதனையை உண்டு பண்ணிற்று. சபையில் அன்று ஒரே நிசப்தம். மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்கவில்லை. 'ஆஹா', 'பேஷ்', 'சபாஷ்' முதலிய குரல்களும் இல்லை. எல்லாரும் மந்திரத்தால் கண்டுண்டது போல், அந்தத் தெய்வீக சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பவானி 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்ற திருவாசகத்தைக் காம்போதி ராகத்தில் பாடியபோது நான் கர்ப்பக்கிரஹத்துக் குள்ளிருந்த அம்மன் விக்ரஹத்தை நோக்கினேன். இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு, அந்தக் கல் விக்ரஹம் உருகிக் கரைந்து போகவில்லையே என்று எனக்கு ஆச்சரியமளித்தது. ஆனால் ஒரு தடவை விக்ரஹத்தின் கண்களில் நீர்த்துளிகள் நின்றது போல் தோன்றியது. இது என்ன பிரமை என்று என் கண்களைத் துடைத்துக் கொண்டு, சுற்றுமுற்றும் ஜனங்களைப் பார்த்தேன். சபை ஓரமாக நாலாபுரத்திலும் ஜனங்கள் சுவர் வைத்தாற் போல் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பலின் பின் வரிசையில் ஒரு மூலையில் நின்ற ஒரு முகத்தின் மேல் தற்செயலாக என் பார்வை விழுந்தது. அந்த மனுஷர் தலையில் பாதி நெற்றியை மறைத்த பெரிய முண்டாசுக் கட்டிக் கொண்டிருந்தார். கண்வலி வந்தவர்கள் போட்டுக் கொள்வது போன்ற பெரிய பச்சைக் கண்ணாடி அவர் கண்களை மறைத்தது. எதனாலேயோ திரும்பத் திரும்ப அந்த முகத்தின் மீது என் பார்வையும் கவனமும் சென்றன. அதற்குப் பிறகு பாட்டில் கவனம் குன்றியது. "பார்த்த முகம் மாதிரியிருக்கிறதே, யாராயிருக்கும்?" என்று அடிக்கடி மனது யோசித்தது. சட்டென்று உண்மை தெரிந்தது. என் உடம்பெல்லாம் பதறியது. ஏதோ விபரீதம் நேரிடப் போகிறது என்று மனதிற்குள் ஏதோ சொல்லிற்று. நானும் கூட்டத்தின் ஓரத்தில் தான் இருந்தேனாதலால், மெதுவாக எழுந்திருந்து நின்று கொண்டிருந்த ஜனங்களின் பின்புறமாக சென்று, அந்தப் பச்சைக் கண்ணாடிக்காரரின் சமீபத்தில் போய் நின்றேன்.
கச்சேரி முடிந்தது! எல்லோருக்கும் முன்னால் அந்த மனுஷர் விரைவாக அவ்விடமிருந்து கிளம்பிச் சென்றார். நானும் பின்னோடு போனேன். கோவிலுக்கு வெளியில் கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்துக்கு வந்ததும், நான் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, "என்ன தம்பி! இது என்ன வேஷம்?" என்று கேட்டேன்.
கையை உதறிய கோபாலசாமி முதலியார் என்னைப் பார்த்ததும், "யார், கந்தப்பனா?" என்றார். பிறகு அவர் "ஆமாம் கந்தப்பா! ஆமாம் வேஷந்தான். இந்த உலகமே வேஷந்தான். பார்த்தாயல்லவா உன் தங்கச்சி போட்ட வேஷத்தை? முன்னே போட்டது ஒரு வேஷம்" என்று மனங் கசந்து பேசிக் கொண்டே போனார்.
"இல்லை தம்பி! நீங்கள் எல்லா விஷயமும் தெரிந்து கொள்ளவில்லை! பவானி இன்றைக்குச் செய்த கச்சேரிதான் கடைசிக் கச்சேரி என்று சொல்லிற்று. அதனால் தான் இவ்வளவு ஆவேசமாய்ப் பாடிற்று" என்று சமாதானம் சொன்னேன்.
"கந்தப்பா யாரிடம் காது குத்துகிறாய். என்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டாயா? பாட்டாம் பாட்டு! கச்சேரியாம் கச்சேரி! மனது வந்ததே! கடவுள் என்னுடைய கண்ணைத் திறப்பதற்காகவே, இந்த ரயில் விபத்தை உண்டு பண்ணினார்!"
பேச்சை மாற்றுவதற்காக, நான் "ஆமாம் தம்பி! கடவுள்தான் உங்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். அந்த அதிசயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? பத்திரிகையில் ஏன் அப்படித் தவறாகச் செய்தி வந்தது? நீங்கள் எப்படித் தப்பிப் பிழைத்தீர்கள்? இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்!" என்று கேள்விகளை அடுக்கினேன்.
"அதையெல்லாம் அப்புறம் விவரமாகச் சொல்கிறேன் கந்தப்பா! பெரிய கதை எழுதலாம். ஏதோ செத்துப் போனவன் தான், கடவுள் அருளால் பிழைத்தேன். பத்து நாள் சுய நினைவு இல்லாமல் ஆஸ்பத்திரியில் கிடந்தேனாம். அப்புறம் பழைய பத்திரிகைகளைப் பார்த்துச் செத்துப் போனவர்களின் ஜாபிதாவில் என் பெயரும் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யாருடைய நிலைமை எப்படியெப்படி, என்னோடு உடன் கட்டை ஏறுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அதற்காக, இந்த வேஷத்துடன் வந்தேன். இப்போது பார்த்தாகிவிட்டது!" என்று மிகவும் வெறுப்புடன் சொன்னார்.
பேசிக் கொண்டே நாங்கள் தெருவோடு போய்க் கொண்டிருந்தோம். "அதெல்லாம் இருக்கட்டும் தம்பி! இப்போது எங்கே போகிற உத்தேசம்" என்று கேட்டேன்.
"அங்கேதான் போகிறேன். அவளை அடித்து விடுவேன், கொன்றுவிடுவேன் என்று நினைக்காதே! கச்சேரி பேஷாயிருந்தது என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போய்விடுவேன்; அவ்வளவுதான். நீயும் வேணுமானால் பின்னோடு வந்து பார்" என்றார் கோபாலசாமி முதலியார்.
இரண்டு பேருமாகவே போய்ச் சேர்ந்தோம். பவானி குதிரை வண்டியில் முன்னாலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். அவளைத் தனியாக முதலில் பார்த்துத் தயார் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். அதற்கு கோபாலசாமி முதலியார் இடங்கொடுக்கவில்லை. என்னைப் பின்னால் தள்ளிக் கொண்டு, அறைக்குள் அவர் முதலில் போனார்! நாங்கள் போகும் போது பவானி ஜலமோ, பாலோ ஒரு கிண்ணத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பச்சைக் கண்ணாடியும் பெரிய முண்டாசுமாக உள்ளே வந்தவரைப் பார்த்துவிட்டுப் பவானி ஒரு நிமிஷம் திகைத்து நின்றாள். முதலியார் கண்ணாடியையும் முண்டாசையும் எடுத்ததும் அவளுடைய முகத்தில் ஏற்பட்ட பயங்கர மாறுதலைப் பார்த்தேன். என் இருதயம் அப்படியே நின்று விட்டது.
எத்தனை நேரம் இப்படி மூன்று பேரும் ஸ்தம்பித்துப் போயிருந்தோம் என்று தெரியாது. பவானி திடீரென்று சுருண்டு போய்க் கீழே விழுந்த போதுதான், எனக்குப் பிரக்ஞை வந்தது. எனக்கு முன்னாலேயே கோபாலசாமி ஓடி அவளைத் தூக்கித் தமது மடியில் வைத்துக் கொண்டார். சற்று நேரம் நான் அங்குமிங்கும் பார்த்து விழித்துக் கொண்டு நின்றேன். பிறகு டாக்டரை அழைத்து வருவதற்காக ஓடினேன். டாக்டருடன் நான் திரும்பி வந்தபோது சந்தேகத்துக்கே இடமிருக்கவில்லை. பவானியின் உயிர் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகி விட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீணை பவானி - Veenai Bavani - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பவானி, நான், கொண்டு, கச்சேரி, அந்த, வந்து, பெரிய, பச்சைக், போல், அன்று, தம்பி, கோபாலசாமி, ஆமாம், இப்போது, என்னைப், முதலியார், எனக்கு, கந்தப்பா, பிறகு, நின்று, தான், அவர், போய், வந்தது, பார்த்ததும், போனேன், தங்கச்சி, நீங்கள், இல்லை, நானும், தெரிந்து, என்ன