சுண்டுவின் சந்நியாசம்
அடுத்த தடவை நான் சுண்டுவைப் பார்த்தபோது, "பணமா! சீ! பணம் இங்கே யாருக்கு வேண்டும்? பணத்தைக் கொண்டு போய் உடைப்பிலே போடு!" என்றான். நான் திடுக்கிட்டு நிற்கையில், "பணத்தினால் மனித வர்க்கமே நாசமடைந்து வருகிறது! பணக்காரர்கள்தான் உலகத்தைப் பாழ் பண்ணி வருகிறார்கள்! பணம் சம்பாதிக்கிற எண்ணத்தை நான் விட்டு விட்டேன்!" என்றான்.
"பின்னே என்ன உத்தேசம் செய்திருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"உலகத்தை உத்தாரணம் செய்யப் போகிறேன். மனித வர்க்கத்தை மகோந்நத நிலைமைக்குக் கொண்டு வரப்போகிறேன்! ஆமாம்; தீர்மானம் செய்துவிட்டேன்!" என்றான்.
"எப்படி!" என்று கேட்டேன்.
"எப்படியா! சொல்கிறேன், கேள். நான் எழுத்தாளன் ஆகப் போகிறேன். அச்சடித்த எழுத்துக்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை. ஒரு விஷயம் அச்சில் வந்து விட்டதானால், முட்டாள் ஜனங்கள் அது எவ்வளவு அபத்தமானாலும் அப்படியே விழுங்கி விடுகிறார்கள்! இந்த உலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கு எழுத்தாளனாவது ஒன்றுதான் சரியான வழி!" என்றான்.
"ரொம்ப சந்தோஷம்!" என்றேன்.
"ஆனால் உன்னை மறந்து விடுவேன் என்று பயப்படாதே! உலகத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவுடனே உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்!" என்று அபயம் அளித்தான்.
*****
மறுபடியும் சுண்டுவைப் பார்த்தபோது, "எழுத்தாளன் ஆகும் முயற்சியில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"அப்பனே! உலகத்திலே வேறு எந்த தொழில் வேணுமானாலும் செய்யலாம். தெருக் கூட்டலாம்; ஹோட்டல் வைக்கலாம்; மந்திரி வேலை வேணுமானாலும் பார்க்கலாம். ஆனால் எழுத்தாளனாக மட்டும் ஆகக் கூடாது. அதிலும் நமது நாட்டில் இப்போது உள்ள பத்திரிகையாசிரியர்கள் இருக்கும் வரையில் எழுத்தாளனாகவே ஆகக் கூடாது. பத்திரிகாசிரியர்களா இவர்கள்? சுத்தத் திருடர்கள்!"
"என்னப்பா இப்படி ஒரேயடியாக வெளுத்து வாங்குகிறாய்?"
"பின்னே என்ன என்று கேட்கிறேன்! ஓரணா இரண்டனா ஸ்டாம்புகளை திருடிக் கொள்கிறார்கள். அனுப்பிய கட்டுரைகளைத் திருப்பி அனுப்புவதும் கிடையாது!"
"ஆமாம், அப்பா, ஆமாம்! அநேகப் பத்திரிகாசிரியர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்!" என்றேன்.
"ஓஹோ நீ மட்டும் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ? நீயும் அதே வர்க்கந்தானே!"
"ஆம்; வாஸ்தவந்தான்! மன்னித்துக் கொள்!"
"மன்னிக்கிறதாவது, மண்ணாங்கட்டியாவது? நீங்கள் பத்திரிகாசிரியர்கள் இருக்கிறீர்களே, மகா கிராதகர்கள்! எழுத்தாளர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்லுவீர்கள். செத்துப் போன பிறகு நிதி வசூல் செய்து ஞாபகச் சின்னம் கட்டுவீர்கள்!"
"போகட்டும்! அது ஒரு திருப்தியாவது இருக்கிறதோ இல்லையோ?"
"நல்ல திருப்தி!"
"சரி, மேலே என்ன செய்யப் போகிறாய்?" என்றேன்.
"இனிமேல் ஒருவரை நம்பி ஒரு காரியம் செய்வதில்லை என்று தீர்மானித்து விட்டேன். நானே ஒரு பத்திரிகை வெளியிடுகிறதென்று நேற்று இரவு பன்னிரண்டரை மணிக்கு முடிவு செய்து விட்டேன்."
"ரொம்ப சந்தோஷம்."
"அதெல்லாம் வெறுமனே வாயால் சந்தோஷம் என்று சொன்னால் மட்டும் போதாது, சந்தோஷத்தைக் காரியத்திலே காட்ட வேணும்."
"எப்படிக் காட்டுகிறது?"
"ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்துக் காட்டுகிறது. எழுத்தாளனுக்கு எழுத்தாளனும் பத்திரிகைக்காரனுக்குப் பத்திரிகைக்காரனும் உதவி செய்யாவிட்டால், வேறு யார் உதவி செய்வார்கள்?"
என்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று சத்தியம் செய்ததன் பேரில், "சரி, ஒரு பூஜ்யத்தைக் குறைத்துக் கொள்!" என்று சொல்லி, அப்புறம் இன்னொரு பூஜ்யத்தையும் குறைத்துக் கொண்டு கடைசியில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனான்.
*****
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுண்டுவின் சந்நியாசம் - Sunduvin Sanyasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, நான், என்றான், சந்தோஷம், மட்டும், ஆமாம், என்றேன், கேட்டேன், விட்டேன், என்ன, உலகத்தை