காந்திமதியின் காதலன்
"ஸ்வாமி! இந்தக் கட்டை கேட்கிறதேயென்று
வித்தியாசமாய் நினைக்க வேண்டாம்; ஸ்வாமியின் மனத்தில் சாந்தி ஏற்படவில்லையென்று
இந்த ஜடத்துக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இது தவறாயிருந்தாலும் இருக்கலாம்.
அப்படி ஏதாவது ஸ்வாமி மனத்தில் இருந்தால் இந்தக் கட்டையிடம் சொல்ல யோசிக்க
வேண்டாம்" என்று பெரிய ஸ்வாமியார் சின்ன ஸ்வாமியாரிடம் சொன்னார். "ஸ்வாமி
சொல்வது நிஜம்; இந்தக் கட்டைக்கு இன்னும் மனச் சாந்தி ஏற்படவில்லை. இதன்
மனத்திலே ஒரு பந்தம் இருக்கிறது; ஒரு தாபம் இருக்கிறது. அது இந்தக் கட்டையுடனேதான்
தீருமோ, என்னவோ தெரியாது" என்றார் சின்ன ஸ்வாமியார்.
தன்னுடைய எல்லைக்குள்ளே உயிரை விடுவோர் அவ்வளவு பேரையும் மோக்ஷத்துக்கு அனுப்பக்கூடிய மகிமை வாய்ந்த ஸ்ரீகாசி க்ஷேத்திரத்தில் தமிழ்நாட்டுப் பெரிய மடங்களுக்குச் சொந்தமான கிளை மடங்கள் பல இருக்கின்றன. அந்த மடங்களில் ஒன்றிலேதான், மேலே கூறியவாறு இரு ஸ்வாமியார்களுக்குள் சம்பாஷணை ஆரம்பித்தது. அவர்களில் ஒருவர் கொஞ்சம் வயதானவர்; ஐம்பது ஐம்பத்தைந்து இருக்கலாம். அவருடைய திரு மார்பை நீண்டு வளர்ந்த தாடி மறைத்திருந்தது. முகத்தில் ரோமத்தினால் மறைக்கப்படாதிருந்த பாகமெல்லாம் அம்மைத் தழும்பு நிறைந்து கோரமாய்க் காணப்பட்டது. ஆனாலும் அவர் முகம் பார்ப்பதற்கு அருவருப்பு அளிக்கவில்லை. அந்த கோரத்திலும் ஒரு திவ்ய களை இருந்தது. அவரது ஆழ்ந்த கண்களில் சாந்தி குடிகொண்டு விளங்கிற்று. இந்தப் பெரிய ஸ்வாமியார் பல வருஷ காலமாக மேற்படி கிளை மடத்தில் தலைவராயிருந்து வருபவர். தென்னாட்டிலிருந்து காசிக்கு வரும் தமிழர்களில் அநேகர் இந்த மடத்தில் வந்து தங்குவதுண்டு. அவர்களுக்கெல்லாம் வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுப்பார். இதனாலெல்லாம், ஸ்வாமி பிரணவானந்தரின் புகழ் விஸ்தாரமாய்ப் பரவியிருந்தது.
இந்த மடத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஸ்ரீகுமாரானந்தர் என்னும் மற்றொரு தமிழ் ஸ்வாமி வந்து சேர்ந்தார். இவருக்குப் பிராயம் சுமார் 35க்கு மேல் 40க்குள் இருக்கலாம். இவர் ஜடை, தாடி முதலியவை வளர்க்காமல் நன்றாய்த் தலையை மொட்டையடித்து முக க்ஷவரமும் செய்து கொண்டிருந்தார். பெரிய ஸ்வாமியார் இவரை அன்புடன் வரவேற்று, வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுத்தார். குமாரானந்தரிடம் ஒரு விசேஷத்தைப் பெரிய ஸ்வாமியார் கண்டார். குடும்பஸ்தன் ஒருவனைவிட அதிகமாக அவருக்கு உலக விவகாரங்களில் சம்பந்தம் இருந்தது. கடிதப் போக்கு வரவு அவருக்கு அசாத்தியம். முக்கியமாய், தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுடன் அவருக்கு அதிக உறவு இருந்தது. ஓயாமல், ஏதாவது கட்டுரைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். பத்திரிகைக்காரர்களிடமிருந்து அவருக்கு ஐந்து ரூபாய், மூன்று ரூபாய், ஒன்றேகால் ரூபாய் இப்படிச் சின்னத் தொகைகளாக மணியார்டர்கள் வரும். அத்தொகைகளை அவர் வாங்கிக் கொண்டு தாம் ஒரு விலாசத்துக்கு 15 அல்லது 20 ரூபாய் மணியார்டர் செய்வார். ஒரு மாதத்தில் சரியானபடி மணியார்டர்கள் வராவிட்டால், கோபம் வந்துவிடும். தமிழ்ப் பத்திரிகை நடத்துவோர்களைக் கண்டபடி திட்டுவார்.
இவற்றையெல்லாம் கவனித்துத்தான் பெரிய ஸ்வாமியார், தலைப்பில் கண்டவாறு சம்பாஷணை துவக்கினார். அவர் மேலும் கூறியதாவது:
"எத்தனையோ பேர் தங்களுடைய மனக் கவலைகளை இந்த ஜடத்திடம் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கட்டை அவர்களுக்குத் தக்க உபதேசம் செய்து, மனச் சாந்தி உண்டாக்கியிருக்கிறது. ஸ்வாமியும் மனத்திலிருப்பதைச் சொன்னால், அதை நிவர்த்திக்க முடியுமா என்று பார்க்கலாம்."
குமரானந்தர் மோன வெளியில் கலந்திருந்தார். எனவே பிரணவானந்தர் மறுபடியும் கூறியதாவது:
"ஒரு வேளை ஸ்வாமிக்குப் பூர்வாசிரமத்திலே குழந்தைகள் இருந்து எங்கேயாவது விட்டு வந்திருக்கிறதோ? அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்குத் தக்க ஏற்பாடு செய்து விடலாமே!"
குமாரானந்தர் இப்போது வாய் திறந்தார். அவர் சொன்னதாவது: "ஸ்வாமி ஊகித்தது பாதி வாஸ்தவம். ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அது இந்த ஜடத்தின் குழந்தையல்ல. வேறொருவரின் குழந்தை. இந்த ஜடத்தின் கழுத்தில் அதை கட்டியிருக்கிறது. அதனால் தான் துளிக்கூட இந்தக் கட்டைக்கு மனச் சாந்தி இல்லாமல் போகிறது. தலைவிதி! தலைவிதி!" என்று படீர் படீரென்று மொட்டைத் தலையில் போட்டுக் கொண்டார்.
பெரிய ஸ்வாமியார் அவரைச் சாந்தப்படுத்தி ஆதியோடந்தமாய் அவருடைய வரலாற்றை விவரமாகச் சொல்லும்படி கேட்கவே குமாரானந்தர் அவ்வாறே கூறத் தொடங்கினார். அவர் கூறியபடியே ஸ்வாமியார்களின் பரிபாஷையை மட்டும் நீக்கிவிட்டு, இங்கே எழுதுகிறேன்:
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்திமதியின் காதலன் - Gandhimadhiyin Kadalan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பெரிய, ஸ்வாமியார், இந்தக், ஸ்வாமி, அவர், சாந்தி, செய்து, அவருக்கு, ரூபாய், மனச், இருக்கலாம், இருக்கிறது