வஸ்தாது வேணு
வேணுநாயக்கனுக்கு ஒரு மாத காலம் நல்ல
தூக்கம் கிடையாது. இரவு பகல் இதே யோசனைதான். கள்ளு, சாராயக் கடைகளில்
அவன் பல மந்திராலோசனைகள் நடத்தினான். அந்தப் போலீஸ்காரனைக் கசக்கி சாறு
பிழிந்துவிட வேண்டுமென்று அவன் நண்பர்கள் எல்லோரும் ஒரு முகமாய் அபிப்பிராயப்பட்டார்கள்.
ஆனால், அதற்கு வழியும் சாதனமும் சொல்லுவார் யாருமில்லை. "வலிய அழைத்தாலும்
சண்டைக்கு வராதவனை என்ன செய்யமுடியும்? எப்படியும் அவனை ஒரு கை பார்க்காமல்
விடாதே" என்று மட்டும் ஊக்கப்படுத்தி வந்தார்கள். ஒரு நாள் மாலை மிக்க
முகமலர்ச்சியுடன் வேணு வீடு திரும்பினான். "என்ன விசேஷம்?" என்று அவன்
மனைவி கேட்டாள்.
"விசேஷம் இருக்கிறது" என்றான் வேணு. அவன் மனைவியின் ஆவல் பதின்மடங்கு அதிகமாயிற்று. "என்ன? என்ன?", என்று கேட்டாள்.
"இன்றைக்கு வக்கீல் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறார். இதற்குத்தான் படித்தவர்கள் சினேகம் வேண்டுமென்பது" என்றான்.
"என்ன யோசனை? சொல்லு, சொல்லு."
"போலீஸ்காரன் பிறத்தியான் வீட்டுக்குள் நுழையக்கூடாது. வாரண்டு வைத்துக்கொண்டு தான் நுழையலாம். அப்படியில்லாமல் நுழைந்தால் அவனை மாட்டிவிடலாம்."
"அதற்கென்ன இப்போது?"
"என்னவா? அதுதான் சட்டம். அடுத்த வீட்டுச் சிவப்புத் தலைப்பாகையை ஒழிக்க வழி."
"எப்படி ஒழிக்கிறது?"
"இன்னும் புரியவில்லையா? அடுத்த வீட்டுப் போலீஸ்காரனை நம் வீட்டில் நுழையும்படி செய்ய இரண்டு சாக்ஷிகள் வைத்துவிட வேண்டியது. அப்புறம் வக்கீல் ஐயன் பார்த்துக் கொள்ளுகிறான்."
"எப்ப நுழையும்படிச் செய்கிறது?"
"ஆ! அதுதான் இரகசியம், இதோ பார். இந்தத் தடியினால் உன்னை இன்று நொறுக்கப் போகிறேன்" என்றான்.
"ஐயோ! உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன?"
உடனே வேணு நாயக்கன் விழுந்து விழுந்து சிரித்தான். "பைத்தியமில்லை; யுக்தி" என்றான்.
"இதோ பார்! நன்றாய் கேட்டுக்கொள். பரண் மேல் பழைய மெத்தை கிடக்கிறதல்லவா? அதை எடுத்துப் போடு. இந்தத் தடியினால் அதைப் போட்டு அடிக்கப் போகிறேன்! ஆனால், நீ உன்னைத்தான் அடிப்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டும். கூகூவென்றுகத்து. என்மேல் உனக்கிருக்கும் ஆத்திரத்தையெல்லாம் கொட்டித் திட்டு. 'கொல்கிறானே, கொல்கிறானே' என்று கூச்சல் போடு. வாசல் கதவைத் தாளிடாமல் இவ்வளவும் செய்யப் போகிறேன். அந்தச் சிவப்புத் தலைப்பாகை கட்டாயம் உள்ளே நுழையும். நான் வாசலில் ஓடிப்போய் எதிர் வீட்டுக் காரர்களைக் கூப்பிட்டு சாட்சி வைத்து விடுகிறேன்" என்றான்.
முதலில் மங்கம்மாளுக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. மெத்தையில் அடிப்பதற்குச் சம்மதியாவிட்டால் முதுகின்மேல் அடி விழுமென்று தோன்றிற்று. ஆகவே, "சரி" யென்று ஒப்புக் கொண்டாள்.
சாப்பாடு முடிந்தது. அடுத்த வீட்டில் போலீஸ்காரனும் அவன் மனைவியும் படுத்துக்கொண்டார்கள் என்ற தெரிந்தபின், அந்தச் சுவர் ஓரமாக மெத்தையைக் கொண்டுபோய் போட்டான். "முதலில் கொஞ்சம் வாய்ச் சண்டை போட வேண்டும். உன் மனத்தில் என் மேலுள்ளதையெல்லாம் சொல்லித் தீர்த்துவிடு. பக்கத்து வீட்டுக்குக் கேட்கும்படி உரக்கப் பேசு" என்றான்.
மங்கம்மாள் பயந்துகொண்டே ஆரம்பித்தாள். ஆனால், இதற்கு முன்னெல்லாம் அவள் ஒரு வார்த்தைப் பேசியதும் வேணு வாயில் போடுவது வழக்கம். இப்பொழுது அவன் பேசாமலிருக்கவே அவளுக்கு உற்சாகம் பிறந்தது. எட்டு வருஷ காலமாய் அவள் மனதில் குமுறிக்கொண்டிருந்தவைகள் அனைத்தையும் எடுத்து வெளியே விடத் தொடங்கினாள். கால் மணியாயிற்று. அரை மணியும் ஆயிற்று. வேணு காரியம் என்னவென்பதை மறந்து போனான். உண்மையிலேயே தானும் தன் மனைவியும் சண்டையிடுவதாகவே கருதினான். "இவ்வளவுதானா? இன்னும் உண்டா?" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.
"இன்னும் இருக்கிறது" என்று கூறி மங்கம்மாள், மேலும் ஆரம்பித்தாள் புராணத்தை. ஆனால் வேணுநாயக்கன் உண்மையாகவே தடியைத் தூக்கிக்கொண்டு வருகிறான் என்று தெரிந்ததும் "வீர்" என்று ஒரு பெரிய கூச்சல் போட்டுக் கொண்டு சமயலறைக்குள் ஓடிக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாளிட்டுக் கொண்டாள். உள்ளிருந்தபடியே அவள், வேணு நாயக்கன், அவனுடைய அப்பன், பாட்டன், இன்னும் இஷ்டமித்திர பந்து ஜனங்கள் எல்லாருடைய குணாதிசயங்களையும் வர்ணித்து அவர்களை ஆசீர்வாதஞ் செய்யலானாள். அவள் வேணுநாயக்கனையும் விடவில்லை.
இந்தச் சமயத்தில் அடுத்த வீட்டிலிருந்து போலீஸ்காரன் குரல் கேட்டது. "என்ன ஓய் காட்டு பூனையை ஓட்டித் தொலையும். தூக்கத்தைக் கெடுக்கிறது" என்றான் அந்தப் பொல்லாத குள்ள நரி. உடனே வேணு நாயக்கனுக்குப் பழைய ஞாபகம் வந்தது. தொப்பு தொப்பென்று பழைய மெத்தையைப் போட்டு அடிக்கத் தொடங்கினான் பாவம்! மூன்று தலைமுறையாக வேணு நாய்க்கன் குடும்பத்தைத் தாங்கி வந்த அந்த மெத்தை அன்று படாத பாடு பட்டது. துணி, சுக்கு சுக்காய்க் கிழிந்தது, பஞ்சு தூள் தூளாகப் பறந்தது.
போலீஸ்காரன்மேல் கோபம் ஒரு பக்கம், பெண்சாதி மேல் ஆத்திரம் ஒரு பக்கம்; அரை மணி நேரத்துக்கு மேலாகியும் வேணுநாய்க்கன் ஓயவில்லை. திடீர் என்று வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. "ஆஹா! ஜயித்தோம்" என்று அளவிலாத குதூகலத்துடன் முன்னைவிட ஓங்கி அடித்தான். திடு திடுவென்று யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. "மாட்டிக் கொண்டாயா நெருப்புக்குச்சிப் பயலே!" என்று எண்ணுவதற்குள் திடுதிடுவென்று முதுகில் ஐந்தாறு அடி விழுந்துவிட்டது. "ஆஹா பயலே!" என்று சத்தமிட்டுக்கொண்டு வேணு குதித்து எழுந்தான். முதுகிலும் தலையிலும் தோளிலும் மாறி மாறி அடி விழுந்தது. திரும்பிப் பார்த்ததும் வேணுவுக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. ஏனென்றால் அவ்வளவு தைரியமாய் உள்ளே நுழைந்து தன்னை அடித்தவன் போலீஸ்காரனல்ல; தன் மைத்துனன் முத்துநாயக்கன். மங்கம்மாளின் அண்ணன் - என்பதை அவன் கண்டான். "சங்கதி என்னடா? கழுதை மகனே! உன் கை வரிசையைக் கடைசியில் என்னிடமே காட்டுகிறாயா? முத்துநாயக்கன் தங்கையை ஒருவன் அடிப்பதற்காயிற்றா?" என்று மேலும் சாத்தினான் முத்துநாயக்கன்.
அன்று வஸ்தாது நாயக்கன் வைகுண்டத்துக்கே போயிருப்பான். ஆனால், நல்ல வேளையாக மங்கம்மாளுக்கு விஷயம் தெரிந்து போயிற்று. அவள் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்து அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டாள். மேலே ஒரு காயம் இல்லாமல் அவள் கொழுக்கட்டைபோல் இருப்பதைக் கண்டதும் முத்து நாயக்கனுக்குக் கோபம் தணிந்தது. பிறகு, சுற்றுமுற்றும் பார்த்தான். பழைய மெத்தையின் பதினாயிரம் துண்டு துணுக்குகளைக் கண்டான்.
"என்ன சமாசாரம்?" என்று கேட்டான். எல்லா விவரமும் மங்கம்மாள் சொன்னாள். முத்து நாயக்கன் ஒரு நிமிஷம் திகைத்து நின்றான். பின்னர் வேணுநாயக்கன் மீது காறி உமிழ்ந்து விட்டு ஓட்டம் பிடித்தான். மங்கம்மாள் வாசல் கதவைத் தாளிடப் போனாள். அந்த நிசி வேளையில் தெருவிலிருந்த அத்தனை வீட்டு வாசலிலும் ஜனங்கள் வந்து நிற்கக் கண்டாள். மிக்க வெட்கத்துடன் திரும்பி வந்து படுத்துக்கொண்டாள்.
மறுநாள் காலையில் வஸ்தாது வேணுநாயக்கன் எழுந்து, வழக்கம்போல் வெளியே வந்தான். தன் முதுகு, தோள், முகம், எல்லாம் வீங்கியிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அடுத்த வீட்டு வாசலில் தயாராய்க் காத்திருந்த போலீஸ்காரன் அவனைப் பார்த்து, "இதென்ன நாயக்கரே! நீரல்லவோ உம் பெண்சாதியை அடித்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறது? பாவம்? உம்மையா அந்த அம்மாள் அப்படி அடித்துவிட்டாள்? உடம்பெல்லாம் தடித்துப் போயிருக்கிறதே!" என்றான். பிறகு, அன்று முழுதும் வேணு வெளிக்கிளம்பவேயில்லை.
ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப் பிள்ளைக்குத் தோட்ட வேலையில் கொஞ்சம் பைத்தியமுண்டு. அவன் அந்த வீட்டுக்கு வந்து ஆறு மாதந்தான் ஆயிற்று. இதற்குள் கொல்லையைக் கிளிகொஞ்சும்படி வைத்திருந்தான். ஆள் உயரம் வளர்ந்திருந்த கொத்தவரைச் செடிகளில் கொத்துக்கொத்தாய்க் காய்த்திருந்தது. ஒரு பக்கம் மல்லிகைச் செடிகள் செழிப்பாகக் கிளம்பி அப்போதுதான் மொட்டுவிட்டிருந்தன. ஒரு பந்தலில் புடலங்காய்கள் பிஞ்சும் பழமுமாய்த் தொங்கின. மற்றொரு பந்தலில் அவரைக் கொடி பச்சைப்பசேல் என்று அடர்த்தியாய்ப் படர்ந்திருந்தது. புதிய இங்கிலீஷ் குரோட்டன்ஸ்களும் வாடாமல்லிகைச் செடிகளும் மற்றொரு பக்கம் காணப்பட்டன. இரண்டு மூன்று வாழைக் கன்றுகளும் வளர்ந்திருந்தன. வீராசாமிப் பிள்ளை வீட்டில் தங்கும் நேரத்தில் முக்கால் பங்கு நேரம் புழக்கடைத் தோட்டத்திலேயே கழிப்பது வழக்கம். ஒரு செடியில் ஒரு இலைக்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால் அவனுக்கு அன்றிரவு தூக்கம் வராது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வஸ்தாது வேணு - Vasdhadhu Venu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வேணு, அவன், என்றான், என்ன, அவள், அடுத்த, மங்கம்மாள், அந்த, வந்து, பழைய, பக்கம், நாயக்கன், இன்னும், அன்று, போலீஸ்காரன், முத்துநாயக்கன், யோசனை, கேட்டது, வேணுநாயக்கன், கதவைத், கொண்டாள், போகிறேன், வீட்டில், நல்ல