தியாக பூமி - 4.27. 'ஜட்ஜு மாமா!'
சாருவுக்கு ஜில்லி கிடைத்ததில் உண்மையாகவே சந்தோஷந்தான். ஆனாலும், முன்னையெல்லாம் போல் அவளுடைய மனத்தில் குதூகலம் ஏற்படவில்லை. 'மாமியும் தாத்தாவும் உறவாய்ப் போய்விட்டார்கள்; நாம் தனியாய்ப் போய்விட்டோ ம்' என்ற எண்ணம் அவளுடைய உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. தானும் தாத்தாவுமாய் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டேயிருக்கக் கூடாதா, எதற்காக இங்கே வந்தோம் என்று கூடத் தோன்றியது.
முன்னைப்போல் சாரு இப்போது பங்களாவின் தோட்டத்தில் திரிந்து விளையாடுவதில்லை. பங்களாவுக்குள் தனியாக எங்கேயாவது ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொள்வாள். சோகபாவம் ததும்பும் முகத்தோற்றத்துடன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாள். அல்லது, ஜில்லியை மடியில் வைத்துக் கொண்டு அதனிடம் தன்னுடைய மனக்குறையை வெளியிடுவாள். "மாமியும் தாத்தாவும் ஒண்ணு; நீயும் நானும் ஒண்ணு" என்பாள்.
இந்த மாதிரி ஒரு நாள் சாரு ஜில்லியை வைத்துக் கொண்டு சோகமான குரலில் அதனுடன் பேசிக் கொண்டிருந்த போது சாவித்திரி அங்கே வந்தாள். "சாரு! ஏன் இப்படித் தனியாகத் தனியாக வந்து உட்கார்ந்து கொள்கிறாய்? ஓடித் திரிந்து விளையாடறதுக்கென்ன?" என்று கேட்டாள்.
"என்னோடு விளையாடறதுக்கு யார் இருக்கா? நான் தான் தனிப்பட்டவளாய்ப் போய்ட்டேனே?" என்றாள் சாரு.
"என்ன சாரு! பெரிய பாட்டி மாதிரி பேசறே! நீ தனிப்பட்டவளாய்ப் போகவாவது? உன்னோட விளையாடறதற்கு நான் இருக்கேனே! வா! நாம் இரண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாடலாம்" என்றாள் சாவித்திரி.
சாரு, சாவித்திரியின் பின்னால் வந்து அவளுடைய புடவைத் தலைப்பை மடித்துக் கண்ணைக் கட்டினாள். அப்போது, சாவித்திரி, "இதோ பாரு! என் கண்ணைக் கட்டிவிட்டு, முன்னே ராத்திரியிலே எழுந்து ஓடிப் போனயே, அந்த மாதிரி ஓடிவிடக் கூடாது!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். மறுபடியும், "ஆனால் இப்ப நீ எங்கே ஓடறது! தாத்தாதான் இங்கேயே இருக்காரே?" என்றாள்.
சாரு, இதற்குள் கண்ணைக் கட்டிவிட்டு, "ஊம்; ஒண்ணு, இரண்டு சொல்லுங்கோ!" என்றாள். சாவித்திரி, "ஒண்ணு, இரண்டு, மூணு..." என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, சாரு அந்த அறையிலிருந்து ஓடி ஆபீஸ் அறைக்குள் போனாள். அங்கே வக்கீல் ஆபத்சகாயமய்யர் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சாரு அவருக்குத் தெரியாமல் சத்தமில்லாமல் நடந்து ஒரு ஸோபாவுக்குப் பின்புறத்தில் ஒளிந்து கொண்டாள். ஒளிந்து கொண்டவள் மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். 'தாத்தாவும் மாமியும் ஒண்ணாய்ப் போய்விட்டா. எனக்கு இப்போ ஓடறதுக்குக் கூட இடமில்லை' என்று எண்ணி அவள் மனம் ஏங்கிற்று.
சற்று நேரத்துக்கெல்லம் அந்த அறைக்குள் சாவித்திரி வந்தாள். "வக்கீல் ஸார்! சாரு இங்கே வந்தாளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
"இல்லையே, இங்கே வரலையே?" என்றார் வக்கீல். பிறகு, "பத்திரம் எழுதியாச்சு; கையெழுத்துப் போடலாம்" என்றார்.
உமா மேஜைக்கருகில் உட்கார்ந்து, "எங்கே வாசிங்கோ! கேட்கிறேன்" என்றாள்.
ஆபத்சகாயமய்யர் அடிக்கடி, "என்னிடம் நம்பிக்கை வையுங்கள்" என்று உமாராணியிடம் சொல்லிக் கொண்டிருந்தாரல்லவா? அதற்குரிய சந்தர்ப்பம் இப்போது வந்திருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல், கோர்ட்டில் குழந்தையைப் பற்றிக் கேள்வி கேட்டதிலிருந்து சாவித்திரி பெரிதும் கலக்கமடைந்து போயிருந்தாள், யாரிடமாவது யோசனை கேட்டே ஆகவேண்டுமென்று தோன்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.27. 'ஜட்ஜு மாமா!' - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாவித்திரி, என்றாள், உட்கார்ந்து, வக்கீல், வந்தாள், இரண்டு, கண்ணைக், அவளுடைய, மாதிரி, மாமியும், தாத்தாவும், கொண்டே, அறைக்குள், மறுபடியும், வைத்துக், ஆபத்சகாயமய்யர், என்றார், ஒளிந்து, கட்டிவிட்டு, கொண்டு, திரிந்து, தனியாக, தனிப்பட்டவளாய்ப், இப்போது, ஜில்லியை, சிந்தனையில்