வஸ்தாது வேணு
"ஏய்! இப்படி உள்ளே வா! வேடிக்கை
பார்த்தது போதும்" என்றான் வேணு நாயக்கன். அவனுக்கு எதிரில் பீங்கான்
தட்டில் சோறு வட்டித்திருந்தது. மோர் கலந்து பிசைந்து கொண்டு ஊறுகாய்க்காகக்
காத்திருந்தான். அவர் மனைவி வீட்டு வாசற்படியில் நின்று, ஏதோ தெருவில்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஏஹே! காது கேட்கவில்லையா? போலீஸ்காரன் குடி வருவதைப் பார்க்கக்கூடாது. சட்டத்துக்கு விரோதம்; ஜெயிலில் போட்டுவிடுவார்கள்" என்று சொல்லி வேணு நாயக்கன் பலமாகச் சிரித்தான்.
ஆனால் மங்கம்மாளுக்கு இந்தப் பரிகாசம் புரியவில்லை. அவள் திரும்பி வந்து, "ஜெயிலில் போட்டு விடுவார்களா? விளக்குமாற்றால் அடிப்பேன், இந்த உதவாக்கரைப் போலீஸ் வேலைக்கு எவ்வளவு ஜம்பம்! இரண்டு வண்டி சாமான்! கட்டில் மெத்தை, நாற்காலி, டிரங்குப்பெட்டி, வாத்தியப்பெட்டி-ஒன்றிலும் குறைவில்லை! குட்டிகளுக்கெல்லாம் துரைசாணி மாதிரி ஜாக்கெட். ஐயோ! என்ன ஜம்பம்" என்று சொல்லிக் கையால் தன் கன்னத்தில் ஒரு இடி இடித்துக் கொண்டாள்.
"நீ சும்மாயிரு. அவர்கள் ரொம்பக்காலம் இங்கே இருந்து வாழப் போகிறார்களோ? பார்த்து விடுகிறேன்" என்றான் வேணு நாயக்கன்.
"வாழாமல் என்ன? அவர்களுக்கு என்ன கேடு? மாதம் முதல் தேதி சர்க்கார் சம்பளம் வருகிறது" என்றாள் மங்கம்மாள்.
"எல்லா சர்க்கார் சம்பளத்தையும் நான் பார்த்துவிடுகிறேன். வேணு நாயக்கன் கிட்டவா அந்த ஜம்பமெல்லாம் பலிக்கும்?"
"வந்தால் வரட்டுமே, நமக்கென்ன பயம்?" என்றாள் மங்கு.
"என்ன சொன்னாய்? வாயை அலம்பிக்கிட்டுப் பேசு. நானா பயப்படுகிறவன்? இவனைப் போல் ஆயிரம் சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்திருக்கிறேன்" என்று அதட்டிப் பேசினான் வேணு.
வஸ்தாது வேணு நாயக்கனைத் தெரியாதவர்கள் நெல்லிப்பாக்கத்தில் ஒருவரும் கிடையாது. ஏன்? சென்னைப் பட்டினத்திலேயே ஒருவரும் கிடையாதென்றுகூடச் சொல்லலாம். முக்கியமாக சாயங்கால வேளைகளில் கள்ளு, சாராயக் கடைகளில் அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கும். அவனைக் காணாத இடங்களில் ஜனங்கள் "போவன்னா நாயக்கன்" என்று அவனைப் பற்றிப் பேசுவார்கள். எதிரில் கண்டால், "என்ன வஸ்தாது நாயக்கரே!" என்பார்கள்.
அவனுடைய ஜீவனோபாயம் எப்படியென்பது யாருக்கும் நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் சென்னை நகரில் எந்தவிதத் தேர்தல் நடந்தாலும் சரி, வேணு நாயக்கனை அங்கே பார்க்கலாம். யாராவது ஒரு கட்சியார் அவன் உதவியை நாடுவது நிச்சயம். மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு கையில் தடியுடன் நின்றானானால் எதிர்க் கட்சியாருக்குக் கொஞ்சம் கதி கலங்கத்தான் செய்யும்.
இவ்வளவு பிரபல மனிதன் மீது நெல்லிப்பாக்கம் போலீஸார் 'நிகா' வைத்திருந்ததில் வியப்பில்லையல்லவா? சுற்றுப்பக்கத்தில் எங்கே கலகம் அடிதடி நடந்தாலும் அதில் வேணு நாயக்கன் சம்பந்தப்பட்டிருப்பான் என்பது அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஆனால், அவனைப் பிடித்து மாட்டுவதற்கு மட்டும் இதுவரை அவர்களுக்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எவ்வளவு பலமான வழக்கு அவன்மீது கொண்டு வந்தாலும், தேர்தலில் அவன் உதவி பெற்ற பிரபல வக்கீல்கள் ஆஜராகிக் 'கேஸை' உடைத்து வந்தார்கள். ஒரே ஒரு தடவை அவனிடம் ஒரு வருஷத்துக்கு நன்னடத்தை வாங்க முடிந்தது. மற்றொரு முறை முப்பது ரூபாய் அபராதம் போட்டார்கள். அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை.
இந்த நிலைமையில், வேணு நாயக்கனுக்குப் போலீஸ்காரனென்றால் "பூனைக்குட்டி விசுவாசம்" ஏற்படுவது இயல்பேயல்லவா? ஆகவே, அடுத்த வீட்டிற்கு ஹெட்கான்ஸ்டேபிள் ஒருவன் குடி வருகின்றான் என்று அறிந்தது முதல் அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சாராயக் கடையில் யாரோ இதைப்பற்றிப் பிரஸ்தாபித்த போது "அடே! சும்மா பார்த்துக் கொண்டிரு. மூன்று நாளில் அந்த நெருப்புக்குச்சியைக் கிளப்பாவிட்டால் என் பெயர், வஸ்தாது வேணு நாயக்கன் அல்ல!" என்று சொல்லிக் கொண்டு அவன் மீசையை முறுக்கினான்.
ஆனால் மாதம் மூன்று ஆகியும் அந்த நெருப்புக் குச்சி புறப்படுகிற வழியாயில்லை. இவ்வளவு நாளும் வேணு நாயக்கன் சும்மாயிருந்தானென்று நினைக்க வேண்டாம். தன்னாலியன்ற முயற்சியெல்லாம் செய்துதான் வந்தான். அவன் உத்தரவுப்படி மங்கம்மாள் தினம் காலையில் வாசலைக் கூட்டிக் குப்பையை அடுத்த வீட்டு வாசலில் தள்ளிவிட்டு வருவாள். ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவ்வளவு குப்பையும் வட்டியும் முதலுமாக, வேணு நாயக்கன் வாசலுக்கே திரும்பி வந்துவிடும்.
வேணு ஒரு நாள் சாராயக் கடையிலிருந்து ஏராளமான கண்ணாடிப் புட்டிகள் கொண்டுவந்தான். கதவைச் சாத்திவிட்டு அவைகளைத் துண்டு துண்டாய் உடைத்தான். நடு நிசிக்கு எழுந்து போய் அந்தத் துண்டுகளைப் போலீஸ்காரன் வீட்டுக் கொல்லையில் வீசிக் கொட்டி விட்டு வந்தான். இந்த நொறுக்கல் தொண்டு செய்தபோது அவன் கையில் இரண்டு மூன்று இடத்தில் காயம் உண்டாகி இரத்தம் வடிந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால் மறுநாள் சாயங்காலம் அவன் குடிமயக்கத்துடன் வீடு திரும்பிக் கொல்லைப்புறம் போகையில் இரண்டு காலிலும் இரண்டு பெரிய கண்ணாடித் துண்டுகள் குத்திக் காலை கிழித்தபோது கட்டாயம் பொருட் படுத்த வேண்டியதாயிற்று. "ஐயோடி! அப்பாடி" என்று முனக ஆரம்பித்தான். "என்ன ஓய்! தேள் கொட்டிவிட்டதா?" என்று அடுத்த வீட்டுக் கொல்லையிலிருந்து ஒரு சத்தம் வந்தது. "பீங்கான் தட்டு வேண்டாம்; ஆசாரக் குறைவு; இனிமேல் இலை போட்டுத்தான் சாப்பிடவேண்டும்" என்றான் வேணு. இந்த ஊதாரிச் செலவின் இரகசியம் முதலில் மங்கம்மாளுக்கு விளங்கவில்லை. வேணு சாப்பிட்டு எழுந்ததும் "ஓய் இலையை மேலண்டைப் பக்கமாய்ப் போடு, தெரிகிறதா?" என்று சொன்னபோதுதான் அவளுக்கு விஷயம் விளங்கிற்று. மங்கம்மாள் அப்படியே செய்துவிட்டு வந்தாள்.
சிலநாள் வரையில் வேணு சந்தோஷமாக இருந்தான். ஆனால் ஒரு நாள் இராத்திரி கொல்லைப்புறம் போனபோது அவன் சந்தோஷம் மாறிவிட்டது. என்னவோ சந்தேகப்பட்டு அவன் கொல்லைச் சுவர் வழியாகப் பக்கத்துக் கொல்லையை எட்டிப் பார்த்தான். போலீஸ்காரன் புதிதாய் வாங்கியிருந்த பசு மாடுதான், மூன்று தம்பிடி கொடுத்து வாங்கிய வாழை இலையை ஆனந்தமாய் மென்று தின்று கொண்டிருப்பதை அவன் கண்டான். குப்பை, கண்ணாடித்துண்டு முதலிய சாமான்கள் உடனுக்குடன் திரும்பி வந்து கொண்டிருக்க, எச்சில் இலை மட்டும் வராத காரணம் இப்போதுதான் வேணுவுக்கு புலனாயிற்று.
பிறகு, ஒரு நாள் வேணு நாயக்கன் தன் வீட்டிலிருந்த ஓட்டைத் தகரங்களையெல்லாம் சேகரித்தான். கொல்லைப்புறம் கொண்டுபோய் ஒரு பெரிய தகரத்தை வீசி எறிந்தான். அடுத்த கொல்லையிலிருந்த போலீஸ்காரன், "இந்தா இந்தத் தகரத்தை எடுத்து வை. மாட்டுக்குத் தீனி வைக்க உதவும்" என்று தன் பெண்சாதியிடம் அருமையாய்ச் சொன்னான். வேணுவுக்குப் பலத்த கோபம் வந்து விட்டது. "ஓய்! அப்படி ஊர்சொத்தைச் சுரண்டித்தான் நீர் காலட்சேபம் செய்கிறதோ?" என்று கத்தினான். "ஓஹோ இது உம்முடைய தகரமா?" என்று அடுத்த கொல்லையிலிருந்து போலீஸ்காரன் சொன்னான். மறுநிமிடத்தில் அந்த ஓட்டைத்தகரம் வந்து வேணு நாயக்கன் தலைமேல் நேராய் இறங்கிற்று. பிறகு, அவன் முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையில் விழுந்து ஒரு குதி குதித்தது. "என்ன ஓய்! தலைமேல் விழுந்து விட்டதா என்ன?" என்றான் போலீஸ்காரன்.
"நாசமாய்ப் போக! ஒரு நாளைக்கு உன் மண்டையை உடைக்காமல் விடப்போகிறேனா?" என்று வஸ்தாது நாயக்கன் முணு முணுத்துக் கொண்டான்.
*******
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வஸ்தாது வேணு - Vasdhadhu Venu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வேணு, நாயக்கன், அவன், என்ன, போலீஸ்காரன், அடுத்த, வஸ்தாது, மூன்று, அந்த, வந்து, இரண்டு, என்றான், நாள், கொல்லைப்புறம், திரும்பி, கொண்டு, சாராயக், மங்கம்மாள்