சுண்டுவின் சந்நியாசம்
என் நம்பிக்கை வீணாயிற்று. சுண்டு சீக்கிரமே
திரும்பி வந்து, "அப்பனே! நல்ல வேலை பார்த்து என்னை ஏவி அனுப்பினாய்.
அதைக் காட்டிலும் கொட்டைப் பாக்கைப் பிழிந்து பாதாம் கீர் பண்ணு என்று
ஏவியிருக்கலாம்!" என்றான்.
"ஏன்? நமது சட்டசபை அங்கத்தினர்களை உன்னால் படிப்பிக்க முடியவில்லையோ?" என்றேன்.
"அவர்கள் முதலில் பள்ளிக் கூடத்துக்கு வந்தால் தானே படிப்பிக்கலாம்? எங்களுக்குப் படிப்பு வேண்டாம்; இருக்கிற படிப்பு போதும் என்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கொண்டு போய் இராஜ்ஜியத்தை ஒப்பித்தால் அது ஏன் உருப்படப் போகிறது?" என்றான் சுண்டு.
"அப்படியானால் உலகத்தை முன்னுக்குக் கொண்டு வருகிற காரியம் 'ஹோப்லெஸ்' என்று விட்டு விட வேண்டியதுதான், இல்லையா?" என்றேன்.
"நன்றாயிருக்கிறது. அப்படியெல்லாம் விட்டு விடலாமா? உலகத்தின் தலையிலே ஒரு குட்டுக் குட்டி அதை முன்னுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டாமா? உலகத்தைப் படிப்பிக்கிறதற்கு வேறு வழி ஒன்று கண்டுபிடித்து விட்டேன். இத்தனை நாள் அந்த யோசனை ஏன் தோன்றவில்லையென்பதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. ஆம்; சில சமயம் நாம் தூரத்தில் மலை உச்சியில் உள்ள விளக்கைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். காலடியிலுள்ள சூரியன் கண்ணில் படுவதில்லை! சினிமா டாக்கி என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாயோ இல்லையோ?"
"கேள்விப்பட்டிருக்கிறேன்."
"இந்த சினிமா ஒன்று மட்டும் என் கையில் இருந்தால் போதும், அதைக் கொண்டு நமது யுனிவர்ஸிடி வைஸ் சான்ஸலர்களையும், பாடப் புத்தகக் கமிட்டி அங்கத்தினர்களையும் கூடப் புதுப்பித்து விடலாம்! ஆனால் இப்போது இந்த சினிமா உலகம் கெட்டுப் போயிருக்கிறது போல் வேறெதுவும் கெட்டுப் போயிருக்கவில்லை. ஒண்ணாம் நம்பர் நிரட்சர குட்சிகள் எல்லாரும் டைரக்டர்கள் என்று வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்குக் கதை எழுதுகிறவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. நடிகர்கள் மகாமகாமகாமகா மோசம். எல்லாரையும் ஒரே 'ஸ்வீப்'பா 'ஸ்வீப்' பண்ணி வங்காளக்குடாக் கடலிலே எறிந்து விட்டு மறுபடி புதிதாக ஆரம்பிக்க வேண்டும்."
"அப்படியே செய்துவிட்டால் போகிறது" என்றேன்.
"அதற்கு உன்னுடைய ஒத்தாசையும் கொஞ்சம் தேவை."
"என்ன செய்ய வேணும்?"
"பத்து லட்சம் ரூபாய் கண்ணை மூடிக் கொண்டு போடுகிற முதலாளி ஒருவரை நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். அந்த மனிதர் பணத்தை என்கையில் கொடுத்துவிட்டு அப்புறம் என்ன ஏது என்று கேட்கக் கூடாது. என்னைப் பூராவும் நம்பி விட்டுவிட வேணும்! அப்போது பாரேன் சினிமா உலகம் எப்படி தலை கீழாக ஆகிறதென்று!"
"ஆகட்டும் சுண்டு, அவசியம் பார்க்கிறேன்" என்றேன்.
அடுத்த தடவை நான் மிஸ்டர் சுண்டுவைச் சந்தித்த போது அவனுடைய தோற்றம் அடியோடு மாறிப் போய் இருந்தது.
"என்ன பண்ணுகிறாய்?" என்று கேட்டதற்கு "டாக்கி உலகத்திலே பிரவேசித்து விட்டேன். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு!" என்றான்.
"கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் வேண்டுமானாலும் பொறுத்திருக்கிறேன்" என்றேன்.
"அவசியமில்லை. கொஞ்ச நாள் பொறுத்தாலே போதும். இப்போது ஒரு தமிழ் டாக்கியின் டைரக்டருக்குக் காரியதரிசியாக அமர்ந்திருக்கிறேன். டாக்கி விஷயமாய் ஆனா, ஆவன்னா தெரியாதவர்கள் எல்லாம் படத்தைக் குட்டிச்சுவர் ஆக்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அடுத்த வருஷம் இந்த நாளில் சினிமா உலகத்தில் ஒரு பெரிய புரட்சி நடக்கப் போகிறது. அதை எதிர்பார்த்துக் கொண்டிரு! நீ பாட்டுக்குத் தூங்கிப் போய் விடாதே!" என்று முதுகிலே தட்டிக் கொடுத்து எச்சரிக்கை செய்துவிட்டுப் போனான்.
அந்தப் படியே நான் தூங்காமல் சினிமா உலகப் புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். சில காலம் வரையில் ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு வேளை சுண்டு தான் தூங்கிப் போய்விட்டானோ என்று தோன்றியது.
*****
இரண்டு வருஷத்துக்குப் பிறகு சுண்டு திடீரென்று ஒரு நாள் என் எதிரே முளைத்தான். என் தோள்களும் முதுகும் வெகு பாடுபட்டன.
"நான் உன்னைக் கடைசியாக பார்த்தபோது என்ன சொன்னேன்?" என்று கேட்டான்.
"தூங்கிப் போய் விடாதே என்று சொன்னாய். இப்போது தூக்க மருந்து சாப்பிட்டாலும் எனக்குத் தூக்கம் வரமாட்டேனென்கிறது!" என்றேன்.
"சினிமா உலகில் பெரிய புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிரு என்று சொன்னேனோ, இல்லையோ? அது நடக்கப் போகிறது!"
"பேஷ்!"
"என்ன பேஷ்! பேஷாவது பேஷ்? உன்னைப் போன்ற உற்சாகமில்லாத பிரகிருதியை நான் பார்த்ததேயில்லை! உலகத்திலே இல்லாத மகா அதிசயம் நடக்கப் போகிறது என்றேன்; நீ பேஷ் என்கிறாய்?"
"பின்னே என்ன சொல்ல வேணும், அப்பா?"
"ஒன்றும் சொல்ல வேண்டாம்; எழுந்திருந்து கூத்தாடணும்"
"ஆகட்டும், சினிமாப் புரட்சி எந்த மட்டும் இருக்கிறது?"
"பாதி நடந்தாற்போலத்தான், கதையும் ஸீனோரியோவும் தயாராகிவிட்டது. 'டயலாக்'கும் முக்கால்வாசி எழுதியாகிவிட்டது. கொஞ்சம் கேட்கிறாயா?"
"காதலி! கரிய மேகங்களும் கண்டு வெட்கும்படியான ஜாஜ்வல்யமான கன்னங்களிலே குமிழ் விட்டுக் கொப்பளிக்கும் அழகு வெள்ளத்தின் ஆழத்திலே ஆழத்திலே ஆழத்திலே..."
"சுண்டு உனக்கு எப்போது தெத்துவாய் ஏற்பட்டது?" என்று கேட்டேன்.
"என்ன கேட்டாய்?" என்று வேறு உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு வந்தவனைப் போல் சுண்டு கேட்டான்.
"ஆழத்திலே, ஆழத்திலே, ஆழத்திலே என்றுசொல்லிக் கொண்டே போனாயே? ஒரு வேளை தெத்துவாய் வந்து விட்டதோ என்று கேட்டேன்."
"உன்னிடம் இதைப்பற்றியெல்லாம் பேசிப் பிரயோஜனமில்லை என்று தெரியும். தெரிந்தும் பேசினேனே? என் புத்தியை... அடித்துக் கொள்ள வேணும். அடாடா! மணி ஐந்தாகிவிட்டதே! லுல்லு அங்கே காத்துக் கொண்டிருப்பாளே?"
"லுல்லு என்பது யார் அப்பா?"
"அட நாராயணா! லுல்லுவைத் தெரியாதா? அடுத்த வருஷம் இந்த நாள் எல்லாம் லுல்லுவின் பெயர் உலகப் பிரசித்தியடையப் போகிறது. சினிமா உலகத்திலேதான் சொல்கிறேன். நீ செவிடாய்ப் போனாலும் கூட உன் காதில் அந்தப் பெயர் விழத்தான் விழும்!"
"லுல்லு என்பது யார் அப்பா?"
"சினிமா உலகத்தில் பாதிப் புரட்சியை நான் நிறைவேற்றி விட்டேன்; பாக்கிப் பாதிப் புரட்சியை லுல்லு நிறைவேற்றப் போகிறாள்! அவளைக் கதாநாயகியாக வைத்துத்தான் நான் கதையும், ஸினோரியோவும் எழுதியிருக்கிறேன். இன்னும் ஐந்தாறு மாதம் மட்டும் தூங்காமலிரு; அப்புறம் பார் அற்புதத்தை!" என்று சொல்லி விட்டுச் சுண்டு நடையைக் கட்டினான்.
என் முதுகைத் தட்டக் கூட அவன் மறந்து விட்டுப் போனது எனக்கு அளவில்லாத, அளவில்லாத, அளவில்லாத... அட சுண்டு! அளவில்லாத ஆச்சரியத்தை அளித்தது.
*****
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுண்டுவின் சந்நியாசம் - Sunduvin Sanyasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சினிமா, சுண்டு, என்ன, என்றேன், நாள், போகிறது, நான், ஆழத்திலே, கொண்டு, வேணும், புரட்சியை, பேஷ், போய், லுல்லு, அளவில்லாத, கொஞ்ச, நடக்கப், தூங்கிப், அப்பா, இப்போது, போதும், என்றான், வந்து, விட்டு, விட்டேன், சொல்ல, மட்டும், டாக்கி, அடுத்த