முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.010.திருஇராமேச்சுரம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.010.திருஇராமேச்சுரம்
3.010.திருஇராமேச்சுரம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர்.
தேவியார் - பர்வதவர்த்தனி.
2900 | அலைவளர்
தண்மதி யோடய லேஅடக் கிஉமை முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம் தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே |
3.010.1 |
கங்கையையும், குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான்.
2901 | தேவியை
வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன் பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம் மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே |
3.010.2 |
சீதாப்பிராட்டியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான தசமாமுகனின் பூச்சூடிய முடியையுடைய தலைகளை அறுத்துக் கொன்ற பழி நீங்குமாறு அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினை அழியும்.
2902 | மானன
நோக்கியை தேவிதன் னையொரு மாயையால் கானதில் வவ்விய காரரக் கன் உயில் செற்றவன் ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம் ஞானமும் நன்பொரு ளாகிநின்றதொரு நன்மையே |
3.010.3 |
மான் போன்ற மருண்ட பார்வையையுடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரமானது மன்னுயிர்கட்கு நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையும் தரும்.
2903 | உரையுண
ராதவன் காமமென் னும்முறு வேட்கையான் வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத் தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே |
3.010.4 |
மிகுந்த காமவேட்கையால் பிறன்மனைவியைக் கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை போன்ற தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய, புலவு நாறும் கடற்கரையையுடைய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரையில் பாம்மை கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும் தலைவனான சிவபெருமான் அல்லனோ?
2904 | ஊறுடை
வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும் வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர் ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம் பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே |
3.010.5 |
கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், வீரமுடைய இடபம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடியுடைய எந்தையாகிய சிவபெருமான் இராமேச்சுரத்தில் வீற்றிருந்தருளுகின்றான். வீடுபேற்றை நல்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.
2905 | அணையலை
சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன் பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம் துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே |
3.010.6 |
அலைகளையுடைய கடலில் அன்று அணை கட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இணையற்ற இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத அப்பெருமானின் தூய மலர் போன்ற திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம் நீங்கும்.
2906 | சனிபுதன்
ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம் பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே |
3.010.7 |
சனி, புதன், சூரியன், வெள்ளி, சந்திரன் மற்றும் அங்காரகன், குரு, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களால் தீமை வரும் எனச் சோதிடன் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டு அவர்களைச் சிறையில் வைத்த தன் ஆற்றலுக்கு மகிழ்ந்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழி தீர, அருளை வேண்டி அண்ணல் இராமபிரான் வழிபட்ட தலம் இராமேச்சுரம். அங்கு எழுந்தருளியிருப்பவர் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் முழுமுதற் பொருளான சிவபெருமானே ஆவார்.
2907 | பெருவரை
யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெட ப அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும் இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத் தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே |
3.010.8 |
பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனது புகழ் குறைந்து அழியும்படி அவனை அம்மலைக்கீழ் அடர்த்தலும், தன் தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடியபோது அவனுக்கு அருளுதலும் செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும் முழுமுதற்பொருள் சிவன் என்பதை உணர்ந்து வந்து ஏத்தியபோது விளங்கித் தோன்றி, இராமேச்சுரத்திலுள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஒருவனே எல்லாப் பொருள்களிலும் விளங்கித் தோன்றுகின்றான்.
2908 | சாக்கியர்
வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார் வாக்கிய லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால் ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம் ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே |
3.010.10 |
புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற உண்மை யல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப் பற்றி நிற்காது, ஒளிமிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை ஞானத்தால் ஏத்தி வாழுங்கள். அவனருளால் எல்லா நலன்களும் உண்டாகும்.
2909 | பகலவன்
மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம் புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால் அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை யல்லலே |
3.010.11 |
தான் பெற்ற வரத்தின் வலிமையால் சூரியன் தன் நகருக்கு மேலே செல்லக் கூடாது என்று ஆணையிட்ட இலங்கைக் கோனாகிய இராவணனைப் போரில் அழித்த இராமபிரான் வழிபட்ட கோயிலாகிய இராமேச்சுரத்தினை, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்ப் பதிகத்தால் மனம் ஒன்றி இப்பூமியில் எங்கும் ஓதவல்லவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஇராமேச்சுரம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மேச்சுரம், இராமபிரான், சிவபெருமான், வழிபட்ட, இராவணனின், யிலிரா, இராமேச்சுரத்தில், அண்ணலாகிய, போக்கிய, நீங்கும், திருநடனம், இறைவன், திருமுறை, இராமேச்சுரம், எழுந்தருளியுள்ள, விளங்கித், சூரியன், துன்பம், திருச்சிற்றம்பலம், மேச்சுரத், செலுத்தும், அம்பினைச், கவர்ந்த, யண்ணல்செய், வில்லையுடைய, திருஇராமேச்சுரம், முலைவளர், தாழைகள், வவ்விய, லுஞ்சிலை