காந்திமதியின் காதலன்
4
ஐந்து வருஷங்களுக்குப் பிறகு, என்னுடைய
குருநாதரைச் சென்னையிலிருந்த ஒரு பக்தர் அழைத்தார். அவருடன் நானும் சென்றேன்.
ஒரு நாள் கோவிலில் உபந்நியாசம் நடந்தது. ஸ்வாமிகள் வழக்கம் போல் அரிய
பெரிய சமய தத்துவங்களைச் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தார். ஆனால்
என்னுடைய மனம் என்னவோ, அன்று உபந்நியாசத்தில் ஈடுபடவில்லை.
உண்மையில், சென்னைக்கு வந்ததிலிருந்தே என் உள்ளம் சரியான நிலைமையில் இல்லை. தியானத்தில் மனம் குவிதல் மிகவும் கடினமாயிற்று. அடிக்கடி காந்திமதியின் நினைவு வந்தது. "புலன்களை அடக்கி வெற்றி பெற்ற நாம் இப்போது காந்திமதியைப் பார்த்தாலென்ன?" என்று தோன்றிற்று. "அவளை நம் சிஷ்யையாய்க் கொள்ளலாம்" என்ற ஆசை கூட உண்டாயிற்று.
கோவிலில் ஸ்வாமிகள் உபந்நியாசம் செய்து கொண்டிருந்தபோது, மனம் அதில் ஈடுபடாமல் பெரிதும் சலித்துக் கொண்டிருக்கவே, நான் கோவிலைச் சுற்றி வரலாமென்று எண்ணி எழுந்து சென்றேன். ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு அம்மன் சந்நிதிக்குச் சென்றேன். அங்கே கர்ப்பக்கிருஹத்தில் அர்ச்சகர் பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். வெளி மண்டபத்தில் ஒரு சிறு பெண் கை கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அங்கு வேறு யாரும் இல்லை.
அந்தக் குழந்தைக்கு வயது ஐந்துக்குள் தான் இருக்கும். அவள் வாய்க்குள்ளே ஏதோ முணுமுணுத்துப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அவள் என்ன பிரார்த்திக்கிறாள் என்று தெரிந்துகொள்ள ஆவள் உண்டாகவே அருகில் நெருங்கி உற்றுக் கேட்டேன்.
"அம்பிகே! தாயே! என் அம்மாவைக் காப்பாற்று. நாங்கள் திக்கற்றவர்கள்; உன்னைத் தவிர எங்களுக்குக் கதி கிடையாது..."
என் உடம்பெல்லாம் ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்தப் பரிதாபமான குரலையும், பிரார்த்தனையையும் என்னால் சகிக்க முடியவில்லை. இன்னும் அருகில் சென்று "குழந்தாய்! நீ யாரம்மா? உன் தாயாருக்கு என்ன அம்மா?" என்று கேட்டேன்.
குழந்தை முதலில் கொஞ்சம் வெகுண்ட கண்களுடன் என்னைப் பார்த்தாள். அப்புறம் அவள் முகம் சற்று மலர்ந்தது.
"அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. வீட்டிலே அரிசி வாங்கப் பணம் கிடையாது...!" என்றாள்.
"உனக்கு அப்பா இல்லையா, அம்மா?"
"அப்பா நான் பிறப்பதற்கு முன்னமே போய் விட்டார். எங்களுக்கு வேறு திக்கில்லை. தெய்வந்தான் எங்களுக்குத் துணை."
இந்தக் குழந்தையின் மழலைச் சொற்கள் எல்லாம் அவளுடைய தாயார் அடிக்கடி சொல்லிக் கேட்டவை என்று ஊகித்துக் கொண்டேன். என் உள்ளம் உருகிற்று.
"உன் பெயர் என்ன அம்மா?" என்று கேட்டேன்.
"என் பெயர் ஸௌபாக்கியம்."
"உன் அம்மாவின் பெயர்?"
"காந்திமதி."
என்னைத் தொடர்ந்து அவர்களுடைய வீட்டுக்கு வருவதற்கு அந்தக் குழந்தை ஓடவேண்டியிருந்தது. அவ்வளவு விரைவில் என் கால்கள் என்னை அங்கே கொண்டு சேர்த்தன.
ஒரு பழைய வீட்டின் சின்ன அறை ஒன்றில் வெறுந்தரையில் எலும்புந் தோலுமாய்ப் படுத்துக் கொண்டிருந்த காந்திமதியைக் கண்டேன். அவள் முகத்திலே மட்டும் நான் முன்னே பார்த்தைவிட அதிகமான தேஜஸ் இருந்தது.
வெகு நேரம் நாங்கள் ஒன்றும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தோம்.
அவளுக்கு உடம்பு சரிப்படாததற்குக் காரணம் பட்டினிதான் என்று பார்த்த உடனேயே எனக்குத் தெரிந்து போயிற்று. பக்கத்துக் கடையிலிருந்து கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து இருவரையும் சாப்பிடச் செய்தேன்.
"நான் சாவதற்குள் உங்களை மறுபடி பார்ப்பேன் என்று மட்டும் ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். ஒரு வாய்க்காலுக்கு அந்தக் கரையில் நீங்கள் நிற்கிறீர்கள். அங்கிருந்து கையை நீட்டி என்னையும் அந்தக் கரையில் சேர்க்க முயல்கிறீர்கள். அப்போது நான் வாய்க்காலில் விழுந்து விடுகிறேன். வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது. அப்புறம் வெகு நேரம் நினைவே இல்லாமல் இருக்கிறது. பிறகு, சமுத்திரத்தில் ஒரு படகில் இருப்பதாகத் தோன்றுகிறது. நீங்கள் படகு ஓட்டுகிறீர்கள். 'இது நம்முடைய மறு ஜன்மம்' என்று சொல்லுகிறீர்கள்.
'விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு
- முன்னே
விட்ட குறை வந்து தொட்டாச்சு'
என்ற நந்தன் சரித்திரக் கும்மி நான் பாடுகிறேன். அப்போது திடீரென்று
ஒரு புயற் காற்று வந்து படகைக் கவிழ்த்து விடுகிறது. இப்படியெல்லாம்
ஏதேதோ சொப்பனம் கண்டு கொண்டிருந்தேன்" என்று காந்திமதி கூறினாள்.விட்ட குறை வந்து தொட்டாச்சு'
எங்களுடைய சம்பாஷணை ஒரு தொடர்ச்சியில்லாமல் ஒரே குழப்பமாயிருந்தபடியால், அதை அப்படியே என்னால் இப்போது சொல்ல முடியாது. என்னை விட்டுப் பிரிந்த பின் அவளுக்கு நேர்ந்ததைப் பற்றி நான் கேட்டுத் தெரிந்து கொண்டதை மட்டும் சொல்கிறேன்.
காந்திமதி வீடு சேர்ந்ததும், அங்கே வேலைக்காரப் பையன் மட்டும் பெரிதும் மனக் குழப்பத்துடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அன்று சாயங்காலம் அவள் வீட்டை விட்டுச் சென்றபின் ஊருக்குப் போயிருந்ததாக நினைத்த எஜமான் வந்ததாகவும், அம்மாள் வெளியில் போயிருக்கிறாள் என்று அறிந்ததும் அவர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டதாகவும் அவன் தெரிவித்தான். அன்றியும் எஜமான் வந்து சென்றபின் சமையற்காரி இரும்புப் பெட்டி இருந்த அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு ஏதோ குடைந்து கொண்டிருந்ததாகவும், பிறகு அவளும் ஒன்றும் சொல்லாமல் வெளியே போய்விட்டதாகவும் கூறினான். காந்திமதி பதைபதைப்புடன் இரும்புப்பெட்டியைப் போய்ப் பார்த்தாள். பெட்டி திறந்திருந்தது. சாவிக் கொத்து கீழே கிடந்தது. பெட்டிக்குள் நகைகள் இல்லை. தான் எழுதி வைத்திருந்த கடிதம் மட்டும் இருந்தது. அதை எடுத்துக் கிழித்துத் தீயில் போட்டு எரித்தாள்.
நகைகளைச் சமையற்காரி எடுத்துப் போயிருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றிற்று. காமாட்சிநாதன் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்து மறுபடி போனதைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்குக் கவலையாயிருந்தது. அவர் இரும்புப் பெட்டி இருந்த அறைக்குள் போகவில்லையென்பதைப் பையனை நன்றாய் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். ஆகையால் கடிதத்தைப் பார்த்திருக்கமாட்டார். எனவே, எப்படியும் அவர் சீக்கிரம் வருவாரென்று எதிர்பார்த்தாள். நகைகள் எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் வைத்ததைப்பற்றி அவருக்கு என்ன காரணம் சொல்வதென்று கலக்கத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அத்தகைய காரணம் சொல்வதற்கு வேண்டிய பிரமேயம் அவளுக்கு ஏற்படவேயில்லை. ஏனென்றால், காமாட்சிநாதன் திரும்பி வரவேயில்லை! ஒரு வாரம், இரண்டு வாரம் ஆகியும் அவர் வரவில்லை. அவருக்கு சமையற்காரிக்கும் வெகு நாளாக காதல் உண்டென்றும், அவளை அழைத்துக் கொண்டு அவர் ஓடிவிட்டாரென்றும் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொன்னார்கள். காந்திமதியிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். ஆனால் ஒருவராவது எவ்வித ஒத்தாசையும் செய்ய முன்வரவில்லை.
காந்திமதியின் தாயார் முன்னமே காலஞ்சென்றுவிட்டாள். வேறு உற்றார் உறவினர் யாருமில்லை. சொந்தக் கிராமத்துக்குப் போக அவளுக்கு இஷ்டமும் இல்லை. நல்ல வேளையாய்ப் பாங்கியில் கொஞ்சம் பணம் இருந்தது. அதை வைத்துக் கொண்டு பட்டணத்திலேயே வசிக்கத் தீர்மானித்தாள். அதே தெருவில் சமீபத்திலிருந்த ஒரு வீட்டில் இரண்டு அறைகள் மட்டும் வாடகைக்கு வாங்கிக் கொண்டு வசிக்கலானாள். அந்த வீட்டில் மற்றொரு குடித்தனம் இருந்த தம்பதிகள் மிகவும் நல்ல மாதிரி. குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகவே அவர்கள் பட்டணத்துக்கு வந்தவர்கள்.
எப்படியும் காமாட்சிநாதன் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் காந்திமதி காலங் கழிக்கலானாள். உரிய காலத்தில் இந்தப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்ப்பதில் அவள் பொழுதில் பெரும் பகுதி போயிற்று. செட்டாகக் குடித்தனம் செய்து எப்படியோ இத்தனை நாள் கழித்தாள். கடைசியாக, பாங்கியிலிருந்த பணம் முழுதும் தீர்ந்து பரம தரித்திரம் நேரிட்டது. உணவுப் பொருள் வாங்கவும் பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டது.
*****
இதையெல்லாம் அவள் சொல்லக் கேட்கக் கேட்க எனக்கு என் மீதிலேயே வந்த கோபத்துக்கு அளவில்லாமல் போயிற்று. "பாவி என்னாலல்லவா உனக்கு இந்தத் துயரமெல்லாம் நேரிட்டது? சமயத்தில் நான் கோழையாகி உன்னைத் திரும்பிப் போகச் சொன்னேனே?" என்று கதறினேன்.
"நான் திரும்பிப் போனதற்குக் காரணம் நீங்கள் மட்டுந்தான் என்று நினைக்கிறீர்களா? இல்லை. இல்லை. உண்மையில் என்னுடைய தைரியக் குறைவுதான் உங்களையும் பாதித்தது. என் தேகம் நடுங்கியதை அப்போது நீங்கள் அறியவில்லையா? நான் போய் விட்டேனென்று தெரிந்ததும் அவருடைய மனம் என்ன பாடுபடுமென்று எண்ணிப் பார்த்த போது என்னுடைய உறுதியெல்லாம் போய்விட்டது. அதனால் தான் நீங்கள் கொஞ்சம் தயக்கம் காட்டியதும் நான் திரும்பி விட்டேன்" என்றாள்.
"அதை நினைத்தால்தான் வயிற்றெரிச்சல் அதிகமாகிறது. பிரமாதமான வேதாந்தம் விசாரம் செய்து விட்டுக் கடைசியில் ஒரு சமையற்காரியை இழுத்துக் கொண்டு போன மனுஷ்யனுக்காக நம்முடைய வாழ்க்கை இன்பத்தையெல்லாம் தியாகம் செய்தோமே! நீ இப்படிப் பட்டினி கிடந்து எலும்புந் தோலுமாகும்படி ஆயிற்றே! இந்தக் கண்கள் என்ன பாவம் செய்தன?" என்று சொல்லி முகத்தில் அடித்துக் கொண்டேன்.
"தாங்கள் அந்த அவதூறை நம்புகிறீர்களா, என்ன? ஊரார் சொன்னார்களென்றால், அது நிஜமா? அவரிடம் நான் காதல் கொள்ள முடியவில்லை என்பது உண்மையே; ஆனால் அவருடைய குணத்தை நான் நன்றாய் அறிவேன். ஒரு நாளும் அப்படி நேர்ந்திராது" என்றாள் காந்திமதி.
"பின் ஏன் அந்த மனுஷர் திரும்பி வரவில்லை? உன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டு அவர் ஏன் போக வேண்டும்?"
"அதென்னவோ, நான் அறியேன். சந்தர்ப்பங்கள் எல்லாம் ஊரார் சொல்வதற்குப் பொருத்தமாய்த்தான் இருந்தன. ஆனால் என் அந்தரங்கத்தில் நான் அதை நம்ப முடியவில்லை; இனியும் நம்பமாட்டேன்" என்றாள்.
அவளுடைய உத்தம குணத்தை நினைக்க நினைக்க எனக்கு என் பேரிலும், அவள் புருஷன் பேரிலும் பதின் மடங்கு கோபம் பொங்கிற்று. இன்னொரு ஸ்திரீக்கு இத்தகைய கஷ்டம் நேர்ந்திருந்தால், எவ்வளவு மனம் கசந்து போயிருப்பாள்? எப்படி எல்லாரையும் துவேஷிக்கத் தொடங்கியிருப்பாள்?
மறுபடியும் நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு என் குருநாதர் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பினேன். "எங்கே போயிருந்தாய்?" என்று அவர் கேட்டதற்கு, "பழைய சிநேகிதர் ஒருவரைச் சந்தித்தேன்; அவர் வீட்டுக்குப் போயிருந்தேன்" என்றேன். இனி என்ன செய்வதென்பதைப்பற்றித் திடமான முடிவு செய்து கொண்டு அவரிடம் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தேன். உண்மையில், சந்நியாஸாசிரமத்திலிருந்து விடுதலை கோரும்படியாகவே நேருமோ என்று கூட என் உள்ளம் நினைத்தது.
ஆனால் அத்தகைய தர்ம சங்கடத்துக்கு என்னைக் காந்திமதி ஆளாக்கவில்லை. மறுநாள் காலையில் நான் அவள் வீடு சென்றபோது காந்திமதி குழந்தையை அணைத்துக் கொண்டு, 'ஸௌபா! உன்னை நான் பிரியுங்காலம் வந்து விட்டது. ஆனால் நீ வருத்தப் படாதே. பகவான் என்னை அடியோடு கைவிட்டு விடவில்லை. நேற்று உன்னோடு வந்த ஸ்வாமியார் உன்னைக் காப்பாற்றுவார்' என்று மெலிந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் என்னையும் அந்தக் குழந்தையையும் கோவென்று கதற விட்டுவிட்டுக் காந்திமதி பரலோகம் சென்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்திமதியின் காதலன் - Gandhimadhiyin Kadalan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, காந்திமதி, அவள், என்ன, அவர், வந்து, மட்டும், இல்லை, செய்து, திரும்பி, அந்தக், நீங்கள், மனம், பணம், கொஞ்சம், நினைக்க, காரணம், அவளுக்கு, என்றாள், என்னுடைய, கொண்டிருந்தாள், அப்போது, உண்மையில், எனக்கு, நாள், உள்ளம், பெட்டி, சென்றேன், அந்த, காமாட்சிநாதன், இருந்த, போயிற்று, திரும்பிப், அங்கே, இந்தக், பெயர், பிறகு, முடியவில்லை, அம்மா, கேட்டேன், என்னை, ஒன்றும், குழந்தை, வெகு, வேறு, தான், தெரிந்து