மயில்விழி மான்
1
சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னால் என்
பெயரைப் பத்திரிகைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அமெரிக்காவிலிருந்து
ஆஸ்திரேலியா வழியாக இந்தியாவுக்குப் பிரியாணமான ஓர் ஆகாச விமானம் காணாமற்
போய்ப் பல நாள் வரை யாதொரு தகவலும் தெரியாமலிருந்ததல்லவா? அந்த விமானத்தில்
பிரயாணம் செய்தவர்களின் ஜாபிதாவில் மதிவாணன் எம்.ஏ. என்ற பெயர் இருந்திருக்கும்.
அது தான் என் பெயர். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு முக்கியமான
ஆராய்ச்சிக் கோஷ்டியில் சேர்ந்து அமெரிக்காவுக்கு நான் சென்றேன். இந்தியாவிலிருந்து
இப்போதெல்லாம் பல நிபுணர் கோஷ்டிகளும் கலைஞர் கோஷ்டிகளும் உலகிலுள்ள
பற்பல நாடுகளுக்கும் போய்க் கொண்டிருக்கின்றனர் அல்லவா? அந்தந்த நாடுகளில்
பற்பல அபிவிருத்தி மார்க்கங்களைத் தெரிந்து கொண்டு வந்து இந்தியாவில்
வளங்கொழிக்கச் செய்வதற்காகத்தான் அவர்கள் போகிறார்கள். நான் போன காரியம்
அமெரிக்காவில் டென்னஸி மாகாணத்தில் உள்ள வாத்துப் பண்ணைகளைப் பற்றிப்
படித்துத் தெரிந்து கொள்வதற்காக. அங்கேயுள்ள வாத்து ஒவ்வொன்றும் தினம்
எட்டு படி பால் கொடுக்கிறதாம்! நம் ஊரில் மட்டும் ஒரு வாத்து அரைப்படி
பாலுக்கு மேல் கொடுக்க மறுப்பதேன்? டென்னஸி பண்ணையில் உள்ள வாத்துக்களுக்கு
அப்படி என்ன ஆகாரம் கொடுத்துப் போஷிக்கிறார்கள்? அவை பிறக்கும் போது,
எடை எவ்வளவு? பால் கறப்பதற்கு முன்னாலும் பின்னாலும் எடை எவ்வளவு? என்னென்ன
விடமின் சத்துக்கள் உணவில் சேர்த்துக் கொடுப்பதால் அவை அவ்வளவு பால்
கறக்கின்றன? அந்த விடமின்களை நாமும் அமெரிக்காவிலிருந்து வரவழைத்து நம்மூர்
வாத்துகளுக்குக் கொடுக்கலாமா? அல்லது வாத்துக்களையே தருவித்து விடலாமா?
- இம்மாதிரிப் பிரச்சனைகளை நேரில் ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருவதற்காக
இந்திய சர்க்கார் என்னையும் என் சகாக்களையும் அனுப்பி வைத்தார்கள்.
உலகெங்கும் ஆராய்ச்சி அறிவைப் பரப்புவதற்காக அமெரிக்கக் கோடீசுவரரான ராக்பெல்லர் பிரபு ஒரு பெரிய நிதியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த நிதியிலிருந்து எங்கள் ஒவ்வொருவருடைய பிரயாணச் செலவுக்காகவும் இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதற்குச் சமமான தொகை இந்திய சர்க்காரும் கொடுத்தார்கள்.
அடுத்த ஐந்து வருஷத் திட்டத்தில் இந்தியாவில் மொத்தம் இருபது கோடி வாத்துக்கள் வளர்த்து இரு நூறு லட்சம் படி வாத்துப் பால் உற்பத்தி செய்தே தீருவது என்று ஸ்ரீ குல்ஜாரிலால் நந்தா தீர்மானித்திருக்கிறார் அல்லவா? இதை நீங்கள் மனத்தில் வைத்துக் கொண்டால், எங்களது ஆராய்ச்சிப் பிரயாணம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அமெரிக்கா சென்ற சமயம் எங்கள் ஆராய்ச்சிக்கு உகந்த சமயமாக இல்லை. சென்ற சில வருஷங்களாக அமெரிக்க மார்க்கெட்டிலும் உலகமார்க்கெட்டிலும் வாத்துப்பால் 'ஸப்ளை' மிக அதிகமாகி விலை குறைந்து வந்ததாம். இதைச் சமாளிப்பதற்காக அமெரிக்கா வாத்துப் பண்ணை முதலாளிகள் இரண்டு வருஷங்களுக்கு வாத்துப் பால் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிடத் தீர்மானித்து விட்டார்கள். வாத்துகளையெல்லாம் பனிக்கட்டியில் வைத்துப் பதனிட்டுப் போர்மோஸாத் தீவில் உள்ள சீனத்துருப்புகளுக்கு உணவாக அனுப்பி வந்தார்கள். ஆகவே நாங்கள் போன காரியம் என்னவோ, கை கூடவில்லை.
ஆயினும், எங்களுக்காக இந்திய சர்க்கார் செலவு செய்த பணம் வீணாகப் போய் விடக் கூடாது என்று எங்கள் கோஷ்டியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆராய்ச்சியில் ஈடுபடத் தீர்மானித்தார்கள். ஒருவர் மெக்ஸிகோவில் உள்ள முட்டையிடும் குதிரைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்குச் சென்றார். இன்னொருவர் பிரேஸில் தேசத்தில் பருத்திக் கொட்டைக்குப் பதிலாகக் காப்பிக் கொட்டை தின்று காப்பியாகவே கறக்கும் காளை மாடுகளைப் பற்றித் தெரிந்து வரச் சென்றார்.
நானும் பல யோசனைகள் செய்த பிறகு ஆஸ்திரேலியா தேசத்துக் கங்காருகளிடம் புதிதாகப் பரவி வரும் மர்ம நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தீர்மானித்து ஆகாய விமானத்தில் புறப்பட்டேன். ஆனால் கடவுளுடைய விருப்பம் வேறுவிதமாக இருந்தது. பழந்தமிழர் நாகரிகத்தைப் பற்றிய ஓர் அற்புதமான உண்மையை என் மூலமாக உலகத்துக்கு வெளிபடுத்த வேண்டுமென்பது இறைவனுடைய சித்தம். எனக்கு ஏதாவது திடீரென்று நேர்ந்து விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நேரில் பார்த்த அத்தகைய அற்புதம் ஒன்று இருந்ததற்குச் சாட்சியே இல்லாமற் போயிருக்கும். ஆகையினாலே தான் உம்மிடம் அதைப்பற்றிச் சொல்வதற்கு இவ்வளவு அவசரப்படுகிறேன்.
ஆகாச விமானம் புறப்பட்டுப் பஸிபிக் சமுத்திரத்தின் மேல் பறந்து போய்க் கொண்டிருக்கிறது. அந்த மாபெரும் சமுத்திரத்தின் அகலம், நீளம், ஆழம் ஆகியவை குறித்தும், அதன் விஸ்தாரமான நீர்ப்பரப்பிலே எத்தனை கோடானுகோடி ஜீவராசிகள் வாழ்ந்திருக்கின்றன என்பது குறித்தும் யோசனை செய்து கொண்டிருந்தேன். அது மட்டுமா? ஆதிகாலத்திலிருந்து எத்தனை எத்தனை வியாபாரக் கப்பல்கள் அந்தச் சமுத்திரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன! எத்தனை ஸ்பானிஷ் கப்பல்கள் மெக்ஸிகோவின் தங்கத்துடன் அந்தக் கடலின் ஆழத்தை அடைந்திருக்கின்றன. எத்தனை பிரிட்டிஷ் கப்பல்கள்! எத்தனை பிரஞ்சுக் கப்பல்கள்! முன்னொரு காலத்தில் தமிழர்கள் பெரிய பெரிய நாவாய்களை செலுத்திக் கொண்டு ஏழு சமுத்திரங்களிலும் பிரயாணம் செய்திருக்கிறார்கள். தமிழர்களுடைய கப்பல்கள் கூட அந்தச் சமுத்திரத்தின் அடியில் கிடத்தல் கூடும். அவற்றில் உள்ள செல்வங்களையெல்லாம் மட்டும் திரட்டிச் சேர்த்து எடுக்க முடியுமானால்?...
இவ்வாறு நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, எங்கள் ஆகாச விமானம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக ஆடத் தொடங்கியது. பெரியதொரு சுழற் காற்றில் அகப்பட்டுக் கொண்டதாகத் தெரிய வந்தது. பிரயாணிகளின் முகங்களில் கவலை குடி கொண்டது. அவர்கள் கவலை படுவதற்குக் காரணம் உண்டென்பதும் தெரியவந்தது. சுழற்காற்றின் மையத்தில் சிக்கிக் கொண்டால் விமானம் தப்புவது துர்லபம்; இந்த மையத்திலிருந்து தப்புவதற்காக விமான ஓட்டிகள் திசை மாறிச் செலுத்தினார்கள். வெகு நேரத்திற்குப் பிறகு சுழற்காற்றிலிருந்து விமானம் தப்பி விட்டதாகத் தெரிந்தது. ஆனால் போகும் திசையையும் அது அடியோடு தவறிவிட்டது. திசையறியும் கருவி வேலை செய்யவில்லை. ரேடியோக் கருவி பழுதாகி விட்டது. விமானம் பறந்து கொண்டேயிருந்தது. ஆனால் எங்கே போகிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. விமான ஓட்டிகளின் மூளைகளும் இதற்குள் குழம்பிப் போயிருக்க வேண்டும். பஸிபிக் சமுத்திரத்தின் ஒரு மூலை பகுதியில் நாங்கள் ஏறியிருந்த விமானம் வட்டமிட்டுச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. சீக்கிரத்தில் பெட்ரோலும் தீர்ந்து போய்விட்டது.
அவரவர்களுக்கு 'பாராசூட்' கருவியை எடுத்துக் கொண்டு கீழே குதிக்க வேண்டியது தான் என்று அறிவித்து விட்டார்கள்.
கீழே குதித்தால், பஸிபிக் சமுத்திரத்திலேதான் குதிக்க வேண்டும்? அதில் என்ன பயன்? எத்தனை நேரம் உயிரோடு இருக்க முடியும்? அதை விட விமானத்திலிருந்தபடியே விழுந்து உயிர் விடுவது மேல் அல்லவா?
இந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது.
பஸிபிக் சமுத்திரத்தில் லட்சக் கணக்கில் சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டுபிடித்து இவ்வளவு தீவுகள், இங்கிங்கே இருக்கின்றன, என்று இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. கண்டு பிடிக்கப்படாத தீவுகள், அநாகரிகக் காட்டுமிராண்டி ஜாதியார் வசிக்கும் தீவுகள், பாதி நாகரிகமடைந்த மக்கள் வாழும் தீவுகள் - இப்படி எவ்வளவோ இருக்கின்றன. அத்தகைய தீவுகளில் ஒன்றில் தற்செயலாக இறங்கினால், உயிர் தப்பிப் பிழைக்க ஏது உண்டு.
ஆனால் இந்த அற்ப நம்பிக்கையானது அநேகருக்கு விமானத்திலிருந்து வெளியில் குதிப்பதற்குரிய தைரியத்தை அளிக்கவில்லை.
சாதாரணமாக நான் அவ்வளவு தைரியசாலி என்று பெயர் பெற்றவன் அல்லவென்றாலும் அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ எனக்குத் தைரியம் பிறந்தது.
பாராசூட்டை எடுத்துக் கவனமாக மாட்டிக் கொண்டேன். கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டேன். விமானத்திலிருந்து வானவெளியில் குதித்தேன்.
'உயிர் போவது' என்று சொல்கிறார்களே, அது என்ன என்பது எனக்கு அப்போது தெரிந்தது. என் மண்டை வெடிப்பது போலவும், உடம்புக்குள்ளிருந்து உயிர் வெளிப்பட்டு மேலே போய்விட்டது போலவும், உடம்பு மட்டும் கீழே விழுவது போலவும் தோன்றியது. 'ஆகா! இந்தப் பாராசூட் ஏமாற்றிவிட்டது! துரோகம் செய்து விட்டது!" என்று எண்ணினேன். நல்ல வேளையாக, உடனே நினைவு இழந்துவிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மயில்விழி மான் - Mayilvizhi Maan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - விமானம், எத்தனை, நான், உள்ள, தீவுகள், பால், கப்பல்கள், வாத்துப், எங்கள், உயிர், அந்த, சமுத்திரத்தின், பஸிபிக், என்ன, நாங்கள், அந்தச், போலவும், இருக்கின்றன, கீழே, என்பது, எவ்வளவு, அல்லவா, தெரிந்து, தான், பெயர், பிரயாணம், கொண்டு, மட்டும், ஆராய்ச்சி, இந்திய, ஆகாச, மேல், பெரிய