என் தெய்வம்
4
அப்புறம் மூன்று நாள் அம்முலு உயிரோடு
இருந்தாள். அந்த மூன்று நாளும் இறந்து போன அனந்தராமனைப் பற்றியே இரண்டு
பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய நல்ல குணத்தைப் பற்றி அனந்தராமன்
கூறியதைப் பற்றிக் கேட்கக் கேட்க செல்லம்மாளுக்கு அனந்தராமன் மேலிருந்த
கோபதாபமெல்லாம் போய் விட்டது. அம்முலு கண்ணை மூடிய பிறகு, செல்லம்மாள்
கண்ணீரும் கம்பலையுமாய்க் குழந்தையைத் தோளோடு சாய்த்து எடுத்துக் கொண்டு
ஊருக்கு கிளம்பிச் சென்றாள்.
ஊரில் செல்லம்மாளைப் பற்றி வம்பு வளர்க்கத் தொடங்கினார்கள். யாரோ ஒரு அனாதைக் குழந்தையை விலைக்கு வாங்கி வந்திருப்பதாகச் சொன்னார்கள். சாதி தெரியாத குழந்தையை வைத்துக் கொண்டு வளர்ப்பதற்காக அவளைச் சாதியிலிருந்து தள்ளி வைத்தார்கள். இன்னும் சொல்லத் தகாத அவதூறையும் சிலர் வாய் கூசாமல் கேலியாகச் சொன்னார்கள். அதாவது செல்லம்மாளே குழந்தையைப் பெற்று எடுத்துக் கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். கிராமத்திலிருந்து செல்லம்மாள் பட்டணத்துக்குப் போன போதும், இந்தப் பொய் அவதூறு அவளைத் தொடர்ந்து போயிற்று. ஆனால் இதையெல்லாம் செல்லம்மாள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய சகல கஷ்டங்களையும் துயரங்களையும் குழந்தை சாம்புவின் ஒரு புன்சிரிப்பில் மறந்து வாழ்ந்து வந்தாள்.
*****
இவ்விதம் செல்லம்மாள் கதையை முடித்ததும், உட்கார்ந்திருந்த சாம்பமூர்த்தி எழுந்திருந்தான். "அம்மா! கடவுள் எங்கேயோ இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கோவிலிலும் குளத்திலும் போய்த் தெய்வத்தைத் தேடினேன். என் தெய்வம் வீட்டிலேயே இருக்கிறதென்பதை அறியாமற் போனேன். அம்மா! நீதான் என் தெய்வம்!" என்று சொல்லித் தரையில் விழுந்து, தாயின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தான். செல்லம்மாள் உணர்ச்சி நெஞ்சை அடைக்க ஒன்றும் பேசமுடியாதவளாயிருந்தாள்.
பிறகு, சாம்பமூர்த்தி எழுந்து நின்று, "அம்மா எனக்குக் கல்யாணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வாழ்நாளெல்லாம் நான் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். உனக்குப் பணிவிடை செய்வதே என் வாழ்க்கைக் கடமை கடவுள் அறிய..." சபதம் செய்யத் தொடங்கிய போது "நிறுத்து குழந்தை, நிறுத்து!" என்று செல்லம்மாள் நிறுத்தினாள்.
அதே சமயத்தில், முக்கால்வாசி சாத்தியிருந்த ரேழி நடைக் கதவு படீர் என்று திறந்தது. ஸ்ரீமதி ரங்கநாயகி ஆத்திரத்துடன் உள்ளே வந்தாள்.
"ரொம்ப அழகாயிருக்கிறது! நீங்கள் பிரம்மச்சாரியாயிருந்து விட்டால், என்னுடைய கதி என்ன? நானும் கன்னியாகவே இருக்க வேண்டியதுதான். நான் உங்களுக்காக உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டாலும், உங்கள் அம்மாவுக்குப் பணிவிடை செய்வதற்காகவே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், அம்மா! எனக்கும் நீங்கள் தான் தெய்வம்!" என்று சொல்லி, ரங்கநாயகியும் செல்லம்மாளின், பாதங்களில் நமஸ்கரித்தாள். அவளுடைய தலையைத் தொட்டுச் செல்லம்மாள் ஆசிர்வாதம் செய்தபோது, 'கலகல'வென்று அவளுடைய கண்களிலிருந்து நீர் பொழிந்தது.
சாம்பமூர்த்தி அவ்விதம் குனிந்த தலையுடன் வக்கீல் வீட்டிலிருந்து கிளம்பி வந்த பிறகு, ரங்கநாயகியை அவள் வீட்டார் ரொம்பவும் பரிகசித்துப் புண்படுத்தினார்களாம். இதனால் ரங்கநாயகியின் மனம் உறுதிப்பட்டு விட்டதாம். "நான் அவரைத்தானே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அவருடைய அம்மாவைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. அவருடைய அம்மா எப்படியிருந்தால் எனக்கு என்ன?" என்று சொல்லிவிட்டு, மற்றவர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல், அவள் சாம்பமூர்த்தியின் வீட்டுக்கு வந்தாளாம். வாசற்படிக்கு அருகில் வந்த போது, உள்ளே தாயாரின் பேச்சுக் குரல் கேட்டதாம். அங்கு நின்றபடியே செல்லம்மாள் சொன்ன கதையின் பிற்பகுதியை எல்லாம் கேட்டுவிட்டுச் சாம்பமூர்த்தி சபதம் கூறும் சமயத்தில் உள்ளே வந்தாளாம்.
*****
திருநீர்மலையில் கல்யாணம் ஆன அன்று பிற்பகல், மேற்படி வரலாறுகளையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டபின், "ஏன் மாப்பிள்ளை! உங்கள் மனைவியின் வீட்டார் அப்புறம் சமாதானம் அடையவே இல்லையா? இன்னும் கோபமாய்த் தான் இருக்கிறார்களா?" என்று கேட்டேன்.
"இல்லை; ரங்கநாயகியின் உறுதியைக் கண்டபின், அவர்கள் ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டார்கள். இந்தக் கல்யாணத்துக்குக் கூட வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனாலு திடீரென்று புயலும் மழையும் அடித்து ரயில் பாதை சீர்கெட்டு விட்டதல்லவா? அதனால் தான் வர முடியவில்லை" என்றான்.
அப்போது மணப் பெண் ரங்கநாயகி "அதுவும் எங்களுடைய அதிர்ஷ்டந்தான். அந்தக் கும்பல் எல்லாம் வந்திருந்தால், நாங்கள் இன்றைக்கு இவ்வளவு ஆனந்தமாக இருந்திருக்க முடியுமா?" என்றாள்.
இந்த வருஷம் வைகாசிக் கோடையில் திடீரென்று அவ்வளவு பெரிய புயலும் மழையும் அடித்து, ரயில் பாதை கெட்டதின் காரணம், அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் தெய்வம் - En Theivam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - செல்லம்மாள், அம்மா, கல்யாணம், சாம்பமூர்த்தி, செய்து, கொள்ளப், தான், உள்ளே, தெய்வம், கொண்டு, சொன்னார்கள், பிறகு, நான்