ரங்கதுர்க்கம் ராஜா
2
ரங்கராஜன் எடுத்துச் செல்லவேண்டிய சாமான்கள்
ஒன்றுமில்லை. எனவே, உடனே கப்பலிலிருந்து படகில் இறங்கினான். படகு கரையை
நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. புயலடித்து ஓய்ந்திருந்த கடல் இப்போது வெகு
அமைதியாயிருந்தது. ஆனால் அவனுடைய உள்ளக் கடலிலோ அதற்கு நேர்மாறான நிலைமை
குடி கொண்டிருந்தது. அங்கே வெகு வேகமுள்ள புயல்காற்று, சுழற்காற்று,
சூறைக்காற்று எல்லாம் சேர்ந்து அடித்தன. பிரமாண்டமான அலைகள் எழுந்து
விழுந்தன.
'பிரிட்டானியா' கப்பலிலிருந்து கடலில் குதித்த வரையில் அவனுடைய ஜீவிய சம்பவங்கள் எல்லாம் அவன் மனக்கண் முன் அதிவிரைவாய்த் தோன்றி மறைந்தன. பின்னர், 'ரோஸலிண்ட்' கப்பலில் அவனுடைய ஐந்து நாள் வாழ்க்கையைப் பற்றி எண்ணிய போது மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. "இவ்வளவு பெரிய சந்தோஷம் நீடித்திருக்க முடியாது. கண் விழித்ததும் பொய்யாகும் கனவைப் போல் விரைவிலே மறைந்து மாயமாய்விடும்" என்று இடையிடையே தன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்த பயம் உண்மையாகிவிட்டதே!
"இந்தியர்களுடைய வாழ்க்கையில் இந்நாளில் புதுமை ரஸிகத்துவம் எதுவும் இருக்க முடியாது. சாரமற்ற வாழ்வு. இத்தகைய வாழ்க்கை நடத்துவதை விட இறப்பதே மேல்" என்று நான் எண்ணியது தவறு என்பதை நிரூபிப்பதற்காகவே பகவான் இந்த ஆச்சரியமான அநுபவத்தை அளித்தார் போலும்!
நிகழ்ந்தது எல்லாவற்றையும் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கினான். முதல் நாள் அந்த அசட்டுக் காதல் கடிதத்தை வியாஜமாகக் கொண்டு அவர்களுக்குள் சம்பாஷணை ஏற்பட்டதும், நெடு நேரம் பேசிக் கொண்டிருந்ததும், அன்றிரவெல்லாம் லவகேசமும் தூக்கமின்றித் தனது வாழ்க்கையில் நேர்ந்த இந்த அதிசயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தன. இரவு சென்று பொழுது விடிந்ததும் ஒரே நினைவுதான். பிரேமலதாவை எப்படிச் சந்திப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடிப் போவது?
ஆனால் கப்பலாகையால் இந்தக் கஷ்டம் அவ்வளவாகத் தோன்றவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தால் ஒருவரையொருவர் சந்திக்கச் சந்தர்ப்பங்களுக்குக் குறைவு கிடையாது. எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே சந்திப்பு ஏற்பட்டது. பேச்சிலே அவர்கள் ஆழ்ந்துவிட்டபோது உலகத்தையே மறந்து விட்டார்கள். ஜமீன்தாரிணி உணவு நேரத்தை ஞாபகமூட்டுவதற்கு வந்தாள். ரங்கராஜனையும் தங்களுடன் வந்து சாப்பிடுமாறு அழைத்தாள். அது முதல் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் பெரும்பாலும் அவர்கள் சேர்ந்திருக்கத் தொடங்கினார்கள்.
கரையோரமாகப் பலத்த புயல் அடிக்கும் காரணத்தினால் கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறதென்றும் பிரயாணம் நீடிக்கலாமென்றும் தெரிய வந்த போது ரங்கராஜனுடைய இருதயம் சந்தோஷமிகுதியினால் வெடித்து விடும் போல் இருந்தது.
அந்த ஐந்து தினங்களில் முதல் இரண்டு நாளைக்கும் பிந்தைய மூன்று நாட்களுக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி ரங்கராஜன் நினைத்தான். முதலில் நேரமெல்லாம் பேச்சிலேயே போயிற்று. பின்னால் பெரும்பாலும் மௌனம் சாதிப்பதில் சென்றது. முதலில் எவ்வளவு நாள் பேசினாலும் போதாது போலவும், அவ்வளவு விஷயங்கள் பேசுவதற்கு இருப்பது போலவும் தோன்றியது. ஆனால் போகப் போகப் பேசுவதற்கு விஷயமே இல்லை போல் ஆகிவிட்டது. ஹிருதயம் நிறைந்துள்ள போது பேச்சு வருவதில்லை. பேசினால் தன் இருதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஒரே விஷயத்தைப் பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் அதுவோ பேச்சு வரம்பைக் கடந்து நின்றது. அதிலும் அந்த அசட்டுக் காதல் கடிதத்தைப் படித்த பின்னர், அணுவளவேணும் அறிவுள்ளவர்கள் காதல் பேச்சுப் பேச முடியுமா? ஒன்றுந்தான் பேசுவதற்கில்லையே; விடைபெற்றுக் கொண்டு பிரிந்து போகலாமென்றால், அதற்கும் மனம் வருவதில்லை. வாய் பேசாவிட்டால், பேச்சு இல்லையென்று அர்த்தமா? கண்களோடு கண்கள், ஹிருதயத்தோடு ஹிருதயம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன.
இடையிடையே வாய்க்கும் பேசுவதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தபோது, விஷயம் ஹிருதய சம்பாஷணையுடன் ஒத்ததாகவே இருந்தது.
"இளம்பிராயத்தில் நான் ஓர் இலட்சிய கன்னிகையை என் உள்ளத்தில் உருவகப்படுத்துவதுண்டு. அவளிடம் இன்னின்ன அம்சங்கள் பொருந்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் நேரம் போவது தெரியாமல் சிந்தனை செய்து கொண்டிருப்பேன். ஆனால், நாளாக ஆக, 'இது சுத்தப் பைத்தியம்; இந்த மாதிரி நமது நாட்டில் இருக்கவே முடியாது' என்று எண்ணி விட்டு விட்டேன். வெகு நாளைக்குப் பின்னர் இன்று என் மனோராஜ்யக் கன்னிகையை நேருக்கு நேர் காண்கிறேன். ஆகையாலேயே, ஒவ்வொரு சமயம் இதெல்லாம் வெறும் பொய்யோ என்று தோன்றுகிறது," என்றான் ரங்கராஜன்.
"நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். என்னுடைய இலட்சியத்தைப்பற்றி நான் அப்படிச் சொல்லிக் கொள்வதற்கில்லை," என்றாள் பிரேமா.
ரங்கராஜனுடைய முகம் வாடிற்று. பிரேமாவின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று தூரத்திலே பறந்த கடற்பறவையை வெகு கவனமாக பார்க்கத் தொடங்கினான்.
"ஆமாம், நானும் சிறிது காலமாக ஓர் இலட்சிய புருஷரை மனத்தில் உருவகப்படுத்தி வந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்புவரை என் லட்சியத்துக்கு கிட்டத்தட்ட வரக்கூடியவரைக்கூட நான் சந்திக்கவில்லை. கடைசியாக ஒருவரைச் சந்தித்த போது, 'இவர்தான்' என்று தோன்றிற்று. ஆனால் அருகில் நெருங்கிப் பார்த்தால் என்னுடைய இலட்சியத்தைவிட மிக உயர்ந்து விளங்குகிறார். இன்னும் கொஞ்சம் கீழே இருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது" என்றாள்.
இது என்ன உண்மையா, பரிகாசமா? அவளுடைய புன்னகை இரண்டுக்கும் இடம் தருவதாயிருந்தது.
மற்றொரு நாள் தமிழில் நவீன இலக்கியங்கள் அதிகம் இல்லாமலிருப்பது குறித்துப் பேச்சு வந்தது.
"இவ்வளவெல்லாம் படித்திருக்கிறீர்களே, நீங்கள் ஏன் தமிழில் நல்ல நாடகம் ஒன்று எழுதக் கூடாது?" என்று பிரேமா கேட்டாள்.
"அந்த எண்ணம் எனக்கு வெகு நாளாக உண்டு. ஆனால் ஆனால்... இதுவரையில் அதற்குத் தூண்டுதல் ஏற்படவில்லை."
"நான் வேண்டுமானால் சொல்கிறேன்; உங்களால் நாடகம் ஒரு நாளும் எழுத முடியாது."
"ஏன் இத்தகைய சாபம்?"
"நாடகம் என்றாள் அதில் எல்லாப் பாத்திரங்களும் மேதாவிகளாகவும் புத்திசாலிகளாகவுமே இருக்க முடியாது. நடுத்தரமானவர்களும் அசடுகளும் கூட வேண்டும். நீங்களோ முதல் தர மேதாவிகளைத் தவிர வேறு யாரோடும் பேச மாட்டீர்கள்; பழக மாட்டீர்கள். ஆகையால், இயற்கையாய்த் தோன்றக்கூடிய நாடக பாத்திரங்களை உங்களால் சிருஷ்டிக்க முடியாது."
"உங்களிடம் அந்தக் குறை கிடையாதல்லவா? நீங்கள் தான் டாக்டர் சிங்காரம் உள்பட எல்லாருடனும் பழகுகிறீர்களே! நீங்களே எழுதலாமே?"
"என்னால் முடியாது. ஆனால் உங்களுக்கு நான் உதவி செய்யக்கூடும்."
"அப்படியானால் நாம் நாடகம் எழுதி முடிக்கும் வரையில் புயல் நீடித்திருக்க வேண்டுமே? கரை சேர்ந்தால் நான் எங்கேயோ, நீங்கள் எங்கேயோ?"
"உண்மையாகவா? கரை சேர்ந்ததும் நாம் பிரிந்து போவது நிஜமாயிருந்தால், இப்போதே பிரிந்துவிடலாமே?" என்று பிரேமலதா எழுந்து செல்லத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்தி உட்காரச் செய்ய வேண்டியிருந்தது.
அப்படியெல்லாம் நடித்தவள் அந்தத் தந்தியைக் கண்டதும் எப்படி மாறிவிட்டாள்! சீ! இதென்ன உலகம்! இவ்வளவு கல்வி, அறிவு, சாதுர்யம், சாமர்த்தியம் எல்லாம் கேவலம் பட்டம், பணம் என்னும் பைசாசங்களுக்குப் பலியாவதற்குத்தானா? - கடலில் விழுந்த தன்னைத் தப்புவித்த முட்டாளை ரங்கராஜன் அப்போது மனமாரச் சபித்தான்.
ஆனால் உடனே வேறோர் எண்ணமும் தோன்றிற்று. ஏன் இவ்வாறு தான் மனக்கசப்பு அடைய வேண்டும்? தன் வாழ்நாளில் இத்தகைய இனிய கனவு ஒன்று ஏற்பட்டது பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கலாமே? அதைப் பற்றிய சிந்தனையில் சந்தோஷம் அடைந்திருக்கலாமே? - இப்படி எண்ணியபோது அந்தக் கனவு நிகழ்ந்த இடமாகிய 'ரோஸலிண்ட்' கப்பலை ரங்கராஜன் நிமிர்ந்து பார்த்தான். தானும் அவளும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசிய அதே இடத்தில் பிரேமலதா துயர முகத்துடன் நின்று தன்னை நோக்குவது போல் ஒரு க்ஷணம் தோன்றிற்று. அடுத்த க்ஷணம் ஒன்றுமில்லை. சீ! இதென்ன வீண் பிரமை! இதற்குள் படகு கரையை அடைந்தது. பம்பாய் நகரில் பிரவேசித்ததும், ஸ்வப்ன உலகத்திலிருந்து பூவுலகத்துக்கு வந்தது போல் ரங்கராஜன் உணர்ந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - முடியாது, நான், ரங்கராஜன், போல், வெகு, அந்த, நீங்கள், போது, பேச்சு, நாடகம், நாள், பற்றி, வேண்டும், என்றாள், தோன்றிற்று, இத்தகைய, எல்லாம், அவனுடைய, பின்னர், காதல், கொண்டு, போவது