ரங்கதுர்க்கம் ராஜா
4
ரோஸலிண்ட் கப்பல் பம்பாய்த் துறைமுகத்துக்குச்
சாதாரணமாய் வந்து சேர வேண்டிய தினத்துக்கு மூன்று நாளைக்குப் பிறகு வந்து
சேர்ந்தது. துறைமுகத்துக்குச் சுமார் இருநூறு மைல் தூரத்தில் கப்பல்
வந்தபோது பெரும் புயலடித்ததாகவும், அதன் காரணமாகக் கப்பல் நங்கூரம் போட்டு
நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தன. துறைமுகத்துக்குச் சமீபத்தில்
வந்து கப்பல் நின்றதும் தயாராய் அங்கே காத்திருந்த படகு ஒன்றிலிருந்து
அவசரமாய் ஒரு மனிதன் கப்பலில் ஏறினான். அவன் நேரே கப்பல் தலைவரிடம் சென்று
ஒரு தந்திச் செய்தியைக் கொடுத்தான். அதைப் படித்ததும் காப்டனுடைய முகம்
சிவந்ததைப் பார்த்தால், தலைகால் தெரியாத கோபம் அவருக்கு அதனால் ஏற்பட்டிருக்க
வேண்டுமென்று ஊகிக்க இடமிருந்தது. சாதாரணமாய், மிதமிஞ்சிக் குடித்திருக்கும்
போது கூட அவர் முகம் அவ்வாறு சிவந்தது கிடையாது. வந்த தந்தியைக் கையில்
எடுத்துக் கொண்டு, "எங்கே அந்த மோசக்கார பையன்?" என்று கேட்டுக் கொண்டே
அவர் விரைந்து நடந்தார். கடைசியாக, அவர் ரங்கராஜனைக் கண்டுபிடித்ததும்,
"மிஸ்டர்! எங்களையெல்லாம் நீர் ஏமாற்றி விட்டீரல்லவா? இந்தியர்களே இப்படித்தான்,"
என்றார்.
"நானா ஏமாற்றினேன்? என்ன ஏமாற்றம்?" என்று புன்னகையுடன் ரங்கராஜன் கேட்டான்.
பக்கத்திலிருந்த டாக்டர் சிங்காரம், "என்ன காப்டன் இந்தியர்களைப் பற்றி இப்படி அவதூறு கூறுகிறீர்? யார் என்ன ஏமாற்றினார்கள்?" என்றார். ஜமீன்தாரிணியும் கூடச் சேர்ந்து, "என்ன, என்ன?" என்று கேட்டாள்.
"இதோ பாரும் இந்தத் தந்தியை," என்று காப்டன் தந்தியை நீட்டினார்.
ரங்கராஜன் கையை நீட்டி தந்தியை வாங்கினான். அவன் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக் கொண்டது. தன் ஜீவியத்தின் அபூர்வ இன்பக் கனவு இந்த க்ஷணத்தோடு முடிவடையப் போவதாக அவனுக்குத் தோன்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, கப்பல், தந்தியை, வந்து, துறைமுகத்துக்குச், அவர்