நாடகக்காரி
3
ஏழெட்டு வருஷ காலம் என் பராமரிப்பிலேயே
நீலமணி வளர்ந்து வந்தாள். அந்தக் குழந்தைக்குச் சங்கீதத்தில் இயற்கையாக
உள்ள ஞானத்தை அறிந்திருந்த படியால் பாட்டு வாத்தியார் வைத்துப் பாட்டுச்
சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தேன். சங்கீதம் என்னமோ அவளுக்கு நன்றாகத்தான்
வந்தது. ஆனால் பாட்டு வாத்தியார்களோடு எப்போதும் சண்டைதான். ஸரலி வரிசை,
கீதம், வர்ணம் என்று வரிசைக் கிரமமாகப் பாட்டு ஆரம்பிப்பார். அவைகளையெல்லாம்
நீலமணி சரியாகப் பாடம் பண்ணமாட்டாள். "அந்தக் கீர்த்தனத்தைச் சொல்லிக்
கொடுங்கள்!" "இந்தப் பாட்டைப் பாடிக் காட்டுங்கள்!" என்று ஆரம்பித்து
விடுவாள். பாட்டு வாத்தியார்களுக்குப் போதும் என்று ஆகிவிடும். "இந்தப்
பெண்ணுக்குச் சொல்லிக்கொடுக்க எங்களால் ஆகாது" என்று போய் விடுவார்கள்.
இம்மாதிரி ஐந்து பாட்டு வாத்தியார் மாற வேண்டியதாயிற்று.
நானும் சில சமயம் சொல்லிக் கொடுக்கப் பார்ப்பேன். அதாவது, சொல்லிக் கொடுக்கிற பாவனையாக நீலமணியைப் பாடச்சொல்லிக் கேட்பேன். "பாட்டு வாத்தியார்கள் கெட்டார்கள்! இந்தக் குழந்தைக்கு வந்திருக்கிற சங்கீதம் வேறு யாருக்கு வந்திருக்கிறது? பெரிய பெரிய வித்வான்கள் பிரமிக்கும்படியான பாட்டு அல்லவா இது? சங்கீததெய்வத்தின் அருளினால் வந்த சங்கீதம் அல்லவா இது?" என்று மனத்தில் எண்ணிக் கொள்வேன். வெளிப்படையாகச் சொன்னால் குழந்தை கொஞ்சம் முறையாகக் கற்பதும் நின்று விடப் போகிறதேயென்று பயந்து மனத்திற்குள்ளேயே வைத்துக் கொள்வேன்.
நீலமணிக்கும் பதினேழு வயது ஆயிற்று. "இந்தப் பெண்ணை இனிமேல் என்ன செய்வது?" என்ற கவலை என் மனத்தில் உண்டாகத் தொடங்கியது.
இந்த நிலைமையில் நான் யாழ்பாணத்துக்கு ஒரு கச்சேரிக்குப் போகும்படி நேரிட்டது. யாழ்பாணத்துக்காரர்கள் நல்ல சங்கீத ரஸிகர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே? சங்கீதத்திலேயும் நாதஸ்வர சங்கீதத்தில் அவர்களுக்கு மோகம் அதிகம். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற வேற்றுமை மனோபாவம் அவர்களிடம் கிடையாது. தமிழ் நாட்டிலிருந்து பிரபல நாதஸ்வர வித்வான்கள் எல்லாரையும் அடிக்கடி கோயில் உற்சவங்களுக்கு வரவழைப்பார்கள். எல்லாருடைய வாசிப்பையும் நன்றாக கேட்டு ஆனந்திப்பார்கள். நாதஸ்வர வித்வான் யாரைக் கூப்பிட்டாலும் தவுலுக்கு மட்டும் தவறாமல் என்னைக் கூப்பிடுவார்கள்.
என் குடும்பத்தார் அடிக்கடி தங்களையும் ஒரு முறை இலங்கைக்கு அழைத்துப் போகும்படி கேட்பதுண்டு. நானும் 'ஆகட்டும்' 'ஆகட்டும்' என்று தட்டிக் கழித்து வந்தேன். இந்தத் தடவை மூன்று உற்சவக் கச்சேரிகள் சேர்ந்தாற்போல் வந்தபடியால் சுமார் இருபது நாள் வரை இலங்கையில் நான் தங்க வேண்டியதாயிருந்தது. குடும்பத்தை அழைத்துப் போவதற்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணி எல்லோருமாகப் போகத் தீர்மானித்தோம். சில காலமாக நீலமணி மிக்க உற்சாகக் குறைவுடன் கிறுக்குப் பிடித்தவள் போல் இருந்தாள். "ஒரு நாள் நம்முடைய மானத்தை வாங்கிவிட்டு ஓடிப் போய்விடுவாளோ?" என்று கூட எண்ணினேன். உண்மையைச் சொல்லப் போனால் நீலமணியை உத்தேசித்தே குடும்பம் முழுவதையும் அழைத்துப் போக முடிவு செய்தேன்.
இலங்கைப் பிரயாணச் செய்தி அறிந்ததும் நீலமணி உற்சாகம் அடைந்தாள். "பிரயாணம் என்றைக்கு மாமா?" என்று அடிக்கடி கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். கடைசியாகப் பிரயாண நாளும் வந்தது.
இந்த காலத்தைப் போல் ஆகாச விமானத்தில் ஏறிச் சில மணி நேரத்தில் இலங்கை போய் இறங்குகிற வசதி அப்போது கிடையாது. பிரயாணத்தில் எவ்வளவோ அசௌகரியங்கள் இருந்தன. சில சமயம் நரக வேதனையாகவே இருந்தது. எங்கள் கோஷ்டியில் அசௌகரியம் ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஒரே உற்சாகத்துடன் இருந்தவள் நீலமணி ஒருத்திதான்.
இதன் காரணம் எனக்குப் பின்னால் தெரிந்தது. நீலமணியின் தாயார் மரகதமணி அம்மாள் சந்தோஷமாக வாழ்ந்த நாளில் அவளும் நீலமணியின் தகப்பனாரும் இலங்கைக்கு வந்திருந்தார்களாம். அந்த அழகான தீவில் பல இடங்களுக்குப் போயிருந்தார்களாம். அங்கே அவர்கள் பார்த்த அதிசயங்களையெல்லாம் பற்றி அடிக்கடி மரகதமணி தன் அருமை மகளுக்குச் சொல்வதுண்டாம். "அப்போதெல்லாம் அம்மாவின் முகமே தனியான களை பெற்று விளங்கும்" என்றாள் நீலமணி. சின்னஞ்சிறு பிராயத்தில் கேட்டிருந்த இலங்கைத் தீவின் அதிசயங்கள் நீலமணியின் உள்ளத்தை அவ்வளவுக்குக் கவர்ந்து விட்டிருந்தன. அதனாலேதான் இலங்கைப் பிரயாணம் என்றதும் அவ்வளவு துடிதுடித்தாள். இதையெல்லாம் கொழும்புக்குச் சென்ற பிற்பாடு தான் நீலமணி சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.
ஆம்; முதலிலே கொழும்பிலேதான் எனக்குக் கச்சேரி இருந்தது. நாலு நாளைக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் கச்சேரி. கொழும்புக் கச்சேரி முடிந்ததும் நீலமணியையும் என் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அந்த அழகிய நகரைச் சுற்றிக் காட்டப் புறப்பட்டேன்.
இதற்கிடையில் கொழும்பில் அப்போது தமிழ் நாட்டில் பிரபலமாயிருந்த நமச்சிவாயம் கம்பெனியாரின் நவீன நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன என்று கேள்விப்பட்டேன்.
சில காலம் தமிழகத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்த நமச்சிவாயம் நாடகக் கம்பெனியைப் பற்றி நீங்கள் அவசியம் அறிந்திருப்பீர்கள். நமச்சிவாயம் சிறுபிள்ளை. வசீகரமான நல்ல குணம் வாய்ந்த பிள்ளை. முதலில் அவன் "புதுக்கோட்டை மீனலோசனி கானவர்த்தினி ஒரிஜினல் பால மோகன பரமானந்தா டிராமா கம்பெனி"யில் நடித்துக் கொண்டிருந்தான். சீக்கிரத்தில் பெயரும் புகழும் பெற்றான். அவனை எத்தனையோ போட்டி நாடகக் கம்பெனிகள் அதிகப் பணம் கொடுத்துக் கொத்திக் கொண்டு போகத் தயாராயிருந்தன. ஆனால் அப்போதே பையன் நமச்சிவாயம் தன் வாழ்க்கையின் துருவ நட்சத்திரத்தைத் தெரிந்து கொண்டிருந்தான். சொந்தத்தில் நாடகக் கம்பெனி வைத்து நடத்தி உலகத்தையே ஓர் ஆட்டு ஆட்டி வைத்துவிட வேண்டுமென்று இலட்சியத்தைக் கொண்டிருந்தான். ஆகையால் மைனர் பருவம் முடிந்தவுடனேயே நாடகக் கம்பெனி நடத்திப் பெயர் வாங்கினான். 'அதிரூப மோகனாங்கி', 'குலோப்ஜான் வைஜயந்தி', 'பூலோக அற்புத அரம்பை' முதலிய புதுமையான நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றான். தமிழ நாட்டிலேதான் இப்படியென்றால் இலங்கையிலுள்ள தமிழர்களையெல்லாம் அவனுடைய நாடகங்களின் மூலம் பைத்தியமாக அடித்துவிட்டான்!
அப்படிப்பட்ட ஜகப் பிரசித்தி பெற்ற நமச்சிவாயம் கொழும்பு நகரில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தான். என் கச்சேரி நடந்த மறுநாள் குடும்பத்துடன் நான் நாடகம் பார்க்க போயிருந்தேன். நமச்சிவாயத்தை எனக்கு முன்னாலேயே நன்றாகத் தெரியும். பழைய மீனலோசனி கம்பெனியில் என் கையினால் ஒரு தடவை மெடல் வாங்கியிருக்கிறான். கொட்டகையில் என்னை அவன் பார்த்துவிட்டு கண் பார்வையினாலே வியப்பையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டான். மறுநாள் நாங்கள் தங்கியிருந்த ஜாகையில் எங்களைப் பார்க்கவும் வந்துவிட்டான். விதி என்று சொல்லுகிறார்களே, அது இதுதான் என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்.
ஏனெனில், நாடகம் பார்த்து விட்டதிலிருந்து நீலமணி எங்கள் ஜாகையில் அதைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள். நாடகத்தில் நடித்தவர்கள் போல் நடித்துக் காட்டினாள்; பாடியவர்களைப் போல் பாடிக் காட்டினாள். பேசியவர்களைப் போல் பேசிக் காட்டினாள். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். முக்கியமாக, அந்த நாடகத்தில் கதாநாயகி வேஷம் போட்டவனைப் போல் நீலமணி பேசிப்பாடி நடித்துக் காட்டியது எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
இப்படி நாங்கள் சிரித்துக் கொண்டிருந்த சமயத்திலே தான் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான். எல்லாரும் அவசரமாகச் சிரிப்பை அடக்கிக் கொண்டோ ம். நமச்சிவாயம், "என்ன, மாமா! நான் வரும்போது ஒரே சிரிப்பாயிருந்ததே!" என்று கேட்டான். "எல்லாம் உன்னுடைய பிரபாவத்தைப் பற்றித்தான்!" என்று பொதுப்படையாகச் சொன்னேன்.
நமச்சிவாயம் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் விழித்துவிட்டு "நீங்கள் நாடகம் பார்க்க வந்ததற்கு ரொம்பச் சந்தோஷம், மாமா! அதற்கு வந்தனம் செலுத்தவே வந்தேன். நாடகம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பிடித்ததா?" என்று கேட்டான்.
"நாடகம் நன்றாயிருந்தது. எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்தார் எல்லாருக்கும் ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் ஏதோ புதுமையான நாடகம் என்று விளம்பரம் செய்திருந்தாயே; பழைய நாடகந்தானே?" என்றேன்.
"யார் சொன்னது? புது நாடகந்தான், மாமா! எங்கள் கம்பெனி வாத்தியாரே புதிதாக எழுதியதல்லவா?" என்றான்.
"அது என்னமோ, அப்பா! உங்கள் வாத்தியாரே ஒருவேளை 'காப்பி' அடித்து உன்னை ஏமாற்றி விட்டாரோ, என்னமோ? இந்த நாடகம் ஏற்கெனவே நான் பார்த்திருக்கிறேன். என் மகள் கூடப் பார்த்திருக்கிறாள். சந்தேகமிருந்தால் இதோ நிரூபித்துக் காட்டுகிறேன், பார்!" என்று சொல்லிவிட்டு நீலமணியைக் கூப்பிட்டு, "குழந்தை நாம் இந்த நாடகத்தை முன்னால் ஒரு தடவை தஞ்சாவூரில் பார்த்திருக்கிறோமல்லவா? சில பாத்திரங்களைப் போல் நீ நடித்துக் காட்டு! அப்போது தான் இவர் நம்புவார்" என்று சொன்னேன்.
முதலில் நீலமணி கூச்சப்பட்டாள். கொஞ்சம் தாஜா செய்த பிற்பாடு, திடீரென்று கூச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, 'பூலோக அற்புத அரம்பை'யில் யார் யார் எப்படிப் பேசினார்கள், பாடினார்கள், நடித்தார்கள் என்று கொஞ்சம் கொஞ்சம் செய்து காட்டினாள். கதாநாயகி வேஷம் போட்ட பையனைப் போல் நீலமணி நடித்துக் காட்டிய போது எங்களுடன் சேர்ந்து நமச்சிவாயமும் விழுந்து விழுந்து சிரித்தான்.
கதாநாயகனாக நடித்த நமச்சிவாயத்தைப் போல மட்டும் நீலமணி செய்து காட்டக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.
பழைய நாடகம் என்று நான் சொன்னது இந்தத் தமாஷுக்காகத்தான் என்பதை நமச்சிவாயம் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டான்.
விடை பெற்றுச் செல்லும்போது, "மாமா! எங்கள் நாடகத்தில் இவ்வளவு குறைகள் இருக்கின்றன என்பதை இன்றைக்குத்தான் நன்றாக அறிந்தேன். ஆனால் என்ன செய்வது? கிடைக்கிற நடிகர்களைக் கொண்டுதானே நடத்த வேண்டியிருக்கிறது? ஆனால் ஜனங்களுக்கு என்னமோ பிடித்திருக்கிறது!" என்றான் நமச்சிவாயம்.
"அது தான், தம்பி, வேண்டியது! மற்றது எப்படி இருந்தால் என்ன?" என்றேன் நான்.
நமச்சிவாயம் போன பிறகு நீலமணி, "இது என்ன மாமா? இப்படி என்னைச் சந்தியில் இழுத்து விட்டீர்கள்? அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார் 'அதிகப் பிரசங்கி, அடங்காப் பிடாரி' என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போகமாட்டாரா?" என்று கேட்டாள்.
"எண்ணிக் கொண்டு போவது என்ன? உண்மையும் அப்படித்தானே? நீ அதிகப் பிரசங்கி - அடங்காப் பிடாரிதானே? அதில் என்ன சந்தேகம்?" என்றேன் நான்.
வழக்கமாக நீலமணியிடம் பேசுகிறபடி வேடிக்கையாகத்தான் சொன்னேன். ஆனால் அவள் வழக்கம் போல் சிரித்துவிட்டுப் போகாமல், குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள். "இது என்னடா வம்பு?" என்று எனக்கு வேதனையாகப் போய்விட்டது. அவளை ஒருவாறு சமாதானப் படுத்தினேன். அன்றிரவு நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு விட்டபடியால், அந்தச் சம்பவம் அதோடு போய்விட்டது என்று நினைத்தேன். ஆனால் அது போகவில்லை; விடாமல் எங்களைத் தொடர்ந்து வந்தது.
யாழ்ப்பாணத்திலேதான் நாங்கள் அதிக நாள் தங்கினோம். ஒரு கோயில் உற்சவம் முடிந்து இன்னும் ஓர் உற்சவத்திற்காகக் காத்திருந்த சமயத்தில் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான்; முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். கொழும்பில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த நமச்சிவாயம் கம்பெனியை யாழ்ப்பாணத்தார்கள் ஒரு 'ஸ்பெஷல்' நாடகத்துக்காகத் தருவித்திருந்தார்கள். வரும் வழியில் ஸ்திரீ வேஷக்காரனுக்கு சுரம் வந்துவிட்டது. அதைப்பற்றி வெளியில் சொன்னால் வேறுவிதமான இடைஞ்சல்கள் ஏற்படும். இந்தியாவிலிருந்து வந்தவர்களில் யாருக்காவது சுரம் வந்துவிட்டதாகத் தெரிந்தால், இலங்கையில் தொத்து வியாதிச் சிறைச்சாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள். அப்புறம் உயிர் பிழைத்து வெளியில் வருவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ தெரியாது!
இந்த நிலைமையில் என்ன செய்வது? 'ஸ்பெஷல்' நாடகத்தை ரத்து செய்வதா? என்ன காரணத்தைச் சொல்லி ரத்து செய்வது? நாடகத்துக்கு அழைத்திருந்தவர்கள் ஏராளமாகப் பணம் செலவிட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்குப் பண நஷ்டம். நமச்சிவாயத்துக்குப் பெயர் நஷ்டம்.
அழமாட்டாக் குறையாக இந்த விவரங்களையெல்லாம் நமச்சிவாயம் என்னிடம் சொன்னான்.
"நாளைக்குத்தானே, தம்பி நாடகம்? அதற்குள் ஸ்திரீ வேஷக்காரனுக்குச் சுரம் சரியாகிவிடுகிறது!" என்றேன்.
"அப்படித் தோன்றவில்லை, மாமா! நூற்றைந்து டிகிரி சுரம். மேடைக்கு வந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டால் என் கதி என்ன ஆகிறது?" என்றான்.
"அதுவும் ஒரு நடிப்பு என்று வைத்துக் கொள்கிறது" என்று சொல்லிவிட்டு நகைத்தேன்.
நமச்சிவாயத்துக்கு நகைப்பு உண்டாகவில்லை. அழுகையும் ஆத்திரமுந்தான் வந்தன.
அச்சமயத்தில் என் நாவில் எந்தக் குட்டிச்சாத்தான் வந்து உட்கார்ந்து கொண்டதோ, என்னமோ தெரியவில்லை.
"நம் நீலமணியை வேண்டுமானால் நடிக்கச் சொன்னால் போகிறது!" என்றேன்.
உடனே நமச்சிவாயத்தின் முகம் மலர்ந்தது; "தங்களிடம் அதைக் கேட்கலாமென்றுதான் வந்தேன்; ஆனால் கேட்பதற்கு என்னவோ தைரியம் வரவில்லை" என்றான்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தமாஷ் பேச்சு சில சமயம் எவ்வளவு இக்கட்டுகளில் கொண்டு வந்து விட்டு விடுகிறது!
அதிகம் வளர்த்துவதில் பயனில்லை, நமச்சிவாயம் தான் வந்த காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு தான் போனான். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் கச்சேரி செய்வதாகவோ, நாடகம் போடுவதாகவோ இலங்கையில் விளம்பரம் செய்துவிட்டு, அப்படி நடக்காமற் போனால் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் எல்லோருக்குமே கெட்ட பெயர் உண்டாகும். இம்மாதிரி சில முறை இலங்கையில் நடந்து, தமிழ்க் கலைஞர்கள் கெட்டப் பெயர் வாங்கியிருக்கிறார்கள். ஆகையால் இவ்வளவு விளம்பரம் செய்த பிறகு நாடகம் நடந்தால் தான் நல்லது என்பதைப் பற்றிச் சந்தேகமில்லை. நமச்சிவாயத்துக்கு ஏதாவது ஒத்தாசையாயிருப்பதில் எனக்கும் திருப்திதான். ஆனால் நீலமணியை நாடக மேடை ஏறி நடிக்கச் செய்யலாம் என்கிற எண்ணம் அந்த நிமிஷத்துக்கு முன்னால் என் கனவிலே கூடத் தோன்றியதில்லை.
நீலமணியிடம் இதை நாங்கள் தயங்கிப் பிரஸ்தாபித்ததும், அவள் ஒரு நிமிஷ நேரங் கூட தாமதிக்காமல் சம்மதித்தது என்னை ஆச்சரியத்தில் முழுக அடித்துவிட்டது. கொழும்பில் வேடிக்கையாக நடித்துக் காட்டச் சொன்ன போது அவள் தயங்கிய அளவு கூட இப்போது தயங்கவில்லை. பூர்வ ஜன்ம வாசனை என்று இதைத் தான் சொல்லுகிறார்கள் போல் இருக்கிறது. அவளுடைய உடம்பிலும், உடம்பில் ஓடிய இரத்தத்திலும், உள்ளத்திலும், உயிரின் ஒவ்வோர் அணுவிலும் நாடகக் கலையின் ஜீவசக்தி ததும்பித் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில், ஒரு வருஷ காலத்திற்குள்ளே தமிழ் நாடெங்கும் 'சின்ன பாலாமணி' என்று பெயர் வாங்கியிருக்க முடியுமா?
உடனே ஒத்திகையும் ஆரம்பமாகி விட்டது. பாட்டு கூத்து இம்மாதிரி காரியங்களில் நீலமணிக்கு அபாரமான ஞாபக சக்தி உண்டு. இப்போதோ அவளுக்கு ஒரு புது ஆவேசம் உண்டாகியிருக்கிறது. ஒரு பகல் ஒரு ராத்திரி ஒத்திகையில் எல்லாவற்றையும் பாடம் செய்துவிட்டாள். நூறு தடவை அந்த நாடகத்தில் நடித்தவள் போல் அவ்வளவு இயற்கையாகப் பாடவும், பேசவும் செய்தாள். நடிப்போ அவளுக்கு இயற்கையாக வந்தது.
ஒத்திகையில் திருப்திகரந்தான்; மேடையில் ஏறிப் பெரிய ஜனத்திரளைப் பார்த்தவுடன் பயந்து போகாமல் இருக்க வேண்டுமே என்று எனக்குத் திக்குத் திக்கு என்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் நாடகத்தில் திரை தூக்கிச் சிறிது நேரத்திற்குள்ளேயே என் பயம் தீர்ந்துவிட்டது. நீலமணியிடம் சபைக் கூச்சம் என்பதே தென்படவில்லை. சபையில் கூடியிருந்த யாழ்ப்பாணத்துப் பொறுக்கி எடுத்த ரஸிகர்களோ ஆண்பிள்ளை பெண் வேஷம் போட்டுக் கொண்டு வந்து நடிப்பதற்குப் பதிலாக ஒரு பெண்ணே கதாநாயகியாக நடிக்கிறாள் என்று தெரிந்தவுடனேயே கரகோஷத்தின் மூலம் தங்கள் உற்சாகத்தைக் காட்டிவிட்டார்கள். அப்புறம் நீலமணி மேடைக்கு வரவேண்டியது தான். சபையிலே ஒரே ஆராவாரம் எழுந்தது. போகப் போக நீலமணியின் உற்சாகம் அதிகமாகி வந்தது. நாடகம் யாரும் எதிர்பாராத அளவில் அமோகமான வெற்றியுடன் முடிந்தது.
மறு நாள் நமச்சிவாயம் என்னிடம் வந்து, "மாமா! என் மானத்தை காப்பாற்றினீர்கள்!" என்று காலைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். பற்பலவிதமாகத் தனது நாடகத் திறமையையெல்லாம் காட்டி எனக்கும் நீலமணிக்கும் நன்றி செலுத்திவிட்டுக் கொழும்புக்குப் பிரயாணமானான். வழக்கமாக ஸ்திரீ வேஷம் போடுகிற பையனுக்கு சுரம் இறங்க ஆரம்பித்து விட்டது என்று தெரிந்த நானும் மனநிம்மதி அடைந்தேன். யாழ்ப்பாணத்தில் என்னுடைய கச்சேரிகள் முடிந்ததும் ஊருக்குத் திரும்பினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகக்காரி - Naadagakkaari - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நமச்சிவாயம், நீலமணி, நாடகம், என்ன, போல், கொண்டு, தான், நான், பாட்டு, மாமா, வந்து, நடித்துக், விழுந்து, என்றேன், சுரம், நாடகத்தில், நாங்கள், நாள், கச்சேரி, பெயர், நாடகக், அந்த, என்னமோ, வந்தது, கொண்டிருந்தான், கொஞ்சம், தெரிந்து, வேஷம், சொல்லிக், என்றான், செய்வது, காட்டினாள், கம்பெனி, இலங்கையில், அடிக்கடி, தடவை, எங்கள், நீலமணியின், நீலமணியை, இந்தப், அவளுக்கு, தமிழ், சொன்னேன், யார், ஸ்திரீ, வந்தேன், அவள், நீலமணியிடம், சங்கீதம், பழைய, விளம்பரம், இம்மாதிரி, சொன்னால், கொழும்பில், பிறகு, அப்போது, பற்றி, பிற்பாடு, எண்ணிக், பெரிய, நானும், நல்ல, அதிகப், நாதஸ்வர, அழைத்துப், சமயம், எனக்கு