நாடகக்காரி
5
திருமணத்துக்கு நான் குறிப்பிட்ட முகூர்த்த
நாளில் என்ன கோளாறு இருந்ததோ தெரியவில்லை. நான் ஊருக்குத் திரும்பிச்
சில நாளைக்குள்ளே இடி விழுந்தாற் போன்ற செய்தி சென்னையிலிருந்து வந்து
விட்டது. நீலமணி கடித்தத்துக்கு மேல் கடிதமாக எழுதியிருந்த நாலைந்து
கடிதங்களையும் சுசீந்திரம் உற்சவக் கச்சேரிக்குப் போய்த் திரும்பி வந்த
பிறகு சேர்ந்தாற்போல் படித்ததில் துயரமும் பீதியும் கொள்ளும்படி நேர்ந்தது.
நான் சென்னைக்குப் போயிருந்த போதே நமச்சிவாயத்தின் தொண்டை கம்மியிருந்ததையும் அவன் கமறிக் கமறி அடிக்கடி இருமியதையும் கவனித்தேன். உடம்பும் சிறிது இளைத்திருந்தது. சென்னையில் நாள்தோறும் இடைவிடாமல் நாடகம் நடந்து வந்தது தான் இதற்குக் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.
சில நாளைக்கெல்லாம் நமச்சிவாயத்துக்கு உடம்பு ரொம்ப பலவீனமாகிச் சுரமும் வந்து விட்டதாம். டாக்டரை அழைத்துப் பார்த்ததில் அவர் அந்தப் பயங்கரமான செய்தியைச் சொன்னாராம். பையனுக்கு டி.பி.வியாதி என்றும், உடனே நாடகம் ஆடுவதை நிறுத்தி பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், தகுந்த சிகிட்சையும் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிடில் வியாதி முற்றி உயிருக்கே அபாயம் வந்து விடும் என்று சொன்னாராம். அந்த நாளில் இப்போது வந்திருப்பது போன்ற 'ஸ்ட்ரெப்டோ மைஸின்' முதலிய மருந்துகள் இல்லை. டி.பி. வியாதி வந்து விட்டது என்றால் பிழைப்பது துர்லபம் என்று தான் அர்த்தம்.
ஆனால் நமச்சிவாயமோ டாக்டர் சொன்னதை நம்பாமல், 'எனக்கு டி.பி.யும் இல்லை; கி.பி.யும் இல்லை" என்று சொல்லி, மேடை ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தான். இதன் பலனாக, ஆளை அடியோடு கிழே தள்ளி விட்டது.
"மாமா உடனே புறப்பட்டு வாருங்கள்! தாமதித்தால் எங்களை உயிரோடு காணமாட்டீர்கள்!" என்று நீலமணி அலறிப் புடைத்துக் கொண்டு கடைசிக் கடிதத்தில் எழுதியிருந்தாள்.
நானும் அலறிப் புடைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனேன். அங்கே எல்லாம் அல்லோலகல்லோலமாகத்தான் இருந்தது. நாடகத்தை நிறுத்தி ஒருவாரம் ஆயிற்று. நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாதக்கணக்காகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. கொட்டகை முதலாளியும் இன்னும் பலரும் தங்களுக்குச் சேரவேண்டிய பாக்கிக்காக வந்து கொண்டிருந்தார்கள்.
நாடகக் கம்பெனிகளுக்குப் பெயரும் புகழும் பெருகுவதையொட்டிப் பணச் செலவும் அதிகமாகிக் கொண்டுவரும். ஆட்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டுவருவார்கள். ஆடம்பரம் பெருகிக் கொண்டு வரும். காட்சி ஜோடனைகளில் பணம் ஏராளமாகப் போய்க் கொண்டேயிருக்கும்; சுற்றி உள்ளவர்கள் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
திடீரென்று ஒரு நாள் கம்பெனியை மூடும்படி நேர்ந்தால், கம்பெனிச் சொந்தக்காரரின் கதி அதோகதிதான்.
ஏதோ கடவுள் என்னை அச்சமயத்தில் அங்கே கொண்டு போய்ச் சேர்த்தார். நான் கணக்கு வழக்குகள் பார்த்து, கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஒன்றுக்குப் பாதி கொடுத்துத் தீர்த்தேன். மொத்த முடிவில், நமச்சிவாயத்துக்குக் கடன்பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தங்கி நின்றது.
கும்பகோணத்தில் எனக்குத் தெரிந்த நல்ல டாக்டர் இருப்பதையும், அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி நமச்சிவாயத்தையும், நீலமணியையும் அழைத்துக் கொண்டு போனேன். கும்பகோணத்தில் எனக்கு ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலேயே அவர்களுக்கு ஜாகை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
டாக்டர் ஒரு மாதம் வைத்தியம் பார்த்தபின், "நெருக்கடியான நிலைமை தீர்ந்து விட்டது; இனி மேல் நான் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. நமச்சிவாயத்தை மதனப்பள்ளிக்கு அழைத்துப் போய் அங்கே இரண்டு வருஷம் இருக்கச் செய்ய வேண்டும்" என்று சொன்னார்.
இந்தக் காலத்தில் புண்ணியவான்கள் ஜில்லாவுக்கு ஒரு க்ஷயரோக வைத்தியசாலை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போதெல்லாம் மதனப் பள்ளிக்குப் போனால் தான் அந்தக் கொடிய வியாதிக்கு சிகிச்சை என்று இருந்தது.
மதனப்பள்ளிக்குப் போய் இரண்டு வருஷம் இருப்பதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் வேண்டும். இதற்கு எங்கேபோவது என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில் எதிர்பாராத உதவி ஒன்று கிட்டியது. கும்பகோணத்தில் அப்போது வேறொரு நாடகக் கம்பெனியார் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நமச்சிவாயத்தின் நிலைமையை அறிந்து அவனுக்கு உதவிசெய்யும் முறையில் அவர்கள் ஒரு யோசனை கூறினார்கள். அதாவது, நீலமணி அவர்களுடைய கம்பெனியில் பத்து 'ஸ்பெஷல்' நாடகங்களில் நடித்தால் நாடகத்திற்கு ஐந்நூறு ரூபாய் வீதம் ஐயாயிரம் முன் பணமாகவே தருவதற்கு முன்வந்தார்கள்.
நாடகத்துக்கு வசூலே சாதாரணமாக ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆகாது. நீலமணிக்கு மட்டும் ஐந்நூரு ரூபாய் என்றால், உதவி செய்யும் நோக்கத்துடனே தான் அவர்கள் சொன்னார்கள் என்பதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. இதை நமச்சிவாயமும் உணர்ந்துதான், 'ஸ்பெஷல்' நாடகங்களில் நீலமணி நடிப்பதற்கு அவன் சம்மதம் கொடுத்தான்.
ஆனால் நீலமணி பிடிவாதமாக மறுதளித்தாள். நமச்சிவாயம் இருக்கும்போது இன்னொருவருடன் மேடையில் ஏறி நடிக்க முடியாது என்று சொன்னாள்.
"அப்படியானால் நான் செத்துத் தொலைந்து போய் விடவேண்டும் என்கிறாயா? அதற்குப் பிறகு இன்னொருவனுடன் நடிப்பாயா?" என்று ஏடாகூடாமாகப் பேசினான் நமச்சிவாயம். நீலமணி ஆத்திரம் தாங்காமல் பொருமி அழுதாள்.
மறுபடியும் நான் தலையிட்டுத் தகராறைத் தீர்த்து வைத்தேன். நீலமணியைச் சமாதானப்படுத்தி அவள் நடிக்க ஒப்புக் கொள்வதுதான் உசிதம் என்றும் நமச்சிவாயத்தினிடம் அவளுடைய உண்மை அன்புக்கு அது தான் ருசுவாகும் என்றும் எடுத்துக் கூறி ஒப்புக் கொள்ளச் செய்தேன்.
நீலமணியின் 'ஸ்பெஷல்' நாடகங்கள் பத்தும் இரண்டு மாதத்துக்குள் நடைபெறுவதாக ஏற்பாடு. ஒன்றைவிட ஒன்று மிஞ்சிய மகத்தான வெற்றியாக, நாடகங்கள் நடந்து வந்தன. இந்த 'ஸ்பெஷல்' நாடகங்களின் போதுதான் நீலமணிக்குச் 'சின்ன பாலாமணி' என்று சிலர் பெயர் கொடுத்தார்கள். கடலூரிலிருந்தும் திருச்சிராப்பள்ளியிலிருந்தும் மதுரையிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் நாடகம் பார்க்க ஜனங்கள் வந்தார்கள். இந்த ஜனங்கள் வழக்கமாக வரும் ரெயில்களுக்கு 'நீலமணி ஸ்பெஷல்' என்ற பெயரும் ஏற்பட்டது.
இவ்வளவு அமோகமான வெற்றிக்கு மத்தியில் நமச்சிவாயத்தின் மனோநிலை மட்டும் நாளுக்கு நாள் கெட்டுப் போய் வந்தது. முதலில் நீலமணி நடிப்பதற்குச் சம்மதம் கொடுத்தவன், தான் இல்லாமலே அவள் நாடகத்தில் வெற்றி அடைந்து வருகிறாள் என்பதைப் பார்க்க பார்க்க எரிச்சல் அடைந்தான். அவனுடைய எரிச்சலை வளர்ப்பதற்கு முக்கியமாக ஒரு காரணம் ஏற்பட்டது. "பெற்ற தாய்தனை மக(வு) மறந்தாலும்" என்னும் பாட்டில் தன்னுடைய பெயர் வருவதால் அதை மட்டும் நீலமணி பாடக்கூடாது என்று அவன் சொல்லியிருந்தான். பாடுவதில்லையென்று அவளும் உறுதி கொண்டிருந்தாள். ஆனால் நாடகத்துக்கு வரும் மகாஜனங்களின் இயல்பு அபூர்வமானது. அவர்களுக்குத் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் ஆர்வம் அதிகம். அவர்கள் கோரிக்கையை நடிகர்கள் நிறைவேற்றாவிட்டால் ரகளைசெய்து விடுவார்கள். முதல் நாள் நாடகத்திலேயே சிலர், "பெற்ற தாய்தனை" என்று கத்தினார்கள். அதை நீலமணி பொருட்படுத்தாமல் வேறொரு விருத்தம் பாடி சமாளித்தாள். மறுநாள் சபையோர் அதற்கு இடங் கொடுக்கவில்லை. மூலைக்கு மூலை எழுந்து நின்று "பெற்ற தாய் பாடு!" என்று கட்டளையிட்டதுடன் பாடாவிட்டால் உட்காரமாட்டோ ம் என்று பிடிவாதம் பிடித்தார்கள். நாடக நிர்வாகிகள் நீலமணியிடம், "பாடாவிட்டால் கலகம் உண்டாகும்" என்று எச்சரித்ததன் பேரில் அவளும் பாட நேர்ந்தது. அந்தப் பாட்டைப் பாடும் போது இயற்கையாக அவளுடைய உணர்ச்சி மிகுந்திருந்தபடியால் ராகமாலிகை பிரமாதமாக அமைந்துவிட்டது. ஜனங்களும் கையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.
அதற்குப் பிறகு நீலமணி ஒவ்வொரு நாளும் சபையோர் கேட்பதற்கு இடம் வையாமல் அந்தப் பாடலைப் பாடிவிட்டாள்.
"பாடாவிட்டால் கலகம் நேர்ந்து நாடகம் குழப்பத்தில் முடிந்திருக்கும்" என்பதை நமச்சிவாயத்துக்கு அவள் எடுத்துச் சொன்னாள். அதை அவனும் வெளிப்படையில் ஒப்புக்கொண்டான். இருந்தாலும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தான்.
நீலமணி நாடகக் கொட்டகைக்குப் போய் வெற்றி மாலை சூடிக் கொண்டு வருவதும் தான் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியிருப்பதும் அவனுடைய மனவேதனையையும் எரிச்சலையும் நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே வந்தன.
இரண்டொரு முறை அவனை நான் பார்க்கப் போயிருந்தேன். நாஸுக்காக நாடகத்தைப் பற்றிய பேச்சையே எடுக்காமல், மேலே அவனுக்கு நடக்க வேண்டிய சிகிச்சையைப் பற்றிப் பேசினேன். டாக்டரைக் கொண்டு மதனப்பள்ளிக்குக் கடிதம் எழுதச் சொல்லியிருப்பதாகக் கூறினேன்.
"மதனப்பள்ளிக்கு நான் எங்கே போகப் போகிறேன்? மரணப் பள்ளிக்குத்தான் போகப் போகிறேன்!" என்றான் அவன்.
"சீச்சீ! இது என்ன பேச்சு? தம்பி!" என்று சமாதானமாக ஏதோ அவனுக்குச் சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பினேன்.
எனக்கும் என்னுடைய ஜோலிகள் இருந்தன. நான் இவர்களையே எப்போதும் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? என்னுடைய சம்பாத்தியத்தைக் கொண்டு பிழைக்க வேண்டிய ஜீவன்கள் பதினைந்து பேர் என் குடும்பத்தில் இருந்தார்கள். நான் கச்சேரிக்குப் போய் வராவிட்டால் என் குடும்பம் நடப்பது எப்படி?
'ஸ்பெஷல்' நாடகங்கள் எட்டு முடிந்த பிற்பாடு, சிக்கல் உற்சவத்துக்குப் போய்விட்டு நான் ஐயம்பேட்டைக்குத் திரும்பி வந்தேன். கும்பகோணத்தில் நிலைமை மிக்க நெருக்கடி என்று தெரிந்தது. என் தமக்கை, "அந்தப் பையன் ஒவ்வொரு சமயம் பெட்டியைத் தூக்கிக் கொண்டு தேசாந்திரம் போகிறேன்" என்று கிளம்புகிறான். ஒரு சமயம் நீ மருந்து வைத்துத்தான் என் உடம்பு கெட்டுவிட்டது என்கிறான். துப்பாக்கியை எடுத்துக் காட்டிச் சுட்டு விடுவேன் என்று பயமுறுத்துகிறான். இன்னொரு சமயம் கையில் அக்கினித் திராவகத்தை வைத்துக் கொண்டு 'குடித்துச் செத்துப் போகிறேன்' என்கிறான். வீடு ஒரே பயங்கரமாயிருக்கிறது. எந்த நிமிஷம், என்ன விபரீதம் நேருமோ தெரியவில்லை. நீ உடனே போய்ப் பார், தம்பி! அவர்களைப் பிரித்துத் தனித்தனியே விட்டு விட்டால் கூடத் தேவலை போல் இருக்கிறது!" என்றாள்.
என் இரட்டை மாட்டுப் பெட்டி வண்டியை உடனே பூட்டச் சொல்லிக் கும்பகோணத்துக்குக் கிளம்பினேன். அன்றைக்குத் தீபாவளிக்கு முதல் நாள். கும்பகோணத்து வீதிகள் ஒரே கோலாகலமாக இருந்தன. எங்கே பார்த்தாலும் டப் டுப், டப் டபார் என்று சீன வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன. கம்பி மத்தாப்பூக்களிலிருந்து பொழிந்த வர்ண ஒளிப்பொறிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. விஷ்ணு சக்கர வாணங்கள் பூமியிலிருந்து சுழன்று சுழன்று வானை நோக்கிச் சென்று படாரென்று வெடித்து மறைந்தன. இவற்றிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த புகை மூக்கில் ஏறி மூச்சுத் திணறும்படி செய்தது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புது வஸ்திரங்களும் வாணங்களும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கடைத்தெருக்கள் ஜே ஜே என்று இருந்தன.
ஆனால் என் நெஞ்சு மட்டும் திக், திக் கென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாவி சண்டாளன் என் அருமைக் குழந்தையை என்ன செய்யப் போகிறானோ, என்னமோ என்று எண்ணிய போதெல்லாம் அடி வயிறு விம்மி எழுந்து மார்பை அடைத்தது. ஒவ்வொரு தடவை பட்டாசு வெடித்த போதும் என் தலையில் ஏதோ வெடித்தது போல் தோன்றியது.
கடைத் தெருவில் சிறிது வண்டியை நிறுத்தி, நமச்சிவாயத்துக்குப் புது வேஷ்டியும், நீலமணிக்குப் புதுச் சேலையும் வாங்கிக் கொண்டு போனேன். வீட்டை நெருங்க நெருங்க, என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.
உடனேயே ஐயம்பேட்டைக்குத் திரும்ப நான் விரும்பியபடியால், வண்டியைப் பூட்டு அவிழ்க்காமல் அப்படியே நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு புது வஸ்திரப் பொட்டணங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.
உள்ளே இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு நடையில் சிறிது தயங்கி நின்றேன்.
"விடுகிறாயா மாட்டாயா?"
"விடமாட்டேன்!"
"என்னைத் தடுக்க உனக்கு என்ன அதிகாரம்?"
"என்னைத் தாலி கட்டி நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? அந்த அதிகாரந்தான்!"
"நீ எனக்கு மனைவியும் அல்ல; நான் உனக்குப் புருஷனும் அல்ல, உன் மாமாவுக்காகச் செய்த காரியம். நான் இப்போது புறப்பட்டுத்தான் போவேன். ரெயிலுக்கு நேரமாகிவிட்டது. வழியை விடு! இப்படி அதைக்கொடு!"
"விடமாட்டேன்; கொடுக்க மாட்டேன்!"
"கொடுக்காவிட்டால் உன்னை இதோ இந்தக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்!"
"பேஷாகச் சுட்டுக் கொன்றுவிட்டுப் போங்கள்!"
நமச்சிவாயம் துப்பாக்கியால் சுடுவதாகப் பயமுறுத்தியதை நான் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. நாடக மேடைகளில் உபயோகப்படுத்தும் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்று அவன் வைத்திருந்தான். அதில் குண்டு கிடையாது. சுட்டால் வெளிச்சமும் புகையும் தான் வரும்!...
டப்! டுப்! டப்! டபார்!...
"வீல்" என்று ஒரு கோரமான குரல் காதில் விழுந்தது. யாரோ தடால் என்று விழும் சத்தமும் கேட்டது.
அலறிப் புடைத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். நீலமணி அலங்கோலமாகத் தரையில் விழுந்துகிடந்தாள். அவள் உடம்பு துடித்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தைப் பார்த்ததும் "ஐயையோ!" என்று நான் அலறினேன். உடனே அவள் அருகில் பாய்ந்து சென்று உட்கார்ந்தேன்.
"என்ன, மாமா? என்ன?" என்று கேட்டுக் கொண்டே நமச்சிவாயம் அருகில் உட்கார வந்தான்.
"அட பாவி! சண்டாளா! துரோகி! என்ன காரியம் செய்துவிட்டாய்?" என்று அவன் தோளைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கித் தூரத் தள்ளினேன்.
நமச்சிவாயம் ஆவேசம் வந்தவன் போல், "அடே நீ யாரடா என்னைப் பிடித்துத் தள்ளுவதற்கு?" என்று பலமாகக் கூச்சலிட்டுக் கொண்டு திரும்பி வந்தான்.
என்னுடைய கோபம் எல்லையைக் கடந்து விட்டது. உடனே குதித்து எழுந்து நமச்சிவாயத்தின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, "அடே பாதகா. அவளுடைய வாழ்க்கையைத்தான் பாழாக்கி விட்டாய்! அவள் உயிரோடிருப்பது கூட உனக்குப் பொறுக்கவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கத் தொடங்கினேன். நான் செய்வது என்னவென்று எனக்கே தெரியவில்லை. நமச்சிவாயத்தின் விழிகள் பிதுங்கின. அவன் தொண்டையிலிருந்து உருத்தெரியாத பல மாதிரியான சத்தங்கள் எழுந்தன.
கடவுள் என்னைக் கொலைகாரன் ஆக்காமல் தடுத்தாட் கொண்டார்! விசித்திரமான, எதிர்பாராத முறையில் குறுக்கிட்டார்.
அண்டகடாகங்கள் வெடித்துவிட்டன என்று சொல்லும்படியான ஒரு சத்தம் எழுந்தது. வீட்டின் முன் புறத்திலிருந்துதான், ஆயிரம் பேரிடிகள் சேர்ந்தாற்போல் நீடித்து இடித்தது போன்ற சத்தம். நூறு எம்ட்டன் குண்டுகள் ஒருமிக்க வெடித்தது போன்ற சத்தம். என் காதின் நரம்புகள் தெறித்து அறுபட்டுவிட்டதாகத் தோன்றியது. என் மண்டையே ஆயிரம் சுக்கலாகிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அந்த வெடிச் சத்தத்தின் அதிர்ச்சியினால் நமச்சிவாயத்தின் கழுத்திலிருந்து என் கைகள் வெளிவந்தன. இரண்டு பேரும் தூர தூரப் போய் விழுந்தோம். ஒரு நிமிஷ மூளைக் குழப்பத்துக்குப் பிறகு நேர்ந்தது என்ன என்பது என் அறிவுக்குப் புலனாகிவிட்டது. அந்த வீட்டின் முன் அறை மட்டும் என் சிநேகிதர் ஒருவர் வசத்தில் இருந்தது. அவர் பலசரக்கு வியாபாரி. தீபாவளி சமயத்தில் அவர் பட்டாசுக்கட்டுக் கடையும் நடத்துவார். பெரிய பெரிய கள்ளிப் பெட்டிகளில் வரும் பட்டாஸ் கட்டுகள், மத்தாப்புப் பெட்டிகளை அந்த அறையில் போட்டுப் பூட்டி வைத்திருப்பார். கொஞ்சங் கொஞ்சமாகத் தேவைப்படும்போது சில்லறை விற்பனைக் கடைக்கு எடுத்துப் போவார்.
அந்த அறைக்குள் எப்படியோ நெருப்புப் பொறி பறந்து விழுந்து, பட்டாசுப் பெட்டிகளில் தீப்பிடித்து விட்டது என்பதை அறிந்து கொண்டேன்.
மறுநிமிஷம் வீடு ஒரே புகை மயமாகி விட்டது. முன் அறையின் கூரை தீப்பற்றி எரிவதையும் கண்டேன். வீட்டைப்பற்றி நான் அப்போது கவலைப் படவில்லை. வெடி விபத்தினால் விளையக்கூடிய மற்ற தொல்லைகளைப் பற்றியும் சிந்திக்கவில்லை. உடனே குதித்து எழுந்து நீலமணியை எடுத்துத் தோளின் மீது போட்டுக் கொண்டு புகை நெருப்பின் வழியாக வாசற் பக்கம் ஓடினேன். தயாராய் நின்ற வண்டியில் அவளைப் போட்டுவிட்டு நானும் ஏறிக்கொண்டேன். "ஓட்டு! ஓட்டு! டாக்டர் வீட்டுக்கு ஓட்டு!" என்று கத்தினேன்.
பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி டாக்டர் ராமசர்மாவின் வீட்டுவாசலில் போய் நின்றது. அந்த புண்ணியவான் - அவரைப் போல் தயாள குணமுள்ள டாக்டர் இப்போது யார் இருக்கிறார்கள்? - நீலமணியை வண்டிக்குள்ளேயே பார்த்துவிட்டு "நேரே ஆஸ்பத்திரிக்கு விடுங்கள்!" என்றார். அவரும் மோட்டாரில் இன்னொரு டாக்டரையும் நர்ஸையும் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். தீபாவளி ராத்திரியாயிற்றே என்று பாராமல் இரவெல்லாம் கண் விழித்து நீலமணிக்குச் சிகிச்சை செய்தார்கள்.
நான் உணர்ச்சியும் உயிரும் அற்றவனாக ஆஸ்பத்திரி வாசலிலேயே காத்திருந்தேன்.
"பிழைத்தால், புனர் ஜன்மந்தான்!" என்றார் டாக்டர். ஆனாலும் பிழைக்க வைத்துவிட்டார். ஒரு வாரத்துக்கெல்லாம் உயிருக்கு அபாயமில்லை என்று தெரிவித்தார்.
ஆயினும் ஆஸ்பத்திரியிலிருந்து நீலமணியை ஐயம்பேட்டைக்கு அழைத்துப் போவதற்கு ஆறுமாதம் ஆயிற்று.
கும்பகோணத்தில் என் வீட்டில் லைசென்ஸ் இல்லாமல் வெடிக்கும் சாமான்களை வைத்திருந்ததற்காக என்பேரில் ஒரு வழக்கு வந்தது. அதற்கு நான் பொறுப்பாளி இல்லையென்று வக்கீல் வைத்து வாதாடித் தப்பித்துக் கொண்டேன்.
ஆறுமாதத்திற்கு பிற்பாடு இன்னொரு தொல்லை நேர்ந்தது; திருப்பிக் கட்டப்பட்ட அதே வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் இரண்டு வெடித்தன. 'கும்பகோணம் வெடி குண்டு வழக்கு' என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வழக்கிலும் என்னைப் போலீஸார் சம்பந்தப்படுத்தினார்கள். நான் மகாத்மா காந்திக் கொள்கையில் பக்தியுள்ளவன் என்றும் அஹிம்சாவாதி என்றும் ஊரில் நூறு பிரமுகர்கள் சாட்சி கூறினார்கள். இதனால் அந்த வழக்கிலிருந்தும் தப்பிப் பிழைத்தேன்.
பிற்பாடு, ஒரு தப்புத் தண்டாவுக்கும் போகாமல் மற்றவர்கள் காரியத்தில் தலையிடாமல், 'நான் உண்டு; என் தொழில் உண்டு' என்று மானமாகக் காலட்சேபம் செய்து வருகிறேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகக்காரி - Naadagakkaari - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, நீலமணி, அந்த, என்ன, போய், அவன், என்றும், தான், உடனே, விட்டது, அவள், வந்து, டாக்டர், ஸ்பெஷல், நமச்சிவாயத்தின், கும்பகோணத்தில், அந்தப், நாள், வரும், இரண்டு, நாடகம், நமச்சிவாயம், மட்டும், கொண்டிருந்தது, போகிறேன், எழுந்து, முன், போல், இருந்தன, வீடு, நாடகக், நிறுத்தி, வேண்டும், நேர்ந்தது, பிறகு, இல்லை, திரும்பி, பிற்பாடு, என்னுடைய, கொண்டே, பெற்ற, பாடாவிட்டால், ஒவ்வொரு, சமயம், மேல், வெடி, நீலமணியை, ஓட்டு, சத்தம், தெரியவில்லை, பார்க்க, புகை, புது, இன்னொரு, அவளுடைய, இப்போது, செய்து, வியாதி, கொண்டிருந்தார்கள், அங்கே, புடைத்துக், எனக்கு, போனேன், அவர், ரூபாய், வந்தது, சிறிது, அலறிப், கொண்டேன், ஆயிரம், ஒன்று, அழைத்துப், உடம்பு, நாடகங்கள்