வீணை பவானி
6
கந்தப்பப் பிள்ளை மேற்கண்ட விதம் கூறி
கதையை நிறுத்தினார். அப்பொழுதுதான் ஒவ்வொரு சம்பவமும் நடப்பது போல் அவ்வளவு
தெளிவாகவும் உணர்ச்சியுடனும் அவர் சொல்லிக் கொண்டு வந்தபடியால், என்
உள்ளம் முன்னைக் காட்டிலும் இளகிக் கனிந்து போயிருந்தது. சற்று நேரம்
ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மௌனமாயிருந்தேன்.
எங்கள் சம்பாஷணை எப்படி ஆரம்பமாயிற்று என்பது ஞாபகம் வந்தது.
"திடீரென்று தோன்றிய கோபாலசாமி முதலியாரை அவருடைய ஆவி என்பதாக நினைத்து பவானி பயந்து போய் விட்டாளாக்கும். அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று கேட்டேன்.
"அப்புறம் செய்வதற்கு என்ன இருக்கிறது? டாக்டரிடம் 'எதிர்பாராத ஷாக்கினால் மரணம்' என்று சர்டிபிகேட் எழுதி வாங்கிக் கொண்டேன். கோபாலசாமி முதலியாரும் நானுமாகச் செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்து முடித்தோம். பாவம்! அந்த மனுஷர் பட்ட துக்கத்துக்கு அளவே இல்லை."
"பவானியின் மனம் களங்கமற்றது என்று அப்புறமாவது முதலியாருக்கு தெரிந்ததா? அவரிடம் அவள் வைத்திருந்த அன்பின் பெருமையை அறிந்து கொண்டாரா?" என்று கேட்டேன்.
"அது எப்படித் தெரியும்? அவருக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் பவானி தன்னுடைய துரோகம் தெரிந்து போய் விட்டதே என்ற பயங்கரத்தினால் செத்துப் போய் விட்டாள் என்று எண்ணினார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து வெளியான விஷயம் அவருக்குப் பவானியின் மேல் இருந்த அவநம்பிக்கையை ஒருவாறு போக்கிற்று. பவானி தன்னுடைய சொத்தையெல்லாம் கோபாலசாமி முதலியாரின் குழந்தைகளுக்கு எழுதி வைத்திருந்தாள். உயில் வக்கீலிடமிருந்தது."
வியப்புடன் "ஓஹோ! அப்படியா" என்றேன்.
இன்னமும் சொல்வதற்கு விஷயம் பாக்கியிருக்கிறது என்று கந்தப்பப் பிள்ளை முகபாவத்திலிருந்து தெரிந்தது.
"எல்லாம் சரிதான். டாக்டரிடம் எதற்காகச் சர்டிபிகேட் எழுதி வாங்கினீர்கள்?" என்று கேட்டேன்.
"இந்த மாதிரித் திடீர் மரணங்களில் போலீஸ் தொந்திரவு ஏற்படுமல்லவா? அதற்காகத்தான். கோபாலசாமி முதலியாருக்கே நான் உண்மையைச் சொல்லவில்லை. டாக்டருக்கும், எனக்கும் மட்டுந்தான் தெரியும்!" என்றார்.
ஏதோ விஷயம் பாக்கி இருக்கிறதென்று நினைத்தேன். "உண்மைக் காரணந்தான் என்ன?" என்று கேட்டேன்.
"நடந்து இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இனிமேல் சொன்னால் என்ன? - பவானி மயங்கி விழுந்ததும் முதலியாருக்குப் பின்னால் நானும் ஓடினேனல்லவா? பக்கத்தில் இருந்த சிறு முக்காலிப் பலகையின் மேல் பவானி, பால் குடித்த கிண்ணத்துக்குப் பக்கத்தில் ஒரு கடிதம் கிடந்தது. அதன் மேல் என் பெயர் எழுதியிருக்கவே, சட்டென்று எடுத்து, முதலியாருக்குத் தெரியாமல் மடித்து வைத்துக் கொண்டேன். டாக்டரைக் கூப்பிடப் போனபோது தெரு லாந்தர் வெளிச்சத்தில் படித்தேன். அந்தக் கடிதம் இதுதான்" என்று கூறி, கந்தப்பப் பிள்ளை மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார். அது வெகுநாட்பட்ட பழுதடைந்த காகிதம். அதில் மங்கிப் போன முத்தான எழுத்தில் பின் வருமாறு எழுதியிருந்தது.
'அன்புள்ள கந்தப்ப அண்ணனுக்கு
தங்கச்சி பவானி எழுதிக் கொண்டது. என் பிராண நாயகரைப் பிரிந்து நான்
உயிர் வாழ விரும்பவில்லை. இன்றைக்கு நான் செய்யும் கச்சேரிதான் கடைசிக்
கச்சேரி. அவர் எனக்கு அன்புடன் வாங்கிக் கொடுத்த வைர மோதிரத்திலிருந்த
வைரங்களை எடுத்துப் பொடி பண்ணி வைத்திருக்கிறேன். கச்சேரியிலிருந்து
வந்ததும் சாப்பிட்டு விடுவேன். என் சொத்தில் பாதியைக் கோவிலுக்கும்,
பாதியை அவருடைய குழந்தைகளுக்கும் எழுதி வைத்திருக்கிறேன். உயில் வக்கீல்
... ஐயரிடம் இருக்கிறது. நான் செய்வது பிசகாயிருந்தால் என்னை மன்னிக்கவும்.
அவரைப் பிரிந்து என்னால் உயிர் வாழ முடியாது.
இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு,
"இதை ஏன் கோபாலசாமி முதலியாரிடம் நீர் சொல்லவில்லை?" என்று கேட்டேன். இப்படிக்கு
பவானி'
பவானி'
"சொன்னால் என்ன லாபம்? ஏற்கனவே ரொம்பத் துக்கப்பட்டார். இது தெரிந்தால் அவரும் உயிரை விட்டாலும் விட்டிருப்பார். அல்லது அவருடைய மனைவி மக்கள் மேல் பாசமில்லாமல் போயிருக்கலாம். ஒரு குடும்பத்தை அநியாயமாகக் கெடுப்பானேன் என்று தான் சொல்லவில்லை.
சற்றுப் பொறுத்து "நான் போய் வருகிறேன், ஸ்வாமி!" என்று கந்தப்பப் பிள்ளை எழுந்திருந்தார். கடிதத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.
வாசற் கதவைத் திறந்து கொண்டு அவர் வெளியே சென்றார். ஜில்லென்று காற்று அடித்தது. இருண்ட வானத்திலிருந்து சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீணை பவானி - Veenai Bavani - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பவானி, கேட்டேன், நான், என்ன, கோபாலசாமி, பிள்ளை, மேல், எழுதி, கந்தப்பப், போய், கடிதத்தை, சொல்லவில்லை, விஷயம், அவருடைய, பக்கத்தில், அவர்