முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.070.திருக்கொண்டீச்சரம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.070.திருக்கொண்டீச்சரம்
5.070.திருக்கொண்டீச்சரம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்.
தேவியார் - சாந்தநாயகியம்மை.
1770 | கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக் கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே. |
5.070.1 |
காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது, சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக.
1771 | சுற்ற முந்துணை நன்மட வாளொடு பெற்ற மக்களும் பேண லொழிந்தனர் குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார் பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே. |
5.070.2 |
சுற்றத்தாரும், வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால், குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒருபற்று மற்று இல்லை.
1772 | மாடு தானது வில்லெனின் மாநுடர் பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற் கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப் பாடு மின்பர லோகத் திருத்துமே. |
5.070.3 |
செல்வம் இல்லையென்றால், மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை. ஆதலால், பல மாலைகளாற் கூட, நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும்.
1773 | தந்தை தாயொடு தார மெனுந்தளைப் பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் சிந்தை செய்மின் அவனடி சேரவே. |
5.070.4 |
தந்தையும் தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக.
1774 | கேளு மின்இள மைய்யது கேடுவந் தீளை யோடிரு மல்லது எய்தன்முன் கோள ராவணி கொண்டீச் சுரவனை நாளு மேத்தித் தொழுமின் நன்காகுமே. |
5.070.5 |
மனிதர்களே! கேட்பீர்களாக; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக; உமக்கு நல்லனவே ஆகும்.
1775 | வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை எம்பி ரானென வல்லவர்க் கில்லையே. |
5.070.6 |
பூங்கொம்பைப்போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை "எம்பிரான்" என்று ஏத்தவல்லவர்க்கு, வெம்புதற்குக் காரணமாகிய நோயும், துன்பமும், வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை.
1776 | அல்ல லோடரு நோயி லழுந்திநீர் செல்லு மாநினை யாதே கனைகுரல் கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை வல்ல வாறு தொழவினை மாயுமே. |
5.070.7 |
துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல், நீர், கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும்.
1777 | நாறு சாந்தணி நன்முலை மென்மொழி மாறி லாமலை மங்கையொர் பாகமாக் கூற னாருறை கொண்டீச் சுரநினைந் தூறு வார்தமக் கூனமொன் றில்லையே. |
5.070.8 |
நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமாதேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை.
1778 | அயிலார் அம்பெரி மேருவில் லாகவே எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன் குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப் பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே. |
5.070.9 |
மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய, குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர்.
1779 | நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான் குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத் தலையி னால்வணங் கத்தவ மாகுமே. |
5.070.10 |
நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய, குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கொண்டீச்சரம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொண்டீச், கொண்டீச்சுரத்து, சுரவனை, இறைவனை, நோயும், பயில்கின்ற, பொருந்திய, மேலும், சூழ்ந்த, வினைகள், இறைவனைப், யீச்சுர, திருச்சிற்றம்பலம், திருமுறை, றில்லையே, மாநுடர், திருக்கொண்டீச்சரம், சுரவனைப், சிந்தை