மயில்விழி மான்
6
மூன்று மாத காலம் அந்த அழகிய அமுதத் தீவில்
வசித்தேன். சொர்க்க லோகத்தில் வசித்தேன் என்றே சொல்லலாம். வாழக்கை அவ்வளவு
குதூகலமாகச் சென்று கொண்டிருந்தது. அகஸ்தியருக்குப் பிற்காலத்தில் தமிழ்நாட்டில்
இயற்றப்பட்ட கவிதைகளைப் பற்றிக் கேட்டார்கள். நானும் திருவள்ளுவர், கம்பர்,
இளங்கோவடிகள், இராமலிங்க அடிகள், பாரதியார், கவிமணி முதலியவர்களின் கவிதைகளில்
எனக்கு நினைவு இருந்தவற்றையெல்லாம் சொல்லிக் காட்டினேன். அவர்கள் அப்பாடல்களின்
எளிமையையும் இனிமையையும் கவிதை அழகையும் சுவைத்துச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.
அகஸ்தியருக்கு முற்காலத்திய கவிஞர்களின் பாடல்களை அவர்கள் பாடிக் காட்டினார்கள். அவற்றில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் சில மட்டும் நாம் இப்போது அறிந்திருப்பவை. மற்றவைகளை நாம் கேட்டதே இல்லை. தமிழகத்தில் கடல் கொண்டு போய்விட்ட நூல்களில் அப்பாடல்கள் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
அகஸ்தியருக்குப் பின்னால் வந்த புலவர்கல் சிலர் தமிழ் மொழியைக் கரடு முரடாக்க முயன்றதைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
"கால்பார் கோத்து ஞாலத்தியக்கும்
காவற்சாகா டுகைப்போன் மாணின்
ஊறின்றாகி யாறினிது படுமே
உய்த்தறேற் றானாயின் வைகலும்
பகைக் கூழள்ளற் பட்டு
மிகப்பத றிநோய்த் தலைத்தலைத்தருமே."
இது போன்ற பாடல்கள் சிலவற்றை நான் சொல்லக்
கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.காவற்சாகா டுகைப்போன் மாணின்
ஊறின்றாகி யாறினிது படுமே
உய்த்தறேற் றானாயின் வைகலும்
பகைக் கூழள்ளற் பட்டு
மிகப்பத றிநோய்த் தலைத்தலைத்தருமே."
மயில்விழி மானுக்கும் எனக்கும் முதல் சந்திப்பிலேயே ஏற்பட்ட நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஒருவரையொருவர் பிரிந்து ஒரு நிமிடமும் உயிர் வாழ முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அமுதத் தீவில் குழந்தைகள் பிறந்து சில நாளைக்குள்ளேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்து விடுவது வழக்கமாம். மயில்விழி மானினாளுக்கு அவ்விதம் முடிவு செய்யப்பட்டிருந்த யுவனைச் சிறு பிராயத்திலேயே ராட்சதத் தீவினர் கொண்டு போய் விட்டார்கள். ஆகையால், மயில்விழி மானின் திருமணத்தைப் பற்றி அவள் பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவன் போய்ச் சேர்ந்தது அவர்களுக்குச் சௌகரியமாய்ப் போயிற்று. தை பிறந்ததும் முதல் காரியமாக முருகன் கோவிலில் எங்களுக்கு மணம் முடித்து வைப்பது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.
ஆனால் கடவுளின் விருப்பம் வேறு விதமாக இருந்தது. நான் அமுதத் தீவை அடைந்த சில மாதங்களுக்கெல்லாம் அத்தீவின் மேலாக அடிக்கடி ஆகாச விமானங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகத் தொடங்கின. ஏதோ பூகோள ஆராய்ச்சி செய்கிறவர்களைப் போல் தோன்றியது. சில நாளைக்கெல்லாம், அத்தீவுக்குச் சில மைல் தூரத்தில் ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கப்பல் வந்து நின்றது. இவற்றையெல்லாம் பார்த்ததும் எனக்கு ஊருக்குப் போகும் சுரம் வந்துவிட்டது. மயில்விழி மானின் மீது எனக்கு எவ்வளவு ஆசையிருந்தாலும், அவளை அழைத்துக் கொண்டு ஊருக்குப் போவதுதான் நல்லது. தமிழ்நாட்டுக்குப் போன பின்னர்ப் பொதுமக்களுக்கும் பொதுஜன சர்க்காருக்கும் அமுதத் தீவையும் அரக்கத் தீவையும் பற்றி எடுத்துச் சொல்லவேண்டும். பழைய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு இது மிகவும் உபயோகமாயிருக்கும். சர்க்காரும் யூனிவர்ஸிடி நிர்வாகிகளும் கட்டாயம் உதவி செய்வார்கள். நாலாயிரம் வருஷத்துக்கு முந்திய தமிழர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய நடை உடை பாவனைகள் எவ்வாறு இருந்தன என்பனவற்றை நேரிலேயே தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
இதையெல்லாம் இளஞ்சென்னிக்கும் மயில்விழி மானுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் சம்மதிக்கும்படி செய்தேன்.
அதன் பிறகு கோட்டைச் சுவருக்கு வெளியில் உயரமான ஒரு பாறையில் போய் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கத் தொடங்கினேன். ஆகாசத்தில் விமானத்தைப் பார்த்த போதெல்லாம் கையில் இருந்த தடியில் ஒரு துணியை முடிந்துவிட்டு ஆட்டு ஆட்டு என்று ஆட்டினேன். கடைசியாக, ஓர் ஆகாச விமானத்தில் உள்ளவர்கள் என்னைக் கவனிப்பதாகத் தோன்றியது. அந்த விமானம் கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பி வந்தது. வரும்போது அதன் அடியில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கிட்ட வந்த பின் அது ஒரு வலை என்று தெரிந்தது. அந்த வலை என்னை அப்படியே பாறை மேலிருந்து தூக்கிக் கொண்டு போயிற்று. தூக்கிய அதிர்ச்சியிலேயே நான் நினைவு இழந்துவிட்டேன். பிறகு நினைவு வந்து பார்த்த போது, அமுதத் தீவிலிருந்து பார்த்த பிரம்மாண்டமான அமெரிக்கக் கப்பலில் இருந்தேன். எனக்குப் பிரமாதமான உபசாரங்கள் அக்கப்பலில் செய்யப்பட்டன. நான் அங்கு வந்து சேர்ந்ததுபற்றியும் நான் பார்த்தவற்றைப் பற்றியும் கேட்டார்கள். எல்லாம் சொன்னேன்.
ஆனால் கப்பல் நிர்வாகிகள் விமானத்திலிருந்து நான் விழுந்ததை மட்டும் ஒப்புக் கொண்டார்களே தவிர, மற்றது ஒன்றையும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் பார்த்ததெல்லாம் என் சித்த பிரமை என்றார்கள். அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும். தாய் நாடு சேர்ந்ததும் நேரு சர்க்காரிடம் சொல்லிக் கப்பல்கள் அனுப்பி அமுதத் தீவிலுள்ளவர்களைத் தாய் நாட்டுக்கு அழைத்து வரச் செய்வது என்று தீர்மானித்தேன். அசுரத் தீவில் உள்ளவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பஸிபிக் சமுத்திரத்தில் எத்தனையோ தீவுகளில் அம்மாதிரி காட்டுமிராண்டிகள் உளர் என்பதை நான் அறிந்திருந்தேன் அன்றோ?
எனவே கப்பல் புறப்படும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஏன் அங்கே கப்பல் நீடித்து நிற்கிறது. அதிலிருந்து புறப்பட்டுப் போய்த் திரும்பும் விமானங்கள் எதற்காக அப்படிப் போய் வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவரும் சொல்லவுமில்லை. கடைசியில் ஒரு நாள் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது. சுமார் முந்நூறு மைல் தூரத்துக்கு அப்பால் சென்று மறுபடியும் நின்றது. விமானங்கள் மீண்டும் கிளம்பிச் சென்றன.
சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் ஆயிரம் பதினாயிரம் இடிகள் சேர்ந்தாற் போல இடித்தது போன்ற ஒரு சத்தம் கேட்டது. அம்மாதிரி காது செவிடுபடும்படி ஒரு கோர பயங்கரச் சத்தத்தை அதுவரை நான் கேட்டது கிடையாது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெடித்த இடத்திலிருந்து புகைத் திரள் கிளம்பி வானை அளாவியதுடன் நாலு திசையும் பரவியது. கப்பலில் இருந்தவர்களையெல்லாம் உடம்பை மூடிக்கொள்வதற்காகக் கவசம் அணிந்து கொள்ளச் சொன்னார்கள்.
அப்போதுதான் என் மந்த மதிக்கு உண்மை புலனாயிற்று. 'ஹைட்ரஜன் குண்டு' பரிசோதனை நடத்தினார்கள் என்பதை அறிந்தேன். மனிதர்களே இல்லாத பிரதேசங்கள் என்று நினைத்து அங்கே ஹைட்ரஜன் குண்டைப் போட்டார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் புகை கலைந்தது நெஞ்சு பதைபதைக்க, வயிறு கலக்கம் அடைய அமுதத்தீவு இருந்த திசையை நோக்கினேன். அங்கே அமுதத்தீவையும் காணவில்லை; அருகிலிருந்த அசுரத்தீவையும் காணவில்லை! எல்லாம் ஹைட்ரஜன் குண்டில் பஸ்மீகரமாகிக் கடலில் கலந்து மறைந்து விட்டன.
கத்து கத்து என்று கத்தினேன். அழு அழு என்று அழுதேன். கப்பல் அதிகாரிகளிடம் முறையிட்டேன். யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நான் குறிப்பிட்ட இடங்களில் இருந்த தீவுகளில் ஜனங்களே இல்லையென்று அவர்கள் சாதித்து விட்டார்கள்.
சில நாளைக்கெல்லாம் வேறு கப்பலில் ஏற்றி என்னை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். இங்கே வந்த பிறகு சர்க்கார் இலாகாக்களைப் போய்ப் பார்த்தேன். ஒருவரும் என் பேச்சை நம்பவும் இல்லை. எனக்குத் தைரியம் கொடுக்கவும் இல்லை. 'சித்தப் பிரமை சரித்திர ஆராய்ச்சியாகாது' என்று சொல்லி விட்டார்கள்.
அவ்வளவுதான் என் வரலாறு. தூய பழந்தமிழர் நாகரிகத்தின் உறைவிடமாகப் பஸிபிக் சமுத்திரத்தில் ஒரு தீவு இருந்தது என்பதற்கு நான் தான் கடைசிச் சாட்சி. நீங்கள் எப்படியும் நம்புவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். இந்திய சர்க்காரிடம் நான் பெற்ற இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்குப் பிரதி செய்துவிட்டதாகவே கருதுகிறேன். நான் எதற்காகப் போனேனோ, அந்த ஆராய்ச்சி செய்யவில்லை தான்; அதனால் என்ன? அதைவிடப் பன்மடங்கு முக்கியமான சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படக்கூடிய செய்திகளைத் தெரிந்து கொண்டு வந்தேன். என்னுடைய கடன் தீர்ந்தது என்று கருதுகிறீர்களா இல்லையா? இதோ தாம்பரம் வந்து விட்டது. வண்டியைச் சிறிது நிறுத்தச் சொல்லுங்கள். இறங்கிக் கொள்கிறேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மயில்விழி மான் - Mayilvizhi Maan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, அமுதத், கப்பல், மயில்விழி, அந்த, வந்து, சரித்திர, பிறகு, பார்த்த, நேரத்துக்கெல்லாம், அங்கே, கப்பலில், இருந்த, ஹைட்ரஜன், விட்டார்கள், நினைவு, எனக்கு, தீவில், சொல்லிக், இல்லை, பற்றி, போய், வந்த, விமானங்கள்