நாடகக்காரி
6
கந்தப்பப் பிள்ளையின் கதை முடிந்தது.
எழும்பூர் ரெயில் நிலையமும் வந்து சேர்ந்தது.
நாங்கள் பிரிந்து போக நேர்ந்த போது, "கந்தப்பப் பிள்ளை! இப்போது நீலமணி எங்கே இருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்?" என்று கேட்டேன்.
"சில வருஷ காலம் பிரம்மஹத்தி பிடித்தவள் போல இருந்தாள். பிற்பாடு சங்கீதத்தில் கவனம் செலுத்தினாள். நல்ல திறமை பெற்றுவிட்டாள். ஆனால் வெளியில் வந்து பாடுவதில்லை. எப்படி வருவாள்? ரேடியோ என்பதாக ஒன்றைக் கண்டுபிடித்தார்களே, அந்தப் புண்ணியவான்கள் நன்றாயிருக்கவேணும்! சில சமயம் நல்ல சங்கீதத்துக்கும் ரேடியோவில் இடங் கொடுக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை போய் ரேடியோவில் கச்சேரி செய்து விட்டு வருகிறாள். சங்கீதம் ஒன்று தான் இப்போது அவளுக்கு ஜீவாதாரமாயிருந்து வருகிறது!" என்றார் கந்தப்பப் பிள்ளை.
"சங்கீதத்துடன் தங்களுடைய அன்பும் ஆதரவும் சேர்ந்திருக்கின்றன அல்லவா?" என்றேன் நான்.
"அடுத்தவாரத்தில் கூட நீலமணியின் ரேடியோக் கச்சேரி இருக்கிறது; முடிந்தால் கேளுங்கள்!" என்றார் கந்தப்பப் பிள்ளை.
"அவசியம் கேட்கிறேன். ஆனால் நீலமணிக்கு என்ன தான் நேர்ந்தது? அந்த முக்கியமான விஷயத்தை நீங்கள் சொல்லவில்லையே?" என்று கேட்டேன் நான்.
"தெரியவில்லையா, ஐயா! வேறு யாருடனும் அவள் நாடகமேடையில் ஏறி நடிக்கக் கூடாது என்பதற்காக அந்தச் சண்டாளப் பாவி அக்கினித் திராவகத்தை அவள் முகத்தில் ஊற்றிக் குரூபியாகச் செய்து விட்டான்! அவன் எப்பேர்ப்பட்ட ராட்சஸனாயிருக்கவேண்டும்? இவ்வுலகில் மனித உருக்கொண்ட ராட்சஸர்களும் இருக்கிறார்கள்!" என்றார் கந்தப்ப பிள்ளை.
நான் ஊகித்ததை தான் அவர் சொன்னார் என்றாலும் என் உள்ளத்தில் அப்போது சொல்ல முடியாத அருவருப்பும் பயங்கரமும் தோன்றின.
"ஆனால் இந்தச் செய்தி ஊரில் ஒருவருக்கும் தெரியாது. பட்டாசுப் பெட்டிகள் வெடித்த விபத்தினால் நீலமணிக்கு இப்படி நேர்ந்தது என்றே நம்பினார்கள். டாக்டர் ராமசர்மாவுக்கு மட்டும் தெரியும். என்னுடைய வேண்டுகோளின் பேரில் அவர் யாரிடமும் சொல்லவில்லை. இன்றைக்குத்தான் முதன் முதலாகத் தங்களிடம் சொன்னேன்!" என்றார் கந்தப்பப் பிள்ளை.
"அந்த ராட்சஸன் - நமச்சிவாயம் பிற்பாடு என்ன ஆனான்?" என்று கேட்டேன்.
"யார் கண்டார்கள்? நான் திரும்பிப் போய் இடிந்து விழுந்து எரிந்து கொண்டிருந்த வீட்டில் தேடிப் பார்த்த போது அவனைக் காணவில்லை. அவன் என்ன ஆனான் என்று விசாரிக்கவும் இல்லை. பல மாதம் கழித்து நீலமணி என்னிடம் அவனைப் பற்றிக் கேட்டதற்கு 'அவன் க்ஷயரோகத்தினால் செத்து ஒழிந்துவிட்டான்' என்று சொல்லி விட்டேன்.
"ஒரு வேளை உண்மையிலேயே செத்துத்தான் போய் விட்டானோ, என்னமோ?"
"அவ்வளவு பொல்லாதவர்களுக்கு இந்த உலகில் சாவு வருகிறதில்லை. ஐயா! எங்கேயோ உயிரோடு தான் இருக்கிறானாம். வேறு நாடகக் கம்பெனியில் அன்றாடச் சம்பளத்துக்கு நடிக்கப்போய் வருகிறானாம், கதாநாயகனாத் தோன்றி ஆர்ப்பாட்டம் செய்த காலம் போய்விட்டது. இப்போது திரை தூக்கக் கூப்பிட்டாலும் போகிறானாம். பெயரைக் கூட மாற்றி வைத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி. அவ்வளவு கொடூரமான காரியம் செய்தவனுக்குத் தன் பெயரைச் சொல்லவே வெட்கமாகத் தானே இருக்கும்?" என்றார் கந்தப்பப் பிள்ளை.
கல்கத்தாவில் தமிழர்கள் சேர்ந்து நடத்தும் விழாவுக்காகக் கந்தப்பப் பிள்ளை அன்றிரவு கல்கத்தா மெயிலில் போகிறார் என்று தெரிந்து கொண்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
நாலு நாளைக்கெல்லாம் திரும்பவும் கந்தப்பப் பிள்ளையைப் பார்க்க நேரிடுமென்று நான் எதிர் பார்க்கவில்லை. திடுதிப்பென்று அவர் என வீடு தேடி வந்து சேர்ந்தார்.
"இது என்ன? கல்கத்தாவில் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்?" என்று கேட்டேன்.
"வழியில் விஜயவாடா அமளியில் சிக்கிக் கொண்டேன். ரெயில் மேலே போகவில்லை. திரும்பி வந்து விட்டேன்" என்றார்.
"அடிதடி காயம் ஏதாவது உண்டோ ?"
"எனக்கு ஒன்றுமில்லை. அந்தத் தடிப்பயல் நமச்சிவாயத்துக்கு நல்ல அடி. முன்னொரு நாள் அவன் நீலமணிக்குச் செய்த கொடுமைக்கு விஜயவாடா ஆந்திரர்கள் பழி வாங்கி விட்டார்கள். செம்மையாக வெளுத்துவிட்டார்கள்!" என்று எக்களிப்புடன் சொல்லிப் பிறகு விவரங்களையும் கூறினார்.
கந்தப்பப் பிள்ளையின் நாதஸ்வரக் கோஷ்டி பிரயாணம் செய்த அதே ரெயிலில், கல்கத்தாவில் நடந்த அதே விழாவுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடகக் கோஷ்டியாரும் சென்றார்களாம்.
பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து ஆந்திர நாட்டில் ரெயில் நிறுத்தும் படலமும் கலவரப் படலமும் நடந்தனவல்லவா? இவர்கள் சென்ற ரெயில் விஜயவாடா சேர்ந்த போது, அங்கே ரெயில்வே நிலையத்தில் அமளி துமளி சிகரத்தை அடைந்திருந்ததாம். ரெயிலில் ஒவ்வொரு வண்டிக்குள்ளும் ஆந்திர சகோதரர்கள் ஏறி, "ஆந்திர ராஜ்யமு காவல!" என்று கத்தினார்கள். யாராவது தமிழர்கள் வண்டியிலிருப்பதைப் பார்த்தால், "அரவவாடு சாவல" என்றும் சேர்த்துக் கொண்டார்கள்.
நமச்சிவாயம் முன்னமே முரடன் என்பது தெரிந்த விஷயம். அவனுடைய முரட்டுக் குணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மாறவில்லை. அவனுடைய வண்டியில் ஏறிய ஆந்திரர்கள், "ஆந்திர ராஜ்யமு காவல!" என்று கத்தியபோது, "என்னிடம் ஆந்திர ராஜ்யமு லேது. சோதரலாரா, லேதவே லேது! இல்லவே இல்லை! வேண்டுமானால் என் பெட்டியை நீவே சோதித்துப் பார்த்துக்கவல!" என்று நமச்சிவாயம் தெலுங்கும் தமிழும் கலந்து கேலியாகச் சொன்னானாம். அவன் தமிழன், கேலி செய்கிறான் என்று அறிந்து ஆந்திரர்கள், "அரவவாடு சாவல!" என்று கத்தினார்கள். உடனே நமச்சிவாயத்துக்கும் கோபம் வந்தது. "உனக்கு ஆந்திர ராஜ்யமு காவல என்றால், அதற்கு அரவவாடு எதற்காகச் சாக வேண்டும்? நீ சாவல! உங்கப்பன் சாவல! உங்க பாட்டன், பூட்டன் சாவல!" என்று இரைந்தானாம். உடனே அவர்கள் வண்டியில் புகுந்து அவனை வெளியில் பிளாட் பாரத்தில் இழுத்துப் போட்டு அடி அடி என்று அடித்துவிட்டார்களாம். முகம் உடம்பு எல்லாம் இரத்த விளாறாகிவிட்டதாம். நாடகக் கோஷ்டியைச் சேர்ந்த மற்றவர்கள் விஜயவாடாவிலிருந்து மறுநாள் புறப்பட்ட வேறு ரெயிலில் ஏறிப் போய் விட்டார்கள். தவுல் கந்தப்பப் பிள்ளையோடு போன நாதஸ்வர வித்துவான் மிரண்டு போய் ஊருக்குத் திரும்பி விட்டார். கந்தப்பப் பிள்ளையும், படுகாயம் பட்டுக் கிடந்த நமச்சிவாயத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
"சில பேருக்கு உயிர் ரொம்பக் கெட்டி, ஐயா! நமச்சிவாயம் டி.பி. வியாதியில் சாகாமல் பிழைத்தான். இப்போது ஆந்திரா வெறியிலும் சாகாமல் பிழைத்து விட்டான். ஆஸ்பத்திரியிலேதான் இருக்கிறான். அவனுடைய குணம் மட்டும் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. கேளுங்கள், இந்த வேடிக்கையை! - நேற்றிரவு ரேடியோவில் நீலமணியின் கச்சேரி கேட்டீர்களா?" என்றார் கந்தப்ப பிள்ளை.
"ஆமாம்; கேட்டேன்! மிக்க நன்றாயிருந்தது! உயர்ந்த சங்கீதம்!" என்றேன்.
"கேட்டதற்கு ஏதேனும் அடையாளம் சொல்லுங்கள், பார்க்கலாம்!" என்றார் கந்தப்பன்.
"கடைசியில் ராகமாலிகையாக அந்தப் பழைய பாடலையே பாடினாள். மத்தியமாவதியில் முடித்தாள். 'நமச்சிவாயம்' என்ற பெயரைச் சொல்ல எப்படித்தான் அவளுக்கு மனம் வந்ததோ என்று நான் ஆச்சரியப்பட்டேன்" என்றேன்.
"சில பேருடைய தலையெழுத்து அது! இந்தப் போக்கிரி அதைக்கேட்டு என்ன சொன்னான் தெரியுமா? ஆமாம்; ஆஸ்பத்திரியில் ரேடியோ இருக்கிறது. நீலமணியின் கச்சேரியின் போது திறந்து வைத்திருந்தார்கள். ராகமாலிகை முடிந்ததும் நமச்சிவாயம் என்னிடம் 'மாமா! அவளை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்!' என்றான். அது போதாது என்று, 'மாமா! எப்படியாவது அவளை நான் ஒரு தடவை பார்க்க வேண்டும், மாமா! நேரிலேயே அவளை நான் மன்னித்து விட்டதாகச் சொல்லவேண்டும்' என்றான். எப்படியிருக்கிறது கதை? இவன் அவளை மன்னிப்பதாம்! எப்படிப்பட்ட கிராதக உள்ளம் படைத்தவனாயிருக்க வேண்டும்? உலகில் எந்தக் கெட்ட குணத்துக்கும் மன்னிப்பு உண்டு, ஐயா! அகங்காரம் என்கிற பேய்க் குணத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது!" என்றார் கந்தப்பப் பிள்ளை.
"உண்மைதான்; நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நான் எதற்காகக் குறுக்கே நிற்பது என்று யோசிக்கிறேன். நீலமணியிடம் போய்ச் சொல்லி விடுகிறேன்! அப்புறம் அவள் இஷ்டம்! இன்னும் அவள் சிறு குழந்தையா என்ன? யோசித்து விருப்பம் போல் முடிவு செய்யட்டும்! மேலும், இந்த துஷ்டன் பிழைப்பதே துர்லபம் என்கிறார்கள். சாகப் போகிறவனிடம் நமக்கு என்னத்திற்காக வன்மம்?" என்றார் கந்தப்பப் பிள்ளை.
"அதுதான் சரி! உங்கள் முடிவை மெச்சுகிறேன். நீலமணியிடம் பேசும்போது, அன்றைக்கு என்ன நடந்தது என்பதை மறுபடியும் விவரமாய்க் கேட்டு விடுங்கள்!" என்றேன்.
"என்றைக்கு நடந்ததைக் குறிப்பிடுகிறீர்கள்?"
"தீபாவளிக்கு முதல் நாள், கும்பகோணத்தில் உள்ள உங்கள் வீட்டில் வெடி வெடித்த அன்று, நீங்கள் நீலமணியை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு டாக்டரிடம் ஓடிய அன்றுதான்."
*****
சில தினங்களுக்கு முன்னால் ஸ்ரீ கந்தப்பப்பிள்ளையைக்
கடைசியாகச் சந்தித்தேன். அவர் சிறிது முக மலர்ச்சியுடனே காணப்பட்டார்."ஐயா சொல்லியனுப்பியது மிகவும் நல்லதாய்ப் போயிற்று!" என்று சந்தோஷமாகக் கூறினார்.
"எதைப் பற்றிச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நீலமணியிடம் நன்றாய் விசாரிக்க வேண்டுமென்று சொன்னீர்களே, அதைப்பற்றித்தான்! விசாரித்துத் தெரிந்துகொண்டது நான் முன்னம் எண்ணியதற்குக் கொஞ்சம் மாறாக இருந்தது. கொஞ்சம் என்ன? ரொம்பவும் மாறுதலாக இருந்தது. அன்றைக்கு நமச்சிவாயம் நீலமணியைவிட்டு விட்டு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்கு ஓடிப் போய்விடப் போகிறேன் என்று வற்புறுத்திச் சொன்னானாம். சொன்னதோடல்லாமல், வீட்டு வேலைக்காரப் பையனை வண்டி கொண்டுவரச் சொல்லி அதில் பெட்டி - படுக்கை முதலிய சாமான்களையும் ஏற்றி அனுப்பி விட்டானாம். அவனுடைய கைப்பெட்டியை மட்டும் நீலமணி பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்றும், போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடித்தாளாம். அவன் மீறிப் போவதாயிருந்தால், அவன் கண் முன்னாலேயே உயிரை விட்டுவிடுவதாகக் கூறினாளாம். அந்த முட்டாள் எதற்காக அக்கினித் திராவகம் வாங்கி வைத்திருந்தானோ, கடவுளுக்குத்தான் தெரியும். தன் உயிரைத் தான் வாங்கிக் கொள்வதற்கோ, அல்லது நீலமணியைச் சும்மா பயமுறுத்துவதற்கோ தெரியாது. அதை நீலமணி கையில் எடுத்துக் கொண்டு நமச்சிவாயம் ஓர் அடி எடுத்து வைத்தாலும் அக்கினி திராவகத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டு விடுவேன் என்று கூறினாளாம். நமச்சிவாயம் அதை அவள் கையிலிருந்து வாங்குவதற்காக என்னவெல்லாமோ சாமர்த்தியமெல்லாம் செய்து பார்த்தான். விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்து அவளைச் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினான். "நல்லதாய்ப் போயிற்று; உங்கள் கையாலேயே கொன்று விடுங்கள்!" என்றாள் அவள். 'உன்னைக் கொன்று என்ன பயன்? உன்னைக் கலியாணம் செய்து கொண்ட என்னைச் சுட்டுக் கொள்கிறேன்' என்று சொல்லித் தன் பேரிலேயே துப்பாக்கியைத் திருப்பி சுட்டுக் கொண்டான். அந்தப் பேதைப் பெண் அதை உண்மை என்று நம்பி அக்கினித் திராவகப் புட்டியை வாயண்டை கொண்டுபோய் விட்டாள். நமச்சிவாயம் சட்டென்று அவள் கையிலிருந்த திராவகப் புட்டியைத் தட்டிவிட்டான். புட்டி தூர விழுந்தது என்றாலும் அதிலிருந்து சில துளிகள் அவள் முகத்தில் சிந்தி விட்டன. அவள் நினைவிழந்து விழுந்து விட்டாள். பிறகு நடந்தது ஒன்றும் அவளுக்குத் தெரியாது. இவையுங் கூட வெகு நாளைக்குப் பிறகு தான் ஒவ்வொன்றாக அவள் நினைவுக்கு வந்தன. நமச்சிவாயம் செத்து விட்டான் என்று சொன்னதை அவள் நம்பி விட்டாள். பட்டாசுக்கட்டுப் பெட்டிகள் வெடித்து வீடு எரிந்ததில் அவன் இறந்ததாக நான் சொன்னது கொஞ்சம் அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. இல்லாவிடில் அவனை இவளே கொன்றுவிட்டதாக எண்ணி மறுபடியும் பிராணத்தியாகம் செய்ய முயன்றிருப்பாள். இப்போது நமச்சிவாயம் உயிரோடிருப்பதைப் பற்றி நான் சொன்னதும் உடனே புறப்பட்டு என்னோடு வந்து விட்டாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரையும் சேர்த்து வைத்துவிட்டு வந்தேன். 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?' என்று கம்பர் சொன்ன பிரகாரம் அவர்கள் இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைத்திருப்பதைப் பார்த்துவிட்டு வந்தேன்!" என்று சொன்னார் கந்தப்பப் பிள்ளை.
"அப்படியானால், நமச்சிவாயம் இந்தக் கண்டத்துக்கும் பிழைத்துக் கொள்வான் என்று சொல்லுங்கள்!" என்றேன்.
"சிலருடைய உயிர்தான் ரொம்பக் கெட்டி என்று சொன்னேனே, ஐயா! நமச்சிவாயமும் நீலமணியும் இன்னும் பல்லாண்டு ஆனந்த வாழ்க்கை நடத்தப் போகிறார்கள்."
"ததாஸ்து! ரொம்ப ரொம்பச் சந்தோஷம்! கந்தப்பப் பிள்ளை! இன்னும் ஒரு விஷயம் தாங்கள் சொல்லாமல் பாக்கி வைத்திருக்கிறீர்கள். அந்த வெடிகுண்டு வழக்கைப் பற்றிச் சொல்லுகிறேன். அதன் உண்மை என்ன?"
"அப்படி இப்படி என்று அடி மடியில் கையைப் போடப் பார்க்கிறீர்களே?" என்றார் கந்தப்பப் பிள்ளை.
"சொல்லலாம் என்றால், சொல்லுங்கள். இல்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்!" என்றேன்.
"இனிமேல் சொல்வதற்கென்ன? தாராளமாகச் சொல்லலாம். நான் வெடிகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டது உண்மைதான். வெள்ளைக்காரன் மேல் போடுவதற்காகவும் அல்ல; பிரிட்டிஷ் கவர்ன்மெண்டைத் துரத்துவதற்காகவும் அல்ல. அரசியலில் நான் காந்தி மகானுடைய கட்சியைச் சேர்ந்தவன். என் மகள் மீது அக்கினித் திராவகத்தை ஊற்றிய பஞ்சமாபாதகன் மேல் வெடிகுண்டைப் போட்டு அவனைக் கொன்று விடுவதென்று முடிவு கட்டிக் கொண்டேன். இதற்காகவே, வேறு அரசியல் நோக்கத்துடன் வெடிகுண்டு தயாரிக்க முன் வந்த பிள்ளைகளுக்கு இடவசதி முதலியவை தந்து உதவினேன். தெய்வாதீனத்தைப் பாருங்கள்! தயாரான வெடிகுண்டுகள் தாமே வெடித்துக் கொண்டு இரகசியத்தை வெளிப்படுத்தி விட்டன. என்னையும் பெரும்பாவம் செய்யாமல் காப்பாற்றின. நான் உத்தேசித்திருந்தபடி செய்திருந்து, பிறகு நீலமணியிடம் உண்மையை அறிந்து கொண்டிருந்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? கடவுள் தடுத்தாட் கொண்டார்! முருகனின் கருணையே கருணை!" என்று கூறிய கந்தப்பப் பிள்ளை, கண்களைப் பாதி மூடிய வண்ணம் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டு பின் வரும் பாடலைப் பாடினார்:
வருவாய் மயில்மீ தினிலே!
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
முருகா! முருகா! முருகா!
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
முருகா! முருகா! முருகா!
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகக்காரி - Naadagakkaari - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கந்தப்பப், நான், பிள்ளை, என்ன, நமச்சிவாயம், என்றார், அவள், அவன், கொண்டு, கேட்டேன், இப்போது, என்றேன், வந்து, தான், ஆந்திர, சாவல, பிறகு, போய், செய்து, சொல்லுங்கள், அவர், மட்டும், ராஜ்யமு, அவனுடைய, அவளை, இன்னும், ரெயில், அக்கினித், நீலமணி, போது, விட்டாள், நீலமணியிடம், அந்த, வேறு, முருகா, என்றும், மேல், வெடிகுண்டு, அரவவாடு, கொன்று, உடனே, மாமா, காவல, உங்கள், வேண்டும், வண்டியில், கொஞ்சம், சொல்லி, அவளுக்கு, நீலமணியின், நீங்கள், விட்டு, கச்சேரி, நல்ல, அந்தப், ரேடியோவில், விட்டான், சொல்ல, கொண்டேன், விஜயவாடா, ஆந்திரர்கள், கல்கத்தாவில், செய்த, தெரியாது, என்னிடம், நாடகக், ரெயிலில்