ரங்கதுர்க்கம் ராஜா
3
"உங்களுக்கு ஆட்சேபமில்லையென்றால் இந்த
நாற்காலிகளில் உட்கார்ந்து பேசலாமென்று தோன்றுகிறது," என்றாள் பிரேமலதா.
"இதில் ஆட்சேபம் என்ன இருக்கக் கூடும்?" என்றான் ரங்கராஜன்.
"இல்லை; உலகத்தில் எல்லாருந்தான் உட்காருகிறார்கள். ஆனால், புத்திசாலிகளும், அவர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த உலகத்தைத் தகுதியாக்குகிறவர்களும் உட்காரலாமோ என்னவோ என்று சந்தேகமாயிருந்தது."
ரங்கராஜன் வாய்விட்டுச் சிரிக்க வேண்டி வந்தது. பார்த்தால் பரம சாதுவாய்த் தோன்றும் இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு எப்படி வந்தது என்று வியந்தான்.
இருவரும் உட்கார்ந்தார்கள். வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் வெளி வந்து கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீசிற்று. அலைகளினால் மோதப்பட்ட கப்பல் தொட்டில் ஆடுவது போல் அசைந்து கொண்டிருந்தது.
"இந்த உலகம் சிலருக்கு வெறுத்துப் போவது ஏன் என்பது எனக்கு விளங்குவதேயில்லை. உலகத்தில் அநுபவிப்பதற்கு எவ்வளவு இன்பங்கள் இருக்கின்றன! உதாரணமாக, சாயங்கால வேளைகளில் கப்பல் பிரயாணத்தைப் போல் இன்பமளிப்பது வேறென்ன இருக்கக்கூடும்?"
"உண்மைதான், ஆனால், இவையெல்லாம் இரண்டாந்தரமான சந்தோஷங்களே. ஒத்த மனமுள்ளவர்களின் சல்லாபமும் சேரும்போதே இயற்கை இன்பங்கள் கூட உயிருள்ளவையாகின்றன."
இந்தக் கட்டத்திலேதான், இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூறியபடி டாக்டர் சிங்காரமும் ஜமீன்தாரிணியும் அங்கே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலேயே சிறிது பிரமித்து நின்ற பிறகு, அவர்கள் அருகில் வந்தார்கள். "ராஜா சாகிப், நான் செய்த மெஸ்மெரிஸம் பலித்துவிட்டதல்லவா? ஹஹ்ஹஹ்ஹா!" என்று சிரித்துக் கொண்டு டாக்டர் சிங்காரம் ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ஜமீன்தாரிணி, "என்ன ராஜாசாகிப்! உடம்பு சௌக்கியமாயிருக்கிறதா?" என்று கேட்டாள்.
ரங்கராஜன் எழுந்து நின்று, "சௌக்கியம் தான், அம்மா! உட்காருங்கள்," என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினான்.
"இல்லை, இல்லை. நாங்கள் வேறு காரியமாகப் போகிறோம். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்" என்றாள் ஜமீன்தாரிணி.
டாக்டர் சிங்காரம், "பிரேமா! ஜாக்கிரதை! ராஜா சாகிப் மறுபடியும் கம்பிக்கு அருகே போனால் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்," என்றார்.
"நானும் கூட விழுவதற்கா? அவ்வளவு தியாகத்திற்கு நான் தயாராகயில்லை," என்றாள் பிரேமா. ஆயினும் அச்சமயம் அவள் ரங்கராஜனைப் பார்த்த பார்வை அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவிப்பதாயிருந்தது.
டாக்டரும் ஜமீன்தாரிணியும் போன பிறகு ரங்கராஜன், "இந்த டாக்டரைப் போன்ற மனிதர்களுடனேயே ஒருவன் பழக வேண்டுமென்றிருந்தால் கடலில் விழுந்து பிராணனை விடலாமென்று தோன்றுவது ஆச்சரியமா?" என்றான்.
"நான் அப்படி நினைக்கவில்லை. அசட்டுப் பேச்சுக்களைக் கேட்பதிலும் அசட்டு மனிதர்களுடன் பழகுவதிலுங்கூட ஒரு ரஸம் இல்லையா? கடவுள் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் அநேக சந்தோஷங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ளலாமே? உதாரணமாகப் பாருங்கள்; நான் இப்போது கிழித்தெறிந்த காதல் கடிதம் எவ்வளவு ரஸமாயிருந்தது? இம்மாதிரி கடிதம் ஓர் ஆசிரியரின் கற்பனையிலிருந்து தோன்றியிருந்தால், நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போம்?"
"வாஸ்தவந்தான். இந்தக் கடிதத்துக்கு உபமானமாகச் சொல்லக் கூடிய கட்டம் ஒன்று ஜேன் ஆஸ்டின் எழுதிய "பிரைட் அண்டு பிரெஜுடிஸ்" என்னும் நாவலில் வருகிறது."
"காலின்ஸ், எலிஸபெத்திடம் தன் காதலை வெளியிடுகிறானே, அதைத்தானே சொல்கிறீர்கள்?"
ரங்கராஜனுக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போயிற்று. ஜேன் ஆஸ்டின் நாவல்களின் சுவையை அறிந்து அநுபவிப்பது எல்லாருக்கும் சாத்தியமில்லையென்பது அவன் எண்ணம். இந்தப் பெண் அதைப் படித்திருந்ததுமல்லாமல், தான் எந்த கட்டத்தை மனத்தில் நினைத்தானோ, அதையே சொல்கிறாள்.
"ஜேன் ஆஸ்டின் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்குமோ?" என்று கேட்டான்.
அவ்வளவுதான்! அப்புறம் இரண்டு மணி நேரம் புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக ஒருவருக்குப் பிடித்த ஆசிரியர்களும் புத்தகங்களும் இன்னொருவருக்கும் பிடித்திருந்ததாகத் தெரியவந்தது.
கடைசியாக, அவர்கள் பிரிந்து செல்லும் தருவாயில் பிரேமலதா, "நீங்கள் ரங்கதுர்க்கம் ராஜா இல்லையென்று எவ்வளவு சொன்னாலும் இவர்கள் கேட்கப் போவதில்லை. நானாயிருந்தால் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும் என்று பேசாமல் இருந்து விடுவேன்," என்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரங்கராஜன், நான், என்றாள், எவ்வளவு, ஆஸ்டின், ஜேன், தான், டாக்டர், இல்லை, ராஜா