நாடகக்காரி
4
நீலமணியின் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்
பட்டுக் கொண்டிருந்தேன் அல்லவா? அந்தக் கவலை என் மனத்திலிருந்து தீர்ந்து
போய் விட்டது. நீலமணி விரைவில் என் பொறுப்பிலிருந்து போய் விடுவாள் என்று
நிச்சயம் செய்து கொண்டேன். அந்தப்படியே நடைபெறவும் செய்தது. ஆனால் அன்று
எழுதிய எழுத்தை அழித்து எழுத வல்லவர் யார்? சில காலம் வரைக்குந்தான்
நான் நீலமணியை மறந்து அவளைப் பற்றிய கவலை அதிகம் இல்லாமல் இருக்க முடிந்தது.
சீக்கிரத்திலேயே நமச்சிவாயம் ஐயம்பேட்டையில் என்னுடைய வீடு தேடி வந்து சேர்ந்தான். அவன் வந்த சமயம் நான் வீட்டில் இல்லை. நமச்சிவாயமும் நீலமணியும் ஒருவாறு பேசி முடிவு செய்துகொண்டு என்னிடம் சம்மதம் கேட்பதற்காகக் காத்திருந்தார்கள் என்று தோன்றியது.
நமச்சிவாயம் கம்பெனியில் பிரதான ஸ்திரீவேஷம் போட்டுவந்த பையன் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டானாம்! நீலமணியுடன் நடித்த பிறகு வேறு யாருடனும் நடிப்பதற்கு நமச்சிவாயத்துக்கும் பிடிக்கவேயில்லையாம். இப்படி அப்படி என்று ஏதேதோ சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டு போனான்.
அவனுடைய பேச்செல்லாம் எனக்கு தேவையாயிருக்கவில்லை. ஏற்கனவே நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். இந்தப் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணிவைப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இவள் சாதாரணக் குடித்தனக்காரப் பையன் ஒருத்தனைக் கலியாணம் செய்து கொண்டு அவனுக்குச் சமையல் செய்து போட்டுக் கொண்டு வீட்டில் நிம்மதியாக வாழக் கூடியவளும் அல்ல. இவளை இப்படியே வெகுகாலம் கலியாணம் இல்லாமல் என் வீட்டில் வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. ஆகையால் கடவுளே பார்த்துத்தான் எங்களை அச்சமயம் இலங்கைப் பிரயாணம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். நீலமணியை நமச்சிவாயத்தின் கையில் பிடித்துக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான். நமச்சிவாயமும் அறிவாளியான பிள்ளை. அப்படியொன்றும் ஒழுக்கம் கெட்டவன் என்று பெயர் வாங்கவில்லை. அவனுடைய நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டால் சீக்கிரத்தில் ஒருநாள் இவர்களுக்குத் திருமணம் நடந்துதான் தீரும். கலியாணத்துக்குப் பிறகும் இவளை நாடக மேடையில் ஏற்றி நடிக்கச் செய்வானா என்பது இவர்கள் இருவரையும் பொறுத்த காரியம். அவ்வளவு தூரத்துக்கு நான் இப்போது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பானேன்? தெய்வ சித்தத்தின்படி எல்லாம் நடந்துவிட்டுப் போகிறது..."
இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு, முதலில் கொஞ்ச நேரம் ஆட்சேபிப்பது போல் ஆட்சேபித்தேன். பிறகு "நீலமணி இஷ்டப்பட்டால் சரிதான்; நான் குறுக்கே நிற்கவில்லை" என்றேன். கடைசியில் என்னுடைய சம்மதத்தையும் கொடுத்தேன்.
நமச்சிவாயத்தைத் தனிமையில் அழைத்து, "விலையில்லாத பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அதைப் போற்றிப் பாதுகாப்பது உன் கடமை. அவசரப்பட்டு ஒரு தீர்மானத்துக்கும் வந்து விடாதீர்கள். கொஞ்ச நாள் நாடக மேடையோடு உங்கள் உறவு இருந்து வரட்டும். ஐந்தாறு மாதத்துக்குப் பிறகு இரண்டு பேரும் பரிபூரணமாக இஷ்டப்பட்டால் கலியாணம் செய்து கொள்ளுங்கள். அதுவரையில் என் வயதான தமக்கையை நீலமணியுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் தனி ஜாகையில் வசிக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்" என்றேன்.
நமச்சிவாயத்துக்கு அப்போதிருந்த பரவசத்தில் நான் எது சொன்னால் தான் ஆட்சேபிக்கப் போகிறான்? எல்லா நிபந்தனைகளையும் ஒப்புக் கொண்டான்.
அப்புறம் சில மாத காலம் நமச்சிவாயம் - நீலமணி நாடகம் தமிழ் நாட்டையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்தது. ரெயிலிலே, திருவிழாவிலே, திருமணக் கூட்டங்களிலே, நாலுபேர் சந்திக்கும் இடங்களிலெல்லாம் நமச்சிவாயம் - நீலமணி நாடகங்களைப் பற்றியே பேச்சாயிருந்தது. முக்கியமாக, 'கனவு' என்னும் ஒரு நாடகம் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தக் காலத்தில் 'சமூக சித்திரம்' என்று சொல்லுகிறார்களே; அம்மாதிரிப் பாணியில் அமைந்தது 'கனவு' என்னும் ஒரு நாடகம் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தக் காலத்தில் 'சமூக சித்திரம்' என்று சொல்லுகிறார்களே; அம்மாதிரிப் பாணியில் அமைந்தது 'கனவு' என்னும் நாடகம். அதில் ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கிறார்கள்; காதலிக்கிறார்கள். சில காலம் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பிறகு அவர்களைத் தொல்லைகள் தொடர்கின்றன. வாழ்க்கைத் தொல்லைகளின் காரணமாகக் காதலும் கசந்து போகிறது. கதாநாயகியின் பேரில் அகாரணமாகச் சந்தேகப்பட்டுக் கதாநாயகன் அவளைத் துன்புறுத்தி வருகிறான். இதற்கிடையில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. கதாநாயகன் பேரில் பொய் வழக்கு ஜோடிக்கப்படுகிறது. அவன் சிறையில் தள்ளப்படுகிறான். கதாநாயகி பல இன்னல்களுக்கு உள்ளான பிறகு அவளுடைய அருமைக் குழந்தையுடன் நடுத்தெருவில் பிச்சையெடுத்து ஜீவிக்கும்படி நேரிடுகிறது.
கேளுங்கள், வேடிக்கையை! நீலமணி சிறு குழந்தையாயிருந்தபோது ரெயிலில் பாட்டுப்பாடிப் பிச்சை எடுத்தாள் அல்லவா? நாடகத்திலும் அந்த வழக்கம் அவளை விடவில்லை. நாடக மேடையில் நீலமணி பிச்சை கேட்டுப் பாடிக்கொண்டு வந்த போது சபையோர்களில் கண்ணீர் விடாதவர்கள் யாருமில்லை. அவர்களில் பலர் காசுகளையும், கால் ரூபாய் அரை ரூபாய்களையும் மேடையின் மீது எறிவார்கள். நீலமணியைத் தொடர்ந்து வந்த அவளுடைய சின்னஞ்சிறு மகன் (நாடகக் கதையிலே வரும் மகனைத்தான் சொல்கிறேன்) அந்தக் காசுகளைப் பொறுக்கிச் சேர்ப்பான். சிலர் ரூபாய் நோட்டுகளை மேடை மீது எறிவதுண்டு. சில நாளைக்கு இப்படி மேடையில் எறியப் படும் பணமே ஐம்பது அறுபது ரூபாய் ஆகிவிடும்.
பிச்சை எடுக்கும் காட்சிக்குப் பிறகு கதாநாயகி தன் மகனுடன் தன்னந்தனியான காட்டுப் பாதையில் வழி நடந்து போவாள். இருவரும் ஒரு மரத்தடியில் உட்காருவார்கள். நீலமணி களைப்புத் தாங்காமல் மரத்தில் சாய்ந்தபடி தூங்கிவிடுவாள்.
அப்போது ஆகாச மார்க்கத்தில் கந்தர்வன் ஒருவன் தேவ ரதத்தில் ஏறிக்கொண்டு வருவான். அவன் தன் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு வந்தவன். மரத்தில் சாய்ந்து கிடந்த நீலமணியைப் பார்ப்பான். இவளைக்கொண்டு தன் மனைவிக்கு ஒரு பாடங் கற்பிக்க எண்ணுவான். அதாவது, அவளைக் காட்டிலும் அழகான பெண்கள் பூலோகத்திலே உண்டு என்று நிரூபித்துக் காட்ட விரும்புவான். உடனே பூமியில் இறங்கி நீலமணியின் தூக்கம் கலையாமல் அவளைத் தூக்கிக்கொண்டு கந்தர்வலோகத்தில் அவனுடைய மாளிகையின் பூந்தோட்டத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். அங்கே நீலமணிக்கு அவன் உபசாரம் செய்வதைக் கந்தர்வப் பெண் வந்து பார்ப்பாள். கந்தர்வனைக் கோபித்து அவனை அப்பாற் போகச் செய்துவிட்டு நீலமணியிடம் அவளுடைய கதையைக் கேட்பாள். கேட்ட பிறகு அவளிடம் அனுதாபப்பட்டு "நீ இங்கேயே என்னுடன் இருந்துவிடு. உனக்கு ஒரு குறைவுமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பாள்.
நீலமணி கந்தர்வபுரியின் அற்புத அழகு வாய்ந்த பூந்தோட்டங்களில் சித்திர விசித்திரமான பல வர்ண மலர்களையும் அந்த மலர்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்த பட்டுப் பூச்சிகளையும் பார்த்துக் கொண்டு உலாவி வருவாள். ஆனாலும் அவளுடைய மனத்தில் நிம்மதி ஏற்படாது. பூத்துக் குலுங்கிய மந்தார விருட்சத்தின் அடியில் நின்று ராகமாலிகையில் ஒரு விருத்தம் பாடுவாள். அந்தப் பாடலை நீங்கள் அவசியம் கேட்டிருப்பீர்கள்.
"பெற்ற தாய்தனை மக(வு)
மறந்தாலும்
பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
உற்ற தேகம் உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
நற்றவத்தவர் இதயத்தே ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே..."
இதுதான் பாடல், இதன் கடைசி அடியான "நமச்சிவாயத்தை
நான் மறவேனே" என்று நீலமணி பாடும் போது உடலும் உள்ளமும் உயிரும் உருகும்படி
உணர்ச்சியுடன் பாடுவாள். அதைக் கேட்டுச் சபையோர் மனங் கசிந்து கண்ணீர்
பெருக்கும் நிலையில் இருக்கும் போது, பூலோகத்தில் விடப்பட்ட கதாநாயகனையும்
கந்தர்வன் அங்கே கொண்டு வந்து சேர்ப்பான். மூன்றாவது முறை நீலமணி, "நமச்சிவாயத்தை
நான் மறவேனே" என்று பாடும்போது, நமச்சிவாயமே அவள் பின்னால் வந்து நின்று
அவளுடைய கண்களைப் பொத்துவான்.பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
உற்ற தேகம் உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
நற்றவத்தவர் இதயத்தே ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே..."
இந்தக் கட்டத்தில் நாடகக் கொட்டகையில் உண்டான ஆரவாரத்துக்கு இணையாகத் தமிழ்நாட்டு நாடகமேடை சரித்திரத்தில் எப்போதும் ஏற்பட்டதில்லை. அதற்கு முன்னுமில்லை; பின்னுமில்லை.
மரத்தடியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரப் பெண் கண்ணை விழித்துப் பார்ப்பாள். அவ்வளவும் கனவு என்று உணர்ந்து ஏமாற்றம் அடைவாள். அருகிலிருந்த தன் அருமை மகனைக் காணாது திகைப்பாள், பைத்தியம் பிடித்தவள் போல ஓடுவாள். அப்போது எதிரே ஒரு சிப்பாய் அவள் மகனை அழைத்துக் கொண்டு வருவான். அந்தச் சிப்பாய் அன்று தன்னை விட்டுப் போன கணவன் தான் என்பது அறிந்து கதாநாயகி மகிழ்வாள். இத்துடன் நாடகம் முடிவுறும்.
இந்தக் 'கனவு' என்னும் சமூகசித்திரம் தமிழ் நாட்டுப் நாடகப் பிரியர்களை அந்த நாளில் பைத்தியமாக அடித்துக் கொண்டு வந்தது.
நமச்சிவாயம் - நீலமணியின் நாடகமேடை வெற்றியைப் பற்றிக் கேட்கக் கேட்க எனக்கு எவ்வளவோ பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் அவர்களுடைய சொந்த வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இல்லையென்று அறிந்து உற்சாகக் குறைவு உண்டாயிற்று. ஓயாமல் அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், எந்தச் சமயத்தில் என்ன நேருமோ என்று தனக்குப் பயமாயிருக்கிறதென்றும் என் தமக்கை எனக்கு அடிக்கடி சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தாள். முதலில் சில காலம் நான் அதை அலட்சியம் செய்து வந்தேன். காலப்போக்கில் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று மனத்தைத் திருப்தி செய்து கொண்டிருந்தேன். ஆனால் தமக்கைசொல்லி அனுப்புவது நின்றபாடில்லை.
கடைசியாக, இனி அலட்சியம் செய்வதற்கில்லையென்று தோன்றி, ஒரு நாள் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது சென்னை ஒற்றைவாடையில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. பார்க்டவுன் சந்து ஒன்றில் நாடகக் கம்பெனியின் ஜாகை பக்கத்திலேயே நீலமணியின் வீடு. நான் அங்கே போன போது உள்ளேயிருந்து பெருங் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. நீலமணி - நமச்சிவாயம் இவர்களுடைய குரல்கள் தான். வீட்டுக்குள் நுழையும் போது எனக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. என்னை பார்த்ததும் இருவரும் சண்டையை நிறுத்தி முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள். சாமான்கள் உள்ளே வந்து சேர்ந்து வண்டிக்காரனைத் திருப்பி அனுப்பிய பிறகு, "நான் வரும்போது ஒரே கூக்குரலாயிருந்ததே, என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.
"நீங்களே கேளுங்கள், மாமா! உங்கள் அருமை மகளை நீங்களே கேளுங்கள்" என்றான் நமச்சிவாயம்.
"ராகமாலிகையை எந்த ராகத்தில் முடித்தால் என்ன மாமா! 'பேஹாக்' கில் முடிக்காமல் மத்திய மாவதியில் முடித்துவிட்டதாகச் சண்டை பிடிக்கிறார்?" என்றாள் நீலமணி.
"எந்த ராகத்தில் முடிந்தாலுந்தான் ஒன்றுமில்லையே? மத்தியமாவதியில் முடிக்காமல் நான் சொன்னபடி 'பேஹாக்' கில் முடிப்பதுதானே?" என்றான் நமச்சிவாயம்.
"பாடுகிறது நான் தானே? எனக்கு இஷ்டமான ராகத்தில் நான் பாடுகிறேன்" என்றான் நீலமணி.
"பாடுகிறவர்களுக்காகப் பாட்டா? கேட்கிறவர்களுக்குப் பாட்டா? நீங்கள் சொல்லுங்கள், மாமா!" என்றான் நமச்சிவாயம்.
"கேட்கிறவர்கள் அப்படியொன்றும் மத்தியமாவதியைக் கேட்டுக் காதைப் பொத்திக் கொள்ளவில்லையே? கொட்டகை இடிந்து விழும்படி கரகோஷ ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்களே!" என்றாள் நீலமணி.
"உன் பாட்டைக் கேட்டா கரகோஷம் செய்தார்கள்? நான் மேடையில் அச்சமயம் தோன்றியதற்காக அல்லவோ கரகோஷம் செய்தார்கள்!" என்றான் நமச்சிவாயம்.
"அப்படி இருக்கும் போது, நான் எந்த ராகத்தில் பாடினால் என்ன? எப்படிப் பாடினால் என்ன?" என்றாள் நீலமணி.
"மாமா! உங்கள் மகளுக்குக் கர்வம் அசாத்தியமாகத் தலைக்கேறிவிட்டது. இனி உருப்படப் போவதேயில்லை. ஊரில் உள்ள முட்டாள் பயல்கள் எல்லம் 'ஆஹு' என்று புகழ்ந்து இப்படி இவளைக் கர்வம் பிடிக்கச் செய்துவிட்டார்கள்!" என்று குறைப்பட்டான் நமச்சிவாயம்.
"ஊரில் உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றால் அவர்களுக்குத்தானே நாம் நாடகம் ஆடுகிறோம்? நாம் மட்டும் என்ன?" என்றாள் நீலமணி.
"கேட்டீர்களா, மாமா! இவள் எனக்கு முட்டாள் பட்டம் சூட்டுவதை! இவளை மேடையில் ஏற்றி நாடெங்கும் புகழ்பெற்ற நாடகக்காரியாக்கியதற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! இல்லையா?" என்றான் நமச்சிவாயம்.
அதற்குப் பதில் நீலமணி என்னமோ சொல்லத் தொடங்கிச் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.
இதையெல்லாம் கேட்டு எனக்கு உண்மையிலேயே சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் போய்விட்டது. அந்தச் சந்தேகமான நிலையில் சிரித்துத்தான் வைப்போமே என்று உடம்பு குலுங்கச் சிரித்தேன்.
"அட அசட்டுக் குழந்தைகளா!" என்று இரண்டு பேரையும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பார்த்துச் சிரித்தேன்.
"மாமா! எங்களைப் பார்த்து நீங்கள் மட்டுந்தானா சிரிப்பீர்கள்? ஊரே சிரிக்கும்" என்றான் நமச்சிவாயம்.
"ஆமாம், தம்பி! நீங்கள் இப்படி அற்ப விஷயத்துக்குப் பெரிய சண்டையாகப் போடுகிறீர்கள்! இதன் உண்மை தெரியாதவர்கள் ஒன்றைப் பத்தாக்கி ஊசியை உலக்கையாக்கி ஊரெல்லாம் டமாரம் அடித்து வீண் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள். பிறகு ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கி விடும்! ஜாக்கிரதை!" என்றேன்.
உடனே பேச்சை மாற்றினேன், யோக க்ஷேமங்களை விசாரித்தேன். அவர்களுடைய நாடகங்களைப் பற்றி நாடெல்லாம் புகழ்வதையும் கூறினேன்.
இரண்டு பேரையும் தனித்தனியாகப் பார்த்து நல்ல வார்த்தையாகப் புத்திமதி கூறினேன். நான் கூறியவற்றை இரண்டு பேரும் அப்படி அப்படியே ஒப்புக் கொண்டார்கள். தங்களுடைய குற்றத்தை உணர்ந்தவர்கள் போல் பேசினார்கள்.
"ஒரு நல்ல நாள் பார்த்து ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய்க் கலியாணம் செய்து கொண்டு விடுங்கள். குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அப்புறம் சின்ன விஷயங்களைப் பற்றிச் சண்டைபோட அவகாசம் இராது" என்றேன்.
இருவரும் ஒப்புக்கொண்டு என்னையே முகூர்த்த நாள் பார்க்கும்படி சொன்னார்கள். நான் உடனே மறுவாரத்திலேயே முகூர்த்த நாள் குறிப்பிட்டேன். இரண்டு பேரையும் பொறுக்கியெடுத்த சில சிநேகிதர்களையும் மட்டும் திருநீர்மலைக்கு அழைத்துச் சென்று திருமணத்தைச் சுருக்கமாக முடித்து வைத்தேன். பிறகு, நிம்மதியுடன் ஊருக்குத் திரும்பினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகக்காரி - Naadagakkaari - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், நீலமணி, நமச்சிவாயம், கொண்டு, பிறகு, எனக்கு, வந்து, செய்து, நாடகம், என்றான், மாமா, போது, மறந்தாலும், என்ன, கனவு, நாள், மேடையில், இரண்டு, கலியாணம், அவளுடைய, ராகத்தில், நீங்கள், தமிழ், இந்தக், என்னும், காலம், நீலமணியின், அவன், இப்படி, வேண்டும், நாடகக், என்றாள், என்றேன், அப்போது, இருவரும், ரூபாய், சேர்ப்பான், எந்த, பேரையும், நமச்சிவாயத்தை, மறவேனே, பார்த்து, அங்கே, உடனே, தான், அவ்வளவு, இவளை, பிடித்துக், அவனுடைய, அப்படி, வந்த, வீட்டில், சண்டை, நாடக, எல்லாம், கதாநாயகி, கேளுங்கள், பிச்சை, கொண்டது, கொண்டிருந்தது, உங்கள், பார்த்துக், அந்த