என் தெய்வம்
3
அனந்தராமன் காலமான பிறகு அவனுக்குச் செய்ய
வேண்டிய உத்திரக்கிரியைகளையெல்லாம் செல்லம் நடத்தியதுடன், அவன் பட்டிருந்த
கடன்களையெல்லாம் தீர்த்தாள். எல்லாம் போக கடைசியில் சொற்பச் சொத்துத்தான்
மிஞ்சியது. அதை வைத்துக் கொண்டு கிராமத்தில் நிம்மதியாய்க் காலங் கழிக்கலாமென்று
சென்றாள்.
ஆனால், 'நிம்மதி' மட்டுந்தான் ஏற்படவில்லை. தெய்வமென்று போற்றிய கணவன் தனக்குச் செய்த துரோகத்தை நினைத்து நினைத்து, அவள் மனம் புண்ணாயிற்று. தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்காமல் போன துரதிர்ஷ்டத்தை நினைத்து அவள் வேதனை அடைந்தாள். கடவுளை நொந்து கொண்டாள். இவையெல்லாவற்றையும் விட, தன் பதியின் உள்ளத்தைத் தன்னிடமிருந்து திருடிக் கொண்ட மாயக்கள்ளி யார்? அவள் எப்படியிருப்பாள்? தன்னிடம் இல்லாத வசீகரம் அவளிடம் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள, அவள் மனம் துடித்துக் கொண்டேயிருந்தது.
அப்புறம் அத்தான் இரண்டொரு தடவை வந்தான். செல்லம்மாளிடம் மிகுந்த அநுதாபங் காட்டியதுடன், "இப்பேர்ப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்த பாவி"யைப் பற்றி இடித்துக் காட்டினான். அனந்தராமனுக்குச் செல்லம்மாள் எவ்விதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதையும், இந்தக் காலத்தில் விதவா - விவாகம் சாதாரணமாய் நடக்கிறதென்பதையும், ஜாடைமாடையாய்க் குறிப்பிட்டு வந்தான்.
ஆனால், செல்லம்மாளோ அவனை விஷம் போல் வெறுக்க ஆரம்பித்தாள். தன்னுடைய மனம் இப்போது நிம்மதியில்லாமல் தவிப்பதற்கெல்லாம் காரணம் அத்தான் தான் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியிருந்தது. அவனை யார் சனீசுவரன் மாதிரி அந்தத் தஞ்சாவூர்க்காரியைப் பற்றிச் சொல்லச் சொன்னது? அவன் சொல்லாமலிருந்தால் தான் புருஷனிடம் கொண்டிருந்த பக்தியில் சிறிதும் களங்கம் ஏற்படாமல் இருந்திருக்குமல்லவா? இப்போது இம்மாதிரி தன் உள்ளத்தை அரித்து எடுத்துக் கொண்டிருக்காதல்லவா?
ஒருநாள் செல்லம்மாள் இந்த ஆத்திரத்தையெல்லாம் அத்தானிடம் காட்டி, அவனை, "இனிமேல் இங்கே வரவேண்டாம்" என்று சொல்லி விட்டாள். அவனும் அத்துடன் ஒழிந்து போனான்.
அனந்தராமன் காலமாகிச் சுமார் ஒன்றரை வருஷ காலம் ஆயிற்று. அப்போது ஓர் அதிசயமான கடிதம் செல்லம்மாளுக்கு வந்தது. அது தஞ்சாவூரிலிருந்து வந்தது. கடிதத்தின் அடியில், "அனாதை அம்முலு" என்று கையெழுத்துப் போட்டிருந்தது. தான் சாகக் கிடப்பதாகவும், சாவதற்கு முன் செல்லம்மாளிடம் ஒரு முக்கியமான் சமாசாரம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லாமல் செத்துப் போனால், தன்னுடைய நெஞ்சு வேகாது என்றும், ஆகையால் உடனே புறப்பட்டு வந்து தன்னைப் பார்க்க வேண்டுமென்றும், அந்த அனாதை ஸ்திரீ எழுதியிருந்தாள்.
செல்லம்மாள் அந்தக் கடிதத்தைத் திரும்பித் திருப்பிப் படித்து யோசனை செய்து கொண்டிருந்தாள். கடிதம் எழுதியது யார் என்று அவள் மனதிற்கு உடனே தெரிந்து போய்விட்டது. அதைப்பற்றி அவளுக்குச் சந்தேகமே இல்லை. போவதா, வேண்டாமா என்று தான் யோசனை செய்தாள். "செத்தால் சாகட்டுமே? இவளை நான் என்ன போய்ப் பார்ப்பது" என்று ஒரு சமயம் நினைத்தாள். "இதில் ஏதாவது சூது இருக்குமோ, என்னமோ?" என்று ஒரு பக்கம் பயமாயிருந்தது. இதையெல்லாம் மீறி அவள் எப்படித்தான் இருப்பாள், அவளைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிற்று. அவள் அப்படி என்ன சமாசாரம் சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ளவும் அவா உண்டாயிற்று. அதோடு அவள் சாவதற்கு முன்னால் நேருக்கு நேராக அவளுக்குச் சாபம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் ஒரு பக்கம் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.
செல்லம்மாள் யோசனை செய்து கொண்டிருக்கும் போதே இரண்டாவது கடிதமும் வந்துவிட்டது. உடனே புறப்பட்டு வராவிட்டால், தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியை செல்லம்மாள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் என்றும் அதில் எழுதியிருந்தது. எவ்வளவு அசௌகரியமிருந்தாலும், உடனே புறப்பட்டு வரவேண்டுமென்று ரொம்பவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தது.
செல்லம்மாள் அன்றைக்கே கிளம்பி மறுநாள் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தாள். சந்து பொந்துகளுக்குப் பேர் போன தஞ்சாவூரில் கடிதத்தில் கொடுத்திருந்த விலாசத்தைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் கஷ்டமாயிருந்தது. கடைசியில், எப்படியோ கண்டு பிடித்தாள். கிழ வேலைக்காரி ஒருத்தி செல்லம்மாளை அழைத்துக் கொண்டு போய் மச்சு அறையில் விட்டாள். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலிலே ஒரு அனாதை ஸ்திரீ படுத்திருந்தாள். உண்மையிலேயே அவள் சாகக் கிடக்கிறாள் என்பது பார்த்தவுடனே தெரிந்து போயிற்று. அந்த நிலைமையில் கூட அவள் முகத்தில் ஒரு களை இருந்தது. அதைக் காட்டிலும் அந்த முகத்தில் குடி கொண்டிருந்த சோகம் செல்லம்மாளின் உள்ளத்தின் அடிவாரத்தில் மறைந்திருந்த இரக்க உணர்ச்சியை எழுப்பிற்று. செல்லம்மாள் தான் சாபங் கொடுக்க வேண்டுமென்று வந்ததையெல்லாம் மறந்து அவள் சொல்வதைக் கேட்கச் சித்தமானாள்.
செல்லம்மாளைக் கண்டதும் அந்தப் பெண் படுத்தபடியே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டாள். அவளை தன் அருகில் உட்காரச் சொன்னாள். மிகவும் ஈனமான குரலில், குழந்தைப் பிராயத்தில் சிறு தாயார் கொடுமைகளுக்கு ஆளானதிலிருந்து தொடங்கி, தன்னுடைய துயரக் கதையை 'மளமள'வென்று சொல்லி முடித்தாள். முடிப்பதற்குள் பல தடவை செல்லம்மாளின் கண்களில் ஜலம் துளிர்த்து விட்டது.
கடைசியாக, உலக வாழ்க்கையின் கஷ்டங்களைப் பொறுக்க முடியாமல், அம்முலு தண்டவாளத்தில் விழுந்து பிராணனை விடுவதென்று தீர்மானித்தாள். அவ்விதம் தண்டவாளத்தில் படுத்துக் கிடந்த போதுதான் அனந்தராமன் வந்து அவளைத் தொட்டு எழுப்பினார். அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லி அழைத்துப் போனார். அவளுடைய நிர்க்கதியான நிலைமையைத் தெரிந்து கொண்டு தஞ்சாவூருக்கு அழைத்துப் போய்த் தனி வீட்டில் குடி வைத்தார். வாழ்நாள் முழுவதும் அன்பான வார்த்தையைக் கேட்டறியாத அம்முலு அனந்தராமனிடம் தன்னுடைய இருதயத்தை ஒப்புவித்தாள். அனந்தராமன் அடிக்கடி செல்லம்மாளைப் பற்றியும் அவளுடைய உயர்ந்த குணத்தைப் பற்றியும் அம்முலுவிடம் சொல்வதுண்டு. அப்போதெல்லாம் அம்முலுவின் மனம் படாத வேதனைப்படும் - அப்படிப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்கிறோமேயென்று. இப்படியே சில காலம் சென்றது. ஒரு நாளைக்கு அனந்தராமன் செல்லம்மாளின் அத்தானை ரயிலில் சந்தித்தார். அவனுடன் பேசியதிலிருந்து அத்தானுக்கு தன்னுடைய இரகசியம் தெரியுமென்று அறிந்து கொண்டார். அவன் போய்ச் செல்லம்மாளிடம் சொல்லி விட்டால் என்ன செய்கிறதென்று அனந்தராமன் பீதியடைந்தார். அம்முலுவிடம் "நானே போய்ச் செல்லம்மாளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன்; அப்புறம் நடப்பது நடக்கட்டும்" என்று கூறி விட்டுக் கிளம்பினார்.
கொஞ்ச நாளைக்கெல்லாம் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஊருக்குப் போய்ச் சேரும் போதே 104 டிகிரி சுரத்துடன் போனதாகவும், 'காலா ஹஸார்' என்னும் விஷ சுரம் தன்னைப் பீடித்திருப்பதாகவும், பிழைப்பது துர்லபம் என்றும் தெரிவித்திருந்தார். அதோடு செல்லம்மாளிடம் உண்மையைச் சொல்லத் தனக்குத் தைரியம் வரவில்லை என்றும், அவளுடைய மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லையென்றும், தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அம்முலுவே எல்லாவற்றையும் செல்லம்மாளிடம் சொல்லி விட வேண்டும் என்றும், அவள் அம்முலுவுக்கு உதவி செய்து காப்பாற்றுவாள் என்றும் எழுதியிருந்தார்.
அதற்குப் பிறகு அனந்தராமனிடமிருந்து கடிதம் ஒன்றும் வரவில்லை. துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த அம்முலு ஒரு ஆளை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச் சொன்னாள். ஆள் வந்து அனந்தராமன் இம்மண்ணுலகை நீத்த விவரத்தைக் கூறினான்.
"அக்கா அந்த நிமிஷத்திலேயே நான் பிராணனை விட்டிருக்க வேண்டியது. ஆனால், அதோ தொட்டிலில் இருக்கிறானே, அவனுக்காக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். அவன் அப்போது என் வயிற்றில் இருந்தான், ஆறுமாதம்" என்றாள் அம்முலு.
அம்முலுவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த போது செல்லம்மாளின் கவனம் அடிக்கடி அதே அறையின் ஒரு மூலையில் தரையில் வைத்திருந்த தொட்டிலின் பக்கம் சென்று கொண்டிருந்தது. அந்தத் தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அம்முலுவின் கதை முடியும் சமயத்தில் குழந்தை தன் கண்களை மலர விழித்து அப்புறமும் இப்புறமும் பார்த்து அழத் தொடங்கியது. செல்லாம்மாள் ஒரு பாய்ச்சல் பாய்ந்து தொட்டிலின் பக்கம் சென்றாள். குழந்தையின் முகம் அப்படியே அப்பாவை உரித்து வைத்தது போல் இருந்ததைக் கண்டாள்.
"குழந்தை! சாம்பு! அப்போது நீ உன்னுடைய பிஞ்சுக் கைகளை நீட்டிக் கொண்டு, மழலை வாயால் 'அம்மா' என்று சொல்லிக் கொண்டு என்னிடம் தாவி வந்தாய். நான் உன்னை வாரி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டேன். அந்த நிமிஷம் எனக்கு உலகமே மறந்து போய்விட்டது. எனக்குக் குழந்தை இல்லை என்ற குறையைப் பகவான் பூர்த்தி செய்துவிட்டார் என்ற ஒரு நினைவுதான் இருந்தது" என்றாள் செல்லம்மாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் தெய்வம் - En Theivam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவள், செல்லம்மாள், என்றும், அனந்தராமன், செல்லம்மாளிடம், தெரிந்து, கொண்டு, சொல்லி, குழந்தை, அம்முலு, தான், அந்த, தன்னுடைய, வேண்டும், செல்லம்மாளின், உடனே, பக்கம், கொண்டிருந்தது, போய்ச், கடிதம், மனம், என்ன, கொண்டிருந்த, அவன், யார், அம்முலுவின், அவளுடைய, நினைத்து, நான், யோசனை, அப்போது, வந்தது, அவனை, புறப்பட்டு, அனாதை, வந்து, செய்து