என் தெய்வம்
திருநீர்மலையைப் பார்க்க
வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு காலமாக இருந்து வந்தது. ஆங்கிலக் கதைகளில்
'கிரெட்னா கிரீன்' என்னுமிடத்தைப் பற்றிச் சொல்கிறார்களே, அந்த மாதிரி
நம் தமிழ்நாட்டுக்குத் திருநீர்மலை என்று கேள்விப்பட்டிருந்தேன். தொல்காப்பியர்
காலத்துத் தமிழ்நாட்டை இந்தக் காலத்தில் திருநீர்மலையில் காணலாம் என்றும்
சொன்னார்கள். அதாவது காதல் மணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவனும்
ஒருத்தியும் திருநீர்மலையைத்தான் சாதாரணமாய்த் தேடி வருவது வழக்கமாம்.
எனவே அந்த ஊர்க் கோவிலில் அடிக்கடி காதல் திருமணங்கள் நடைபெறுமாம். இக்காரணங்களினால்
தான் திருநீர்மலையைப் பார்க்க எனக்கு ஆசை உண்டாகியிருந்தது. எனவே, சமீபத்தில்
ஒருநாள் திருநீர் மலையைப் பார்ப்பதற்காகப் பயணம் கிளம்பிச் சென்றேன்.
'விடியாமூஞ்சி எங்கேயோ போனால் எதுவோ கிடைக்காது' என்பார்களே அது மாதிரி,
நான் போன சமயம் பார்த்துத் திருநீர்மலை வேறு எங்கேயாவது போயிருக்குமோ
என்று கொஞ்சம் மனதில் பயம் இருந்தது. நல்ல வேளையாக திருநீர்மலை அப்படியொன்றும்
செய்துவிடவில்லை. திருநீர்மலைக்கோவிலும் ஊரிலேதான் இருந்தது. இன்னும்
நான் போன அன்று அந்தக் கோவிலில் ஒரு கல்யாணமும் நடந்தது. கல்யாணம் என்றால்
எப்பேர்ப்பட்ட கல்யாணம்? மிகவும் அதிசயமான கல்யாணம். தம்பதிகளையும் புரோகிதரையும்
தவிர, ஒரே ஒரு விருந்தாளி தான் கல்யாணத்துக்கு வந்திருந்தது! அந்த விருந்தாளி
மணமகனின் தாயார் என்று தெரிந்து கொண்டேன்.
திருமாங்கல்ய தாரணம் ஆகி மற்ற விவாகச் சடங்குகளும் முடிந்த பிறகு, புரோகிதர் "சுவாமி சந்நிதிக்குப் போய் முதலில் நமஸ்காரம் செய்யுங்கள்; அப்புறம் அம்மாவுக்கு!" என்றார். ஆனால், தம்பதிகள் இருவரும் சொல்லி வைத்தாற்போல், அம்மாவுக்கு முதலில் நமஸ்காரம் செய்தார்கள். ஆனந்தக் கண்ணீர் என்பதை அப்போது நான் பார்த்தேன். மணமக்களை அன்புடன் அணைத்து ஆசீர்வதித்த அந்த அம்மாளின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று. கண்ணீர் என்றால் எப்படி? ஒரே அருவிதான்!
இதையெல்லாம் பார்த்து என்னால் தாங்கவே முடியவேயில்லை. இந்தக் கல்யாணத்தில் ஏதோ விஷயமிருக்கிறதென்றும், அதைத் தெரிந்து கொள்ளாமல் திருநீர்மலையை விட்டுக் கிளம்புவதில்லையென்றும் முடிவு செய்து கொண்டேன். மாப்பிள்ளைப் பையனுடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து சிநேகம் செய்து கொண்டு கொஞ்சங் கொஞ்சமாக அவர்களுடைய வரலாற்றை அறிந்தேன். இதோ அந்த வரலாறு...
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் தெய்வம் - En Theivam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அந்த, கண்ணீர், கல்யாணம், செய்து, திருநீர்மலை, நான்