என் தெய்வம்
2
சாம்பமூர்த்திக்குத் தன் வீட்டுக்கு வந்து
சேர்ந்தது எப்படியென்றே தெரியாது. வீட்டு வாசலை அடைந்ததும் தான் அவனுக்குக்
கொஞ்சம் சுய நினைவு வந்தது. வீட்டுக்குள் நுழைந்து ரேழித் திண்ணையில்
குப்புறப் படுத்துக் கொண்டான். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொள்ள முயன்ற
போது அது விம்மலாக வெளிப்பட்டது. அவனுடைய உடம்பைத் தூக்கித் தூக்கிப்
போட்டது.
சற்று நேரத்துக்கெல்லாம் அவன் தாயார் அங்கே வந்தாள். குப்புறப் படுத்துக் கிடந்த புதல்வனைப் பார்த்தாள். கல்லும் கனியும் குரலில், "அப்பா! குழந்தை!" என்று சொல்லிக் கொண்டு, அவன் முதுகின் மேல் கையை வைத்துத் தடவிக் கொடுக்கப் போனாள்.
சாம்பமூர்த்தி வெடுக்கென்று அவளுடைய கையைப் பிடித்துத் தள்ளினான். மறுபடியும் பலமாகக் குப்புறப்படுத்துக் கொண்டான்.
தாயார் திடுக்கிட்ட குரலில் "குழந்தை! இதென்ன? ஏன் அழுகிறாய்? என் பேரில் என்ன கோபம்? நான் என்ன செய்தேன்?" என்றாள்.
சாம்பமூர்த்தி சட்டென்று எழுந்து உட்கார்ந்து, "என்ன செய்தாயா? என்னை எதற்காகப் பெற்றாய்?" என்று கத்தினான். கத்திவிட்டுத் தன் தலையில் இரண்டு தடவை அடித்துக் கொண்டான்.
தாயார் திகைத்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
சாம்பமூர்த்தி மேலும், "இந்த அவமானத்தை என்னால் இனி மேல் சகிக்க முடியாது. தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போகிறேன்" என்று கத்தினான்.
தாயார் வேதனை நிறைந்த குரலில் "குழந்தை! இது எனக்கு வேண்டியதுதான்" என்றாள்.
சாம்பமூர்த்தி நிமிர்ந்து பார்த்தான். அம்மாவின் கண்களில் இரண்டு துளி ஜலம் துளித்து நிற்பதைக் கண்டான்.
"ஐயோ! அம்மா! உன்னைப் பற்றி ஏன் இப்படிச் சொல்லுகிறார்கள்" என்று அலறினான்.
தாயார் அவனை உற்றுப் பார்த்து, "குழந்தை! அவர்கள் வீட்டுக்குப் போனாயா? அவர்கள் ஏதாவது சொன்னார்களா? என்ன சொன்னார்கள்?" என்று கேட்டாள்.
"என்னத்தைச் சொன்னார்கள்? ஊரிலே எல்லோரும் சொல்வதைத்தான் அவர்களும் சொன்னார்கள்."
"குழந்தை! ஊரிலே எல்லோரும் என்ன சொல்கிறார்கள்! அதைத்தான் சொல்லேன்!" என்றாள் தாயார்.
"என் வாயால் சொல்லச் சொல்கிறாயா? சரி சொல்கிறேன். 'எனக்குத் தகப்பனார் யார் என்று தெரியாது' என்று சொல்கிறார்கள். 'நீ விதந்துவான பிறகு என்னைப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.' போதுமா? இன்னும் சொல்ல வேணுமா?" என்று சாம்பமூர்த்தி கூறித் தலையில் இன்னும் நாலு தடவை அடித்துக் கொண்டான். மறுபடியும் குப்புறப்படுத்துக் கொண்டான்.
இத்தனை நேரமும் நடையில் நின்று கொண்டிருந்த தாயார் திண்ணையில் சாம்பமூர்த்தியின் காலடியில் உட்கார்ந்தாள். தலைகுனிந்து முகத்தை வைத்துக் கொண்டு சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு தலையை நிமிர்த்திக் கொண்டு, "குழந்தை! சம்பு! எழுந்து உட்கார்! எத்தனையோ நாளாக உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டும், சொல்ல வேண்டும் என்று இருந்தேன். தைரியம் வரவில்லை. இப்போது கட்டாயம் சொல்ல வேண்டும் சமயம் வந்து விட்டது குழந்தை! எழுந்து உட்கார்ந்து கேள்!" என்றாள்.
சாம்பமூர்த்தி பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். "என்ன? உண்மையைச் சொல்லப் போகிறாயா! - என்ன உண்மை? ஐயோ! அவர்கள் சொன்னது நிஜந்தானா?" என்றான்.
அன்னை முன்பைவிட அதிக சாந்தத்துடன் கனிந்த குரலில், "குழந்தை! ஏன் பதறுகிறாய்? கொஞ்சம் பொறுமையாகக் கேள்!" என்றாள்.
"பொறுமையா? என்னைப் பொறுமையாயிருக்கச் சொல்கிறாயா? கடவுளே!"
"ஆமாம், சாம்பு! பொறுத்துத்தான் ஆக வேண்டும். கடவுள் எழுதின எழுத்தை அழித்து எழுத முடியுமா!"
"கடவுள்! கடவுள்! கடவுள் ஒருவர் இருக்கிறாரா! இருந்தால் என்னத்திற்காக அவளை நான் சந்திக்கும்படி செய்கிறார்! பிறகு இப்படிக் கொடூரமாகப் பிரிக்கிறார்? என்னத்திற்காக என்னை உயிரோடு வைத்திருக்கிறார்? டைபாய்டு சுரம் வந்ததே? அதிலேயே கொண்டு போயிருக்கக் கூடாதா?" என்று அலறினான் சாம்பமூர்த்தி.
தாயார் எங்கேயோ தொலை தூரத்திலுள்ள எதையோ பார்ப்பவள் போல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். சாம்பமூர்த்தியைத் திரும்பிப் பார்த்து, "ஆமாம் சாம்பு! உனக்கு டைபாய்டு சுரம் வந்த போது கடவுள் உன்னைக் கொண்டு போகத்தான் பார்த்தார். நான் தான் குறுக்கே நின்று காப்பாற்றினேன். இருபத்தொரு நாள் இராத் தூக்கம் - பகல் தூக்கம் இல்லாமல் கண் விழித்தேன். டாக்டர்கள் கூடக் கைவிட்டு விட்டார்கள் இன்னும் அரை மணி நேரந்தான் என்று கெடு விதித்தார்கள். நான் உன்னை விடமாட்டேன் என்றேன். நீ அப்போது கண்ணை மூடியிருந்தால் அரை நாழிக்குள் என் உயிரும் போயிருக்கும். இன்றைக்கு இந்த மாதிரி வார்த்தை உன்னிடம் கேட்டிருக்க வேண்டியதில்லை" என்றாள்.
சாம்பமூர்த்தி "ஐயோ! அம்மா! அதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய்?" என்றான். அவன் குரலில் முன் போன்ற வெறியில்லை; சிறிது சாந்தம் ஏற்பட்டிருந்தது.
அவன் சொன்னது காதிலே விழாதவள் போல் தாயார் மேலும் சொன்னாள் "டைபாய்டு சுரம் வந்த போது மட்டுந்தானா? பதினோரு வயதில் உனக்கு வயிற்றுக் கடுப்பு வந்தது. முப்பத்தைந்து நாள் கிடந்தாய். அப்போதும் யமன் வாயிலிருந்து காப்பாற்றினேன். அதற்கு முன்னால், உன் மூன்றாவது வயதில் கட்டி விழுந்தது. இரண்டரை வருஷம் ஆயிற்று குணமாவதற்கு. அந்த இரண்டரை வருஷ காலமும் நான் தேடிப் போகாத வைத்தியனில்லை. நான் வேண்டிக் கொள்ளாத கோவிலும் தெய்வமும் இல்லை. உன் அப்பா தொலைத்தது போக பாக்கியிருந்த சொத்தெல்லாம் அந்த இரண்டரை வருஷத்தில் தான் போயிற்று. கட்டிகரைந்தது போல் சொத்தும் கரைந்து விட்டது" என்றாள்.
"என் அப்பா... என் அப்பா..." என்று சாம்பமூர்த்தியின் வாய் முணுமுணுத்தது.
"ஆமாம் குழந்தாய்! உன் அப்பாதான்!"
"அப்படியானால், ஊரார் சொல்வதெல்லாம் பொய்தானே, அம்மா!" என்று சாம்பமூர்த்தி அளவற்ற ஆவலுடன் கேட்டான்.
"பொய்யோ! நிஜமோ? இந்த உலகத்தில் எது பொய், எது நிஜம் யாருக்குத் தெரியும்? நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடுகிறேன், சாம்பு! அப்புறம் நீயே பொய் எது, நிஜம் எதுவென்று தீர்மானித்துக் கொள். எங்கே ஆரம்பிக்கிறது, எப்படிச் சொல்கிறது என்று தெரியாமல் திண்டாடுகிறேன்" என்றாள் தாயார்.
பிறகு, இவ்விதமாக ஆரம்பித்தாள்.
"உன் அப்பாவுக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்த போது நான் ஓட்டலில் மாவு அரைக்கும் படியான கதிக்கு வருவேன் என்று என் அப்பாவும் அம்மாவும் சொப்பனத்தில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பெண். அப்பா பணக்காரர். கிராமத்தில் ஐம்பது காணி நிலமும், இன்னும் நிறையச் சொத்துக்களும் இருந்தன. அந்தச் சொத்தெல்லாம் எனக்குத்தானே என்று சொத்து இல்லாவிட்டாலும் படித்த பிள்ளையாயிருக்க வேண்டுமென்று வரன் பார்த்தார்கள். கடைசியில் உன் அப்பாவுக்குக் கொடுத்தார்கள். அவர் உன்னைப் போலவே பி.ஏ. பரீட்சை தேறியிருந்தார். கல்யாணம் ரொம்பப் பிரமாதமாக நடந்தது."
அவர்களுடைய இல்வாழ்க்கையானது ஆனந்தமயமாக இருந்தது. அனந்தராமன் பி.ஏ சில காலம் தாலுகா குமாஸ்தா வேலை பார்த்து விட்டு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆனார். மேலே மேலே உத்தியோக உயர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைமையில் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதைப் பார்த்துவிட்டுச் செல்லம்மாளின் தாயும் தகப்பனும் காலமானார்கள். செல்லம்மாளுக்கு ஏராளமான மஞ்சட் காணி சொத்தையும் வீட்டுத் துணைக்கு வயதான அத்தை ஒருத்தியையும் அவர்கள் வைத்து விட்டுப் போனார்கள்.
அதற்குப் பிறகு இன்னும் சில காலம் செல்லம்மாளின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்து வந்தது. நாளாக ஆக, அவளுடைய மனத்திற்குள்ளே மட்டும் ஒரு அந்தரங்க வேதனை தோன்றத் தொடங்கியது. குழந்தையில்லையே என்ற வேதனைதான் அது. அத்தைக் கிழவி இந்த வேதனைக்கு அடிக்கடித் தூபம் போட்டு வளர்த்து வந்தாள். "அடிப் பெண்ணே! என் கண்ணை மூடுவதற்குள் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து பார்க்க மாட்டேனா?" என்று அவள் அடிக்கடி பிரலாபிப்பாள். அதைக் கேட்க கேட்கச் செல்லம்மாளுக்கு என்னமோ செய்யும். பகலிலும் இரவிலும் குழந்தையைப் பற்றியே நினைக்கவும் கனவு காணவும் தொடங்கினாள்.
அண்டை அயல் வீட்டுக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவளுக்கு ஒரு பக்கத்தில் எல்லையற்ற வாஞ்சை உண்டாகும். இன்னொரு பக்கத்தில் காரணமில்லாமல் கண்ணில் ஜலம் துளிக்கும்.
இப்படி இருக்கும் சமயத்தில், அவளுடைய வாழ்க்கையே பாழாக்கும்படியான இடி விழுந்தது.
அனந்தராமன் மேல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் ஏற்பட்டது. வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டதுடன் மேலே கிரிமினல் வழக்கும் நடந்தது. வழக்கு ஹைக்கோர்ட்டு வரையில் போய் முடிவதற்குள் மூன்று வருஷம் ஆயிற்று. கடைசியில் தண்டனை ஒன்றுமில்லாமல் உத்தியோகம் போனதுடன் அனந்தராமன் தப்பி வந்து சேர்ந்தான். இதற்குள்ளாக செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தில் பாதி போய்விட்டது.
உத்தியோகம் போன பிறகு அனந்தராமன் வீட்டில் சுகமாயிருந்து கொண்டு காலட்சேபம் நடத்தியிருக்கலாம். பாக்கி அவ்வளவு சொத்து. ஆனால் புருஷன் சம்பாத்தியம் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது என்னும் விஷயம் அனந்தராமனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே வியாபாரத்துறையில் இறங்கினான். வியாபாரம் என்றால் கேவலம் ஜவுளிக்கடை, மளிகைக் கடை வைக்க அவன் விரும்பவில்லை. கமிஷன் எஜென்ஸி தொழிலில் புகுந்தான். பல சாமான்களுக்கு ஏஜென்ட் ஆனான். முதலில் ஜில்லாக்களுக்கு ஏஜென்ஸி எடுத்து, பிறகு தென் இந்தியா முழுவதற்குமே அனந்தராமன் ஏஜென்ஸி எடுத்துக் கொண்டான். இதனால் அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஏஜென்ஸி தொழில் மேலும் மேலும் அபிவிருத்தியடைந்தது. இதனால் மூலதனமும் அதிகமாகவே தேவையாயிற்று. செல்லத்தின் மஞ்சட்காணிச் சொத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. வியாபார விருத்திக்காக நிலத்தை மேலும் மேலும் விற்க வேண்டியதாயிற்று.
இதற்கிடையில், செல்லத்தின் அத்தை, "அடி பெண்ணே! உன் வயிற்றில் ஒரு குஞ்சு பிறந்து நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே? எனக்குக் கண் பார்வை மங்கி வருகிறதே!" என்று பிரலாபித்துக் கொண்டேயிருந்தாள்.
இந்த அத்தைக்கு மைத்துனன் பிள்ளை ஒருவன் இருந்தான். அத்தைக் கண்ணை மூடினால் இவன் தான் கர்மம் செய்ய வேண்டியவன். எனவே, தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்குரிய காலம் சமீபித்து விட்டதா என்று பார்க்கும் பொருட்டு, இவன் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து போவது வழக்கம்! அப்போதெல்லாம் செல்லத்தினிடம் உறவு கொண்டாடுவான். செல்லமும் அவனை அத்தான் என்று அழைத்துப் பிரியமாயிருப்பாள். சில சமயம் அவனுடைய நடவடிக்கை வரம்பு கடந்ததாக அவளுக்குத் தோன்றும். அவனுடைய பார்வையும் பேச்சும் விரஸமாகத் தோன்றும். ஆனாலும் தன்னிடம் உயிருக்குயிராயிருந்த அத்தையை உத்தேசித்து, அத்தானுடைய அசந்தர்ப்ப நடவடிக்கைகளையெல்லாம் அவள் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து வந்தாள்.
கடைசியில், இந்த அத்தான் தான் இடியிலும் பேரிடியான செய்தியைக் கொண்டு வந்தான்.
முதலில் அவன் அதைச் செல்லம்மாளிடம் நேரில் சொல்லவில்லை. அத்தையிடம் கொஞ்சம் கொஞ்சமாக வத்தி வைத்தான். அதாவது, அனந்தராமன் வியாபார அலுவல் என்பதாகச் சொல்லிக் கொண்டு வெளியூருக்குப் போவதெல்லாம் வெறும் பொய் என்றும், தஞ்சாவூரில் ஒரு மாயமோகினியின் வலையில் அவன் விழுந்து விட்டதாயும் செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறதென்றும் சொன்னான். அத்தையும் பிள்ளையும் அடிக்கடி காதைக் கடித்துக் கொள்வதையும் 'ஐயோ! இந்த அசட்டுப் பெண் இப்படிப் பேசாமல் இருக்கிறாளே!' என்று அங்கலாய்ப்பதையும் சில காலம் வரையில் செல்லம் சகித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் என்னவெல்லாமொ சந்தேகங்கள் கொந்தளிக்கத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் அத்தானைக் கேட்டே விட்டாள். விஷயம் தெரிந்ததும் அவள் மகா ஆக்ரோஷத்துடன், "இப்படியெல்லாம் நீ அவர் மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்வதாயிருந்தால், இனிமேல் இங்கே வரவேண்டாம்!" என்றாள். அத்தான் பிரமித்தவன் போல் நின்று, "நானா? நானா இல்லாததும் பொல்லாததும் சொல்கிறேன்? கடைசியில் நானா பொல்லாதவனாய்ப் போய்விட்டேன்? உண்மையும் பொய்யும் ஒரு நாளைக்கு உனக்கே தெரியப் போகிறது. அது வரையில், நான் இங்கே தலைகாட்டுவதில்லை" என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.
அதற்குப் பிறகு அத்தையின் புலம்பல் அதிகமாயிற்று. "அடி பெண்ணே! உன் தலையில் இப்படியா எழுதியிருந்தது?" என்று ஓயாமல் அங்கலாய்க்கத் தொடங்கினாள். செல்லத்துக்கோ, அப்புறம் ஒரு வினாடி கூட மன அமைதி இல்லாமற் போயிற்று. அத்தான் மேல் அவள் எரிந்து விழுந்த போதிலும் அவன் சொன்னது உண்மைதான் என்று அவள் உள் மனத்தில் ஏதோ ஒன்று சொல்லிற்று. மறுபடியும் அத்தானை வரவழைக்க வேண்டும் அவரைப் பற்றி எல்லா விபரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பக்கத்தில் மனம் துடித்தது. இன்னொரு பக்கம் தன்னுடைய அருமைத் தகப்பனார் கொடுத்த மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் இப்படியா பாழாய்ப் போய் கொண்டிருக்கிறது என்று எண்ணிய போது அவள் நெஞ்சம் கொதித்தது. தன் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் யாருக்குத் தத்தம் செய்திருந்தாளோ, யாரைத் தெய்வமாக எண்ணிப் பூசித்தாளோ, இம்மைக்கும் மறுமைக்கும் தன்னுடைய ஒரே கதியென்று யாரை நம்பியிருந்தாளோ அந்தப் புருஷன் இப்படித் தன்னை வஞ்சித்து வருகிறான் என்று எண்ணிய போது அவளுடைய இருதயம் 'படீர்' என்று வெடித்துவிடும் போலிருந்தது. மற்றொரு சமயம் அவரை இவ்விதம் மருந்து வைத்து மயக்கி விட்ட மாயக்கள்ளியைக் கொன்று விட வேண்டுமென்று ஆத்திரம் உண்டாயிற்று.
அத்தான் மறுபடியும் ஏதோ வியாஜம் வைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இந்தத் தடவை செல்லம்மாளே அவனிடம் எல்லா விபரமும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள்.
அடுத்த தடவை அனந்தராமன் வீட்டுக்கு வரும் போது, "உங்களுக்கு நான் வேண்டுமா? அவள் வேண்டுமா?" என்று கண்டிப்பாய்க் கேட்டுவிடச் செல்லம்மாள் தீர்மானித்துக் கொண்டாள். அவர் சரியான பதில் சொல்லாவிட்டால், அத்தையுடன் தன்னுடைய பிறந்த ஊருக்குப் போய் பிதிரார்ஜித வீட்டில் தனியாக இருப்பதென்றும் முடிவு செய்து கொண்டாள்.
ஆனால், அனந்தராமன் அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது செல்லம்மாள் அப்படி ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அவன் வரும் போதே 104 டிகிரி சுரத்துடன் வந்தான். வந்து படுத்தவன் படுத்தவன் தான். இருபது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். செல்லம்மாள் அந்த இருபது நாளும் இராப் பகல் அவன் அருகிலேயே இருந்து சிச்ரூஷை செய்தாள். கழுத்துச் சங்கிலியை விற்று டாக்டர்களுக்குப் பணம் கொடுத்தாள். ஒன்றும் பிரயோஜனப் படவில்லை. இருபத்தோராம் நாள் அனந்தராமன் கண்ணை மூடினான். அந்த மகா உத்தமியின் உள்ளத்தில் தான் குத்திய முள்ளின் கொடுமையைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே உயிரை விட்டான். கடைசி காலத்தில், அவன் ஏதோ செல்லத்திடம் அந்தரங்கமாய்ச் சொல்ல விரும்பியது போல் தோன்றியது. ஆனால் அதற்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ, அல்லது அவனுக்குத் தான் தைரியம் உண்டாகவில்லையோ, தெரியாது. அவன் ஒன்றும் சொல்லவும் இல்லை. செல்லம் வற்புறுத்திக் கேட்கவும் இல்லை
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் தெய்வம் - En Theivam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், நான், கொண்டு, தாயார், சாம்பமூர்த்தி, குழந்தை, என்றாள், அனந்தராமன், தான், பிறகு, போது, அவள், என்ன, மேலும், வேண்டும், சொல்ல, அப்பா, கொண்டான், வந்து, இன்னும், போல், கடைசியில், அத்தான், நாள், கடவுள், மேல், அவளுடைய, குரலில், அந்த, எழுந்து, சொத்தெல்லாம், மறுபடியும், செல்லம்மாளின், தன்னுடைய, மஞ்சட்காணிச், அடிக்கடி, கொஞ்சம், காலம், கண்ணை, வந்த, போய், வீட்டுக்கு, தடவை, வந்தது, வரையில், பக்கத்தில், பெண்ணே, பற்றி, மேலே, அம்மா, வீட்டில், கொண்டாள், செல்லம்மாள், ஒன்றும், நானா, உட்கார்ந்து, ஏஜென்ஸி, தலையில், தெரியாது, வந்தாள், சற்று, டைபாய்டு, சுரம், சாம்பு, ஆமாம், உனக்கு, சமயம், சொன்னது, அவனுடைய, சொல்கிறார்கள், பொய், செய்து, நின்று, பார்த்து, இல்லை, இரண்டரை, சொன்னார்கள், அவர்