மயில்விழி மான்
5
இளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ் சேரலாதர்
என்னிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒருவாறு பதில் சொல்லிச் சமாளித்த
பிறகு அவர்களுடைய வரலாற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அந்த வரலாறு
இதுதான்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் குமரி முனையிலிருந்து விந்திய பர்வதம் வரையில் பரவிச் சீரும் சிறப்பும் பெற்று மேன்மையுற்று விளங்கி வந்தது. சேர சோழ பாண்டியர்கள் நட்புரிமை கொண்டு அவர்களுடைய ராஜ்யங்களை நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள். குடிமக்கள் எல்லாத் துறைகளிலும் செழிப்படைந்து ஓங்கியிருந்தார்கள். இது போலவே தமிழிலக்கியமும் மேன்மையடைந்து வளர்ச்சியுற்று வந்தது. செந்தமிழ்க் கவிஞர்கள் பலர் இனிய எளிய செந்தமிழில் அழகிய கவிகளும் காவியங்களும் இயற்றி வந்தார்கள். மதுரையில் முதலாவது தமிழ்ச்சங்கம் சிறப்பாக நடைபெற்று வந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் மேலைக் கடல் பிரதேசத்து நாடுகளிலிருந்து காட்டுமிராண்டிகளான அநாகரிக ராட்சஸமக்கள் சிலர் கப்பலேறி வந்தார்கள். அவர்கள் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் அவர்களை வேறு நாடுகளைத் தேடிப் போகும்படி செய்தது. அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் இறங்கி அத்தீவைத் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய அரச பரம்பரையில் இராவணன் என்னும் ஒரு ராட்சதன் தோன்றினான். அவன் அறிவும், ஆற்றலும் மிக்கவன். ஆனால் மிகமிகப் பொல்லாதவன்.
இராவண குலத்தைச் சேர்ந்த ராட்சதர்கள் நர மாமிச பட்சிணிகள். அவர்கள் நாட்டிலே பஞ்ச காலத்தில் அந்தப் பயங்கரமான வழக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இலங்கைக்கு வந்து குடியேறிய பிறகு, அடிக்கடி தமிழகத்துக்கு அவர்கள் கும்பல் கும்பலாக வருவதும், திடீரென்று தமிழர்களைத் தாக்கிக் கொல்வதும், கொன்றவர்களைத் தின்று விட்டுப் போவதும் வழக்கமாயிற்று. தமிழர்களைத் தின்று பார்த்த போது, அவர்கள் வேறு எந்தச் சாதியைக் காட்டிலும் தமிழ்ச் சாதியின் உடம்பு அதிகச் சுவையுடன் இருக்கிறது என்று கண்டார்கள். இழுமெனும் ஓசையுடைய மதுரத் தமிழ் மொழி இனிமைக்கும் பெயர் பெற்றதன்றோ? 'அமுதம்' என்ற சொல் மருவித் 'தமிழ்' என்று ஆயிற்று என்றும் சொல்கிறார்கள் அல்லவா? தமிழர்களின் உடல் தின்பதற்கு ருசியாயிருந்ததுடன், அவர்களைத் தின்றால் ஆயுள் வளரும், ஆயிரக்கணக்கான வருடங்கள் சாகாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் இராவண குலத்து ராட்சஸர்களுக்கு ஏற்பட்டது. இதன் பலன் என்னவென்றால், ஒரு சில வருடங்களுக்குள் தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போர் செய்வதாயிருந்தால் தமிழர்களை அந்த ராட்சஸர்களால் கூட வென்றிருக்க முடியாது. ஆனால் எதிர்பாராத இரவு நேரங்களில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்து தாக்கிக் கொன்று தின்று விடும் ராட்சஸர்களை எதிர்த்துப் போராடுவது எப்படி? சேர சோழ பாண்டிய ராஜ்யங்களில் மிகச் சிறந்த பட்டணங்கள், கிராமங்கள் எல்லாம் பாழாய்ப் போய்க் கொண்டிருந்தன. ராட்சஸர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த சிலர் மலை உச்சிகளில் உள்ள குகைகளிலும் கடற் கரையோரங்களிலிருந்த காடுகளிலும் ஒளிந்து வாழத் தொடங்கினார்கள்.
தமிழின் பெருமையை உணர்ந்து உலகமறியச் செய்த மாமுனிவர் அகஸ்தியர், இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைத் தப்புவிப்பதற்கு ஓர் உபாயம் செய்து பார்த்தார். தமிழ் மிக்க இனிமையான மொழியாயிருப்பதால் அல்லவா அம்மொழியைப் பேசும் தமிழர்களுக்கு இந்தக் கதி நேருகிறது? தமிழைச் சற்றுக் கடினமான மொழி ஆக்குவதற்காக மிக்கப் பிரயத்தனப்பட்டுத் தமிழ் இலக்கணம் ஒன்று செய்து கொடுத்தார். மேலும் அவருடைய சீடர்களிடம், இனி எளிய இனிய நடையிலேயே பாடல்கள் எழுதாமல் கரடு முரடான கொடுந்தமிழில் கவிதைகள் எழுதச் சொன்னார். சீடர்கள் அப்படியே செய்து பார்த்தார்கள், அதிலும் பயனில்லை. தமிழை எவ்வளவு கரடு முரடு ஆக்கினாலும் அதன் சுவை என்னவோ குன்றவில்லை. ஆகவே, அகஸ்தியரும் தமது தோல்வியை உணர்ந்து பொதிகை மலையை விட்டுப் புறப்பட்டு வடக்கே வித்தியமலைக்குத் தென்புறத்தில் தண்டகாரண்யத்தில் வசிக்க வேண்டியதாயிற்று.
இந்தத் தீவில் இப்போது வசிக்கும் மக்களின் மூதாதைகள் ராட்சஸர்களுக்கு இரையாக விரும்பாமல் கொற்கையென்னும் துறைமுகத்துக்கு அருகில் ஒரு பெரிய காட்டில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் அவர்கள் தாங்களிருக்கும் இடத்தை எப்படியும் அரக்கர்கள் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி, ஒரு பெரிய மரக்கலம் கட்டி வந்தார்கள். ஏதாவது அபாயம் நேர்ந்தால் கப்பலில் ஏறிக் கடல் கடந்து வேறொரு நாட்டில் குடியேறிவிடலாம் என்று எண்ணியிருந்தார்கள்.
இராவணனுடைய ஒன்றுவிட்ட தம்பியாகிய கரன் என்னும் ராட்சஸன் தண்ட காரண்யத்தை யொட்டி ஜனஸ்தானம் என்னுமிடத்தில் தன் தோழர்களுடன் வசித்து வந்தான். கரனுக்கு முரன் என்றொரு மகன் இருந்தான். அவன் தமிழகத்தில் மிச்சம் மீதித் தமிழர்கள் இருக்கிறார்களா என்று தேடி வந்தான். கடைசியில் கொற்கைத் துறைமுகத்துக்கருகில் காட்டில் வசித்த தமிழர்களைக் கண்டு பிடித்தான். அவன் அவர்களைத் தாக்குவதற்கு முன்னால், அந்தத் தமிழர்கள் தயாராக வைத்திருந்த கப்பலில் ஏறிக் கொண்டு கிழக்குக் கடலில் கிளம்பினார்கள். முரன் உடனே தானும் ஒரு கப்பலை அவசரம் அவசரமாகக் கட்டிக் கொண்டு கிளம்பினான். இரண்டு கப்பல்களும் வெகுதூரம் கிழக்கு நோக்கிப் பிரயாணம் செய்த பிறகு ஒரு பெரிய சண்டமாருதத்தில் சிக்கிக் கொண்டன. கப்பல்கள் உடைந்தன. ஒரு கப்பல் ஒரு தீவின் அருகிலும் இன்னொரு கப்பல் இன்னொரு தீவின் அருகிலும் சென்று அடைந்தன. அதாவது ஒரு தீவில் இளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ் சேரலாதனும் அவனுடன் வந்தவர்களும் இறங்கினார்கள். இன்னொரு தீவில் முரனும் அவனுடைய சகாக்களும் இறங்கினார்கள். கப்பல்கள் இரண்டும் சிதைந்து சின்னாபின்னமுற்றுக் கடலில் மறைந்து மூழ்கி விட்டன.
தமிழர்கள் ஒரு தீவிலும், முரனாதி அசுரர்கள் இன்னொரு தீவிலும் குடியேறினார்கள். தலைமுறை தலை முறையாகப் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார்கள். வெளி உலகத்துச் செய்திகள் ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு தீவுகளிலும் பெரிய மரங்கள் இல்லாதபடியால் கப்பல் கட்டிக் கொண்டு பிரயாணம் கிளம்ப முடியவில்லை. ராட்சஸர்கள் சில சமயம் பழைய ஞாபகத்தை வைத்துக் கொண்டு தமிழர்களைப் பிடித்துக் கொண்டு போய்க் கொன்று தின்பதற்காகச் சமயம் பார்த்து வருவார்கள். சில சமயம் சிறு படகுகளிலும் சில சமயம் நீந்தியும் வருவார்கள். வருஷத்தில் ஒரு மாத காலம் சுறா மீன்கள் எல்லாம் வேறு எங்கேயோ போய்விடும். அச்சமயம் பார்த்துதான் அநேகமாக வருவார்கள். அவர்கள் திடீரென்று வந்து தாக்க முடியாமலிருப்பதற்காகவே தமிழர்கள் அவ்வளவு பெரிய கோட்டைக் கொத்தளங்கள் கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். அது மட்டுமின்றி, எப்போதுமே கோட்டைச் சுவர்கள் மீதும் பாறை உச்சிகளிலும் காவற்காரர்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இவ்வளவு பாதுகாப்புகளையும் சில சமயம் அந்த அரக்கர்கள் தாண்டிக் கொண்டு வந்து தமிழர்கள் சிலரைப் பிடித்துப் போய்விடுவது உண்டு. அப்போது எல்லாம் தமிழர்கள் வசித்த அமுதத் தீவில் அழுகைச் சத்தம் கிளம்பும்; அரக்கர் தீவிலே கோலாகலமாய் இருக்கும்.
இந்த விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதர், "ஐயா மதிவாணரே! தமிழ் ஆனாலும் மிக 'அபாயகர' மான மொழி! அதன் இனிமையே அதற்கு இவ்வளவு அபாயத்தை அளித்திருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் இப்போது ராட்சஸர்களின் தொல்லை அடியோடு இல்லையென்றா சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"ஆமாம்; உண்மையாகவே கிடையாது. நீங்கள் புறப்பட்டு வந்த சில நாளைக்கெல்லாம் இராமர் என்பவர் வந்து இராவணாதி ராட்சஸர்களை அடியோடு ஒழித்து விட்டார்! ஆனால் இந்த நாளில் சிலர் 'நாங்கள் இராவணனுடைய சந்ததிகள்' என்று சொல்லிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்! அவர்கள் இராவண பூஜை செய்கிறார்கள்! தமிழைத் தாங்கள் காதலிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்" என்றேன்.
"அப்படி ஓர் அதிசயமும் செந்தமிழ் நாட்டில் இருக்கிறதா! நல்லது; அவ்வாறு சொல்லும் மனிதர்களை இந்த அரக்கர் தீவுக்கு அனுப்பி வைப்பதுதானே? அனுப்பி வைத்தால் அவர்களுடைய இராவண பக்தியைச் சோதித்துப் பார்க்கலாம்!" என்றார் இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மயில்விழி மான் - Mayilvizhi Maan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, தமிழ், தமிழர்கள், நாட்டில், சமயம், பெரிய, வந்து, இளஞ்சென்னி, தீவில், இன்னொரு, நெடுஞ்செழியன், இராவண, அவர்களுடைய, வந்தார்கள், சேரலாதர், பிறகு, கட்டிக், சிலர், வருவார்கள், அந்த, கப்பல், செய்து, தமிழர்களைத், வேறு, தின்று, வந்தது, எல்லாம், மொழி, அவன்