காந்திமதியின் காதலன்
2
என்னுடைய தகப்பனாருடைய சிநேகிதர் ஒருவர்
அப்போது சைதாப்பேட்டையில் டிபுடி கலெக்டராயிருந்தார். தம்முடைய ஆபீஸில்
ஓர் ஆக்டிங் குமாஸ்தா வேலை காலியிருப்பதாகவும், இப்போதைக்கு அந்த வேலையில்
என்னை நியமிப்பதாகவும், பிறகு சென்னை ஸெக்ரடேரியட் ஆபீஸில் உத்தியோகத்துக்குச்
சிபாரிசு செய்வதாகவும் சொன்னார். சாதாரணமாய் உத்தியோகம் கிடைப்பதனால்
ஏற்படக்கூடிய சந்தோஷத்தைக் காட்டிலும் எனக்குப் பத்து மடங்கு அதிக சந்தோஷம்
உண்டாயிற்று. இதற்குள் பரீட்சையில் நான் முதல் வகுப்பில் தேறிய செய்தியும்
கிடைத்தது. மறுபடியும் ஊருக்குத் திரும்பிப் போனேன்.
தாயாரிடம் மேற்கூரிய விவரங்களைச் சொல்லிவிட்டுக் காந்திமதியைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அவள் 'ஐயோ பைத்தியக்காரா! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? அந்தப் பெண்ணின் தாயார் கூட 'உன் பிள்ளைக்குக் காந்திமதியைக் கலியாணம் செய்துகொள்கிறாயா?' என்று கேட்டாளே? நான் தானே 'இவனெல்லாம் இங்கிலீஷ் படித்துவிட்டானல்லவா? பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளமாட்டான்' என்று சொல்லிவிட்டேன். இப்போது காரியம் மிஞ்சி விட்டதே. யாரோ பெரிய உத்தியோகஸ்தன் வந்து பெண்ணைக் கொண்டுபோய் விட்டானே! நகைகளாகச் செய்து இழைத்திருக்கிறான். காந்திமதியின் அதிர்ஷ்டத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசுகிறார்களே!" என்றாள்.
இதைக் கேட்டதும் என்னுடைய ஆகாசக் கோட்டை அப்படியே பொலபொலவென்று உதிர்ந்து விழுந்துவிட்டது. வாழ்க்கையிலேயே ருசியின்றிப் போயிற்று. இந்தச் சோக சாகரத்திலிருந்து தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டென்று நினைத்தேன். அது, ஏதாவது தீவிரமான வேலையில் மனத்தை ஈடுபடுத்துதல்தான். எனவே, சீக்கிரமாகவே சைதாப்பேட்டைக்குத் திரும்பிச் சென்று உத்தியோகத்தை ஒப்புக் கொண்டேன்.
இவ்வாறு இரண்டு வருஷங்கள் சென்றன. ஸெக்ரடேரியட் ஆபீஸில் எனக்கு உத்தியோகமும் கிடைத்தது. இதற்குள் ஒருவாறு காந்திமதியை மறந்திருந்தேன். வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிக்கூட யோசிக்கலானேன்.
ஸெக்ரடேரியட்டில் என்னுடைய ஸெக்ஷனுக்கு ஒரு தலைமை உத்தியோகஸ்தர் இருந்தார். அவர் பெயர் காமாட்சிநாதன். அவருக்குச் சுமார் 40 வயதிருக்கலாம். ஆரம்ப முதலே எங்களுக்கு ஒருவரையொருவர் பிடித்துப் போயிற்று. பரம யோக்கியர். வேதாந்தத்தில் அதிகப் பற்றுள்ளவர். அவரைப் பார்த்தவுடன், "சம்சாரத்தில் தாமரை இலையில் தண்ணீர் போல் வாழவேண்டும்" என்பார்களே, அதற்கு உதாரண புருஷர் இவர்தான் என்று தோன்றும்.
எனக்கும் இளம் பிராயம் முதலே வேதாந்த விஷயங்களில் பற்று உண்டு; அடிக்கடி நாங்கள் பாரமார்த்திக தத்துவங்களைப் பற்றிப் பேசுவோம். ஒரு சமயம் அவர், "என் வீட்டில் அருமையான வேதாந்த புத்தகங்கள் பல வைத்திருக்கிறேன். நீ ஒரு நாள் வந்தால் பார்க்கலாம்" என்றார்.
அவ்வாறே அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றேன். நானும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய மனைவி எங்களுக்குச் சிற்றுண்டி கொண்டு வந்தாள். அவளும் நானும் ஏக காலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். என்னுடைய நெஞ்சு ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டது. உடம்பிலிருந்த ரோமங்களெல்லாம் குத்திட நின்றன. தேகமெல்லாம் வியர்வை துளித்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். உடனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அன்றியும் கொண்டு வந்த தட்டுக்களை வைத்துவிட்டு விரைந்து உள்ளே சென்றாள். டம்ளர்களில் ஜலம் எடுத்துக்கொண்டு அவள் திரும்பி வருவதற்கு ஐந்து நிமிஷம் பிடித்தது.
அதற்குள் என் மனத்தை ஒருவாறு சாந்தப்படுத்திக் கொண்டேன். மறுபடி அவள் வந்ததும், "இவள்தான் என் மனைவி" என்று காமாட்சிநாதன் தெரிவித்து என்னையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவள் விஷயத்தில் இவருக்கு ரொம்பவும் பெருமை என்பது நன்றாக வெளியாயிற்று.
எனக்கு அவர் மனைவியை முன்னமேயே தெரியும் என்று நான் சொல்லவில்லை. எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? உண்மையிலேயே நாங்கள் பேசிப் பழகியிருந்தோமானால் சொல்லலாம். "குளக்கரையிலும், வீதியிலும் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்திருக்கிறோம்; கண்களினால் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று சொல்லமுடியுமா? ஆகையாலேயே அதைப்பற்றி நான் பிரஸ்தாபிக்கவில்லை. ஒருவேளை அப்போதே அதைச் சொல்லியிருந்தால், பின்னால் அவ்வளவு துன்பங்களுக்காளாகியிருக்க வேண்டாமோ, என்னவோ?
'உள்ள நிறைவிலோர் கள்ளம்
புகுந்திடில்
உள்ள நிறைவாமோ?'
என்ற கவியின் வாக்கு என் விஷயத்தில் உண்மையாயிற்று.உள்ள நிறைவாமோ?'
அதன் பிறகு அவருடைய வீட்டுக்கு நான் அடிக்கடி போகத் தொடங்கினேன். என் மனத்திலோ ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. "அவர் வீட்டுக்குப் போகாதே; போவதனால் கஷ்டந்தான் ஏற்படும்" என்று ஒரு புத்தி சொல்லிற்று. ஆனால் அதை மீறிக்கொண்டு, "அங்கே போகவேண்டும்; போக வேண்டும்" என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கி எழுந்து கொண்டிருந்தது.
"போகவேண்டாம்" என்ற கட்சி நாளடைவில் மங்கி மறைந்தது. அடிக்கடி போகத் தொடங்கினேன். அதனால் காமாட்சிநாதனும் அதிக சந்தோஷமடைந்ததாகத் தெரிந்தது. முதன்முதலில் நானும் அவர் மனைவியும் சந்தித்தபோது, எங்களுக்கு ஏற்பட்ட மனக்கலக்கத்தை அவர் கவனித்தாரா என்றாவது, பின்னால் என்னை அவர் வீட்டுக்கு அடிக்கடி கவர்ந்திழுத்த காரணம் இன்னதென்று அவர் ஊகித்தாரா என்றாவது இன்றுவரை நான் அறியேன். இதெல்லாம் தெரிந்தவராக அவர் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை.
ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனபோது, இவர் வெளியில் போயிருந்தார். "உட்காருங்கள், வந்துவிடுவார்" என்று காந்திமதி சொன்னாள். சற்று நேரம் இருவரும் சும்மா இருந்தோம். ஏதாவது பேசாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் தோன்றிற்று. "என்னைப் போல் துர்ப்பாக்கியசாலி இந்த உலகத்திலே கிடையாது" என்றேன். நான் யோசித்துப் பேசினேன் என்று சொல்ல முடியாது. அந்த வார்த்தைகள் தாமே வெளிவந்தன என்றே சொல்லலாம்.
"நீங்கள் இங்கே வரவேண்டாமென்று சொல்வதற்கிருந்தேன். பாழும் மனம் கேட்கமாட்டேனென்கிறது" என்றாள் காந்திமதி.
அப்போது எனக்கு மயிர் சிலிர்த்தது. உடம்பு முழுதும் படபடவென்று அடித்துக் கொண்டது.
இவ்வாறு நாங்கள் தனிமையில் பேசத் தொடங்கினோம். குளக்கரையில் என்னைச் சந்தித்ததிலிருந்து அவளுக்கு என்னுடைய ஞாபகமாகவே இருந்ததாகவும், சீக்கிரம் வந்து தன்னைக் கலியாணம் செய்துகொள்வேனென்று ஆசை வைத்திருந்ததாகவும் ஒரு வருஷம் வரையில் பேச்சுமூச்சு இல்லாமலிருக்கவே மனம் வெறுத்துப் போனதாகவும், அந்த நிலைமையில் காமாட்சிநாதன் வந்து கலியாணம் பண்ணிக் கொள்வதாகச் சொல்லவே அவருடைய நல்ல குணத்தைக் கண்டு, வயதாகியிருந்தாலும் பரவாயில்லையென்று சம்மதித்ததாகவும் கூறினாள்.
ஒரு மாதம் அவள் பொறுத்திருந்தால் நான் வந்து கலியாணம் செய்து கொண்டிருப்பேனே என்று தெரிவித்தேன். "ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருந்தால் ஒரு மாதமல்ல, ஒரு யுகம் வேண்டுமானாலும் காத்திருந்திருப்பேனே" என்று அவள் கூறினாள்.
"தலைவிதி இப்படிப் பண்ணிவிட்டது" என்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவுக்கு வந்தோம்.
அதன் பிறகு, எப்போது காந்திமதியிடம் பேசலாம் என்றே சிந்தனை செய்யலானேன். காமாட்சிநாதன் வீட்டில் இல்லாத சமயங்களை ஆராய்ந்து பார்த்துப் போகத் தொடங்கினேன். இது பிசகு என்று நன்கு தெரிந்திருந்தது. ஆயினும் என்ன பயன்? ஒருவனுக்குச் செங்குத்தான மலைப் பாறையில் கால் நழுவிவிடுகிறது. கீழே விழத் தொடங்குகிறான். அப்படியே போனால் இன்னும் சில நிமிஷத்தில் கீழே அதலபாதாளத்தைச் சேரவேண்டியதுதான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவன் தன்னைத் தடுத்து நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. மலைச்சரிவில் விழுந்து கொண்டேயிருக்கிறான் - என்னுடைய நிலையும் அதுபோல் தான் இருந்தது.
கடைசியாக, இத்தகைய வாழ்க்கையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்ற தீர்மானத்துக்கு வந்தோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவராகவே படைக்கப் பட்டவர்களென்றும், கடவுள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்ட சதிபதிகளேயென்றும் முடிவு செய்தோம். ஆனால் இந்த முட்டாள் உலகம் - கொடிய ஜன சமூகம் - அதை ஒத்துக் கொள்ளாது. ஆகவே, இந்தச் சமூகத்தை விட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போய்ச் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதுதான் சரி; பணத்தைப் பற்றியாவது, மற்ற உலக சௌகரியங்களைப் பற்றியாவது நாங்கள் சிறிதும் கவலைப்படவில்லை. எங்களுடைய காதல் ஒன்றே எங்களுக்கு அரிய செல்வம். மற்றவையெல்லாம் யாருக்கு வேண்டும்?
காமாட்சிநாதன் சமீபத்தில் அவருடைய கிராமத்துக்கு ஒரு காரியமாகப் போக உத்தேசித்திருந்தார். அச்சமயம் காந்திமதி அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு என்னுடன் கிளம்பி வந்துவிடுவதென்றும், நாங்கள் கல்கத்தா சென்று அங்கே கப்பலேறிப் பர்மாவுக்குப் போய்விடுவதென்றும் தீர்மானம் செய்து கொண்டோம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்திமதியின் காதலன் - Gandhimadhiyin Kadalan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவர், நான், நாங்கள், அவள், செய்து, என்னுடைய, காமாட்சிநாதன், கலியாணம், அவருடைய, வந்து, அடிக்கடி, காந்திமதி, நானும், வேண்டும், போகத், தொடங்கினேன், எனக்கு, ஆபீஸில், ஒருவர், அந்த, பிறகு, எங்களுக்கு, பெண்ணைக், போல்