வஸ்தாது வேணு
வஸ்தாது வேணு நாயக்கன் பழைய மெத்தையுடன்
யுத்தம் புரிந்து ஒரு மாதமாயிற்று. ஒரு நாள் காலையில் ஹெட்கான்ஸ்டேபிள்
படுக்கையை விட்டு எழுந்ததும் வழக்கம் போல் புழக்கடைக்குச் சென்றான்.
அவன் அடிவயிற்றில் பகீர் என்றது. "ஐயோ" என்று ரொம்பவும் தீனமான குரலில்
ஒரு பெரிய கூச்சல் போட்டான். திடீரென்று கீழே விழுந்து மூர்ச்சையடைந்தான்.
அவன் மனைவி படுக்கையிலிருந்து குதித்தெழுந்து ஒரே ஓட்டமாய் ஓடி வந்தாள். நேற்று மாலை கிளி கொஞ்சிக் கொண்டிருந்த தோட்டம் இன்று, அனுமான் அழித்த அசோகவனம் போல் இருப்பதைக் கண்டாள். ஒரு செடி, ஒரு கொடி, ஒரு புல் பூண்டு உருப்படியாயிருக்க வேண்டுமே! கிடையாது. அவரைக் கொடிகள் அறுபட்டுக் கிடந்தன. கீரைப்பாத்திகள் மிதிபட்டு கிடந்தன. மல்லிகைச் செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டிருந்தன. வாழைக் கன்றுகள் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தன. கொத்தவரை, வெண்டைச் செடிகள் நிர்மூலமாய்க் கிடந்தன. ஒரே துவம்ஸம், ஒரே நாசம்.
ஹெட்கான்ஸ்டேபிள் மனைவி மகா உத்தமி. சாதாரணமாய் அதிர்ந்து பேசும் வழக்கம் அவளிடம் கிடையாது. ஆனால் இந்த மகா பாதகத்தை யாரால்தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்? "அடபாவி, நீ நாசமாய்ப் போகமாட்டாயா! உன்னைத் தெய்வம் கேட்காதா!" என்று கத்திக் கொண்டு இரண்டு கை மண்ணை வாரி வேணு நாயக்கன் கொல்லைப்பக்கம் இறைத்தாள். உடனே ஓடி வந்து கணவனுக்கு சைத்தியோபசாரம் செய்யத் தொடங்கினாள். அவனுக்கு ஸ்மரணை வந்ததும் இன்னொரு தடவை தோட்டத்தைப் பார்த்தான். அவ்வளவுதான், எழுந்து உள்ளே ஓடிப்போய்க் கூடத்தில் குப்புறப் படுத்துக்கொண்டான். அப்போது அவன் கண்ணிலிருந்து பெருகியது கண்ணீரா இல்லை, அதை இரத்தம் என்று சொல்ல வேண்டும்.
மணி பத்தடித்தது. "எத்தனை நேரம் இப்படிப் படுத்திருப்பது? எழுந்திருங்கள். வெளியே போய் விட்டு வாருங்கள். வேறு வீடு இருந்தால் பார்க்கக் கூடாதா? இந்தப் பாழும் வீட்டை விட்டுப் போகலாம்" என்றாள் போலீஸ்காரன் மனைவி. வீராசாமிப்பிள்ளை எழுந்து, உடுப்புத் தரித்துக் கொண்டு 'டியூடி' பார்க்கச் சென்றான்.
ஒரு குறுகலான சந்து. இரண்டு பக்கமும் மதில் சுவர். ஜன நடமாட்டம் கிடையாது. மின்சார விளக்குகள் அழுது வடிந்தன. இரவு பதினொரு மணிக்கு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை தனியாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தான். அந்தச் சந்தின் நடுவில் மற்றொரு சந்து சேருமிடத்தில் அதன் வழியாக வேறொரு மனிதன் வந்தான். இந்த முச்சந்தியில் ஒரு மின்சார விளக்கு இருந்தபோதிலும் பக்கத்தில் மரங்கள் அதிகமிருந்தபடியால் சாலையின் பெரும் பகுதியில் நிழல் வீழ்ந்திருந்தது. தற்செயலாக அம்மனிதன் முகத்தை வீராசாமிப்பிள்ளை பார்த்த நேரமும் அவன் மீது வெளிச்சம் விழுந்த நேரமும் ஒத்துக்கொண்டன. வந்தவன் வஸ்தாது வேணு நாயக்கன்.
போலீஸ்காரன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த துக்கம் அவ்வளவும் அந்நேரத்தில் குரோதமாக மாறிற்று. இருவரும் நேருக்கு நேர் நின்று ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். வேணுவுக்குக் குடி மயக்கம். எனவே, ஆள் இன்னார் என்று அறிந்து கொள்ள ஒரு நிமிஷம் பிடித்தது. உடனே பல்லை இளித்துக்கொண்டு, "என்ன சிவப்புத்தலைப்பா? தோட்டம் எப்படி இருக்கிறது?" என்றான்.
அதற்கு மேல் வீராச்சாமியால் தாங்க முடியவில்லை. கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். ஆனால், வஸ்தாது வேணுநாயக்கனா இதற்கெல்லாம் பயப்படுகிறவன்? இத்தகைய சந்தர்ப்பத்தைத்தான் அவன் வெகு காலமாகத் தேடிக் கொண்டிருந்தது. ஐந்து நிமிஷத்தில் போலீஸ்காரன் கீழே விழுந்து மண்ணை கவ்வினான். கொஞ்ச நேரத்தில் அவன் பிண்டப் பிரதானமாகியிருப்பான். ஆனால், அந்தச் சமயத்தில் அவனுடைய அதிர்ஷ்டம் வந்து குறுக்கிட்டது.
இவர்கள் கட்டிப் புரண்டது அடர்ந்த மர நிழலுள்ள இடம். இரண்டு கையிலும் இரண்டு பெட்டி தூக்கிக்கொண்டு அவ்வழியே ஓடிவந்த மூன்றாவது மனிதன் ஒருவன், இவர்கள் மீது கால் இடறித் தொப்பென்று விழுந்தான். அவன் வைத்திருந்த பெட்டியொன்று வஸ்தாது நாயக்கன் தோள்மீது விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்திருந்தான். இதுதான் சமயமென்று போலீஸ்காரன் சட்டென்று நழுவிச் சத்தம் போடாமல் மரத்தடியில் ஒளிந்து கொண்டான். குடி மயக்கத்திலிருந்த வேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஓடி வந்தவன் இருட்டில் விழுந்து கிடப்பதுதான் தெரிந்தது. அவன் தான் போலீஸ்காரன் என்று நினைத்து ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனை பிடித்துக் குத்தத் தொடங்கினான். அவன் பேசுவதற்கும் இடம் கொடுக்கவில்லை. மேலும் மேலும் விழுந்த அடி பொறுக்காமல் அந்த மனிதன் மூர்ச்சையடைந்தே போனான். வஸ்தாது இரண்டு மூன்று தடவை அவனைப் புரட்டிப் பார்த்துவிட்டு வேகமாய் வீடு நொக்கி நடந்தான். "இவ்வளவு தடியனா அந்தப் போலீஸ்காரன்? ஒருவேளை, உடம்பு வீங்கிப்போயிற்றா?" என்று நினைத்துக் கொண்டான்.
வேணு சந்து திரும்பிப் போன பிறகு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமி மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். கீழே கிடந்தவனை உற்றுப் பார்த்தான். கீழே கிடந்த பெட்டிகளையும் பார்த்தான். கொஞ்சம் சந்தேகம் உதித்தது. தூரத்தில் ஏதோ 'கோல்மால்' நடக்கும் சத்தம் கேட்டது. சந்தேகம் உறுதிப்பட்டது. பெட்டிகளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைவாக நடந்தான். ஒரு பங்களாவின் வாசலில் ஏக தடபுடலாய்க் கிடந்தது. பலர் கூடி இரைந்து கொண்டிருந்தார்கள். இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருங்கூட நின்றார்கள். கையில் பெட்டிகளுடன் உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட உடுப்பெல்லாம் கிழிந்து அலங்கோலமாய் வந்த வீராசாமியைக் கண்டதும் அங்கே பெருங் கிளர்ச்சி உண்டாயிற்று.
"என்ன?"
"ஏது?"
"அகப்பட்டானா?"
"ஓடிப் போனானா?"
"ஐயோ, பாவம்! நன்றாய் அடிபட்டிருக்கிறான்!"
"எத்தனை பேர்?"
"திருட்டுப் பசங்கள்?"
இவ்வாறு ஏக காலத்தில் பலர் கூச்சல் போட்டார்கள். வீராசாமிக்குக் கொஞ்சம் விஷயம் விளங்கிற்று. தன் அதிர்ஷ்டத்தைத் தானே வியந்து கொண்டான்.
இதற்குள் வீட்டு எஜமான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்தான். வீராசாமி கையில் பெட்டிகளைக் கண்டதும் அவனுக்குக் கரை காணாத சந்தோஷம் உண்டாயிற்று. "ஐயோ! பிழைத்தேன். உயிர் வந்தது. நீ மகாராஜனாய் இருக்க வேண்டும்" என்று வீராசாமியைக் கட்டிக் கொண்டான். பெட்டிக்குள் ரூபாய் 20,000 பெறுமான நகைகளல்லவா இருந்தன!
சப் இன்ஸ்பெக்டர் இப்போது குறுக்கிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும். என்ன சமாசாரம்? சீக்கிரம் சொல்லு. திருடனை எங்கே கண்டாய்? என்ன நடந்தது? சீக்கிரம் சொல்லு" என்றார்.
வீராசாமிப் பிள்ளையின் மூளை வரும்போதே வேலை செய்துகொண்டிருந்தது. எனவே, அவன் தயங்காமல் சொல்லலுற்றான்:- "வட பக்கத்து சந்து வழியாய் வந்து கொண்டிருந்தபோது மூன்றுத் தடிப்பசங்கள் குறுக்குச் சந்து வழியாய் ஓடி வந்தார்கள்! என்னைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றார்கள். உடனே எனக்கு சந்தேகம் தட்டிற்று. 'அடே திருட்டுப் பயல்களே!' என்று சும்மா ஒரு அதட்டல் அதட்டினேன். உடனே மூன்று பேரும் என் மேல் வந்து விழுந்தார்கள். அப்பா! என்ன பாடுபட்டு போனேன்! தப்பிப் பிழைப்பது இனி மேல் இல்லையென்றே நினைத்துவிட்டேன். இருந்தாலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சண்டை போட்டேன். கையில் கத்தி, துப்பாக்கியும் ஒன்றுமில்லை. அந்த மூன்று பேரிலும் ஒருவன் தான் நல்ல தடியன், ஒரு திமிறு திமிறிக்கொண்டு அவன் நெற்றியைப் பார்த்து ஒரு குத்து விட்டேன். அப்படியே அவன் சுருண்டு விழுந்தான். மற்ற இரண்டு பேரும் ஓடியே போனார்கள். கீழே விழுந்தவன் மறுபடியும் எழுந்து தாக்கினான். மூன்று பேரையே ஒரு கை பார்த்தவன் ஒருவனுக்குப் பயப்படுவேனா? அடித்துப் போட்டேன். அந்த மரத்தடியிலேயே இப்போது கிடக்கிறான். உயிர் இருக்கிறதோ செத்துப் போனானோ, தெரியாது. பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடி வந்தேன்."
எல்லோரும் கையில் லாந்தர்களுடன் கிளம்பிச் சென்றார்கள். முச்சந்தியில் கீழே விழுந்து கிடந்த பிரம்மாண்ட மனிதனைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிரமையுண்டாகிவிட்டது. வீராசாமியையும் கீழே கிடந்தவனையும் மாறி மாறிப் பார்த்தார்கள். 'இத்தனை பெரிய ஆளை இவன் எப்படி அடித்தான்?' என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நல்ல வேளையாக அவன் மூக்கில் மூச்சு வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைத் திறந்தான். கையிலும் காலிலும் விலங்கு பூட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோனார்கள்.
*******
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வஸ்தாது வேணு - Vasdhadhu Venu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், இரண்டு, கீழே, போலீஸ்காரன், என்ன, கையில், வஸ்தாது, சந்து, உடனே, கொண்டான், வந்து, மூன்று, நாயக்கன், வேணு, விழுந்து, ஹெட்கான்ஸ்டேபிள், மேல், கண்டதும், சத்தம், அந்த, சந்தேகம், எழுந்து, கிடந்தன, கிடையாது, மனைவி, கொண்டு, பார்த்தான், மனிதன், வீராசாமிப்பிள்ளை, வீடு, வந்தான்