சுண்டுவின் சந்நியாசம்
நம்ம சுண்டுவை உங்களுக்குத்
தெரியுமோ, இல்லையோ? தெரியும் என்று ஒப்புக் கொண்டு விடுங்கள்! தெரியாது
என்று நீங்கள் சொன்னால் அவன் உங்களை விட்டு விடப் போகிறானா என்ன? முதுகு
வலிக்கு ஆளாவதுதான் பலனாக முடியும்.
முதன் முதலில் சுண்டுவை நான் சந்தித்தபோது அப்படித்தான் ஜால்ஜாப்பு சொல்லிப் பார்த்தேன். திடீரென்று முதுகில் ஒரு பலமான தட்டு விழவே, திடுக்கிட்டுத் திரும்பினேன். சுண்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். "என்ன, அப்பனே! ஏன் முழிக்கிறாய்? சுண்டுவை அடையாளம் தெரியவில்லையோ?" என்று என் இரண்டு தோள்களையும் பிடித்துக் குலுக்கினான். பள்ளிக்கூட ஆசிரியர்களின் கூட்டம் ஒன்றில் நான் பின் வரிசையில் உட்கார்ந்து சொற்பொழிவுகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தபோது இந்த மகத்தான சம்பவம் நடந்தது.
"ஆமாம், தெரியத்தான் இல்லை!" என்றேன்.
"ஓஹோ!" என்று சுண்டு சிரித்து விட்டு, "அந்தக் காலத்தில் எப்படி இருந்தாயோ, அப்படியேதான் இன்னமும் இருக்கிறாய். கொஞ்சங்கூட உருவத்திலோ குணத்திலோ மாறுதல் இல்லை!" என்றான்.
"எந்தக் காலத்தில்?" என்று கேட்டேன்.
"என்னப்பா பெரிய ஆளாயிருக்கிறாயே? சிதம்பரத்திலே படித்துக் கொண்டிருந்த காலத்திலேதான்."
நான் சிதம்பரத்துக்கு அதுவரையில் போனதே கிடையாது. ஆனால் மேலும் மறுதலித்தால் முதுகுக்கு அபாயம் வரும் என்று பயந்து, "சரிதான்!" என்றேன்!
"ஏனப்பா, கிருஷ்ணசாமி, என்னை ஏமாற்றலாமென்றா பார்த்தாய்?" என்று சொல்லி மறுபடியும் முதுகிலே ஒரு தட்டு தட்டினான்.
"எனது நாமதேயம் கிருஷ்ணஸ்வாமி இல்லை நாராயண ஸ்வாமி!" என்றேன்.
"ஆகா! வந்துட்டாயா வழிக்கு! அப்படிச் சொல்லு. எங்கே கிருஷ்ணசாமி என்றதும், உன் பெயர் கிருஷ்ணசாமிதான் என்று சொல்லி டிமிக்கி கொடுக்கப் பார்க்கிறாயோ என்று சோதித்தேன். அப்பனே, நாராயணசாமி! உன் பெயர் எனக்குத் தெரியாதென்றா நினைத்துக் கொண்டாய்!"
உண்மையில் என் பெயர் நாராயணசாமியும் இல்லை! ஆனால் அதைச் சொல்லி என்ன பிரயோஜனம்?
இப்பேர்ப்பட்ட ஆளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, "சுண்டு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"என்னத்தை செய்கிறது? உன் முதுகுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு பள்ளிக்கூட உபாத்தியாயர்களின் துயரங்களைப் பற்றிய அழுகையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! இப்படி எத்தனையோ நாளாகத்தான் பேசுகிறார்கள். யாருக்கு என்ன பிரயோஜனம்? புதுடில்லி வரையில் போய் வைஸ்ராயின் தாடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கத் தயாராயிருந்தால் அல்லவா வழி பிறக்கும்! சுத்த டாணா டாவன்னாக்கள்!"
"கொஞ்சம் மெதுவாய் பேசு!" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபிறகு, "நான் கேட்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதே! அப்படியானால், நீ உபாத்தியார் இல்லையா?" என்றேன்.
"நல்ல கேள்வி கேட்டாய், அப்பா! டிபுடி கலெக்டருக்குப் பிள்ளையாகப் பிறந்துட்டு, அந்தப் பாழும் பரீட்சையிலே ஒரு மார்க்குக் குறைந்து போனதினாலே ஐ.சி.எஸ்.ஸுக்குப் போக முடியாமல் உட்கார்ந்திருக்கேன் நான். என்னைப் பார்த்து வாத்தியார் வேலையிலிருக்கிறாயா என்று நீ கேட்கிறாயே! உன்னைப் போன்ற ஆசாமிகள் இருக்கிறது வரையில் இந்த உலகம் உருப்படப் போகிறதில்லை! ஒரு நாளும் உருப்படப் போகிறதில்லை! நான் சொல்லுகிறது தெரிந்ததோ, இல்லையோ!" என்று என் முதுகின் மூலம் அதை அழுத்தமாய்த் தெரியப்படுத்த முயன்றான்.
"தெரிந்தது அப்பனே! தெரிந்து விட்டது!" என்று கதறினேன்.
இம்மாதிரியாக எனக்கும் சுண்டுவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்புறம் சுண்டுவும் நானும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத விதமாக வெல்லாம் சந்தித்து நாளொரு முதுகும் பொழுதொரு தட்டுமாக எங்கள் நட்பை வளர்த்துக் கொண்டு வந்தோம்.
ஒரு நாள் சுண்டுவைச் சந்தித்தபோது, "இப்போது என்ன செய்கிறாய்?" என்று கேட்டேன்.
"அப்படிக் கேள் சொல்கிறேன். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தானே கேட்கிறாய்? இந்த உலகத்துக்குப் புத்தி புகட்ட வழி தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் இருக்கிறதே; மகா முட்டாள் உலகம். பணம் உள்ளவனுக்குத்தான் இந்த உலகத்தில் மதிப்பு. பணக்காரன் என்னத்தை உளறிக் கொட்டினாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்கிறார்கள். பணமில்லாதவன் எவ்வளவு அறிவாளியா யிருந்தாலும் அவன் பேச்சு அம்பலத்தில் ஏறுகிறதில்லை."
"உலகம் அப்படித்தான் இருக்கிறது. என்ன செய்கிறது?" என்று சுண்டுவை ஆமோதித்தேன்.
"ஆனால் உலகம் என்ன செய்யும்? உலகத்தைக் குறை கூறி என்ன பயன்? உலகத்தைப் படைத்த கடவுளைச் சொல்ல வேண்டும். நான் மட்டும் கடவுளாயிருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? நமது அளுகுண்ணி புளுகுண்ணி செட்டியார், அண்ணா மலேரியா முதலியார், அப்பண்ணா அபக்கண்ணா அய்யங்கார், கிருபணாஜி தசல்பாஜி ஐயர், டபிள் நிமோனியாடிலாமியா, திஜோடியா டிமிக்கிலால் டிங்கர்லால், பயானதாஸ் மயானதாஸ் பயங்கர்லால் ஆகிய எவ்வளவு பணக்காரப் பேர்வழிகளையும் கூப்பிட்டு வரிசையாக நிறுத்துவேன். நிறுத்தி, "உங்கள் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது? உண்மையைச் சொல்லுங்கள்!" என்று காதைப் பிடித்துத் திருகுவேன். அவர்கள் உண்மையைச் சொல்லியாக வேண்டும். சொல்லாவிட்டால் யார் விடுகிறார்கள்! பிறகு, "இவ்வளவு பணத்தையும் என்ன மாதிரி செலவு செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்பேன். அவர்கள் திருதிருவென்று முழிப்பார்கள்! "செலவு செய்ய வழி தெரிந்த பேர்வழி இதோ ஒருவன் இருக்கிறான். ஒவ்வொருவரும் உங்கள் பணத்தில் சரிபாதியை நமது சுண்டுவிடம் உடனே ஒப்புவித்து விட்டு மறுகாரியம் பாருங்கள்!" என்பேன். அவர்கள் அப்படியே செய்வார்கள். செய்யாவிட்டால் யார் விடுகிறார்கள்? தானே கதறிக் கொண்டு பணத்தைக் கொண்டு வந்து கலகலவென்று கொட்ட வேண்டாமா?
ஆனால் சுண்டுவின் இஷ்டப்படி கடவுள் நடப்பதாகத் தெரியவில்லை. எனவே என்னிடம் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும், டிராம் செலவுக்கென்று தனியாக நாலு அணாவும் வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தான்.
*****
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுண்டுவின் சந்நியாசம் - Sunduvin Sanyasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, நான், கொண்டு, உலகம், சுண்டுவை, இல்லை, என்றேன், கொண்டிருக்கிறேன், இப்போது, இருக்கிறது, விட்டு, எவ்வளவு, வேண்டும், பெயர், உட்கார்ந்து, சுண்டு, கேட்டேன், சொல்லி, அப்பனே