காந்திமதியின் காதலன்
3
[இடையில் குறுக்கிடாமல் பெரிய ஸ்வாமியார்
கதையைக் கேட்டுக் கொண்டு வந்தார். அவருடைய கண்கள் பாதி மூடியிருந்தன.
ஆனால் அவர் தூங்கவுமில்லை; யோகத்தில் ஆழ்ந்து விடவுமில்லை சின்ன ஸ்வாமி
நிறுத்தும் போதெல்லாம் அவர் கண்களைக் கொஞ்சம் அதிகம் திறந்து, "அப்புறம்?"
என்பார். குமாரானந்தர் மேலே சொல்கிறார்:]
காமாட்சிநாதன் ஊருக்குப் போகவேண்டிய நாள் நெருங்கிற்று. ஒரு நாள் அவர் அதைப்பற்றிப் பேசுகையில், தமது மனைவியையும் அழைத்துக் கொண்டு போக உத்தேசித்திருப்பதாகச் சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் அவ்வாறு செய்தால், நாங்கள் பேசித் தீர்மானித்திருந்தபடி செய்ய முடியாது.
என்னுடைய மனக்கலக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "போனால் எப்போது திரும்பி வருவீர்களோ?" என்று கேட்டேன்.
"காரியம் ஆனதும் திரும்ப வேண்டியதுதான். மூன்று நாளைக்கு மேல் ஆகாது" என்றார்.
அதற்குள் காந்திமதி, "இரண்டு மூன்று நாளைக்காக நான் ஏன் வரவேண்டும்? வீண் அலைச்சல் தானே? இங்கேயே இருந்து விடுகிறேனே?" என்றாள்.
"எனக்கு ஆட்சேபணையில்லை. உனக்குத் தனியாயிருக்கப் பயமில்லையென்றால் பேஷாக இரு" என்றார்.
இப்படி லவலேசமும் சந்தேகமில்லாத சாதுவை நாம் ஏமாற்றப் போகிறோமே என்று ஒரு நிமிஷம் எனக்குப் பச்சாத்தாபம் உண்டாயிற்று. ஆனால் அடுத்த நிமிஷத்தில், "நான் என்ன இவரை ஏமாற்றுவது? இவரல்லவா என்னை மோசம் செய்தவர்? இவரை யார் வந்து காந்திமதியைக் கலியாணம் செய்துகொள்ளச் சொன்னது? தெய்வீகமான காதலினால் இருதய ஒற்றுமை பெற்ற எங்களுக்கு நடுவே இவரல்லவா சாபக்கேடாக வந்து சேர்ந்தார்?" என்று எண்ணி நெஞ்சை உறுதி செய்து கொண்டேன்.
குறிப்பிட்ட தினம் இரவு காமாட்சிநாதன் ஊருக்குப் போனார். மறுநாள் காலையில் நான் காந்திமதியின் வீட்டுக்குச் சென்று அவளைச் சந்தித்தேன். எங்களுடைய பயணத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்தோம். அதன்படி அன்று சாயங்காலம் காந்திமதி வீட்டிலிருந்து புறப்பட்டு நான் வசித்த அறைக்கு வந்துவிட வேண்டியது. அங்கிருந்து சேர்ந்தாற்போல் நாங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் கல்கத்தாவுக்கு ரயில் ஏறவேண்டியது. காமாட்சிநாதன் செய்துபோட்ட நகைகள் ஒன்றையும் அவள் எடுத்து வரக்கூடாது. அவற்றை இரும்புப் பெட்டியில் வைத்து, அத்துடன் ஒரு கடிதம் எழுதி வைக்க வேண்டியது. இரும்புப் பெட்டிச் சாவி ஒன்று காமாட்சிநாதனிடம் இருப்பதால் அவர் வந்ததும் திறந்து பார்த்துக் கொள்வார். வீட்டில் ஒரு சமையற்காரியும், ஒரு வேலைக்காரப் பையனும் இருந்தார்கள். அவர்களிடம் காந்திமதி புரசவாக்கத்தில் உள்ள ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போவதாகவும், திரும்புவதற்கு இரண்டு மூன்று நாள் ஆகலாம் என்றும் சொல்லிவிட்டு வரவேண்டியது.
இந்த ஏற்பாடுகள் பேசி முடிந்ததும், காந்திமதி ஒரு கடிதம் எழுதிக் காட்டினாள். அதில், அவள் தன்னிடம் காட்டிய விசுவாசத்திற்கும் தனக்குச் செய்த நன்மைகளுக்கும் மிகவும் நன்றியுடையவளாயிருப்பதாகவும், ஆனால் அதற்கெல்லாம் தான் பாத்திரமானவள் அல்லவென்றும், கலியாணத்திற்கு முன்பே தன்னுடைய இருதயத்தை ஒருவருக்குப் பறி கொடுத்துவிட்டதாகவும், விதிவசத்தால் அவரை மறுபடி சந்தித்தாகவும், அவரைப் பிரிந்து தன்னால் உயிர் வாழ முடியாதென்று அறிந்து அவருடன் போவதாகவும், தன்னை மன்னித்து மறந்து விட வேண்டுமென்றும் எழுதியிருந்தாள்.
அன்று சாயங்காலம் நான் பிரயாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு, காந்திமதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். நேரம் ஆக ஆக என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாயிற்று. 'ஒருவேளை வராமல் இருந்துவிடுவாளோ?' என்று எண்ணிய போது இருதயத்தில் சம்மட்டியால் அடித்தது போன்ற வேதனை ஏற்பட்டது - ஸ்வாமி! தங்களிடம் உள்ளது உள்ளபடி சொல்வதாகச் சங்கல்பம் செய்துகொண்டேனல்லவா? அந்த இருதய வேதனையில் ஒரு சந்தோஷம் இருந்ததென்பதையும் சொல்லிவிடுகிறேன். உண்மையென்னவென்றால், நான் கோழையாகி விட்டேன். அபாயங்கள் நிறைந்த கரைகாணாத சமுத்திரத்தில் பிரயாணம் செய்வதற்காக ஒருவன் தயாராகிறான். ஆனால் பிரயாணம் புறப்பட வேண்டிய சமயத்தில் ஏதாவது ஒரு தடை வந்து குறுக்கிடாதா, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு கிளம்பாமல் இருந்து விடலாமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. என்னுடைய மனோநிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் அதை நானே அப்போது தெளிவாக உணரவில்லை.
வாசலில் வண்டி வந்து நின்று, காந்திமதி மாடிப்படியேறி என்னுடைய அறைக்குள் வந்தபோது என்னுடைய இருதயநிலை எப்படியிருந்ததென்பதை என்னாலேயே விவரிக்க முடியாது. அதில் அதிகமாயிருந்தது இன்பமா துன்பமா என்று எனக்கே தெரியவில்லை.
அவள் வந்ததும், இன்னின்ன சொல்லி, இவ்விதமாக வரவேற்க வேண்டுமென்றெல்லாம் மனத்தில் எண்ணியிருந்தேன். ஆனால் அதெல்லாம் இப்போது அடியோடு மறந்து போயிற்று. ஒரு வார்த்தை கூட வரவில்லை. அவளுடைய கரங்களைப் பிடித்து உட்கார வைத்தேன். அப்போது அவளுடைய தேகமெல்லாம் நடுங்குவதை அறிந்தேன். என் மனத்தில் மற்ற உணர்ச்சியெல்லாம் போய்ப் பரிதாப உணர்ச்சி பொங்கி எழுந்தது.
"இதோ பார், காந்தி! உன் உடம்பு நடுங்குகிறது. உன் மனத்தில் கொஞ்சமாவது தயக்கம் இருந்தால் நாம் இந்தக் காரியம் செய்ய வேண்டாம்" என்றேன்.
"தயக்கமிருந்தால் வருவேனா? நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தினீர்களா? என் மனப்பூர்வமான விருப்பத்தினாலேயே வருகிறேன்" என்றாள் காந்தி.
"அது வாஸ்தவந்தான். ஆனாலும் என்னுடைய சுயநலத்துக்காக உன்னைத் துன்பத்துக்குள்ளாக்குகிறேனோ என்று தான் என் மனம் தவிக்கிறது. உனக்கு, வீடு, வாசல், செல்வம், சௌக்கியம் எல்லாம் அவர் அளித்திருக்கிறார். நானோ இவையொன்றும் உனக்குத் தர முடியாது..."
"அதனாலேயேதான் நான் அவரை விட்டுச் செல்வது அவசியம். அவர் எனக்கு எல்லாம் அளித்திருக்கிறர்; நானோ அவருக்கு என் வெறும் இருதயத்தைக் கூட அளிக்க முடியவில்லை. அதைத் தாங்கள் ஏற்கனவே கவர்ந்து விட்டீர்கள். நான் என்ன செய்யலாம்?"
"என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட பாக்கியம் எனக்குக் கிடைக்குமென்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய காதலுக்கும் நீ என்னிடம் வைக்கும் நம்பிக்கைக்கும் நான் தகுதியுள்ளவனா என்று தான் சந்தேகமாயிருக்கிறது."
"இந்த யோசனையெல்லாம் அன்று அரசமரத்தடியிலேயே உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்" என்றாள் காந்தி.
"சரி, சரி; நம்முடைய பேச்சிலே ரயிலை மறந்து விடப் போகிறோம். இனிமேல் தான் தினம் 24 மணி நேரமும் பேசப் போகிறோமே. இப்போது கிளம்பலாம்" என்றேன்.
"கிளம்புவதற்கு முன் இன்னும் ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்லி விட வேண்டும். அது அவருக்குக் கூடத் தெரியாது" என்றாள் காந்தி. அப்போது அவள் முகத்திலே சிறிது வெட்கத்தின் அறிகுறி காணப்பட்டது. இதழ்களில் சிறுநகை உண்டாயிற்று.
அவள் சொல்லப் போவது என்னவாயிருக்கலாமென்று சற்று யோசித்தேன். ஒன்றும் தெரியாமல் "என்ன சொன்னாலும் கேட்கத் தயாராயிருக்கிறேன்" என்றேன். "மூன்று மாதமாய் எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. மாதஸ்நானம் செய்யவில்லை. நாம் போகுமிடத்தில் இது ஒரு சிரமம் இருக்கிறது" என்றாள்.
இதன் பொருள் எனக்கு நன்றாக விளங்க ஒரு நிமிஷம் பிடித்தது. அது விளங்கியதும் ஒரு பெரிய ஆறுதல் உண்டாயிற்று. அபாயம் நிறைந்த கடற்பிரயாணம் தொடங்குவதற்கு அசட்டுத் தைரியத்துடன் தீர்மானித்துவிட்டு அதற்கு ஏதாவது இடையூறு நேராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, உண்மையிலேயே ஓர் இடையூறு இப்போது தென்பட்டது.
சற்று நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். "என்ன இவ்வளவு ஆழ்ந்த யோசனை?" என்று காந்திமதி கேட்டாள்.
"காந்தி! இந்த ஜன்மத்தில் நம்முடைய காதல் நிறைவேறுவது பகவானுக்கு இஷ்டமில்லை. கடவுள் சித்தமிருந்தால் நீ இன்னும் ஒரு மாதம் கலியாணம் ஆகாமல் இருந்திருக்கமாட்டாயா?" என்றேன்.
"இதுதானா உங்கள் காதல்? இவ்வளவு தானா உங்கள் தைரியம்?" என்றாள் காந்தி.
"ஆமாம்; உன் வாழ்க்கையைப் பாழாக்குவதற்கு எனக்குத் தைரியமில்லைதான். அவர் உனக்களிக்கும் வாழ்க்கைச் சௌகரியங்களுக்குப் பதில் நீ அவருக்கு ஒன்றும் கொடுக்க முடியவில்லையென்று கூறினாய். அது தவறு. அவற்றுக்கெல்லாம் மேலானதை - சந்தான பாக்கியத்தை - அவருக்கு நீ அளிக்க முடியும். இந்த ஜன்மத்தில் நீ அவரைச் சேர்ந்தவள். அடுத்த ஜன்மத்திலாவது நம்மை ஒன்று சேர்க்கும்படி பகவானைப் பிரார்த்திப்போம்" என்றேன்.
"அவர் தான் வேதாந்தி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நீங்களும் ஒரு குட்டி வேதாந்தி என்பது தெரியாமல் போயிற்று" என்றாள் காந்தி. அடுத்த நிமிஷம் வேறு வார்த்தை பேசாமல் எழுந்து சென்றாள்.
கீழே காத்திருந்த ஜட்கா வண்டி கடகடவென்று சென்றது. அந்த வண்டியின் சக்கரங்கள் என் இதயத்தின் மேல் ஓடுவது போல் இருந்தது.
காந்திமதி இறங்குவதற்கிருந்த பெரிய துன்பக் குழியிலிருந்து அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்ததாக நினைத்தேன். ஆனால் என்னுடைய வாழ்க்கை என்னவோ பாழாயிற்று. இனிமேல் அது வெறும் பாலைவனந்தான்.
அன்றிரவு ஒரு கண நேரமும் நான் தூங்கவில்லை. இன்னும் சில நாள் அப்படியே இருந்தால் சித்தம் பேதலித்து விடும் என்று தோன்றிற்று. எனவே, மறுநாள் அதிகாலையில் திருக்கோவிலூரை நோக்கிப் பிரயாணமானேன்.
திருக்கோவிலூர் மடத்தைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அப்போது அம்மடத்தின் தலைவராயிருந்த ஸ்வாமியை எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் சிறந்த கல்விப் பயிற்சியும், ஒழுக்கமும் விசால புத்தியும், கருணையும் உள்ளவர். அவரிடம் சென்று நான் சந்நியாசியாக விரும்புவதாகவும், அவருடைய சீடனாக என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தேன். ஸ்வாமிகளும் அருள் புரிந்து என்னை ஏற்றுக் கொண்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்திமதியின் காதலன் - Gandhimadhiyin Kadalan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அவர், காந்தி, காந்திமதி, என்றாள், என்னுடைய, எனக்கு, என்றேன், அவள், தான், அப்போது, வந்து, மூன்று, என்ன, நாள், மறந்து, அவருக்கு, இன்னும், இப்போது, மனத்தில், உண்டாயிற்று, முடியாது, காமாட்சிநாதன், கொண்டு, நாம், நிமிஷம், என்னை, அடுத்த, பெரிய, அன்று