வஸ்தாது வேணு
ஹெட் கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை ஒரு
வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து வஸ்தாது வேணு நாயக்கன் அடித்த அடியினால்
உண்டான காயங்களை ஆற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வேணுவும் அந்த
ஒரு வாரமாக வெளியில் கிளம்பவில்லை. ஆனால், அடுத்த வீட்டுப் போலீஸ்காரன்
ஆஸ்பத்திரியில் இருப்பதைமட்டும் தன் மனைவி மூலம் விசாரித்துத் தெரிந்து
கொண்டான். மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, "வஸ்தாது வேணு நாயக்கனிடமா
இவன் கைவரிசை காட்டினான்?" என்று உறுமிக்கொண்டே இருந்தான்.
"என்னவோ திருடனைப் பிடித்தான், என்று சொல்லிக்கொள்கிறார்கள்" என்றாள் மங்கம்மாள்.
"திருடனா, திருடன்! இந்தக் கையினால் எண்ணி 99 குத்து அல்லவா விட்டேன்?" என்றான்.
"ஐயோ இரையாதேயுங்கள்!" என்று மங்கம்மாள் அவன் வாயைப் பொத்தினாள்.
எட்டாம் நாள் காலையில் வீராசாமிப்பிள்ளை எழுந்து வீட்டுக்கு வெளியில் வந்தான். அவன் தலையில் இன்னும் கட்டுப் போட்டிருந்தது. வேணுவும் அச்சமயம் வெளியே வந்தான். அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. "என்ன ஓய்! காயம் இன்னும் ஆறவில்லையா?" என்றான். வீராசாமி சும்மாயிருந்தான். வேணு மறுபடியும் "என்ன ஓய், பேசக்காணும்? பயப்படாதே. இனிமேல் குத்தவில்லை" என்றான்.
வீராசாமி, "என்னாங்காணும் உளறுகிறீர்!" என்றான்.
"நானா உளறுகிறேன்? அதற்குள் முதுகு 99 குத்தையுமா மறந்துவிட்டது?" என்று சொல்லிச் சிரித்தான் வேணு.
"என்ன? நீயா அன்று என்னை அடித்தாய்?"
"பின்னே யார்! உன் அப்பனா?"
"இரு, இரு. எதிர் வீட்டுக்காரர்களைக் கூப்பிடுகிறேன். இரண்டு பேரை வைத்துக் கொண்டு இதைச் சொல்லு."
"சொன்னால் தலை போய் விடுமோ?"
"தலை போகாது. பன்னிரண்டு வருஷம் கடுங்காவல்; அவ்வளவுதான். மூன்று திருடர்களில் ஒருவனைப் பிடித்தாகி விட்டது. இரண்டு பேர் ஓடிப் போனார்கள். ஓடிப்போனவர்களில் நீ ஒருவனா? ரொம்ப சந்தோஷம்" என்றான் போலீஸ்காரன்.
நடையிலிருந்து இந்த சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த வேணுவின் மனைவிக்குப் பாதி பிராணன் போய்விட்டது. வேணுவுக்கு நன்றாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்சம் பயமுண்டாயிற்று. உடனே அவன் தட்டுத் தடுமாறிக் கொண்டு "போனதெல்லாம் போகட்டும் அண்ணே? நாம் அண்டை வீட்டுக்காரர்கள். ஏன் மனத்தாங்கல், - இனி சிநேகமாயிருப்போம்" என்றான். "அந்தப் பாக்கியம் எனக்கில்லை, நாயக்கரே! நான் நாளையே இந்த வீட்டை விட்டுப் போகிறேன்" என்றான் வீராசாமி. வேணுவுக்கு மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. 'தொலைந்தான் சனியன்' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். "அதேன் அண்ணே? வந்து ஆறுமாதங்கூட ஆகவில்லையே. ஏன் போகவேண்டும்" என்று கேட்டான்.
வீராசாமிப் பிள்ளை, "அதை ஏன் கேட்கிறாய், தம்பி! 'யானைக்குட்டி முதலி!' என்னும் பெயர் பெற்ற திருடனை நான் பிடித்துக் கொடுத்தேன். அவனோடு சண்டை போட்டுத்தான் காயமாயிற்று. இதற்காக சர்க்கார் என்னை சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அதோடு திருட்டுப்போன நகையை மீட்டுக் கொடுத்ததற்காக ஆத்தூர் ஜமீன்தார் ஆயிரம் ரூபாய் வெகுமதி கொடுத்தார். இனிமேல் நான் ஏன் இந்த எட்டு ரூபாய் வீட்டில் குடியிருக்க வேண்டும்? முப்பது ரூபாய்க்கு ஒரு மச்சு வீடு பார்த்திருக்கிறேன்!" என்றான்.
வேணு நாயக்கனுக்கு இன்னும் விளங்கவில்லை. மனக்குழப்பமே அதிகமாயிற்று. "என்னடா அதிசயம்! குற்றுயிராகும் வரையில் தலையிலும் முதுகிலும் மாறி மாறிக் குத்தியவன் நான். என்னவோ திருடன் திருடன் என்கிறானே?' என்று திகைத்தான். அன்று சாயங்காலம் சாராயக் கடைக்குப் போனான். அங்கே விசாரித்து விஷயங்களையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொண்டான். அன்றிரவு வந்து வீட்டில் சுரமாகப் படுத்தவன் அப்புறம் ஒரு மாதம் வரை எழுந்திருக்கவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வஸ்தாது வேணு - Vasdhadhu Venu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்றான், வேணு, நான், வீராசாமி, என்ன, அவன், வந்து, திருடன், இன்னும்