சுண்டுவின் சந்நியாசம்
பிற்பாடும் சில மாதம் காலம் சுண்டு அடிக்கடி
என்னைச் சந்தித்ததோடு 'லுல்லு' 'லுல்லு' என்று சொல்லி என் பிராணனை வாங்கிவிட்டான்.
காது செவிடாய்ப் போய் விட்டாலே தேவலை என்று தோன்றியது. லுல்லுவின் அசல்
பெயர் லீலா மனோகரி என்று அறிந்தேன்; சுப்பிரமணியன் என்னும் பெயர் சுண்டு
என்று திரிந்திருக்கும் போது லீலா மனோகரி லுல்லு ஆகக் கூடாதா?
லுல்லுவும் அவள் தாயாரும் அநாதைகள் என்றும் ஏதோ சினிமாவில் சில்லறைப் பாத்திரங்களாக நடித்தும் குரூப் டான்ஸுகளில் ஆடியும் ஜீவனம் நடத்துகிறார்கள் என்றும் தெரிந்தது.
அத்தகைய லுல்லுவிடம் சுண்டு தன் உள்ளத்தை முழுதும் பறிகொடுத்திருந்ததோடு, அவளை உலகம் மெச்சும் சினிமா நட்சத்திரமாகச் செய்து விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததையும் அறிந்தேன்.
சுண்டுவின் சுபாவம் எனக்குத் தெரியுமாதலால் லுல்லுவிடமும் அவள் தாயாரிடமும் 'ஐயோ! பாவம்' என்று இருந்தது. இவனுடைய வெறும் வாய் புரடாக்களைக் கேட்டு அவர்கள் ஏமாந்து போய்விடப் போகிறார்களே என்று இரக்கப்பட்டேன். அவர்களை ஒரு நாள் நேரில் பார்த்து எச்சரிக்கலாமா என்று கூடத் தோன்றியது.
நல்ல வேளையாக, அந்த எச்சரிக்கைக்கு அவசியமில்லாமல் போயிற்று.
ஒரு நாள் சுண்டு தலைவிரி கோலமாய் அதாவது கிராப்புத் தலையை வாராமல் ஓடி வந்து, "அப்பனே! இந்த உலகம் இருக்கிறதே, மகா சண்டாள உலகம்; மகா மோசமான உலகம்! அயோக்கிய உலகம்; அக்கிரம உலகம்; மோச உலகம்; நாச உலகம்; இந்த உலகத்திலே இனி ஒரு நிமிஷங் கூட என்னால் வாழ்க்கை நடத்த முடியாது. இதை ஒரே அடியாக விட்டொழித்து தலை முழுகிவிடப் போகிறேன்" என்றான்.
"சரி" என்றேன்.
"சரி என்று ஒரு தடவை சொன்னால் போதாது. நூறு தடவை சொல்ல வேணும்!" என்றான்.
"நூறு தடவை சரி!" என்றேன்.
"இந்த மோச உலகத்தைத் துறந்து சந்நியாசம் வாங்கிக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டேன். யார் தடுத்தாலும் கேட்க மாட்டேன்" என்றான்.
"அடடா! லுல்லுவின் கதி என்ன ஆகிறது?" என்றேன்.
"லுல்லு! லுல்லு! நல்ல லுல்லு! அவளாலேதான் அப்பா, நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன். லுல்லு செய்த மோசடியினால்தான்!"
கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து ஒருவாறு விஷயம் இன்னதென்று தெரிந்து கொண்டேன்.
லுல்லுவுக்காகச் சுண்டு கதையும் 'டயலாக்'கும் எழுதி ஒரு டாக்கி முதலாளியிடம் எடுத்துக் கொண்டு போனான். தன்னை டைரக்டராகவும், லுல்லுவைக் கதாநாயகியாகவும் எடுத்துக் கொண்டால் அந்த அற்புதமான கதையைக் கொடுப்பேன் என்றான். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்தபோது, லுல்லு மேற்படி டாக்கி முதலாளியைச் சந்திக்க நேர்ந்தது. சில தினங்கள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. கடைசியில் மேற்படி டாக்கி முதலாளி லுல்லுவைக் கதாநாயகியாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக தம்முடைய சொந்த நாயகியாகவே ஏற்றுக் கொள்ள முன் வந்தார்! லுல்லுவுக்கும் மேற்படி முதலாளிக்கும் கலியாணம் நிச்சயமாகி விட்டது. சுண்டு உலகத்தைத் துறந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொள்ள எண்ணியதற்குக் கொஞ்சம் காரணம் இருக்கத்தான் செய்தது!
ஆனால் சுண்டுவாவது, சந்நியாசம் வாங்கிக் கொள்வதாவது! நாலைந்து நாளில் லுல்லுவை மறந்துவிட்டு இன்னோர் உல்லுவைப் பிடித்துக் கொண்டு திரிவான் என்று நான் எண்ணினேன். அவனிடமும் சொன்னேன். சுண்டு வெகு கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய் விட்டான்.
*****
ஒரு மாதத்துக்கெல்லாம் சுண்டுவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. "என் பேச்சை நீ நம்பவில்லையல்லவா? இத்தனாந் தேதி இன்ன மணிக்கு இந்த இடத்துக்கு வந்து பார்" என்று எழுதியிருந்தான்.
என்னதான் செய்யப் போகிறான் என்று பார்ப்பதற்காக நான் குறிப்பிட்ட இடத்துக்குப் போயிருந்தேன்.
சுண்டு தன் அழகான கிராப்புத்தலையை மழுங்க மொட்டையடித்துக் கொண்டு காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு கையில் கமண்டலத்துடன் காட்சியளித்தான்.
"அடபாவி! சொன்ன வாக்கை நிறைவேற்றி விட்டாயா?" என்று சத்தமிட்டேன்.
உடனே 'சைலன்ஸ்' என்று ஓர் இடி முழக்கக் குரல் கேட்டது.
"போ! அப்பால் போ!" என்று பல குரல்கள் கட்டளையிட்டன.
யாரோ ஒருவன் ஓடி வந்து என்னை அப்பால் இழுத்துப் போனான்.
"ஷுட்" என்றது மறுபடியும் அந்த இடிமுழக்கக் குரல்.
லுல்லுவினால் நிராகரிக்கப்பட்ட சுண்டு வாழ்க்கையில் வெறுப்படைந்து "மாய உலகம்" என்னும் படத்தில் கபட சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறான் என்று அறிந்த பிறகுதான் என் மனம் ஒருவாறு நிம்மதி அடைந்தது.
போகட்டும்! சுண்டு எந்த வழியிலாவது நாலு பணம் சம்பாதித்து யோக்கியமாக வாழ்க்கை நடத்தினால் சரி!
ஆம்; நூறு தடவை சரி!
சுபம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுண்டுவின் சந்நியாசம் - Sunduvin Sanyasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சுண்டு, உலகம், லுல்லு, கொண்டு, என்றான், தடவை, டாக்கி, எடுத்துக், அந்த, மேற்படி, நான், வாங்கிக், வந்து, நூறு, சந்நியாசம், என்றேன்