மயில்விழி மான்
3
அடுத்தகணம் பைனாகுலரை எடுத்துக் கண்ணில்
பொருத்திக் கொண்டு மதில் சுவரின் உச்சியில் பார்வையைச் செலுத்தினேன்.
ஏதோ சில நிழல் வடிவங்கள் தெரிந்தன. அவை சித்திரமோ, சிற்பமா, உயிருள்ள
வடிவங்களா என்று தெரியவில்லை. உயிர் உள்ளவர்களாயிருந்தால், அவர்களுடைய
கவனத்தை எப்படிக் கவர்வது என்று சற்று நேரம் யோசித்தேன்.
தொண்டையின் பலம் முழுவதையும் உபயோகித்துச் சத்தம் போட்டுப் பார்த்தேன். கேள்விமுறை ஒன்றுமில்லை. தொண்டை வறண்டது தான் மிச்சமாயிற்று. அதிலிருந்து தாகமாயிருக்கிறது என்ற நினைவு வந்தது. வரவர, நாவறட்சியும் தாகமும் அதிகமாகிக் கொண்டிருக்கும். சமுத்திரம் நிறையத் தண்ணீர் இருக்கிறது; ஆனால் குடிப்பதற்கு ஒரு துளித் தண்ணீர் இல்லை. கழுகுகள் அதிக நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இராது!
ஏதோ ஒரு மெல்லிய சத்தம் - தாழ்ப்பாள் திறப்பது போன்ற சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். மதில் சுவரின் அடிப்பக்கத்தில் ஒரு சிறிய துவாரம் தென்பட்டது போல் இருந்தது. அடுத்த நிமிஷம், அந்தத் துவாரத்தில் ஒரு முகம் காணப்பட்டது. ஆகா! அது ஒரு பெண்ணின் முகம். பைனாகுலரை உடனே எடுத்துக் கண்ணில் வைத்துக் கொண்டு பார்த்தேன். பைனாகுலர் என்னை ஏமாற்றுகிறதா, அல்லது பசி தாகத்தினால் நான் சித்தப்பிரமை அடைந்துவிட்டேனா? பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்; பல சாதி பல இனங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன். சினிமாக்கள், நாடகங்கள், டெலிவிஷன் காட்சிகள் ஆகியவற்றிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்மாதிரி அழகிய ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. அழகு மட்டுமல்ல உலகில் எத்தனையோ அழகிகள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணினுடைய முகத்தில் தோன்றிய வசீகரம் இதுவரை நான் பார்த்திராத தெய்வீக வசீகரமாயிருந்தது.
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, வானத்தில் தோன்றிய மின்னல் மறைவது போல் அந்த முகம் மறைந்துவிட்டது. மறுகணம், துவாரத்தையும் காணவில்லை, மதில் சுவர் தான் இருந்தது.
நான் பார்த்தது வெறும் மனப் பிரமையாக இருந்தாலும் இருக்கலாம். பாலைவனத்தில் பிரயானம் செய்கிறவர்களின் கண்ணுக்கு வெறும் மணல் படர்ந்த இடத்தில் குளிர்ந்த நீர் நிலை தோன்றும் என்பார்கள். அது போன்ற ஒரு கானல் நீர்க் காட்சிதானோ என்னமோ, இது? ஆயினும் அங்கே சென்று பரிசோதனை செய்து பார்த்துவிட விரும்பினேன்.
செய்வதற்கு ஒரு காரியம் ஏற்பட்டபடியால், உடம்பிலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று.
நான் குதித்து எழுந்து மதில் சுவரை நோக்கி விழுந்து அடித்து ஓடத் தொடங்கியதைப் பார்த்து அந்தக் கழுகுகள் கூட மிரண்டு போய்ச் சிறகுகளை அடித்துப் பறக்கத் தொடங்கின.
துவாரம் தெரிந்த இடத்தை நெருங்கி உற்றுப் பார்த்தேன். முதல் பார்வைக்கு வெறும் சுவராகத் தெரிந்தது. மறுபடியும் கூர்ந்து கவனித்த போது ஓரிடத்தில் இரண்டு பெரிய கதவுகள் இருப்பதாகத் தோன்றியது. அவற்றின் அமைப்பும் மேலே பூசியிருந்த வர்ணப் பூச்சும் சுவரோடு சுவராகத் தென்படும்படி அமைந்திருந்தன. கதவு என்று தோன்றிய இடத்தில் அங்குமிங்கும் கையினால் அமுக்கிக் கொண்டே வந்தேன். ஓரிடத்தில் கொஞ்சம் அசைந்து கொடுத்தது. அங்கே பலங்கொண்ட மட்டும் அழுத்தித் தள்ளினேன். பெரிய கதவுக்குள் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிறிய கதவு, சுமார் இரண்டு அடி சதுரமுள்ள கதவு, உட்புறமாகத் திறந்து கொண்டது. அதற்கு ஒரு பலமான தாழ்ப்பாள் இருந்தது. சற்று முன் அதைத் திறந்து பார்த்த பெண் மறதியாகத் தாழிடாமல் சென்றிருக்க வேண்டும். துவாரத்தின் வழியாக உள்ளே பார்த்தபோது, ஓர் அழகிய சிறிய பட்டணம் காட்சி அளித்தது. விசாலமான வீதிகள், சாதாரண ஓட்டு வீடுகள் நடுநடுவே இரண்டொரு மாட மாளிகைகள், ஊருக்கு மத்தியில் அழகிய விஸ்தாரமான குளம், படித்துறை, ஒரு பெரிய அரசமரம், - ஊருக்கு அப்பால் பசுமையான வயல்கள், கரும்புத் தோட்டங்கள், - இவ்வளவையும் அந்தச் சிறு துவாரத்தின் வழியாக நன்றாகப் பார்க்க முடிந்தது.
அவ்வளவுதான். ஒரு கணமும் யோசனை செய்யாமல் கதவின் வழியாக உள்ளே குதித்தேன். அந்தப் பெண் செய்யத் தவறிய காரியத்தை நான் செய்தேன். கதவைச் சாத்தி உட்புறத்தில் பலமாகத் தாழிட்டேன்.
மறுபடியும் சுற்றுமுற்றும் பார்த்தேன். வெளியிலிருந்து பார்த்தபோது என் பார்வையின் கோணத்தில் அகப்பட்ட ஒன்றைக் கண்டேன். எனக்கு வலது புறத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய குன்று இருந்தது - திருநீர் மலையிலுள்ள குன்றை அதிலுள்ள கோயிலுடன் இங்கே யாரோ கொண்டு வந்து வைத்து விட்டதுபோல் இருந்தது. ஆனால் திருநீர் மலையில் உள்ளது பெருமாள் கோவில். இது முருகன் கோவில் என்று தெரிந்தது. கோவிலுக்கு எதிரே இருந்த ஸ்தம்பத்தில் கட்டிப் பறந்த சேவல் கொடியிலிருந்து அவ்விதம் ஊகித்துக் கொண்டேன்.
குன்றின் உச்சியிலிருந்த கோவிலுக்கு மூன்று புறத்திலும் மேடும் பள்ளமுமாகப் பாறைகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஒரு புள்ளிமான் துள்ளி ஓடிற்று. இன்னொரு பாறையில் ஒரு மயில் தோகையை விரிப்பதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது.
இவற்றின் மீதெல்லாம் என் கவனம் அதிகமாக நிற்கவில்லை. ஏனென்றால், இன்னொரு பாறையின் மீது, பூங்கொத்துக்கள் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு குட்டையான மரத்தின் அடியில், கதவைத் திறந்து பார்த்த அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் என் பக்கம் பார்க்கவில்லை. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்த திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அங்கே அப்போது இந்திரஜால மகேந்திர ஜாலங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நீல மேகங்களின் வரம்புகள் ஒரு நிமிஷம் பொன் வண்ணம் பெற்றுத் திகழ்ந்தன. அடுத்த நிமிஷம் நீலமேகங்கள் செந்தாமரை நிறமாக மாறின. பிறகு மேல் வானம் முழுவதும் தங்க நிறம் பெற்று ஒளிர்ந்தது. தங்க நிறம் உடனே ரத்தச் சிவப்பு நிறமாக மாறியது.
இந்த வர்ண ஜாலக் காட்சிகளில் சிந்தையைச் செலுத்தி உட்கார்ந்திருந்த பெண்ணை நோக்கி நான் மெள்ள மெள்ள நடந்து சென்றேன். பாதை நல்ல பாதையாக இல்லை. பள்ளத்திலிருந்து மேட்டிலேறி மேட்டிலிருந்து பள்ளத்திலிறங்கி, மறுபடியும் மேட்டிலேறி, சில இடங்களில் தாண்டிக் குதித்து, சில இடங்களில் காலாலும் கையாலும் தவழ்ந்து, - இப்படியெல்லாம் போக வேண்டியிருந்தது. அது ஒன்றையும் நான் லட்சியம் செய்யவில்லை. இரும்பைக் காந்தம் இழுக்கும் என்பார்களே, அது மாதிரி ஏதோ ஒரு சக்தி என்னை இழுத்துக் கொண்டு சென்றது.
அந்தப் பெண்ணின் பின்புறமாக அவளுக்கு வெகு சமீபத்தில் போய்விட்டேன். அப்போது என் கால்கள் தாமாக நின்று விட்டன. ஏனெனில், அவள் பாடத் தொடங்கினாள். பாட்டை ஏதோ இயன்ற வரையில் ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்கிறேன். சிற்சில வார்த்தைகள் மாறுதலாகவும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. கருத்து ஒன்றுதான்.
"இன்பக் கனவினிலே - சகியே
இன்னிசை பாடிவந்தான் - எவனோ
இன்னிசை பாடிவந்தான் (இ)
பொன் முகத்தில் நகைபூத்திட நோக்கினான்
கன்னங்குழித்திடக் கண்மலர் சூட்டினான் (இ)
பொன்னி நதிக்கரையில் - வெண்ணிலா
பொங்கிப் பொழிகையிலே
என்பும் உருகும் நல்கீதங்கள் பாடினான்
என்னகந் தொட்டுபின் எங்கேயோ சென்றிட்டான்!" (இ)
ஊரில் எனக்குச் சங்கீதத்தில் மோகமுள்ளவன்
என்று எப்போதும் ஒரு பெயர் உண்டு. என்னுடைய சங்கீதக் கிறுக்கு ஒரு நாள்
என்னைச் சங்கடத்தில் மாட்டி வைக்கப் போகிறது என்று என் நண்பர்கள் எச்சரித்ததும்
உண்டு. அது இச்சமயம் உண்மையாயிற்று. அந்தப் பெண் இரண்டாவது அடியைப் பாடி
முடிப்பதற்குள் நான் என்னை மறந்து பலமாகத் தாளம் போட ஆரம்பித்து விட்டேன்.இன்னிசை பாடிவந்தான் - எவனோ
இன்னிசை பாடிவந்தான் (இ)
பொன் முகத்தில் நகைபூத்திட நோக்கினான்
கன்னங்குழித்திடக் கண்மலர் சூட்டினான் (இ)
பொன்னி நதிக்கரையில் - வெண்ணிலா
பொங்கிப் பொழிகையிலே
என்பும் உருகும் நல்கீதங்கள் பாடினான்
என்னகந் தொட்டுபின் எங்கேயோ சென்றிட்டான்!" (இ)
அந்தப் பெண் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அதற்கு முன் அம்மாதிரி அதிசயத்தை என்றும் கண்டறியாதவள் போல் அத்தனை வியப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
"மிச்சப் பாட்டையும் பாடு! ரொம்ப நன்றாயிருக்கிறது! எங்களூர்க் கலாமணி பாடிய பாடல் மாதிரியல்லவோ இருக்கிறது?" என்றேன்.
அந்தப் பெண் தட்டுத் தடுமாறி "நீர் யார், உமக்கு எந்த ஊர்?" என்று கேட்டாள்.
"எனக்கு இந்தியதேசம். இந்தியா தேசத்தில் எஞ்சியுள்ள மதராஸ் ராஜ்யத்தைச் சேர்ந்தவன்."
"அப்படியென்றால் என்ன? அது எங்கே இருக்கிறது?"
"ஓகோ! உனக்குப் பூகோள சாஸ்திரமே தெரியாது போல் இருக்கிறது. பிறகு விவரமாகச் சொல்கிறேன். அந்தப் பாட்டை பாடி முடி!"
"பாட்டு உமக்கு ரொம்பப் பிடிக்குமோ?"
"ஆமாம்; பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதைக் காட்டிலும் பாடுகிறவர்களைப் பிடிக்கும். முக்கியமாக இப்போது உன்னைப் பார்த்தால்..."
அந்தப் பெண்ணின் முகத்தில் திடீரென்று பயம் காணப்பட்டது. அதன் பொருளை நான் அறிந்து கொள்ளவில்லை.
"ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்?" என்று கேட்டாள்.
நான் சிரித்தேன். அவளை நோக்கி நடந்து கொண்டே, "நீ ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறாய்? அதனால் தான் இப்படி பார்க்கிறேன்!" என்றேன்.
அந்தப் பெண் நடுங்கிய குரலில், "உமக்குப் பசியாயிருக்கிறதா?" என்று கேட்டாள்.
எனக்கு அப்போதும் அவளுடைய பயத்தின் காரணம் விளங்கவில்லை.
தமாஷாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு "ஆமாம்; ரொம்பப் பசியாயிருக்கிறது. உன்னை அப்படியே விழுங்கி விடலாமா என்று தோன்றுகிறது!" என்றேன்.
அவ்வளவுதான்; அந்தப் பெண் 'வீல்' என்று ஒரு சத்தமிட்டாள்.
அதற்குப் பதில் குரல் கொடுப்பது போல் என்னைச் சுற்றிப் பல திசைகளிலிருந்தும், "வேல்! வேல்!" என்ற முழக்கங்கள் கேட்டன.
முழக்கங்கள் வந்த திசைகளை நோக்கினேன். மதில் சுவர் மீதும் மலைப்பாறைகளின் மீதும் மரங்களின் உச்சியிலும் கையில் வில்லை வளைத்து அம்பு தொடுத்து என் பேரில் விடுவதற்கு ஆயத்தமாக வீரர் பலர் நின்றார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மயில்விழி மான் - Mayilvizhi Maan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அந்தப், பெண், கொண்டு, போல், மதில், என்னை, சிறிய, சத்தம், பார்த்தேன், இருக்கிறது, திறந்து, கதவு, பெரிய, என்றேன், ரொம்பப், கேட்டாள், மறுபடியும், எனக்கு, வழியாக, முகத்தில், பெண்ணின், முகம், நிமிஷம், தான், பார்த்திருக்கிறேன், அழகிய, அங்கே, வெறும், தோன்றிய, நோக்கி