ரங்கதுர்க்கம் ராஜா
நான்காம் பாகம்
1
"கொண்டு வா கத்தி! இதோ இந்தக் கண்களைத்
தோண்டி எறிந்து விடுகிறேன். இப்படி ஏமாற்றுகிற கண்கள் இருந்தாலென்ன?
இல்லாமல் நாசமாய்ப் போனாலென்ன?" என்று அலறினார் டாக்டர் சிங்காரம். அவர்
கையில் ரங்கராஜனிடமிருந்து வாங்கிய தந்தி இருந்தது.
"என்ன? என்ன?" என்று தவித்தாள் ஜமீன்தாரிணி.
இதோ பாருங்கள் என்று தந்தியை அவளிடம் கொடுத்தார். பிறகு ரங்கராஜனை ஒரு நொடிப் பார்வை பார்த்துவிட்டு, "பேர்வழி முழிப்பதைப் பார்!" என்றார்.
ஜமீன்தாரிணியும், பிரேமலதாவும் ஏக காலத்தில் தந்தியைப் படித்தார்கள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.
"மால்டா: உங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கதுர்க்கம் ஜமீன்தாரைக் கடலிலிருந்து மீட்டோ ம். அவர் தம்மைப் பற்றிச் சரியான தகவல் கொடுக்க இரண்டு மூன்று நாளாகி விட்டது. அவருடைய சாமான்களையெல்லாம் லண்டனுக்குத் திருப்பியனுப்பி விடவும். எங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கராஜன் என்னும் வாலிபனைப் பற்றித் தகவல் தெரியவில்லை. ஒரு வேளை அவன் தங்களால் மீட்கப்பட்டிருந்தால் தெரிவிக்கவும். அவனுடைய பெட்டியிலிருந்த ரூ. 1000 சொச்சத்தைக் குறிப்பிடும் விலாசத்துக்கு அனுப்பி விடுகிறோம். - காப்டன் கட்லெட்."
ஜமீன்தாரிணி அதைப் படித்ததும் முன்னால் வந்து "காப்டன்! இது நிஜந்தானா?" என்று கேட்டாள்.
"எது நிஜந்தானா?"
"இந்தத் தந்தி நிஜந்தானா?"
"இதோ உங்கள் அருமையான டாக்டர் இருக்கிறாரே. அவருடைய கழுத்தின் மேல் தலை இருப்பது நிஜந்தானா?"
"அதுதான் நானும் கேட்கிறேன். நீர் நிஜந்தானா? நான் நிஜந்தானா? இந்த உலகம் நிஜந்தானா?" என்று டாக்டர் சிங்காரம் அடுக்கினார். "வாழ்வாவது மாயம்; இது மண்ணாவது திண்ணம்" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
"பிரேமா! வா, போகலாம்" என்று சொல்லி ஜமீன்தாரிணி பிரேமாவைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். டாக்டர் சிங்காரமும் பின்னால் போனார். அவர்கள் மூலை திரும்பும்போது, "அந்த மெஸ்மெரிஸ்டும் கப்பல் டாக்டரும் எங்கே காணோம்?" என்று பிரேமா கூறியது ரங்கராஜன் காதில் விழுந்தது. உடனே, அந்தப் பக்கம் பார்த்தான். அதற்குள் அவர்கள் மறைந்து விட்டார்கள். இன்னும் சற்று முன்பாகவே அவன் அந்தப் பக்கம் பார்த்திருந்தால் பிரேமாவின் கண்கள் அறிவித்த செய்தியை அவன் பெற்றிருக்கக் கூடும். அதற்குப் பதிலாக அவன் இப்போது காப்டனுடைய கடுகடுத்த முகத்தைப் பார்க்க நேர்ந்தது.
"என்ன சொல்கிறீர இப்போது?" என்றார் காப்டன்.
"நீர் அல்லவா சொல்ல வேண்டும்?"
"சொல்வது என்ன? இனிமேல் ஒரு நிமிஷங்கூட உம்மைப் பார்க்க எனக்கு வேண்டியிருக்கவில்லை. இந்தப் படகிலேயே இறங்கிப் போய் விடும்."
"பரஸ்பரம் அப்படித்தான், காப்டன்! இதோ நான் போகத்தான் போகிறேன். ஆனால் ஒரு விஷயம்; அன்றைய தினம் நான் உம்மிடம் வந்து, 'நான் ரங்கதுர்க்கம் ராஜா இல்லை'யென்று படித்துப் படித்துச் சொல்லவில்லையா? என் பேரில் இப்போது எரிந்து விழுகிறீரே, ஏன்?"
"அதற்கென்ன செய்வது? ரங்கதுர்க்கம் ராஜாவைப் போன்ற இரண்டு முட்டாள்களை உலகம் ஏககாலத்தில் தாங்காது என்று நினைத்தேன்."
"இரண்டு பேர் அல்ல, நாலு பேரைக் கூட தாங்க முடியுமென்று இப்போது தெரிந்து விட்டதல்லவா?"
"அது என்ன?"
"ஆமாம், ரங்கதுர்க்கம் ராஜா ஒன்று, டாக்டர் சிங்காரம் ஒன்று, உங்கள் கப்பல் டாக்டர் ஒன்று, அப்புறம் தாங்கள்."
காப்டன் பயங்கரமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவசரமாய்த் திரும்பிச் சென்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நிஜந்தானா, டாக்டர், என்ன, காப்டன், அவன், நான், ரங்கதுர்க்கம், இப்போது, ஒன்று, இரண்டு, சிங்காரம், ஜமீன்தாரிணி, உங்கள்