முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.086.திருநல்லூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.086.திருநல்லூர்
1.086.திருநல்லூர்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
926 |
கொட்டும் பறைசீராற் குழும வனலேந்தி நட்டம் பயின்றாடு நல்லூர்ப் பெருமானை முட்டின்றிருபோது முனியா தெழுந்தன்பு பட்ட மனத்தார்க ளறியார் பாவமே. |
1.086.1 |
பறை கொட்டும் சீருக்கு ஏற்பப் பூதகணங்கள் முதலியன சூழக் கையின்கண் அனலேந்தி விருப்போடு நடனம் ஆடும் நல்லூர்ப் பெருமானைக் காலை மாலை இருபொழுதும் தவறாமல் வெறுப்பின்றி எழுச்சியோடு வணங்கி அன்பு பூண்ட மனத்தார்களைப் பாவம் அணுகாது.
927 |
ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும் வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறும் மடியார்கட் கடையா குற்றமே. |
1.086.2 |
ஊர்தியாக எருது ஒன்றிலேயே ஏறுபவனும், அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா.
928 |
சூடு மிளந்திங்கட் சுடர்பொற்
சடைதாழ ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை நாடுந் நெறியானை நல்லூர்ப் பெருமானைப் பாடும் மடியார்கட் கடையா பாவமே. |
1.086.3 |
இளம்பிறை, முடியிற்சூடி, ஒளி விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ, தலையோட்டையே உண்கலனாகக் கொண்டு, ஒவ்வோர் ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச் செல்லும் அறநெறியாளனாகிய நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அடையா.
929 |
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக் காத்த நெறியானைக் கைகூப் பித்தொழு தேத்து மடியார்கட் கில்லை யிடர்தானே. |
1.086.4 |
உலகியல் நெறி முறைகளைத் தான் பின்பற்றாது நீத்தவனும், நீங்காத தவத்தை உடையவனும், கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவனும், அந்நெறி நிற்பாரைக் காத்தருள்பவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானைக் கைகுவித்துத் தொழுதேத்தும் அடியவர்கட்கு இடரில்லை.
930 |
அகத் துமைகேள்வ னரவச் சடைதாழ நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத் தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர் போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே. |
1.086.5 |
தனது திருமேனியில், கூறாகக் கொண்டுள்ள உமையம்மையின் கணவனும் பாம்பணிந்த சடைகள் தாழ்ந்து தொங்க, இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானை, வேட்கை மிக்கவராய் அணுகி அவன் திருவடிகளைத் தொழும் தொண்டர்கள் இன்பம் பொருந்திய மனத்தவராய்ப் பலரும் புகழ உலகில் வாழ்வார்.
931 |
கொல்லுங் களியானை யுரிபோர்த்
துமையஞ்ச நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச் செல்லு நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச் சொல்லு மடியார்க ளறியார் துக்கமே. |
1.086.6 |
தன்னைக் கொல்ல வந்த மதம் பொருந்திய யானையை, உமையம்மை அஞ்சுமாறு கொன்று, அதன் தோலைப் போர்த்த நல்ல நெறியாளனாய், நல்லூர்ப் பெருமானாய், எல்லோரும் அடையத்தக்க முத்திநெறியாளனாய் விளங்கும் சிவபிரானை அடைந்து, தங்களது அரிய துன்பங்கள் தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள், துக்கம் அறியார்.
932 |
எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும் நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத் தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல் தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே. |
1.086.7 |
எங்கள் தலைவனும், தேவர்களால் தொழுது போற்றப்படும் நம் பெருமானும், நல்லூரில் பிரிவின்றி எழுந்தருளியிருக்கும் தலைவனுமாய இறைவனை அடைந்து, தம் கைகளை உச்சி மேல் குவித்து, நாங்கள் உனக்கு அடிமை என்று கூறி, அவனது திருவடி நீழலில் ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் இலராவர்.
933 |
காம னெழில்வாட்டிக் கடல்சூ ழிலங்கைக்கோன் நாம மிறுத்தானை நல்லூர்ப் பெருமானை ஏம மனத்தாரா யிகழா தெழுந்தொண்டர் தீப மனத்தார்க ளறியார் தீயவே. |
1.086.8 |
மன்மதனது உருவ அழகை அழித்துக் கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணனது புகழைக் கெடுத்து, விளங்கும் நல்லூரில் எழுந்தருளிய பெருமானை, பாதுகாப்புக் கொண்ட மனத்தவர்களாய் இகழாது அவனைக் காண எழும் தொண்டர்கள், தீபம் போன்ற ஞானஒளி நிலைத்த மனம் உடையவராவர். தீயனவற்றை அவர்கள் அறியார்.
934 |
வண்ண மலரானும் வைய மளந்தானும் நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத் தண்ண மலர்தூவித் தாள்க டொழுதேத்த எண்ணு மடியார்கட் கில்லை யிடுக்கணே. |
1.086.9 |
செந்தாமரையில் விளங்கும் பிரமனும், உலகை அளந்த திருமாலும், நண்ணுதற்கு அரியவனாய் விளங்கும் நல்லூர்ப் பெருமானை, குளிர்ந்த மலர்களைத்தூவி, அவன் திருவடிகளைத் தொழுது வணங்க எண்ணும் அடியவர்களுக்கு, இடுக்கண் இல்லை.
935 |
பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர் நிச்ச மலர்தூற்ற நின்ற பெருமானை நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை எச்சு மடியார்கட் கில்லை யிடர்தானே. |
1.086.10 |
மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.
936 |
தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன் நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை வண்ணம் புனைமாலை வைக லேத்துவார் விண்ணுந் நிலனுமாய் விளங்கும் புகழாரே. |
1.086.11 |
குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பொருந்திய நீரை வேலியாக உடைய நல்லூரில் விளங்கும் பெருமான் இயல்புகளைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநல்லூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லூர்ப், பெருமானை, விளங்கும், மடியார்கட், நல்லூரில், நெறியானை, பொருந்திய, பெருமானைக், கில்லை, ளறியார், திருவடிகளைத், தொண்டர்கள், பெருமானாய், அடைந்து, சிவபிரானை, எங்கள், நாள்தோறும், அடியவர்களுக்கு, நீழலில், தொழுது, குளிர்ந்த, பெருமானைத், அறியார், பாடும், கூறும், சூழ்ந்த, மனத்தார்க, கொட்டும், திருமுறை, திருச்சிற்றம்பலம், புகழைக், சடைதாழ, யிடர்தானே, தொழுதேத்தும், சடைகள், திருநல்லூர், பெருமானைப், இடரில்லை