சுண்டுவின் சந்நியாசம்
மறுமுறை சுண்டுவைப் பார்த்தபோது, "என்னப்பா!
சொந்தப் பத்திரிகை ஆரம்பித்து விட்டாயா?" என்று கேட்டேன். "பத்திரிகையைக்
கொண்டு குப்பையிலே போடு! இந்தப் பத்திரிகைகளைப் போல் உலகத்துக்குக் கெடுதல்
செய்வது ஒன்றுமே கிடையாது!" என்றான்.
"அந்த உண்மையை எப்படித் தெரிந்து கொண்டாய்?" என்றேன்.
"குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்வதற்கு அப்படி என்ன வந்தது? தினந்தினந்தான் பத்திரிகைகள் படிக்கிறோமே? ஒரு நாளாவது ஒரு பத்திரிகையிலாவது ஆயிரம் பொய்க்குக் குறைவாக வந்திருக்கிறதா? மார்பிலே கையை வைத்துக் கொண்டு சொல்லு!" என்றான்.
"எங்கள் குட்டை ரொம்ப உடைச்சு விட்டு விடாதே! பின்னே இப்போது என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்?" என்றதும், ஓர் அச்சடித்த துண்டுக் காகிதத்தை எடுத்துக் காட்டினான்; அதில், "மிஸ்டர் சுண்டு, ஸ்டாக் அண்டு ஷேர் புரோக்கர்" என்று அச்சிட்டிருந்தது.
மூக்கின் மேல் சுண்டு விரலை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டேன்.
"நாராயணசாமி! நான் சொல்கிறேன் கேள்! கடைசியாகப் பணம் சம்பாதிப்பதற்கு வழி கண்டு பிடித்து விட்டேன். பணம் என்றால், இந்த லயனிலே இருக்கிற பணம் வேறே எதிலும் இல்லை! உன்னுடைய டால்மியா டீல்மியா, பிர்லா கிர்லா, டாடா கீடா எல்லாரும் எப்படிக் கோடீசுவரர்கள் ஆனார்கள்? எல்லாம் இந்த ஷேர் மார்க்கெட்டிலே பணம் பண்ணித்தான்! ஆனால் ஒன்று சொல்கிறேன் கேள்! இந்த ஷேர் மார்க்கெட் உலகத்திலே உள்ள முட்டாள்களைப் போல் வேறே எந்த உலகத்திலும் கிடையாது. வாங்க வேண்டிய சமயத்திலே குடுகுடு என்று ஓடிப் போய் விற்பார்கள். விற்க வேண்டிய சமயத்தில் இறுக்கிப் பூட்டி வைத்துக் கொள்வார்கள். தங்களுக்காகத் தெரியாவிட்டாலும், ஏதடா, நம்ப சுண்டு ஒருத்தன் இதற்கென்று தலையைச் க்ஷவரம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கானே, அவனைக் கேட்டுக் கொண்டு செய்வோம் என்று செய்வார்களோ? அதுதான் கிடையாது. போனால் போகட்டும். நீ என்ன சொல்றே? இப்போது ஷேர் மார்க்கெட்டிலே பணம் பண்ணுகிறதற்குச் சரியான சந்தர்ப்பம். மைசூர் நிலக்கரி இருக்கே, அப்படியே தங்கம்! இன்னிக்கு 23 ரூபாயாயிருக்கு. இன்னும் பத்து நாளிலே 29 வரை போகாவிட்டால் என்னை ஏன் என்று கேளு; ஓர் ஆயிரம் ஷேர் இதிலே நீ வாங்கலாம். பத்து நாளைக்குள்ளே ஆறாயிரம் ரூபாய் கை மேல் வந்து விழும்! அப்புறம், குடகு காப்பிக் கொட்டை இருக்கிறதே, 'ஏ ஒன்' ரகத்தில் சேர்க்கவேண்டியது."
"வீசை என்ன விலை?" என்று நடுவிலே கேட்டு வைத்தேன்.
"அட நாராயணசாமி! நான் வெறும் காப்பிக் கொட்டையைச் சொல்லவில்லை! குடகு குண்டுக் காப்பிக் கொட்டை கம்பெனி ஷேரையாக்கும் சொல்கிறேன். உனக்கு அதிலே அவ்வளவு திருப்தி இல்லாவிட்டால் திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கு இருக்கிறது! அது வெறும் கடலைப் பிண்ணாக்கு இல்லை! அவ்வளவும் கோட்டைப் பவுன் என்று வைத்துக் கொள். அதிலே ஓர் இரண்டாயிரம் ஷேர் நீ வாங்கிப் போடலாம்."
மிஸ்டர் சுண்டுவின் வாய் மொழியாக அன்று சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையில் நான் சம்பாதித்து விட்டேன். அவ்வளவோடு அன்றைக்குப் போதும் என்று சொல்லி அவனைப் போகச் சொன்னேன்.
*****
ஒரு மாதம் கழித்து மிஸ்டர் சுண்டுவை நான் பார்த்த போது, "நாராயணசாமி! நல்ல வேளை நீ பிழைத்தாய்! நான் சொன்னதைக் கேட்காமல் நீ பாட்டுக்குப் போய்த் திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கையும், மைசூர் நிலக்கரியையும், கொச்சி காப்பிக் கொட்டையையும் வாங்கியிருந்தாயானால் அடியோடு தொலைந்து போயிருப்பாய்!... அதற்காக எனக்குத் தாங்க்ஸ் ஒன்றும் சொல்ல வேண்டாம். நமக்குள்ளே என்னத்திற்காக உபசாரம்?" என்றான்.
"சரி, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்றேன்.
"இந்த உலகமானது ஏன் இப்படி மூடத் தனத்திலே ஆழ்ந்து கிடக்கிறது என்று அடிக்கடி உன்னைக் கேட்டுக் கொண்டிருந்தேனல்லவா? அந்த இரகசியத்தைக் கடைசியாகக் கண்டு பிடித்து விட்டேன்."
"அது என்ன?"
"உலகத்திலே சரியான படிப்பு இல்லை; இருக்கிற படிப்பும் மோசம். இதுதான் காரணம். முதலிலே நமது சட்டசபையின் அங்கத்தினர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேணும். அப்புறம் பள்ளிக்கூட வாத்தியார்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேணும். அதற்கப்புறம் பிள்ளைகளுக்குச் சரியான முறையில் கல்விப் பயிற்சி கொடுக்க வேணும். நீ என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான்.
"அவசியம் உடனே செய்ய வேண்டிய காரியந்தான்!" என்றேன்.
"அப்படியானால் முதலிலே சட்டசபை அங்கத்தினருக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கென்று ஒரு பள்ளிக் கூடம் வைக்கிறேன். அதற்கு உன்னாலான கைங்கர்யத்தைச் செய்!" என்று ரசீது புத்தகத்தை நீட்டினான். சுண்டு இந்தத் தடவை போனால் திரும்பி வரமாட்டான் என்ற தைரியத்துடன் சக்தியானுசாரம் நன்கொடை கொடுத்து அனுப்பினேன்.
*****
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுண்டுவின் சந்நியாசம் - Sunduvin Sanyasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, ஷேர், பணம், கொண்டு, நான், சுண்டு, காப்பிக், வைத்துக், சரியான, வேண்டிய, சொல்லிக், வேணும், கொடுக்க, இல்லை, கடலைப், கிடையாது, மிஸ்டர், இப்போது, என்றேன், நாராயணசாமி, சொல்கிறேன், என்றான், விட்டேன்