தியாக பூமி - 4.8. கதம்பக் கச்சேரி
"குழந்தைகள் டிராமா தானேன்னு அவாளுக்கெல்லாம் அலட்சியம் போல் இருக்கு" என்று சாரு கண்ணில் நீர் ததும்ப உமாராணியிடம் சொன்னாளல்லவா? அவள் சொன்னது உண்மையாகவே இருக்கலாம். ஆனால், மியூஸியம் தியேட்டரில் அன்று சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தவர்களுக்கு குழந்தை சொன்னதில் நம்பிக்கை ஏற்படாது. அவ்வளவு கனதனவான்களும் சீமாட்டிகளும் தியேட்டரில் வந்து நிறைந்திருந்தார்கள்.
இவ்வாறு கூட்டம் சேர்ந்ததற்குக் காரணம் குழந்தைகளின் கதம்பக் கச்சேரியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மட்டுமல்ல என்பதைச் சொல்ல வேண்டும். அத்துடன் உமாராணியைப் பார்க்கலாமென்ற ஆசையும் சேர்ந்திருந்தது. உமாராணி இருபது டிக்கெட் வாங்கிக் கொண்ட செய்தியைக் குழந்தைகள் போய் வாத்தியாரம்மாளிடம் சொல்ல, அவள் பள்ளிக்கூட நிர்வாகிகளிடம் சொல்ல, அவர்கள் நேரில் போய் உமாராணியை அழைத்துவிட்டு வந்ததோடல்லாமல் நகரில் பிரஸ்தாபமும் செய்து விட்டார்கள். இந்தச் செய்தி பரவிவிடவே, அன்று மாலை மியூஸியம் தியேட்டரில் சென்னை நகரின் பிரசித்தி வாய்ந்த ஸ்திரீ புருஷர்கள் பெரும்பாலோரைக் காணும்படியிருந்தது.
ஐந்து மணிக்குக் கச்சேரி ஆரம்பமாக வேண்டும். ஆனால், ஐந்து அடித்துப் பத்து நிமிஷம் ஆகியும் ஆரம்பமாகவில்லை. சாதாரணமாய், இந்த மாதிரி தாமதமானால், சபையோர் கைதட்டி ஆரவாரிப்பது வழக்கம். இன்று அப்படி ஒன்றும் நடக்கவில்லை. "இன்னும் உமாராணி வரவில்லை; அவள் வந்தவுடன் ஆரம்பிப்பார்கள்" என்று சபையோர் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவராவது மேடைப் பக்கம் திரை தூக்குகிறார்களா என்று கவனிக்கவில்லை. எல்லாரும் வாசற் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியாக, வாசலில் ஏதோ கலகலப்புச் சப்தம் கேட்டது. அடுத்த நிமிஷம், பள்ளிக்கூடத்தின் முக்கிய நிர்வாகியாகிய ராவ்சாகிப் கஜகுல ஆஜாநுபாகு அவர்கள் வழி காட்டிக் கொண்டு வர, பின்னால் வக்கீல் ஆபத்சகாமய்யர் தொடர, உமாராணி உள்ளே பிரவேசித்தாள். சொல்லி வைத்தாற்போல் சபையில் எல்லாரும் கரகோஷம் செய்தார்கள். உமாராணி கும்பிட்டுக் கொண்டே போய், முன்னால் தனக்காகப் போடப்பட்டிருந்த தனி ஸோபாவில் உட்கார்ந்திருந்தார்கள்.
உடனே திரை தூக்கப்பட்டது. "ஜன கண மன" என்ற தேசிய கீதத்துடன் கதம்பக் கச்சேரி ஆரம்பமாயிற்று.
புரோகிராமில் மொத்தம் ஒன்பது அங்கங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அவற்றுள் மூன்றில் சாருமதியின் பெயர் காணப்பட்டது. முதலில், சாருமதியின் பரத நாட்டியம். பிறகு, கிருஷ்ண லீலா நாடகத்தில் சாருமதி கிருஷ்ண வேஷம். கடைசியில், சாருமதியும் யமுனாவும் ராதா கிருஷ்ண நடனம்.
ஒவ்வொரு தடவையும் சாரு மேடைக்கு வரும் போதெல்லாம் சபையில் நிசப்தம் குடிகொண்டிருக்கும். சபையோரின் கவனத்தை அவள் அவ்வாறு கவர்ந்து விடுவாள். சாரு உள்ளே சென்றதும் சபையில் கலகலப்பு ஏற்படும். பெரும்பாலோர் உமாராணி என்ன செய்கிறாள் என்பதைக் கவனிக்கத் தொடங்குவார்கள். இதற்காகச் சிலர் தலையைத் தூக்கிப் பார்ப்பதும், எழுந்து நிற்பதும், பின்னாலிருபப்வர்கள் அவர்களை அதட்டி உட்காரச் செய்வதும் சர்வ சாதாரணமாயிருந்தது.
ஆனால், உமாவோ இவை ஒன்றையும் கவனிக்கவில்லை. குழந்தை சாருவின் பரத நாட்டியத்தைப் பார்த்ததுமே அவளுக்கு மெய்ம்மறந்து போய்விட்டது. நாட்டியம் முடிந்ததும் உமா, பக்கத்திலிருந்த வக்கீல் ஆபத்சகாயமய்யரைப் பார்த்து, "இந்தக் குழந்தை எவ்வளவு நன்றாய் நாட்டியம் ஆடுகிறது, பார்த்தீர்களா? முகத்தில் என்ன களை! இந்தக் குழந்தை யார் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்.
"எனக்குத் தெரியாதே?" என்றார் வக்கீல். பிறகு "நீங்கள் மெட்ராஸுக்குப் புதிசல்லவா? அதனாலே அப்படித் தோணுகிறது. இந்த மாதிரி குழந்தைகள் நாட்டியம் செய்யறது ரொம்ப சாதாரண விஷயம். பாருங்கோ, என்னுடைய குழந்தைக்குக் கூட நாட்டியத்திலே ரொம்ப 'டேஸ்ட்'. சொல்லிக் கொடுத்தா நன்னா வரும் என்று எல்லாரும் சொல்றா. ஆத்திலே கூட அடிக்கடி டான்ஸ் டீச்சர் வைச்சுச் சொல்லிக் கொடுக்கணுமின்னு சொல்றா. ஆனால், எனக்கென்னமோ இந்தப் பைத்தியக்காரத்தன மெல்லாம் ஒண்ணும் பிடிக்கிறதில்லை" என்றார்.
உமாராணி பிற்பாடு வக்கீலிடம் ஒன்றும் பேச்சுக் கொடுக்கவில்லை. மேடை மீதே கவனம் செலுத்தத் தொடங்கினாள். சாரு மேடை மீது இல்லாத சமயங்களில் அவள் எப்போது வருவாள் என்றே அவளுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவள் வந்துவிட்டாலோ உமாவுக்குப் பரவசமாயிருந்தது. அவளுடைய ஒவ்வொரு சைகையும் பேச்சும் உமாவுக்கு மயிர்க் கூச்சம் உண்டாக்கிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.8. கதம்பக் கச்சேரி - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - உமாராணி, குழந்தை, நாட்டியம், எல்லாரும், சபையில், கிருஷ்ண, கதம்பக், வக்கீல், சொல்லிக், கச்சேரி, குழந்தைகள், தியேட்டரில், ஒவ்வொரு, மாதிரி, இந்தக், என்றார், அவளுடைய, சொல்றா, சபையோர், சாருமதியின், கொண்டிருந்தார்கள், அவர்கள், கவனிக்கவில்லை, வேண்டும், மியூஸியம், நிமிஷம், ஒன்றும்