என் தெய்வம்
1
சாம்பமூர்த்தி பி.ஏ. அவனுடைய தாயாருக்கு
ஒரே பிள்ளை; அவர்கள் பரம ஏழைகள். சாம்பமூர்த்தியினுடைய சிறு பிரயாத்தில்
அவன் தாயார் பட்ட கஷ்டங்கள் சொல்லத்தரமல்ல. ஓட்டலில் இட்லிக்கு மாவு
அரைத்தும், இன்னும் பிரபுக்கள் வீட்டில் ஊழியம் செய்தும், அவள் காலட்சேபம்
நடத்தியதுடன் பிள்ளையையும் படிக்க வைத்தாள். சாம்பமூர்த்தி நல்ல புத்திசாலி.
கொஞ்சம் விவரம் தெரிந்ததும், பள்ளிக்கூடத்தில் உபகாரச் சம்பளம் வாங்கிக்
கொண்டதோடு, அவனை விடச் சின்ன வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம்
சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினான். வறுமையின் கஷ்டம்
எவ்வளவோ இருந்த போதிலும், தாயும் பிள்ளையும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பின்
காரணமாக, அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாகவே போய்க் கொண்டிருந்தது.
கடைசியாக, அவர்களுடைய தரித்திரம் தீரும் காலமும் வந்தது. பி.ஏ. பரீட்சையில் சாம்பமூர்த்தி முதல் தரமாகத் தேறினான். சுருக்கெழுத்து, டைப் அடித்தல் முதலியவையும் கற்றுக் கொண்டிருந்தான். எனவே, சென்னைப் பட்டினத்தில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு உத்தியோகம் கிடைத்தது. அதாவது, உத்தியோகத்துக்கு உத்தரவு வந்து விட்டது. சென்னைக்குப் போய் ஒப்புக் கொள்வது தான் பாக்கி.
ஊரைவிட்டுப் போகுமுன்னம் சாம்பமூர்த்தி நிச்சயம் செய்து கொள்ள விரும்பிய காரியம் ஒன்றே ஒன்று பாக்கியிருந்தது. அது அவனுடைய கல்யாண விஷயந்தான்.
கல்யாணம் என்றாலே சிக்கலான விஷயம். அதில் காதலும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை.
சாம்பமூர்த்தியின் கல்யாணம் அவ்வாறு சிக்கலடைந்திருந்தது.
ஆமாம்; சாம்பமூர்த்தி காதல் நோய்க்கு ஆளாகியிருந்தான்.
ஒரு வக்கீலின் குழந்தைகளுக்கு சாம்பமூர்த்தி அவர்கள் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த வக்கீலின் இளம் சகோதரி ஒருத்தியும் வீட்டில் இருந்தாள். அவள் லட்சணமான பெண். எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவள்.
"காதல் ஏன் வளருகிறது? எப்படி வருகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. அது தேவ ரகசியம்!" என்று ஒரு பிரசித்தி பெற்ற ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அத்தகைய தேவரகசியமான காரணத்தினாலே, ரங்கநாயகிக்கும் சாம்பமூர்த்திக்கும் காதல் வந்து விட்டது.
வேடிக்கை என்னவென்றால், சாம்பமூர்த்தியும் ரங்கநாயகியும் தங்களை காதல் நோய் பீடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அந்த விஷயத்தை வீட்டிலுள்ள மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்களானாலும் காதலுக்கு வசமாகி விட்டால், அவர்கள் முகத்தில் ஒரு மாதிரி அசடு தட்டி விடுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் போது அசடு வழியப் பார்க்கிறார்கள்; அசடு வழியப் பேசுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனை எல்லாம் ஒரு மாதிரி மாறுதல் அடைந்து காணப்படுகிறார்கள். இதையெல்லாம் மறைத்துக் கொள்ளச் சக்தியும் அவர்களுக்கு இருப்பதில்லை.
ரங்கநாயகியின் இந்த நிலைமை வீட்டிலுள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. அதற்கு முன்னாலெல்லாம் ரங்கநாயகி படிப்பிலேதான் அதிக ஆசையுள்ளவளாயிருந்தாள். பள்ளிக்கூடத்து பரீட்சைகளில் முதலாவதாகத் தேற வேண்டுமென்பதே அவளுடைய வாழ்க்கையின் இலட்சியம் போல் தோன்றியது. ஆடை அலங்காரம் முதலியவற்றில் அவள் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.
கொஞ்ச காலமாக இந்த நிலைமை மாறி விட்டது. வீட்டிலே ஒரு வருஷத்துக்கு ஆகும்படியாக மை கூட்டி வைத்திருந்தது. அதையெல்லாம் ரங்கநாயகி வழித்து வழித்துக் கண்களில் பூசிக் கொண்டு தீர்த்து விட்டாள். அது மாதிரியே சோப்புக் கட்டிகள், பவுடர் பெட்டிகள், கூந்தல் தைலங்கள் எல்லாம் மளமளவென்று தீரத் தொடங்கின. தினசரி அலங்காரத்துக்கு அதிக நேரம் செலவாயிற்று. நெற்றியில் பொட்டு, சிறிதாயும், பெரிதாயும், நீளமாயும், அகலமாயும், உயரமாயும் - இப்படிப் பல உருவங்கள் எடுத்தது.
இவ்வாறெல்லாம் ரங்கநாயகி தன்னை அழகு செய்து கொள்வதற்கும், சாம்பமூர்த்தி பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வருவதற்கும் ஒரு வகையான சம்பந்தம் இருப்பதை வீட்டார் சீக்கிரத்தில் கண்டு கொண்டார்கள்.
இன்னும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் சாம்பமூர்த்திக்குக் கவனக்குறைவு ஏற்பட்டதையும் அவர்கள் கவனித்தார்கள். பாடத்தைக் கவனித்துப் படிக்கும்படி சாம்பமூர்த்தி பிள்ளைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பிள்ளைகள் "என்ன ஸார்! பாடத்தைக் கவனிக்காமல் எங்கேயோ பார்க்கிறீர்களே?" என்று கேட்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் முடிவான பலன் என்ன ஆயிற்று என்றால், வீட்டு எஜமான், சாம்பமூர்த்தியிடம், "பிள்ளைகளுக்குப் பாடமெல்லாம் வந்து விட்டது; நீர் சொல்லிக் கொடுத்தது போதும்" என்று சொல்லி, அவனை நிறுத்தி விட்டார்.
சாம்பமூர்த்தி, ரங்கநாயகி இரண்டு பேருக்குமே அப்போது தான் தங்களுடைய வியாதி எவ்வளவு தூரம் முற்றிப் போயிருக்கிறது என்று தெரிய வந்தது. ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் உயிர் வாழ முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். உயிர் வாழ்வதே முடியாத காரியம் என்றால், சாம்பமூர்த்தி சென்னைப் பட்டணத்துக்குப் போய் உத்தியோகம் பார்ப்பது எப்படி?
அப்போதுதான் ரங்கநாயகி, தான் படித்த பெண், அதோடு மேஜரானவள் என்பதை நினைவு கூர்ந்தாள். பெண் சுதந்திரத்தில் தனக்குள்ள ஆழ்ந்த பற்றையும் வெளிக்காண்பிக்க ஆரம்பித்தாள். அவளுடைய தமையனாரிடம் தனக்காக அவன் வரன் தேட வேண்டிய அவசியம் இல்லையென்றும் சாம்பமூர்த்தி மேல் தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரையே தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் மனம் விட்டுச் சொன்னாள். இதை யார் ஆட்சேபித்த போதிலும், தான் பொருட்படுத்தப் போவதில்லையென்றும் கண்டிப்பாகத் தெரியப்படுத்தினாள்.
இதெல்லாம் சாம்பமூர்த்திக்கு ஒருவாறு தெரிந்த போது, அவனும் தைரியத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். (தைரியம் என்பது இங்கே பேனாவைக் குறிக்கும்) ரங்கநாயகியின் தமையனுக்கு ஒரு கடிதம் எழுதினான். ரங்கநாயகியைத் தான் காதலிப்பதாகவும், வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் வைத்துக் காப்பாற்றுவதாகவும், அவளைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்றும் மரியாதையாகக் கேட்டுக் கொண்டான். அதோடு, ரங்கநாயகியும் தன்னைக் காதலிக்கிறபடியால், மனமொத்த தங்களுக்கிடையில் குறுக்கே வந்து நிற்பதற்கு யாருக்குமே பாத்தியதை கிடையாது என்பதையும் குறிப்பிட்டிருந்தான்.
மேற்படி கடிதம் எழுதிச் சில நாள் வரையில் அதற்குப் பதில் வருமென்று சாம்பமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் வராமற் போகவே, நேரிலேயே பதிலைத் தெரிந்து கொண்டு திரும்புவதென்று சாம்பமூர்த்தி வக்கீல் வீட்டுக்குக் கிளம்பினான்.
வக்கீல் வீட்டு வாசலை அடைந்ததும், சாம்பமூர்த்திக்கு உள்ளே ஏதோ ரகளை நடந்து கொண்டிருக்கிறதென்று தெரிய வந்தது. நாலைந்து பேர் சேர்ந்தாற் போல் பேசுகின்ற சத்தம் கேட்டது. அந்த இரைச்சலுக்கிடையே ஒரு விம்முகின்ற குரல் - ஆங்காரம் நிறைந்த குரல் - சாம்பமூர்த்தியின் காதில் விழுந்தது; அவனுடைய நெஞ்சைப் பிளந்தது. அந்தக் குரல் ரங்கநாயகியினுடையதுதான் என்று சொல்ல வேண்டுமா?
ஒரு கண நேரத்திற்குள் சாம்பமூர்த்தி உள்ளே நடப்பது என்னவென்பதைக் கற்பனை செய்து கொண்டான். ரங்கம் தன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று பிடிவாதம் பிடிக்கிறாள். மற்றவர்கள் கூடாது என்று சொல்லி அவளை வற்புறுத்துகிறார்கள்! இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் தன்னுடைய கடமை என்னவென்பதை நிர்ணயிக்கவும் அவனுக்கு அதிக நேரம் ஆகவில்லை. ரங்கநாயகிக்குத் துணையாகப் போய் அவள் அருகில் நிற்க வேண்டியதுதான்; நின்று, அவளைச் சுற்றியுள்ள துஷ்ட மிருகங்களிடமிருந்து அவளைக் காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியதுதான்; சந்தேகம் என்ன?
இலேசாகச் சாத்தியிருந்த வாசற் கதவைப் படீரென்று திறந்து கொண்டு சாம்பமூர்த்தி உள்ளே போனான். ஏறக்குறைய அவன் எதிர்பார்த்தக் காட்சிதான் அங்கே காணப்பட்டது. ரங்கநாயகி கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாள். கண்களிலிருந்து கண்ணீர் மையுடன் கலந்து வழிந்து கொண்டிருந்தது. வக்கீல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவி, வயதான விதவை அத்தை, அக்கா, அத்திம்பேர் ஆகியவர்கள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகள் பயந்த தோற்றத்துடன் அங்குமிங்கும் நின்றார்கள்.
இதையெல்லாம் ஒரு கண நேரத்தில் சாம்பமூர்த்தி பார்த்தான். சகுந்தலை துஷ்யந்தனைப் பார்த்து, "அட பாவி! என்னை விபச்சாரி என்றா சொன்னாய்?" என்று கேட்கும் காட்சி அவனுக்கு ஞாபகம் வந்த்து. அந்தக் காட்சியில் சகுந்தலையின்மேல் தனக்கு ஏற்பட்ட இரக்கம், துஷ்யந்தன் மேல் உண்டான கோபம் எல்லாம் அப்படியே உள்ளத்தில் தோன்றின. சகுந்தலைக்கு அச்சமயம் தன்னால் உதவியொன்றும் செய்யமுடியவில்லை. ஆனால், இப்போது ரங்கநாயகிக்கு உதவி செய்யும் சக்தி தன்னிடம் இருக்கிறது. அவளை அந்தப் பேய் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியது தன்னுடைய கடமை. இப்படியெல்லாம் சில விநாடி நேரத்திற்குள் சாம்பமூர்த்தி சிந்தித்துத் தீர்மானித்துக் கொண்டு ரங்கநாயகிகு எதிரே போய் நின்று, அவளுடைய முகத்தைக் கம்பீரமாய்க் கருணை ததும்ப நோக்கினான்.
"ரங்கம், இவர்கள் உன்னை..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.
சாம்பமூர்த்தி வந்ததிலிருந்தே, அங்கிருந்தவர்கள் அவ்வளவு பேருடைய முகமும் ஒரு மாதிரியாகி விட்டது. ரங்கநாயகியும் சட்டென்று தலைகுனிந்து சேலைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
சாம்பமூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே அவள் பளிச்சென்று தலை நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவனுடைய பேச்சில் குறுக்கிட்டு விம்முகின்ற குரலில், "சார்! இவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினாள்.
இதற்குள் வக்கீல், கோபமான குரலில் "ரங்கம்! உனக்கு என்ன பைத்தியமா? இவனிடம் என்ன சொல்லப் போகிறாய்?" என்றார்.
ரங்கநாயகி இன்னும் ஆத்திரத்துடன் "ஆமாம், நீங்கள் சொன்னதைத்தான் சொல்லப் போகிறேன். ஏன் மறைக்க வேண்டும்? ஸார்! இவர்கள் எல்லாரும் உங்கள் தாயாரைப் பற்றி அவதூறு சொல்கிறார்கள். உங்கள் தாயார் நடத்தைப் பிசகு உள்ளவராம். இன்னும்...இன்னும்... அவர் விதந்துவான பிறகு உங்களைப் பெற்றாராம். இந்தமாதிரி அபாண்டமான பொய் சொல்லுகிறவர்களிடம் நான் எப்படி இருப்பேன்? என்னை உடனே அழைத்துப் போங்கள்!" என்றாள்.
இந்தக் கர்ண கொடூரமான வார்த்தைகளை ரங்கநாயகி சொல்லி முடித்த போது அங்கே எல்லையற்ற நிசப்தம் குடி கொண்டது.
எல்லோரும் ஒரேயடியாகச் சாம்பமூர்த்தியின் முகத்தை நோக்கினார்கள். அந்த முகத்தில் சொல்ல முடியாத குரோதம் பொங்கிற்று. அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.
வக்கீல், 'இன்று இங்கே கொலை விழப் போகிறது!' என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படிச் சொல்லி அனுப்புவதென்று யோசிக்கத் தொடங்கினார்.
சாம்பமூர்த்தி ஏதோ பேசுவதற்கு முயன்றான். ஆனால், வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை.
அடுத்த வினாடி அவனுடைய முகம் தொங்கி விட்டது. முகத்தில் தோன்றிய குரோதமும் வேதனையாக மாறியது.
ஒரு நிமிஷம், இவ்விதம் சாம்பமூர்த்தி நின்று கொண்டிருந்தான். பிறகு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் யாருடைய முகத்தையும் பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வீட்டு வாசற்படியைக் கடந்த போது, "இப்போது என்ன சொல்கிறாய் ரங்கம்!" என்று வக்கீலின் குரல் கேட்டது. யாரோ சிரிக்கும் சத்தமும் கேட்டது. சிரிப்புக்கு நடுவில் விம்மல் ஒலியும் கலந்து வந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் தெய்வம் - En Theivam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாம்பமூர்த்தி, ரங்கநாயகி, தான், விட்டது, என்ன, செய்து, அவன், இன்னும், கல்யாணம், வக்கீல், அவள், அவனுடைய, கொண்டு, காதல், சொல்லிக், கொண்டிருந்தான், சொல்ல, சொல்லி, எல்லாம், வந்தது, போய், போது, ரங்கம், வந்து, குரல், அந்த, அவளுடைய, இவர்கள், நின்று, வீட்டு, கேட்டது, கொண்டான், அழைத்துப், உள்ளே, எப்படி, அவனுக்கு, சாம்பமூர்த்தியின், அவர்களுடைய, பாடம், வீட்டில், வக்கீலின், பெண், அசடு, நிலைமை, முகத்தில், தெரிந்து, ரங்கநாயகியும், அதிக