நாடகக்காரி
2
கும்பகோணத்தில் திருமருகல் நாதஸ்வரக்காரரின்
கச்சேரிக்கு நான் தவுல் வாசித்துக் கொண்டிருந்த போது முதன் முதலில் அந்தக்
குழந்தையைப் பார்த்தேன். விஜயதசமித் திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணிய
சுவாமி சூர சம்ஹாரத்துக்காக வீதி வலம் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு கோவிலிலிருந்தும் அன்றைக்குச் சுவாமி புறப்பாடு நடப்பது வழக்கம்.
ஆனாலும் சின்னக் கடைத் தெரு வியாபாரிகள் அந்தக் கடைத் தெருவில் இருந்த
சிறிய கோயிலில் நடத்தி வந்த உற்சவந்தான் ஊரிலே பிரமாதப்படும். நவராத்திரி
ஒன்பது நாளும் உற்சவம் நடத்துவார்கள். ஒவ்வொரு தினமும் சங்கீதக் கச்சேரிகளும்
நாதஸ்வரக் கச்சேரிகளும் நடைபெறும். விஜயதசமிக்கு ஒவ்வொரு வருஷமும் நமது
தமிழ்நாட்டிலேயே மிகப் பிரசித்தியடைந்த நாதஸ்வரக் கோஷ்டியைப் பல மாதங்களுக்கு
முன்பே ஏற்பாடு செய்து விடுவார்கள். சின்னக் கடைத் தெரு வியாபாரிகள்
அழைத்து விட்டால், நாதஸ்வர வித்வான்களும் அதை ஒரு பெருமையாகக் கருதுவார்கள்.
வேறு யார் அதிகப் பணம் கொடுத்து கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். கடைத்தெரு
முழுவதும் அன்று அமோகமாக அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளிக்கும் பல இடங்களில்
பந்தல் போட்டிருப்பார்கள். ஒவ்வொரு பந்தலிலும் நாதஸ்வரக் கோஷ்டியார்
நின்று வாசிக்க வேண்டும். அந்நாளில் கும்பகோணத்தாரின் சங்கீத ரஸனைக்கு
இணையே கிடையாது போங்கள்! எவ்வளவோ அற்புதமாக முன்னலங்காரமும் பின்னலங்காரமும்
செய்து முருகனை எழுந்தருளப் பண்ணுவார்கள். ஆனாலும், சுவாமி தரிசனம் செய்யும்
கூட்டத்தைக் காட்டிலும் நாதஸ்வர கோஷ்டியைச் சூழ்ந்து நிற்கும் ஜனக் கூட்டந்தான்
அதிகமாயிருக்கும்.
அன்றைக்கு இவ்வாறு ஒவ்வொரு பந்தலிலும் நின்று நின்று நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, கச்சேரியைத் தொடர்ந்து வந்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தேன். அந்த சிறு குழந்தை கூட்டத்தில் எப்படியோ புகுந்து அடித்துக் கொண்டு வந்து எல்லாருக்கும் முன்னால் வந்து நின்றது. இது என் கவனத்தைக் கவர்ந்தது. நாதஸ்வர இசையைக் கேட்டுக் கொண்டு, அந்தக் குழந்தை சில சமயம் பூரித்து மலர்ந்த முகத்துடனே காணப்படும். சில சமயம் தவுல் வாத்தியத்தில் கவனம் செலுத்திக் கையினால் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இன்னும் சில சமயம் மகுடி வாத்தியத்தைக் கேட்டு பாம்பு படம் எடுத்து ஆடுமே, அம்மாதிரி கண்களைப் பாதி மூடிக்கொண்டு, தலையை இலேசாக ஆட்டிக்கொண்டு நிற்கும். சில சமயங்களில் அதன் உடம்பு முழுவதுமே ஆடும். தாமரைக்குளத்தில் இலேசாகக் காற்றடிக்கும்போது பாதி மலர்ந்தும் மலராமலும் இருக்கும் தாமரைப் புஷ்பம் அதன் நீண்டு உயர்ந்த தண்டுடன் ஆடுமே, அந்தக் காட்சி எனக்கு நினைவு வரும். திருமருகல் நாதஸ்வரக்காரர் அன்றைக்கு அபாரமாகத்தான் வாசித்துக் கொண்டிருந்தார். ஆனால் என்னுடைய நினைவு முழுதும் அந்தச் சிறு பெண் குழந்தையின் பேரிலேயே இருந்தது. ஒவ்வொரு பந்தலுக்கும் நாதஸ்வர கோஷ்டி வந்து நின்றவுடனே, நான் அந்தக் குழந்தை வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டிருப்பேன். கூட்டத்தை விலக்கிக் கொண்டு, அந்தக் குழந்தை முன்னால் வந்து நின்ற பிறகுதான் எனக்கு என்னுடைய வாசிப்பில் கவனம் செல்லும். அப்போது அந்தப் பெண்ணின் பரவசமான முகத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் வாசிப்பேன்.
ஊர்வலம் முடிந்து சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரம் செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்ட பிறகு, நான் என் தவுல் வாத்தியத்தைச் சிஷ்யப் பிள்ளையிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தையை அருகில் அழைத்து, "உன் பெயர் என்ன, குழந்தை?" என்று விசாரித்தேன். "என் பெயர் நீலமணி" என்றது அந்தக் குழந்தை. "உன் அப்பா, அம்மா யார்?" என்று கேட்டேன். "அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான் இருக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா, மாமா! அழைத்துப் போகிறேன்! அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீங்கள் வந்து பார்த்தால் ரொம்பச் சந்தோஷப்படுவாள்!" என்றது அந்தக் குழந்தை.
"ஆகட்டும் அம்மா, வருகிறேன்" என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். அப்படிப்பட்ட சங்கீத ரஸனையுள்ள குழந்தையைப் பெற்ற தாயாரைப் பார்க்க எனக்கும் ஆவல் உண்டாகி இருந்தது.
என்னுடைய பதிலைக் கேட்டுவிட்டு அந்தக் குழந்தை குதூகலமாகக் குதித்துக் கொண்டு ஓடிப் போய் விட்டது.
பிறகு, பக்கத்திலிருந்தவர்களை விசாரித்ததில் நான் 'வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்தது அவ்வளவு உசிதமான காரியம் அல்ல என்று தெரிந்தது.
அந்தக் குழந்தையின் தாயாருக்கு மரகதமணி என்று பெயர். சங்கீதத்தில் கொஞ்சம் பயிற்சி உண்டு. சில காலம் கச்சேரிகள் கூடச் செய்து கொண்டிருந்தாள். தனிகர் ஒருவர் சிநேகமானார். கலியாணம் செய்து கொண்ட மனைவியைப் போலவே அவளை வைத்துப் பராமரிப்பதாகச் சொன்னார். மரகதமணி சங்கீதக் கச்சேரி செய்வதை விட்டுவிட்டாள். சிலகாலம் அந்யோந்யமாகத்தான் இருந்தார்கள்.
இந்த மாதிரிச் சிநேகமெல்லாம் அநேகமாக எப்படி முடியும் என்பது தெரிந்த விஷயமேயல்லவா? சில வருஷங்களுக்கெல்லாம் ஏதோ காரணத்தினால் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போய்விட்டது. தனிகர் மரகதமணியின் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார். பெரிய ஆஸ்தி படைத்த செல்வர் அந்தப் பெரிய ஆஸ்தியிலிருந்து ஏதோ கொஞ்சம் மரகதமணிக்கு எழுதி வைத்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர காரியத்தில் நடைபெறவில்லை. கடைசியாக, அவர் இம்மாதிரித் தொல்லைகளுக்கு இடமில்லாத மறு உலகத்துக்குப் போய்விட்டார்.
மரகதமணி தன் சின்னஞ் சிறு குழந்தையுடன் வறுமை வாழ்க்கை நடத்தி வந்தாள். எப்படியோ காலம் போய்க் கொண்டிருந்தது. மனக்கவலையினால் உடம்பிலும் நோய் வந்து விட்டது. படுத்த படுக்கையாகி விட்டாள். தாயும் பெண்ணும் இப்போது நிராதரவாக இருக்கிறார்கள்...
இந்த வேதனை தரும் வரலாற்றை அறிந்த பிறகு, "இப்போது அவர்களுக்கு ஜீவனம் எப்படித்தான் நடக்கிறது?" என்று கேட்டேன்.
"தாயாரிடம் இருந்த நகை நட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் வருகின்றன. அந்தக் குழந்தைக்கு நல்ல குரல். எங்கேயாவது பாட்டுக் கச்சேரி, நாதஸ்வரக் கச்சேரி என்றால் போய்விடும். கேட்ட பாட்டுக்களை பாடம் பண்ணிவிடும். ரெயிலிலே ஏறிப் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துத் தினம் எட்டணா பத்தணா சம்பாதித்துக் கொண்டு வரும். அந்தக் குழந்தையின் குரல் இனிமையையும் முகக்களையையும் பார்த்து ரெயில் அதிகாரிகள் சும்மா விட்டுவிடுவார்கள். சில சமயம் இம்மாதிரி உற்சவ காலங்களில் முச்சந்திகளில் நின்று பாட்டு பாடுவதும் உண்டு. சங்கீத ரஸனையும் தாராள உள்ளமும் படைத்தவர்கள் ஓர் அணா - இரண்டு அணா கூடக் கொடுத்துவிட்டுப் போவார்கள்" என்று பதில் கிடைத்தது.
இதையெல்லாம் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. அந்தக் குழந்தையின் நிலைமை இப்படியா இருக்க வேண்டுமென்று இரங்கினேன். ஆனாலும், இம்மாதிரி இடங்களுக்கு உதவி செய்வதாக எண்ணிப் போனாலும் ஏதாவது சங்கடத்தில் வந்து முடியும் என்று நினைத்து அங்கே போகும் எண்ணத்தை விட்டுவிட்டேன். உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி, கடவுள் அருளால் எனக்கு நல்ல அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. கௌரவம் வாய்ந்த பெரிய மனிதர்களின் சிநேகமெல்லாம் கிடைத்திருந்தது. அசட்டுத்தனமாக எங்கேயாவது போய்க் காலை விட்டுக் கொண்டு வீண் தொல்லைக்கு ஆளாகக்கூடாது என்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
இந்த உறுதியில் நிலைத்திருந்தேனானால் பின்னால் எவ்வளவோ சங்கடங்களுக்கு உள்ளாகாமல் தப்பித்துக் கொண்டிருப்பேன். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை ஒரு நிமிஷத்தில் என் மன உறுதியைக் குலைத்து விட்டது. நான் தங்கியிருந்த ஜாகைக்கே அது வந்துவிட்டது. "மாமா! எங்கள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னீர்களே, எப்போது வருகிறீர்கள்? அம்மா ரொம்பச் சந்தோஷப்பட்டாள். கேட்டுவரச் சொன்னாள்!" என்றது.
அந்தக் குழந்தையின் உள்ளத்தைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. "அதற்கென்ன, சாயங்காலம் வருகிறேன், குழந்தை!" என்றேன். பக்கத்திலே இருந்த இரண்டொருவர் சிரித்ததைக் கேட்டதும் எனக்கு முனைப்பு அதிகமாகிவிட்டது. என் சுபாவந்தான் ஐயாவுக்குத் தெரியுமே? நல்லது, கெட்டது என்று என் பகுத்தறிவுக்குப் பட்டபடிதான் செய்வேனே தவிர, நாலுபேர் ஏதாவது சொல்லிவிடுவார்களே என்று பயந்து எதுவும் செய்யமாட்டேன். ஊருக்குப் பால் குடிக்கிற வழக்கமே என்னிடம் கிடையாது. யாராவது வம்பு பேசுகிறார்கள், அவதூறு சொல்லுகிறார்கள் என்று அறிந்தால், அந்தக் காரியத்தில் எனக்கு இன்னும் அதிக ஊக்கம் உண்டாகிவிடும்.
பக்கத்திலிருந்தவர்களின் சிரிப்பையுங் கேட்டு குழந்தையின் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தையும் பார்த்ததும், "சாயங்காலம் என்ன? இப்போதே உன்னுடன் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு எழுந்து போனேன்.
குழந்தையைப் பார்த்தபோது உண்டான இரக்கத்தைக் காட்டிலும் தாயைப் பார்த்தபோது அதிக இரக்கம் உண்டாயிற்று. அந்த அம்மாளின் பேச்சும் குணமும் அவ்வளவு உயர்வாயிருந்தன. ஆனால் தேக நிலைமை மிக மோசமாயிருந்தது. அதிக காலம் உயிர் வாழ்ந்திருக்கமாட்டாள் என்றே தோன்றியது. மூச்சு திணறிக் கொண்டு, உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு பேசுகிறவளைப் போல், மெல்லிய குரலில் பேசினாள். ஊர் வம்பு பேசவில்லை; தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கவும் இல்லை. பழைய காலத்து சங்கீதக்காரர்கள் - நாதஸ்வரக்காரர்களைப் பற்றியே பேசினாள். அப்போது அவள் முகம் மலர்ச்சி அடைந்ததைப் பார்த்து எனக்கும் திருப்தியாய் இருந்தது. இந்த மட்டும், சீக்கிரத்தில் இறந்து போகப் போகிற ஓர் அநாதை ஸ்திரீக்கு இந்த உதவியாவது நம்மால் செய்ய முடிந்ததே என்று சந்தோஷப் பட்டேன். நீலமணி பக்கத்தில் உட்கார்ந்து வெகு சுவாரஸ்யமாக எங்கள் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தாள். விடைபெற்று புறப்படவேண்டிய சமயம் நெருங்கிய போது, நாஸுக்காக வீட்டுச் செலவு பற்றிக் கவலைப் படவேண்டாமென்றும் எனக்குத் தெரிந்த டாக்டரை அனுப்பி வைத்தியம் பார்க்கச் சொல்வதாகவும் கூறினேன். கடைசியாக, "அம்மா! நீ எவ்வளவோ நன்றாயிருந்தவள்; இப்போது இந்த கதிக்கு வந்து விட்டாய். ஆனாலும் இந்தக் குழந்தையைப் பிச்சை எடுக்கப் போகச் சொல்வதை மட்டும் நிறுத்தி விடு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு!" என்றேன்.
"நானா போகச் சொல்கிறேன், ஐயா! வேண்டாம் வேண்டாம் என்று தான் முட்டிக் கொள்கிறேன். கேட்காமல் போய்விடுகிறாள்!" என்று மரகதமணி கண்ணீர் ததும்பக் கூறினாள்.
அப்போது நீலமணி, "மாமா! நான் பிச்சை எடுக்கப் போவதாக யார் உங்களுக்குச் சொன்னார்கள்?" என்று கணீர் என்ற குரலில் கேட்டாள்.
நான் சிறிது திகைத்துப் போனேன். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பேச்சை எடுத்திருக்கக்கூடாது என்று எண்ணினேன்.
மறுபடியும் அந்தக் குழந்தை, "ஏன் மாமா! பதில் சொல்லுங்கள். நான் பிச்சை எடுப்பதாக யார் சொன்னார்கள்? நான் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை! கச்சேரி செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு பாடினால் அது மட்டும் கச்சேரியா? இரண்டு அணா, மூன்று அணா வாங்கிக் கொண்டு பாடினால் அது பிச்சையா?" என்றாள்.
நான் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனேன். என்னை அறியாமல் பூரிப்புப் பொங்கி வந்தது. அவள் தாயாரின் முகத்திலும் கொஞ்சம் புன்னகையைக் கண்டேன். கலகலவென்று சிரித்துக் கொண்டே குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டு "நீ ரொம்பக் கெட்டிக்காரப் பெண்! பலே சமர்த்து! என்னுடன் வந்துவிடு! உன்னைப் பெரிய சங்கீதக்காரியாக்கிவிடுகிறேன்" என்றேன்.
அப்போது மரகதமணி "அப்படியே செய்யுங்கள் ஐயா! இவளைச் சமாளிக்க என்னால் முடியவில்லை! நீங்கள் அழைத்துக் கொண்டு போங்கள்!" என்றாள்.
பேச்சு வாக்கில் ஏதோ சொல்லி வைத்தேன். அவ்வாறு காரியத்தில் நடந்தேறும்படி கடவுள் செய்து விட்டார். ஆறு மாதத்துக்கெல்லாம் மரகதமணி இறந்து போனாள். இந்தக் குழந்தை பட்ட துயரத்தை என்னால் சொல்ல முடியாது. நல்ல வேளையாக அச்சமயம் நான் கும்பகோணத்தில் இருக்கும்படி கடவுளின் அருள் இருந்தது. தாயின் ஈமக்கடன்களை முடித்துவிட்டுக் குழந்தையை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சேர்ந்தேன்.
முதலில் என் வீட்டைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் அருவருப்புக் காட்டினார்கள். யாரோ வீதியிலே திரிந்த பிச்சைக்காரப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டதாக முணுமுணுத்தார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. சில நாளைக்குள்ளேயே நிலைமை மாறி விடும் என்று அறிந்திருந்தேன். குழந்தை நீலமணி என் குடும்பத்தாரைச் சொக்குப்பொடி போட்டு மயக்குவது போல் மயக்கிவிட்டாள். அவளுடைய குறுகுறுப்பான கண்களும், சுறுசுறுப்பான நடத்தையும், மழலைப் பேச்சும், இனிய பாட்டும் எல்லாரையும் வசீகரித்து விட்டன. "குழந்தையைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லாமலே போய்விட்டது. அதற்குப் பதிலாக நான் நீலமணியை எதற்காவது கண்டிக்கும்படி நேர்ந்தால் என் வீட்டில் எல்லாரும் என் பேரில் பாய ஆரம்பித்து விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுப்பது தவறு என்பதை நான் அறிவேன். அப்படி இடங்கொடுத்து கெட்டுப் பாழாய்ப்போன பெரிய மனிதர்கள் வீட்டுக் குழந்தைகள் எத்தனையோ பேரையும் எனக்குத் தெரியும். நீலமணியினுடைய குழந்தை வாழ்க்கையை உத்தேசிக்கும்போது அவளை ரொம்பவும் கண்டித்து வளர்க்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தேன். ஆனாலும் ஒன்றும் பயன்படவில்லை. எனக்கே அந்த அநாதைக் குழந்தையைக் கண்டிக்கச் சாதாரணமாய் மனம் வருவதில்லை. எப்போதாவது அருமையாக அவளைக் கோபித்துக் கொண்டால் என் வீட்டில் எல்லோரும் என் பேரில் சண்டைக்கு வந்தார்கள்.
எப்படியோ குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லித் தாஜா பண்ணிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வந்தேன். வெகு நன்றாகப் படிப்பும் வந்து கொண்டிருந்தது. ஆனால் நடுநடுவில் பழைய பழக்க வழக்கங்கள் வந்து கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து காணாமற் போய் விடுவாள். ஊரில் உற்சவம் ஏதாவது நடந்தால் அங்கே வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவாள். பாட்டுப் பாடிக் காசு வாங்கவும் ஆரம்பித்து விடுவாள். சில சமயம் ரெயில்வே நிலையத்துக்குப் போய் ரெயில் ஏறிப் பாடத் தொடங்கி விடுவாள். இரண்டு மூன்று ஸ்டேஷன் பாடிக்கொண்டு போய்விட்டு, "குழந்தையைக் காணோமே?" என்று எல்லோரும் கவலையுடன் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில் கையில் எட்டணா ஒரு ரூபாய்க் காசுடன் திரும்பி வருவாள்.
நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். "குழந்தை! நான் இந்த ஊரில் கௌரவமாய் வாழ்க்கை நடத்துகிறேன்! என் மானத்தை வாங்காதே!" என்று அடிக்கடி எடுத்துச் சொன்னேன்.
"நான் எங்கேயோ கிடந்து வந்தவள் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே, மாமா! உங்களுக்கு என்னால் கௌரவக் குறைவு எப்படி ஏற்படும்?" என்று அவள் ஒரு சமயம் பதில் சொல்வாள்.
இன்னொரு சமயம், "ஏன், மாமா! நீங்கள் கச்சேரிக்குப் போய் நூறு இருநூறு சம்பாதித்துக் கொண்டு வருகிறீர்களே? அதில் கௌரவக் குறைவு ஒன்றும் இல்லையே? அதுபோல் நானும் எனக்குத் தெரிந்த பாட்டைப் பாடிக் கச்சேரி செய்து என்னால் இயன்றதைச் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். இதில் என்ன பிசகு?" என்பாள்.
இன்னும் ஏதாவது நான் கடுமையாகப் பேசி விட்டால், ஒரு நாள் என் வீட்டை விட்டு, ஊரைவிட்டே ஓடிப்போய்விடப் போகிறாளே என்ற பயம் எனக்கு உண்டாகி விட்டது.
அதற்குப் பிறகு, "நடக்கிறது நடக்கட்டும்; கடவுள் இருக்கிறார்!" என்று விட்டு விட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகக்காரி - Naadagakkaari - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, அந்தக், குழந்தை, வந்து, சமயம், செய்து, எனக்கு, கச்சேரி, வருகிறேன், மாமா, குழந்தையின், குழந்தையைப், மரகதமணி, போய், ஒவ்வொரு, அம்மா, பெரிய, பிச்சை, ஆனாலும், கொஞ்சம், நாதஸ்வரக், பதில், விட்டது, நல்ல, பிறகு, வீட்டுக்கு, நீலமணி, விடுவாள், சம்பாதித்துக், அப்போது, என்னால், சொல்ல, யார், நாதஸ்வர, குழந்தையைக், எவ்வளவோ, நின்று, சிறு, ஏதாவது, ஒன்றும், எனக்குத், காரியத்தில், அதற்குப், மட்டும், இப்போது, அவள், அதிக, போனேன், என்றேன், நிலைமை, கடவுள், இரண்டு, பெயர், கடைத், இருந்த, சங்கீத, கேட்டுக், கொண்டிருந்தார், போய்க், தவுல், போது, பார்த்தேன், சுவாமி, பெண், அந்த, என்றது, எங்கள், நீங்கள், காலம், என்ன, என்னுடைய, எப்படியோ, இன்னும், கேட்டு, தெரிந்த